வெற்றி கடிதங்கள் 10

images

அன்புடன் ஆசிரியருக்கு

வாசிப்பின் வெற்றி பதிவினை படித்துவிட்டு கடுமையான ஏமாற்ற உணர்வு எழுந்தது. ஏனெனில் அது வேறொரு வகையில் நான் சொல்ல நினைத்தது. பெரும்பாலும் இது அடிக்கடி எனக்கு நடக்கும். தாமதப்படுத்துவதால் எழும் ஏமாற்றம்.

ரங்கப்பரின் பாத்திர உருவகம் ஒரு வகையில் டால்ஸ்டாயின் பீயர் தான். டால்ஸ்டாய் உயர்குடிகளின் மீது வெறுப்பும் தானும் அதைச் சேர்ந்தவன் என்பதால் மெல்லிய குற்றவுணர்வும் கொண்டவர். பீயர் நெஹ்லூதவ் என அவரை பிரதிநிதித்துவம் செய்யும் பாத்திரங்களில் அந்த குற்றவுணர்வையும் ஏளனத்தையும் காண முடியும். அதிலும் நெஹ்லூதவில் அது மிக அதிகம். ஆனால் ரங்கப்பரிடம் அது இல்லை.

வெற்றி வாசித்த போது நான் எண்ணிக் கொண்டது இதைத்தான். டால்ஸ்டாயின் எழுத்துக்களிலும் இந்த “பெண் கைப்பற்றல்கள்” நிகழ்கின்றன. அது குறித்த விளையாட்டுத் தனமான விவாதங்களும் நிகழ்கின்றன. ஆனால் வெற்றி மட்டும் ஏன் கொந்தளிக்கச் செய்கிறது. ஏனெனில் அது “இங்கு” நிகழ்கிறது என்ற எண்ணம். இப்படித் தோன்றியதுமே மனம் எளிமையடைந்து விட்டது.

நவீன சமூகத்துக்கு பெண்கள் பழகவே இல்லை என்பது என் எண்ணம். அல்லது பழகவிடப்படவில்லை.நன்கு படித்து நன்றாக சம்பாதித்து ஒரு வார்த்தை மறுசொல் உரைக்காமல் தன் ஊதியத்தை வீட்டில் அளிக்கும் பெண்கள் பலரை எனக்குத் தெரியும்.

ந.பிச்சமூர்த்தியின் கருப்பி புதுமைபித்தனின் அம்மாளு அசோகமித்திரனின் ஜமுனா ஜெயகாந்தனின் கங்கா உங்களின் தேவகி விமலா இப்போது லதா போன்றவர்களை மேற்சொன்னவர்களின் வரிசையில் வைக்க முடியாது. அவர்கள் ஜனநாயக யுகத்துக்கு தன்னை பழக்கிக் கொள்ளும் சமூகத்தின் பலியாடுகள். சுயம் என ஒன்று உருவானவர்கள். அதனால் நிலைகொள்ள முடியாமல் தடுமாறுகிறவர்கள்.

மரபான இந்திய ஆண் மனம் பெண்ணுக்கு சுயம் உருவாவதை மூர்க்கமாக எதிர்க்கவே செய்கிறது. அவளுக்கென அரசியலோ சமூகப் பார்வையோ இருப்பதை அது விரும்புவதே இல்லை. ஆண்கள் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளும் “ஆபத்து” இல்லாத சித்தாந்தம் பெண்ணியம் தான். ஏனெனில் அது ஒரு மோஸ்தர் மட்டுமே. பேராசிரியர் டி.தருமராஜ் சொல்வது போல அதுவொரு “விடலைத்தனம்”. அது இந்தியப் பெண்ணிடத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கிவிடாது.

கோடிக்கணக்கானவர்களை கொன்றழித்திருந்தாலும் மேற்கு ஜனநாயகத்தின் வாயிலை நோக்கி நம்மை இழுத்துச் சென்றிருக்கிறது. அமெரிக்கா அதை வலுப்படுத்தி இருக்கிறது. ஆகவே அச்சிந்தனைகளின் தாக்கம் இன்னும் கால் நூற்றாண்டாவது நம்மிடம் நீடிக்கவே செய்யும்.

வெண்முரசின் பெண்கள் குறித்து மட்டுமே தனியே எழுத வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது.

