நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் -கடிதங்கள்

naveena-tamil-ilakiya-arimukam-48137

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,

நலம் தானே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வாசகக் கடிதம். டெல்லிக்கு கல்லூரி சுற்றுலா சென்றுவந்தோம்.பயணத்தின் போது படிப்பதற்கு உங்கள் “நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்” எடுத்துச் சென்றேன்.தமிழ் இலக்கியம் குறித்து மிகவும் விரிவாக எழுதியிருந்தீர்கள். அதை படிக்க படிக்க ஒரு பெரும் மலைப்பு தான் வந்தது எப்படி இந்த மனிதர் இவ்வளவு படித்து தீர்த்து இருக்கிறார் என்று. இலக்கியம் குறித்து எனக்கு ஒரு தெளிவு எற்பட்டது உங்களால்.

இலக்கிய அடிப்படைகளில், இலக்கியம் மீது வைக்கும் எல்லா கேள்விகளுக்கும் விடை தந்தீர்கள்.

இலக்கிய வரலாறு பகுதி என்னை மலைக்க வைத்தது. தமிழ் இலக்கியம் எவ்வாறு வளர்ச்சி அடைந்து வந்துள்ளது என்பதை தெளிவுபடுத்தினீர்கள். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்கள், புத்தகங்கள் இவற்றில் பாதியைக்கூட கேள்வி பட்டது இல்லை என்னும் போது ஒரு வெட்க உணர்வு ஏற்படுகிறது.நீங்கள் எப்படி தான் இத்தனை எழுத்தாளர்களையும் அவர்களின் ஆக்கங்களையும் படித்தீர்கள் என்னும் போது உங்கள் திறனை கண்டு வியந்து நிற்கிறேன்.

நான் வானவன் மாதேவி,வல்லபி சகோதரிகள் மூலம் தான் தமிழ் இலக்கியத்தை உங்களின் எழுத்துகளில் கண்டு கொண்டேன், பின் ஒரு சில இலக்கிய படைப்பாளிகளை உங்கள் மூலம் அடையாளம் கண்டு கொண்டேன். இந்த புத்தகம் வழியாக தமிழ் இலக்கியத்தை பற்றிய ஒரு போது பார்வை கிடைக்கப் பெற்றேன்.இது நான் இன்னும் செல்ல வேண்டிய தூரத்தையும்,நான் என் நிலையில் உள்ளேன் என்பதையும் காட்டியது.தமிழ் இலக்கியத்தையும் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களையும் இந்த புத்தகம் எனக்கு அடையாளம் காட்டியது. பின் சில கலைச்சொற்கள் மிகவும் பயன் உள்ள ஒன்று.நான் இன்னும் படிக்க வேண்டியது மலைப்போல் இருக்கிறது என்பதை கடைசி பக்கங்களில் காட்டிவிட்டீர்கள்.

இந்த புத்தகம் எனக்கும் என் போன்ற ஆரம்ப நிலை வாசகர்களுக்கும் மிகவும் பயன் உள்ள ஒன்று.

நன்றி

இப்படிக்கு உங்கள் மாணவன்,

பா.சுகதேவ்,

மேட்டூர்

***

அன்புள்ள ஜெ,

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலை வாங்கி ஒருவருடம் ஆகிறது. ஒரு பைபிள் மாதிரி வைத்திருக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் அதை எடுத்துப்படிப்பது. அதைப்பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டு நூலகம் சென்று தேடுவேன். அப்படித்தான் கரிச்சான்குஞ்சு எழுதிய பசித்தமானுடம் கிடைத்தது. பலநூல்கள் கிடைத்தன. நூல்களை வாசித்தபின்னர் அதிலே நீங்கள் சொல்லியிருப்பதுக்கும் என் கருத்துக்கும் இடையே சமானம் என்ன என்பதை பார்ப்பதுண்டு

அதேபோல பல சந்தர்ப்பங்களில் கலைச்சொற்களையும் கோட்பாடுகளையும் சுருக்கமாகப்புரிந்துகொள்ள அதைத்தான் வாசிப்பது. ஏதாவது சொல் புரியாமலிருந்தால் உடனே புரட்டி வாசிப்பேன். தெளிவு வந்துவிடும். இப்படி நாலைந்துமுறை வாசித்தபின் நமக்கே அதெல்லாம் நன்றாகத்தெரியும் என்னும் எண்ணம் வருகிறது. இது ஒரு பாடப்புத்தகம் மாதிரி இருக்கிறது. நன்றி

ஆர். மணிகண்டன்

***

அன்புள்ள ஜெ

நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் அற்புதமான நூல். ஆனால் 2000 த்திலேயே நின்றுவிடுகிறது. அடுத்த தலைமுறை வந்துவிட்டது. அதை இன்றையகாலகட்டம் வரைக் கொண்டுவந்து நவீனப்படுத்தலாமே?

முகுந்த்ராஜ்

***

அன்புள்ள முகுந்துராஜ்

எழுதவேண்டும். பலவேலைகள்

அதோடு அடுத்த தலைமுறை மேலும் எழுதி முகம் தெளிந்து வந்தபின் எழுதினால் விவாதங்கள் அதிகம் இருக்காது என்று ஓர் எண்ணம்

ஜெ

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
அடுத்த கட்டுரைதாமஸ் கிங் உரைகள்