‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–90

90. துலாநடனம்

புரு அரசகோலத்தில் வெளியே வந்தபோது சுபகன் வணங்கியபடி அணுகி “அனைவரும் சித்தமாக இருக்கிறார்கள், அரசே” என்றான். அவன் கைகூப்பியபடி வெளியே சென்றான். சுகிர்தரின் மைந்தரும் பேரமைச்சருமான பிரபாகரரும் பட்டத்தரசியும் மைந்தர்களும் அங்கே காத்து நின்றிருந்தனர். அவன் வருகையை நிமித்திகன் வெள்ளிக்கோல் தூக்கி அறிவித்ததும் பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. அவனைக் கண்டதும் மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. அவன் சென்று பிரபாகரரின் கால்களை பணிந்தான். “வெற்றியும் புகழும் பெருஞ்செல்வமும் குடிநிறைவும் அமைக!” என அவர் வாழ்த்தினார். அவருக்குப் பின்னால் நின்றிருந்த அந்தணர் கங்கைநீர் தெளித்து வேதச்சொல் உரைத்து அவன்மேல் வாழ்த்து பொழிந்தனர்.

அவன் மைந்தரை நோக்கி கைநீட்ட போர்க்கூச்சலிட்டபடி ரௌத்ராஸ்வன் பாய்ந்து வந்து அவன் கைகளில் விழுந்தான். அவனை வாளால் வெட்டுவதுபோல நடித்தபடி துள்ளினான். புரு சிரித்தபடி மைந்தனை தூக்கிச் சுழற்றி அருகே நிறுத்திக்கொண்டான். ஈஸ்வரன் நாணச்சிரிப்புடன் அருகே வர அவனைப் பிடித்து மறுபக்கம் நிறுத்திக்கொண்டு அரசியை நோக்கி புன்னகைத்தான். அவள் “போதும், அரசணிகள் கலைகின்றன” என்றாள். சூழ்ந்து நின்றிருந்த காவலர்களும் பணியாளர்களும் பற்கள் மின்ன சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

ரௌத்ராஸ்வன் “நாம் கானாடவா செல்கிறோம், தந்தையே?” என்றான். “ஆம், கானாடுதலும் உண்டு” என்றான் புரு. பிரவீரன் இளையவர்களிடம் “உங்கள் தேர்கள் அப்பால் நின்றுள்ளன. வருக!” என்றான். ரௌத்ராஸ்வன் “இல்லை, நான் தந்தையிடம்தான் இருப்பேன்” என்றான். மூத்தவன் ஏதோ சினந்து சொல்ல வாயெடுக்க “இருக்கட்டும்… நாம் ஒரே தேரில் செல்வோம்…” என்றான் புரு. “நகர்விட்டு நீங்கியதும் தனித்தனி தேர்களில் ஏறிக்கொள்வோம்.” சுபகன் நகைத்து “இன்று சோமாஸ்கந்தரை நோக்கும் நல்லூழ் அமைந்துள்ளது நம் குடிகளுக்கு” என்றான்.

அவர்கள் தேரில் ஏறிக்கொண்டனர். ரௌத்ராஸ்வன் அன்னையின் மடியில் அமர புருவின் மடியில் ஈஸ்வரன் அமர்ந்தான். பிரவீரன் அவர்களுக்குப் பின்னால் நின்றான். தேர் அரண்மனை முற்றத்திலிருந்து எழுந்து அரசப்பெருஞ்சாலையை அடைந்ததும் அதை காத்து நின்றிருந்த குடிகளின் வாழ்த்தொலிகளும் மலர்ப்பொழிவும் அவர்களை சூழ்ந்துகொண்டன. மைந்தர்களுடன் அவன் தோன்றியது கண்டு பெண்கள் உவகையுடன் கூச்சலிட்டனர். ரௌத்ராஸ்வன் நாணி கைகளால் முகத்தை மறைத்துக்கொள்ள புரு அவன் கைகளைப் பற்றி விலக்கினான். அவன் திரும்பி அன்னையின் மார்புக்குள் முகம் புதைத்தான்.