சத்யவதி தொடங்கி இன்று வாசித்துக் கொண்டிருக்கும் தமயந்தி வரை பெண்களின் நிமிர்வை சுயத்தை தான் சொல்கிறது வெண்முரசு. எம்.டி. வாசுதேவன் நாயரின் திரௌபதி மிகச் சிறியவள்.கணவருக்கென கானேகிய எளிய மனையாட்டி. ஆனால் வெண்முரசின் திரௌபதி அந்த ஆடலை நிகழத்தும் கரம். இந்த வேற்றுமை தான் வெண்முரசை நோக்கி என்னை ஈர்த்ததென இப்போது தோன்றுகிறது.

சகுனிக்கு இணையாக அரசு சூழும் சௌபாளினி கருவை கலைக்க வேண்டிய சூழலிலும் அரசியென நிமிரும் குந்தி பேரரசியன்றி பிறிதொன்றென தன்னை எண்ணாத திரௌபதி கதை பயிலும் சுபத்திரை போருக்கெழத் துடிக்கும் சத்யபாமை ஆணென்றே வாழும் சித்ராங்கதை நூறு குழந்தைகளை தூக்கிப் பிடித்து விளையாட நினைக்கும் துச்சளை ஒற்றைச் சொல்லில் துரியனை நிறுத்தும் பானுமதி என ஒரு பக்கம் அவர்களின் நிமிர்வைச் சொல்லும் அதே நேரம் அம்பை தொடங்கி திரௌபதி வரையிலான அவர்களின் வீழ்ச்சியையும் பிரம்மாண்டமாகவே சித்தரிக்கிறது வெண்முரசு. வேழம் சரிவது போல ஆலொன்று அடித்தூர் பறித்து எறியப்படுவது போல.

அம்பை தொடங்கி திரௌபதி அவர்களின் அத்தனை வீழ்ச்சிகளுக்கும் தங்களை சுயத்தை மதிக்கும் காத்துக் கொள்ளும் நிமிர்வே அடிப்படையாகிறது.

நன்றி

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

***

ஜெ.

வெற்றி படித்தேன்….

எனக்கென்னவோ இது ஆண்மையின் மரியாதையின் வெற்றி என படுகிறது….

தன்மானத்தை பொதுவில் ஏலம் வைத்தவன். தன் பெண்மையை சற்றும் மதியாதவன்… தன்னை இழந்து வசதிகளை கொண்டு வந்தால அதை ஏற்கதயாரானவன் ஒரு பறம்..

தன் கவுரவத்தை பொது வெளியில் விட்டுக் கொடுக்கமாட்டேன் என உறுதி அளிப்பவனிடம் இயல்பாகவே அவள மனம் சென்றிருக்கலாம்…இவளது உறுதியால் ரங்கப்பர் இயல்பாகவே இவள்பால் ஈர்க்கப்பட்டு இருக்கலாம்….

அந்த ஐந்து லட்சம் என்பது அவள் கவுரவததைக் காக்க அவர் கொடுக்கும் விலை…. அதனால்தான் சாகும்வரை இதை அவர யாரிடமும் சொல்லவிலலை… அவளை வெல்வது மட்டுமே மனதில் இருந்தால் இவ்வளவு கவனமாக இருந்திருக்க வாய்ப்பில்லை

இந்த குணம்தான் அவளை ஈர்த்திருக்கும்..

காசுக்காகததான் அவனுடன சென்றேன் என கணவனுக்குப்புரியும் வகையில் சொல்லி இருக்கலாம்…அல்லது அவன் அப்படி புரிந்து கொண்டிருக்கலாம்….. ஆனால் இதற்காக அவள் அப்படி செய்யக்கூடியவள் என்பதற்கான குறிப்புகள் கதையில் இல்லை

இது கண்டிப்பாக ஆண் என்ற வகையில் கணவனின் தோல்வி… ஆனால் அதை தன் மனைவியின் தோல்வியாக புரிந்து கொண்டிருப்பான்

இது ரங்கப்பரின் வெறறி…. ஆனால் அவளது வெற்றி என்றே அவர் நினைப்பார்…இதற்குமேல் ஒரு பெண் அவருக்கு அவர் வாழ்வில தேவைப்பட்டு இருக்க மாட்டாள்

தன் பெண்மையை விட்டுக் கொடுக்காதவனை தேர்ந்தெடுத்தது அவளது வெற்றி என்றாலும் அதை தன் தோல்வி என நினைத்தாளோ…அந்த குற்ற உணர்வை கடைசியில் இறக்கி வைத்தாளோ என தோன்றுகிறது

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்பு ஜெமோ சார்,

முதல் வாசிப்பில் பெண் பந்தயப் பொருள் மட்டும்தானா என்று சீற்றத்துடன் லதாவின் கூற்றாக இக்கதையை தங்களால் எழுத இயலுமா? இயன்றால் அது உங்கள் வெற்றி என்று சிந்தித்தேன். பின் கணவருடன் விவாதித்த பொழுது (செய்தித்தாள் தவிர்த்து மற்றையது வாசிக்காதவர் வாய்மொழியாக நான் கதை கூறிய பின்பு ) ரங்கப்பர் உயர்ந்தவர் லதா மேல் மட்டுமல்ல, நமச்சிவாயத்தின் மேல் உள்ள அன்பினாலும் தாம் வென்றதை மாற்றிச் சொன்னார்என்ற தன் கருத்தைச் சொன்னார்.சரியெனப் பட்டாலும்ஆனால் அதுவும் ஆணின் பார்வை மட்டுமே .

மீள்வாசிப்பில் முதலில் கதையின் நாயகியின் பெயர்,கதை நடக்கும் காலகட்டத்தில் லதா என்னும் பெயர் சற்றே நாகரிகப் பெயராகத் தோன்றுகிறது. அதற்கெனத் தனிப்பொருள் ஏதும் உள்ளதா தெரியவில்லை.(லதா மண்டபம் என்பதை வந்தியத்தேவன் நந்தினியைத் தனியே சந்தித்த போது வாசித்த நினைவு. லதா என்னும் பெயரின் பொருளை மகராஜன் அருணாசலம் சார் சொன்னால் தேவலை)

நமசிவாயத்திற்கு மனைவி தன் தேவைகளை நிறைவேற்றுகிற உடைமைப் பொருள் மட்டுமே.அதைத் தாண்டி அவளின் உணர்வுகள் அவருக்குப் பொருட்டே அல்ல.அவளின் விருப்பு வெறுப்புஎதுவுமே அறிந்தவராகத் தெரியவில்லை.அறிய முயன்றதுமில்லை. ஆனால் அவரின் உடல்மொழி மூலமே அவரின் மனநிலையை நன்குஅறிந்தளாகவே லதா இருக்கிறாள்.(இத்தனைக்கும் பொதியப்பட்ட உடல்) சவாலிட்ட இரவில் உடையைக் களையும் போதே மாறுபாட்டை உணர்தல் போன்றவை.அவருக்கு என்ன தேவையோ அதைத் தரும் மனைவி. அவர் நம்புவது அன்று இரவு எதுவோ நடந்தது என்பதை. நாற்பது வருடங்களுக்குப் பின் ‘ உனக்கு எப்படி வேண்டுமோ அப்படியே நான் ‘ என்று இறப்பதற்கு முன் பொய்யுரைத்து விட்டுச் செல்கிறாள். ஆனால் அவரால் பந்தயப் பொருளாக்கப் பட்டோம் என்ற உண்மை ரங்கப்பரின் மூலம் தெரிந்த அதிர்ச்சியால் வரும் நடத்தை மாறுபாடே அவளில் நிகழ்ந்தது. அவளின் கற்பு அவளுக்கானது.அது அவருக்குத் தேவையில்லை என்ற முடிபு லதாவுக்குமானது மட்டுமல்ல.எனக்கும் அதுவே.