கோட்டைவாயிலைக் கடந்ததும் ஈஸ்வரன் “நாம் எங்கு செல்கிறோம், தந்தையே?” என்றான். “அன்னையின் சோலைக்கு. இது அன்னைக்கு நாம் மலர்க்கொடை அளிக்கும் நாள்” என்றாள் பௌஷ்டை. “நாம் இதுவரை அங்கு சென்றதில்லையா?” என்றான் ஈஸ்வரன். “நீங்கள் இருவரும் சென்றதில்லை. நான் சென்றிருக்கிறேன்” என்றான் பிரவீரன். ஈஸ்வரன் “அங்குதான் நம் பேரன்னை உறைகிறாரா?” என்றான். புரு “ஆம்” என்றான்.

tigerகுருநகரியைவிட்டு விலகிச்சென்ற புரு சுகிர்தவனம் என்னும் காட்டில் மாணவர்களுடன் வாழ்ந்த யதாவாசர் என்னும் முனிவருடன் தங்கினான். அவனுக்கென அமைந்த சிறுகுடிலில் நெறிநூல்களையும் மெய்நூல்களையும் கற்றும் காட்டில் காய்கனி தேடி அலைந்தும் வாழ்ந்தான். அங்கிருந்த ஏழாண்டுகளும் அவன் சொல்லொறுப்பு நோன்பு கொண்டிருந்தான். அங்கே அவன் எவரென பிற மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. உடல்தளர்ந்த ஷத்ரிய முதியவர் ஒருவர் இறுதிக் கான்கடனுக்காக வந்திருப்பதாகவே எண்ணினர். பேசாதவனை பிறர் காணாமலுமாகிறார்கள். ஓரிரு ஆண்டுகளுக்குள் அங்கே ஒருவர் வாழ்வதையே அங்குள்ள மாணவர்கள் மறந்தனர்.

ஏழாண்டுகளுக்குப்பின் அவனைத் தேடி சுகிர்தரின் ஒற்றன் வந்தான். “இளவரசே, அரசர் அரண்மனைக்கு வரப்போகிறார். உங்களுக்கு இளமையை மீட்டளிக்கவிருக்கிறார். உங்களை அழைத்துவரும்படி அமைச்சரின் ஆணை” என்றான். அரசஒற்றனையும் அவன் சொல்லையும் முதலில் அவனால் அறியமுடியவில்லை. அவன் இறந்தகாலம் அவனால் புனையப்பட்ட ஒளிமிக்க கனவுகளாக உள்ளே இருந்தது. அதில் அளிநிறைந்த விழிகளுடன் அவன் அன்னையும், பருவங்களை மாறிமாறி அணிந்துபொலியும் அசோகவனியின் மரங்களும், இளவெயிலும் நிலவொளியும் முழுக்காட்டிய அதன் சிறுதெருக்களும், முள்மரக்கோட்டையும், புழுதிச்சாலையும், அசோகச்சோலையின் குளிரும் மட்டுமே இருந்தன. அங்கே இன்பங்களனைத்தும் துளிபெருகி ஆறாகியிருந்தன. துன்பங்கள் அவ்வின்பங்களுக்கு எதிர்ச்சுவை அமைக்கும் தலைகீழ் இன்பங்களென உருமாறிவிட்டிருந்தன.

முதுமைக்கு உகந்தவகையில் மாற்றமில்லாத எளிய அன்றாடச் செயல்களை அவன் அமைத்துக்கொண்டிருந்தான். காலைநீராட்டு முதல் இரவின் நூல்நோக்குதலும் துயிலுதலும் வரை ஒவ்வொன்றும் இயல்பாகவே நிகழ்ந்தன. அந்த அன்றாடத்தின் மாறா ஒழுக்கு அவன் எண்ணங்களையும் பிறழா வழிவென்றாக்கியது. புதியன எதுவும் நிகழாதபோது பழையன புதியவையாகி வந்து நடித்தன. ஆகவே ஒவ்வொரு நினைவுக்கும் பலநூறு வடிவங்கள் எழுந்து மெய்யென்ன மயக்கென்ன என்னும் எல்லைகள் முற்றழிந்தன. அங்கே அவனை யயாதி தன் வலிய கைகளால் தழுவினார். கானாடவும் நீர்விளையாடவும் கொண்டுசென்றார். புரவியும் களிறும் பயிற்றுவித்தார். படைக்கலம் ஏந்தி அவன் அவருடன் களிப்போராடி சிரித்தான். உடன்பிறந்தாருடன் கூடி விளையாடினான். நிலவொளியில் சோலைமுற்றத்தில் அமர்ந்து உணவுண்டான். சொல்லாடி மகிழ்ந்தபின் குளிரில் அன்னையின் உடலுடன் ஒட்டிக்கொண்டு விழிமயங்கினான்.

அவ்வுலகில் ஒற்றனின் வருகை அலைகளை கிளப்பி நிலைகுலையச் செய்தது. புறச்சொற்களுக்கு அவன் உலகில் பொருளேதும் இருக்கவில்லை.  புரிந்துகொள்ளாமலேயே ஆம் ஆம் என்று தலையசைத்தான். அவன் நெஞ்சிலிருந்து எண்ணம் சொல்லாக மாற மிகவும் பிந்தியது. மூச்சை வந்து தயங்கியபடி தொட்ட எண்ணம் ‘இதுவா? இதைக்கொண்டா?’ என திகைத்தது. பின் மெல்ல மூச்சை அளைத்து பிடி அள்ளி அதை வனைந்து சொல்லாக்கி நாவில் அமைத்தது . “யார் நீங்கள்?” என்றான் புரு. அச்சொல்லைக் கேட்டு அவன் செவி திடுக்கிட்டது. முதியகுரல், அவன் கேட்டறியாதது. “நான் குருநகரியின் ஒற்றன் மந்தன். சுகிர்தரின் செய்தியுடன் வந்தவன்” என்றான் ஒற்றன். “ஆம்” என்றான் புரு.

மீண்டும் புரியாமல் “என்ன?” என்றான். மிக மெல்லத்தான் அவனால் உளம்குவிந்து அச்செய்தியை அடையமுடிந்தது. ஒற்றன் ஒலிமங்கிய அவன் செவியில் மீண்டும் மீண்டும் அச்செய்தியை கூவினான். “என்ன?” என்று அவன் கேட்டுக்கொண்டே இருந்தான். செய்தியை புரிந்துகொண்டதும் அவன் தலை ஆடத்தொடங்கியது. கைகளை நெஞ்சோடு சேர்த்து நரைத்த தாடிமேல் விழிநீர் வழிய விம்மி அழத்தொடங்கினான். யதாவாசரின் மாணவர்கள் அவன் தோளைப்பற்றி தேற்றினர். அனைத்துக்கும் இறுதியில் எஞ்சுவது அழுகையாகவே இருந்தது. துயரற்ற அழுகை. அல்லது அறியாப் பெருந்துயர் ஒன்றின் அழுகை.

ஏழாண்டுகளில் இளமையை அவன் மறந்துவிட்டிருந்தான். உடல் உணர்ந்த முதுமை உள்ளத்தையும் அவ்வாறே ஆக்கிவிட்டிருந்தது. நடையில் அமர்வில் துயிலில் விழிப்பில் உடல் கொண்ட முதுமை எண்ணங்களாக உணர்வுகளாக தன்னிலையாக மாறியிருந்தது. “உள்ளமென்பது உடலின் நுண்வடிவு” என்று யதாவாசர் அவனிடம் சொன்னார். “உன் உள்ளம் முதுமைகொள்கையில் புதிய ஓர் உலகை அறியத் தொடங்குவாய். அங்கு நீ அறிவதை மீண்டு சென்று இளமையில் செயலாக்க முடியுமென்பதே உன் பேறு.” அவன் தலையசைத்தான். “அவ்வாறு முதுமையின் உலகொன்றை நீ உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் உன் தளர்ந்த உடல் அதில் வாழவும் இயலாது” என்றார் யதாவாசர்.

tigerகுருநகரியை அவன் அதற்கு முன் பார்த்திருக்கவில்லை. எனவே புழுதியலை படிந்த பெருஞ்சாலைக்கு அப்பாலெழுந்த கரிய கோட்டைவாயிலும் பெருமுற்றமும் பிரிந்து சென்ற சாலைகளில் ஒழுகிய வண்டிகளும் விலங்குகளும் மக்களும் மாடநிரையும் காவல்கோட்டங்களும் அவனுக்கு பெருந்திகைப்பை அளித்தன. அவ்வுணர்வெழுச்சியை அவன் உள்ளத்தால் தாளமுடியாமலானபோது முதுமைக்குரிய வகையில் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு உளமொதுக்கி உடல்சுருக்கி தேர்த்தட்டில் துயிலத் தொடங்கினான்.