சிவமீனாட்சி

***

அன்புள்ள ஜெ:

வெற்றி சிறுகதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது, இது நீங்கள் முன்பு எழுதி தளத்தில் மீண்டும் வெளியிடப்படும் கதை என்றே நினைத்தேன். அந்தக் காலத்துக் கதை என்பதால் மனம் இயல்பாகக் கற்பனை செய்துகொண்டதா என்று தெரியவில்லை. கதையைப் பற்றிய என் எண்ணங்கள்:

ரங்கப்பருக்கும், லதாவுக்கும் இடையில் நடந்தது நேரடியாகச் சொல்லாமல் விடப்பட்டுள்ளது; கதை நமச்சிவாயத்தின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் கிடைக்கும் இடைவெளிகளை நிரப்பிக்கொள்ளும் உரிமை வாசகரிடம். கதையின் பிரதானச் சம்பவமும் அது வெளியிடப்படும் தருணங்களும் இரட்டைச்சாத்தியங்கள் கொண்டவை: ரங்கப்பர் தோற்றார்/ஜெயித்தார். ரங்கப்பர் சபையில் தான் தோற்றதாகச் சொன்னது உண்மை/பொய். சாகும்போது ரங்கப்பர் ஜெயித்ததாக லதா சொல்வது உண்மை/பொய். கதையில் உள்ள குறிப்புக்களின் படி ரங்கப்பர் ஜெயித்து, சபையில் பொய் சொல்லி அதை லதா சாகும்போது கணவனிடம் உடைக்கிறாள். இரட்டைச் சாத்தியங்களின் நீட்சியாக, சம்பவம் வெளியிடப்படும் இன்னும் ஒரு தருணம்: கதையின் முடிவில் சாகும்போது லதா தன்னிடம் இதைப்பற்றிப் பேசியதாக நமச்சிவாயம் கிளப்பில் நண்பர்களிடம் சொல்வது உண்மை/பொய். அவர் ஏன் பொய் சொல்ல வேண்டும்? இறுதிவரை அவரால் இந்த வெற்றியை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. லதா சாகும்போது இதைப்பற்றிப் பேச முயற்சிக்கிறார். ஆனால் அவள் எதும் சொல்லாமல் இறக்கிறாள். தன் சிறுமையின் எடை அவரை அழுத்துகிறது. அவள் என்ன சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்தாரோ அதை அவள் சொன்னதாகவே கற்பனை செய்துகொள்கிறார்; ஒரு தண்டணையாக இது அவருடைய குற்ற உணர்ச்சியை நிகர் செய்கிறது. மனித மனம் செயல்படும் விதம் சிக்கலானது என்பதால் அனைத்துச் சாத்தியங்களும் சாத்தியமே. சூதர்கள் இந்தக் கதையைப் பாடிப் பெருக்கினால் எத்தனை வடிவங்கள் நமக்குக் கிடைக்குமோ தெரியாது!

இந்தக்கதையில், நமச்சிவாயம் சவாலுக்குள் இழுக்கப்படும் இடம் நுட்பமானது. பெரும் பணக்காரர்கள் நிரம்பிய சபையில் அவர்களுக்கு நிகராக நிற்க, அவர்களின் கவனத்தைக் கவர அவரிடம் என்ன உள்ளது? ஒழுக்கம், பண்பாடு என்று அவர்கள் விவாதிக்கும்போது, அவர் இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு வாதத்தின் உள் நுழைகிறார்; ஆனால் அது விபரீதமான திசையில் சென்றுவிடுகிறது. இன்னொரு கோணத்தில், விவாதத்தின் பொருள் அவரது சுயமதிப்பைச் சீண்டுவதாக அமைகிறது. ரங்கப்பரின் வாதப்படி பணத்தால் எல்லாப் பெண்களையும் வாங்க முடியும். அங்கிருப்பவர்களில் இவரைத்தவிர அனைவரும் பணக்காரர்கள். சமமான ஆயுதம் தாங்கியவர்கள். தாக்குதல் நிகழ்ந்தால் அழிவு இரு பக்கமும் இருக்கும். எனவே தாக்குதல் நிகழ வாய்ப்புக் குறைவு. ஆனால், நமச்சிவாயத்திடம் பணம் இல்லாததால் அவரால் யாருடனும் இந்த விஷயத்தில் மோத முடியாது. ஆனால் அவர்கள் யாரும் அவரிடம் மோதி வெற்றி கொள்ள முடியும். எனவே இந்த வாதம் அவரது முகத்தில் அறைந்து அவரை உள்ளிழுக்கின்றது. அவரிடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்ற கேள்வியை எழுப்புகிறது.

அன்புடன்,

S பாலகிருஷ்ணன், சென்னை.

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19
அடுத்த கட்டுரைலங்காதகனம் – கடிதம்