அரண்மனை முற்றத்தில் தேர் நின்றபோது விழித்துக்கொண்டான். அமைச்சர் சுகிர்தர் தேர் அருகே வந்து “வருக இளவரசே, அரண்மனை தங்களுக்காகக் காத்திருக்கிறது” என்றார். “யார்?” என்று அவன் பதறியபடி கேட்டான். இளமையின் கனவில் அலைவது அறுபட்டமையால் இடம் துலங்காமல் “யார்? என்ன?” என்றான். சுகிர்தர் “நான் அமைச்சர் சுகிர்தர். தங்களை வரவேற்க இங்கு நின்றுள்ளோம்… வருக!” என்றார்.

அமைச்சரின் கைபற்றி நடந்து படியேறுகையில் அவன் கால்கள் நடுங்கின. ஒவ்வொரு படியிலும் இரு கால்களையும் ஊன்றி நின்று மேலேறிச்சென்று பெருங்கூடத்தில் நின்று அண்ணாந்து அதன் குடைவுக்கூரையை நோக்கினான். நீர்மருதமரங்கள்போல திரண்டு காலூன்றி நின்ற தூண்களின் வலிமையை மெல்ல கைகளால் தொட்டுத்தொட்டு உணர்ந்தான். ஊன்றி நிலைத்தவற்றை உறுதியுடன் அசைவனவற்றை இளமைநிறைந்தவற்றைத் தொட அவன் எப்போதும் விழைந்தான். “தந்தை வந்திருக்கிறார், அரசே” என்றார் சுகிர்தர். “தங்களுக்காக காத்திருக்கிறார்.” அவன் பழுத்த விழிகளால் நோக்கி “யார்?” என்றான். அவர் மீண்டும் சொன்னபோதுதான் புரிந்துகொண்டான்.

“என்னால் படி ஏறமுடியாது” என்றபடி அவன் பீடத்தை நோக்கிச் செல்ல கைகாட்டினான். பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டதும் உடலுக்குள் எலும்புகள் இறுக்கமழிந்து மெல்லிய உளைச்சல்கொண்டன. நிமிர்ந்த கூன்முதுகை மீண்டும் தளர்த்தி நிலம்நோக்க முகம் குனித்து “நான் சற்று படுக்கவேண்டும்” என்றான். அமைச்சர் சொன்னவை மறந்துவிட்டிருக்க அவர் முகத்தை நோக்கி அங்கிருந்த உணர்ச்சிகளைக் கண்டு அவர் என்ன சொல்லியிருக்கக் கூடும் என உய்த்துணர முயன்று தோற்று பொதுவாக புன்னகை செய்தான்.

ஏவலர் இன்னீர் கொண்டுவந்தனர். அதை கண்டதும்தான் விடாய் எழுந்திருப்பது நினைவுக்கு வந்தது. உடலெங்கும் எரிந்த வெம்மை அதனால்தானா என வியந்தபடி எடுத்து ஆவலுடன் அருந்தினான். கைநடுங்க வாய் கோணலாக மூச்சு தடுக்க அதை குடித்தபோது ததும்பி தாடியிலும் ஆடையிலும் சிந்தியது. கோப்பையை ஏவலன் வாங்கிக்கொண்டபோது அவனை நோக்கி புன்னகை செய்தபின் “அஷ்டகர் சமித்துக்கு சென்றுவிட்டாரா?” என்றான். அவன் வியப்புடன் நோக்க “நானும் செல்லவேண்டும். வெயிலெழுந்துவிட்டது” என்றான்.

சுகிர்தர் திகைத்து நின்ற ஏவலனிடம் விலகிச் செல்லும்படி விழிகாட்டினார். அவன் அகன்றபின் “சற்றுநேரம்… இதோ சேக்கறைக்குச் செல்லலாம்” என்றார். காலடியோசை ஒலிக்க பார்க்கவன் படிகளில் இறங்கி வந்தார். அமைச்சர் “தங்கள் தந்தையின் அணுக்கர் பார்க்கவர். அரசர் கானேகியபோது அவர் மீண்டுவருவதற்காகக் காத்து காட்டின் விளிம்பிலேயே ஏழு ஆண்டுகள் தானும் தங்கியிருந்தார். தந்தை வந்தபோது உடன் வந்தார்” என்றார். அவன் திரும்பி நோக்கியபோது நினைவின் ஆழத்திலிருந்து மங்கலாக பார்க்கவனின் முகம் எழுந்துவந்தது. “ஆம்” என்றான்.

அது அவன் எதையும் உணராதபோது பொதுவாகச் சொல்வது. அவன் உள்ளம் மீண்டும் பின்னால் செல்லத் தொடங்கியிருந்தது. நிகழ்காலம் சிடுக்காக இசைவற்றதாகத் தோன்றியது. அதில் உழலும் துயரை விலக்கி மீண்டும் தன் இனிய இறந்தகாலக் கனவுகளுக்குள் புகுந்துவிட உள்ளம் ஏங்கியது. “நான் சற்று ஓய்வெடுக்கவேண்டும்” என்றான். சுகிர்தர் பார்க்கவனிடம் “மேலே ஏறமுடியாது என நினைக்கிறேன். தளர்ந்திருக்கிறார். அரசர் கீழே வந்து இவரை சந்திப்பதே நன்று” என்றார். பார்க்கவன் அவனை நோக்கியபின் விழிதிருப்பிக்கொண்டு “நான் சென்று சொல்கிறேன்” என்றார்.

அவன் பார்க்கவனிடம் “உச்சிவெயில்போல் வெம்மைகொண்டிருக்கிறது இந்த பின்காலை” என்றான். அவரால் அவனை விழிநாட்டி நோக்க இயலவில்லை. அவர் சென்றதும் அவன் ஏப்பம் விட்டு கால்களை நீட்டி கைகளை கைப்பிடிகள்மேல் தளரவைத்து அமர்ந்தான். வெளியே காற்று ஓடும் ஓசை கேட்டது. அது இனிமை ஒன்றை நினைவிலெழுப்பியது. இனிமையே நினைவை கொண்டுவந்தது. அவன் அன்னையுடன் சோலைக்குள் சென்றுகொண்டிருந்தான். தொலைவில் ஓர் அசைவு. மான் ஒன்று சிலிர்த்து செவிகோட்டியது. எங்கோ ஒரு குயிலின் ஓசை. மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் சொல்லச்சொல்ல அதன் மன்றாட்டின் அழுத்தம் ஏறிவந்தது.

தலை நெஞ்சில் படிய அவன் துயின்றுவிட்டிருந்தான். படிகளில் குறடணிந்த இருவர் இறங்கிவரும் ஓசை கேட்டது. “இளவரசே!” என்று சுகிர்தர் அழைத்தார். அவன் திடுக்கிட்டு விழித்து ஓரம்வழிந்த வாயைத் துடைத்தபின் நிமிர்ந்து நோக்கி “யார்?” என்றான். “தங்கள் தந்தை” என்றார் சுகிர்தர். “யார்? என்ன?” என்றான். “தந்தை… அரசர்… எழுந்து நில்லுங்கள்!” அவனால் எழமுடியவில்லை. கால்கள் செயலற்று உறைந்திருந்தன. வெளியே குயில் மன்றாடிக்கொண்டிருந்தது. அவன் “ஆம், ஆம்” என எழ முயன்றாலும் உடல் விசைகொள்ளவில்லை.

யயாதி அப்போதுதான் அவனை பார்த்தார். விழிகளில் திகைப்பு தோன்ற இரு கைகளும் பொருத்தமில்லாமல் எழுந்து எதையோ விலக்குவனபோல முன்னால் வந்தன. பின் உடையில் உரசி ஒலியுடன் தளர்ந்து இரு பக்கமும் விழுந்தன. சுகிர்தர் “களைத்திருக்கிறார்” என்றபின் “எழுக, இளவரசே!” என்றார். “வேண்டாம், அவர் இப்போது முதியவர்” என்ற யயாதி அருகே வந்து நிலம்படிய விழுந்து வணங்கி “வாழ்த்துங்கள், மூதாதையே!” என்றார். அவன் திகைத்தபின் “யார்? என்ன?” என்று சுகிர்தரிடம் கேட்டான். “வாழ்த்துங்கள்… வாழ்த்துங்கள்” என்றார் சுகிர்தர். “யார்?” என்றான் புரு. “வாழ்த்துங்கள்… வாழ்த்து வாழ்த்து” என சுகிர்தர் கூவினார்.

அந்தக் குரலின் விசையால் உளமழிந்து புரு தலை ஆட தாடை தொங்கி வாய் திறந்திருக்க உறைந்தான். சுகிர்தர் குனிந்து கைகளை கீழே கிடந்த யயாதியின் தலைமேல் வைத்து “வாழ்த்துக!” என்றார். புரு “நெடுவாழ்வும் வாழ்புகழும் அமைக!” என வாழ்த்தினான். யயாதி எழுந்து கைகூப்பி “என் பிழைகளனைத்தையும் பொறுத்தருள்க… பிறிதெவரிடமும் நான் இதை கேட்கவியலாது” என்றார். அவர் முகத்தை நோக்கியபின் எவரென்று புரிந்துகொள்ளாமல் புரு அந்தப் பொதுவான புன்னகையை அளித்தான். யயாதி விழிநீர் மல்கி பின் கட்டுப்படுத்திக்கொண்டு திரும்பி பார்க்கவனிடம் “பைதல்களுக்குரிய சிரிப்பு” என்றார். பார்க்கவனும் விழியீரத்துடன் புன்னகைத்தார்.

மீண்டும் புருவை நோக்கியபின் “நான் கொள்ளவிருக்கும் உடல்… இவ்வுடலுக்குள் நிறைக்கவேண்டிய நிறைவை நான் எய்தியிருக்கிறேன். துறவையும் மெய்மையையும் பணிவையும் இதில் அமர்ந்து அடைவேன்” என்றார். “ஏதேனும் முறைமையோ சடங்கோ செய்யவேண்டும் என்றால்…” என பார்க்கவன் சொல்ல “ஏதுமில்லை. இதோ, இங்கிருந்தே என் முதுமையை பெற்றபின் படியிறங்கவேண்டியதுதான்” என்றார் யயாதி. அமைச்சரிடம் அவர் “நீர்” என்று சொல்ல அமைச்சர் திரும்பி ஏவலனிடம் கைகாட்டினார். அவன் வால்குடுவையில் நீருடன் வந்தான்.

யயாதி அதை வாங்கிக்கொண்டு புருவிடம் “எழுந்து தங்கள் கைகளை காட்டுக, தந்தையே!” என்றார். அதற்குள் அங்கிருந்து உளம்விலகிவிட்டிருந்த புரு “என் உடல் வலிக்கிறது. நெடுநேரம் அமர்ந்திருக்க என்னால் இயலாது” என்றான். “கைகளை நீட்டுங்கள்” என்றார் யயாதி. “என்ன?” என்று புரு சுகிர்தரிடம் கேட்டான். அமைச்சர் குனிந்து அவன் கைகளைப்பற்றி ஏந்துவதுபோல காட்டினார். யயாதி நுண்சொல்லை உதடசைவால் சொன்னபடி நீரூற்றினார். மீண்டும் குனிந்து புருவின் கால்களை வணங்கினார். நிலத்திலிருந்து எழும்போதே அவர் உடல் தளரத் தொடங்கியிருந்தது. பார்க்கவன் அவரை பிடித்து மெல்ல தூக்கியபோது முனகியபடி “மெல்ல…” என்றார். எலும்புகள் இணைப்பு தளர்ந்து உடல் நடுக்கம் கொண்டிருந்தது. கழுத்தில் தசைகள் நீர்நனைந்த சேற்றுச் சிற்பமென ஊறி நெகிழ்ந்து தொய்ந்து வளையத் தொடங்கின.

பார்க்கவன் அவரை பீடத்தில் அமரச்செய்தார். காலநாழியிலிருந்து மணல் ஒழிவதுபோல புருவின் உடலில் இருந்து முதுமை வழிந்து யயாதியை நிறைத்துக்கொண்டிருந்தது. யயாதி மெல்ல தளர்ந்து கைகளைக் கோத்தபடி சிறுதுயிலில் ஆழ்ந்தார். நரைதாடியும் முடியும் நீண்டன. தசைகள் வற்றிச் சுருங்கி நரம்புகள் புழுக்களைப்போல எழுந்து உடல் முதுமைகொண்டபடியே இருந்தது. அனலில் விழுந்த இலையெனச் சுருங்கி கருகி அவர் உருமாறுவதையே அனைவரும் நோக்கிக்கொண்டிருந்தனர்.

பீடத்தில் இருந்து எழுந்த புரு “தந்தையல்லவா அவர்?” என்று கூவியபோது அனைவரும் திரும்பி நோக்கினர். அவன் இளைஞனாக மாறிவிட்டிருந்தான். “ஆம், தங்களிடமிருந்து முதுமையை பெற்றுக்கொண்டுவிட்டிருக்கிறார்” என்றார் சுகிர்தர். “நான் அதை அவருக்கு அளிக்கலாகாதென்று எண்ணியிருந்தேன்… அது நான் எந்தைக்கு அளிக்கும் கொடை” என்றான் புரு. “இளவரசே, உங்களுக்காக நாடும் குடியும் காத்திருக்கின்றன. தந்தை உங்கள் பொறுப்பையும் நெறியையும் ஆணையிட்டிருக்கிறார்” என்றார் பார்க்கவன்.

புரு யயாதியை நோக்கிக்கொண்டிருந்தபின் திரும்பி சுகிர்தரிடம் “நான் இப்படித்தான் இருந்தேனா?” என்றான். “ஆம், சற்றுமுன்புவரை” என்றார் சுகிர்தர். “காலம் அவரை இத்தோற்றம் நோக்கி தள்ளிக்கொண்டு செல்கிறது, இளவரசே.” அவன் கைகூப்பி “என் மூதாதையரின் வடிவம்” என்றான். நிலம்படிய விழுந்து அவரை வணங்க அவர் விழித்து “யார்?” என்றார். “தங்கள் மைந்தர், வாழ்த்துக அரசே!” என்றார் சுகிர்தர். யயாதி “யார்? என்ன?” என்றார். “வாழ்த்துக… வாழ்த்துக!” என்று கூவினார் சுகிர்தர். பார்க்கவன் அவர் கையை எடுத்து புருவின் தலையில் வைக்க அவர் “நெடுவாழ்வும் அழியாப் புகழும் குன்றாச் செல்வமும் பெருகும் குடியும் எஞ்சும் உவகையும் அமைக!” என்றார்.

புரு எழுந்து கைகூப்பியபடி நின்றான். “அரசே, நாம் கிளம்பவேண்டும்” என்றார் பார்க்கவன். “ஆம், இங்கிருந்தே கிளம்பவேண்டும் என்று சொன்னேன் அல்லவா?” என்றார் யயாதி. புரு “தேர் சித்தமாகியிருக்கிறதா?” என்று சுகிர்தரிடம் கேட்டான். “முற்றத்தில் நின்றுள்ளது. அவர்கள் வந்த தேர்தான் அது” என்றார் சுகிர்தர். “திரும்பி நோக்காமல், ஒரு சொல்லும் எஞ்சாமல்” என்ற யயாதி புன்னகைத்து “நன்று, என்னால் அவ்வண்ணம் இறங்கிச்செல்ல இயலும் என்பது அளிக்கும் உவகை பெரிது” என்றார்.

பார்க்கவன் அவர் கைகளை பற்றிக்கொள்ள முனகியபடி மெல்ல எழுந்து நடந்தார். அமைச்சரும் பிறரும் தொழுதபடி உடன் செல்ல முற்றத்திற்குச் சென்று பார்க்கவனின் தோளைப்பற்றியபடி படிகளில் மெல்ல ஏறி மூச்சிரைத்து ஒருகணம் நின்று நெஞ்சத்துடிப்பை ஆற்றிய பின்னர் மெல்ல ஏறி பீடத்தில் அமர்ந்தார். திரைமூடியதும் அவர் முகம் மறைந்தது. பாகன் சவுக்கால் தொட புரவிகள் விழித்தெழுந்து கால்தூக்கின.

tigerபுருவின் முடிசூட்டுவிழவை உடனே நிகழ்த்திவிடவேண்டும் என்று சுகிர்தர் சொன்னார். “ஏழாண்டுகாலம் இங்கிருந்து முடியையும் கோலையும் புரந்திருக்கிறேன், இளவரசே. என் நாவால் எவருக்கும் எத்தண்டனையும் அளிக்கவில்லை. ஆயினும் இக்கோலின்பொருட்டு நிகழ்ந்தவை அனைத்துக்கும் சொல்முடிவே அடிப்படை என்பதனால் இதன் பழியிலிருந்து என்னால் தப்பமுடியாது. அந்தணர் ஆட்சியும் போரும் வணிகமும் வேளாண்மையும் செய்யலாகாது. ஏனென்றால் கொலையும் கரவும் பிறர்விழிநீரும் இன்றி அவற்றை ஆற்ற இயலாது. நான் எனக்கும் என் மூதாதையருக்கும் பழியை ஈட்டியிருக்கிறேன். எஞ்சிய நாட்கள் காட்டில் தவமியற்றி அதை நிகர்செய்தபின்னரே நான் விண்ணேகவேண்டும்.”

“நான் என் அன்னையை பார்க்கவேண்டும்” என்றான் புரு. “அவர்கள் எனக்கிடும் ஆணை என்ன என்று அறிந்தபின்னர் மட்டுமே நான் முடிசூட முடியும்.” சுகிர்தர் “அவர்கள் நீங்கள் அகன்ற அன்றே அசோகநகரியிலிருந்து வெளியேறி கோட்டைக்கு வெளியே காட்டுக்குள் குடில் ஒன்றைக் கட்டி அங்கே தனித்து குடியிருக்கிறார்கள். எவரும் சென்று நோக்க ஒப்புதலில்லை என்றார்கள்” என்றார். “நான் சென்று பார்க்கிறேன்” என்று புரு கிளம்பிச் சென்றான்.

அசோகவனியின் கோட்டைமுகப்புக்குச் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து வளைந்து காட்டுக்குள் நுழைந்த தொடர்கால் பாதையின் எல்லையில் இருந்தது அச்சிறியகுடில். புரு தன்னுடன் வந்தவர்களை காட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு கை கூப்பியபடி தனியாக சென்றான். குடிலை அணுகி அதன் வாயிலில் கைகள் கூப்பியபடியே இருக்க நின்றிருந்தான். குரலெழுப்பவில்லை. இரண்டுநாழிகைக்குப் பின்னர் வெளியே வந்த கோழி ஒன்று அவனைக் கண்டு குரலெழுப்ப உள்ளிருந்து எட்டிப்பார்த்த முதியவளை முதலில் அவனால் அடையாளம் காணமுடியவில்லை. அறிந்ததும் உளம் அதிர “அன்னையே…” என்றான்.

சர்மிஷ்டையின் முடி முற்றாக நரைத்திருந்தது. கடும் நோன்பால் உடல் வற்றி உலர்ந்து மட்கும் மரம்போலிருந்தது. இருகுழிகளுக்குள் விழிகள். கன்னங்களின் ஆழ்ந்த குழிகள் பற்களுடன் வாயை முன்னுந்தச் செய்திருந்தன. அவள் உடனே அவனை அடையாளம் கண்டுகொண்டதை விழிகள் காட்டின. அவனை நிலைத்த விழிகளால் நோக்கி சிலகணங்கள் நின்றபின் “உள்ளே வா” என்றாள். அவன் கைகள் கூப்பியிருக்க குடிலுக்குள் சென்றான்.

ஒருவர் மட்டும் படுக்குமளவுக்கு இடம்கொண்ட அக்குடில் ஒரு கூடை போலிருந்தது. ஈச்சையோலைக் கூரையினூடாக வந்த ஒளிச்சரடுகள் சருகுமெத்தையிடப்பட்ட மண்தரையில் ஊன்றி வெள்ளிவட்டங்களாக சுடர்ந்தன. அவள் அமர்ந்ததும் அவன் அவள் கால்களில் விழுந்து வணங்கினான். “புகழ் சூடுக! வெற்றியும் குடிப்பெருக்கும் அமைக!” என அவள் வாழ்த்தினாள். “நான் உங்கள் சொல்பெற்றுச் செல்ல வந்துள்ளேன், அன்னையே” என்றான். “நான் எவருக்கும் அன்னை அல்ல” என்றாள் சர்மிஷ்டை. ‘நெடுந்தொலைவு வந்துவிட்டேன். எஞ்சியிருப்பது ஒன்றே. அதை உன்னிடம் கோருகிறேன், குருநகரியின் அரசனாக.”

“ஆணையிடுங்கள்” என்றான் புரு. “என்னை சுக்ரரின் மகள் வாழும் தவச்சாலைக்கு அழைத்துச்செல்க!” என்றாள். அவன் உள்ளம் நடுங்கியது. அவன் ஒன்றும் சொல்லாததை உணர்ந்து அவள் “ம்?” என்றாள். “ஆணை! நாளையே அனைத்தையும் ஒருக்குகிறேன்” என்றான். “நீயன்றி எவரும் உடன்வரவேண்டியதில்லை. எந்த முறைமையும் நிகழலாகாது” என்றாள் சர்மிஷ்டை. “ஆம்” என்றான் புரு. மூத்த அன்னையிடம் ஒப்புதல் கோரவேண்டாமா என்று கேட்க நாவெடுத்து அடக்கினான். ஒப்புதல்கோரி செல்வது ஒருவேளை நிகழாமலேயே நின்றுவிடும் என்று தோன்றியது.

முந்தைய கட்டுரைகுமரியின் சொல்நிலம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்