‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–88

88. விழிநீர்மகள்

படுக்கையறை வாயிலில் பார்க்கவன் “ஓய்வெடுங்கள், அரசே!” என்றான். அவன் விழிகள் மாறிவிட்டிருப்பதை யயாதி கண்டான். வெறும் நோக்கிலேயே நோக்கப்படுபவன் இளைஞனா முதியவனா என்று தெரியுமா? “தேவையில்லை என்று எண்ணுகிறேன். களைப்பாக இல்லை” என்று யயாதி சொன்னான். “பொழுது வீணடிப்பதற்குரியதல்ல என்று தோன்றுகிறது. நாழிகைக் கலத்திலிருந்து இறங்கும் ஒவ்வொரு மணல்பருவும் இழப்பதற்கு அரிய காலத்துளி என நினைக்கிறேன்” என்றவன் புன்னகைத்து “இளமை எனும் இன்மது” என்றான்.

பார்க்கவனும் உடன் புன்னகைத்து “ஆம், மானுட உடலின் இளமை மிக அரிதானது. நோக்கியிருக்கையிலேயே ஒழிந்து மறைவது. ஆனால் இளைஞர்கள்தான் காலத்தை வீணடிப்பவர்கள். அளவற்றது இளமை என மயங்குபவர்கள். முதுமையிலிருந்து இளமைக்கு மீண்டிருப்பதனால் அதன் அருமையை அறிந்திருக்கிறீர்கள்” என்றான். “எனக்கு இன்மது கொண்டுவரச்சொல். என் காவியநூல்கள் உள்ளே இருக்கின்றன அல்லவா?” பார்க்கவன் “பாணர்களையும் விறலியரையும் வரச்சொல்கிறேன். பரத்தையர் வேண்டுமென்றாலும் ஆணையிடுகிறேன்” என்றான்.

“வரச்சொல்” என்றபின் யயாதி பீடத்தில் அமர்ந்தான். பார்க்கவன் தலைவணங்கி வெளியேறினான். அவன் சுவடிகளை படிக்கத் தொடங்கினான். உத்பவரின் ரிதுபரிணயம் என்னும் அகச்சுவைக் காவியம். கையில் எடுத்ததுமே சுவடிகளை புரட்டிப்புரட்டி அதிலிருந்த காமவிவரிப்புகளை தேடிச்சென்றான். அந்த நூல் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அத்தகைய நூல்களின் அமைப்பும் சிக்கலும் ஊடுவழிகளும் உள்ளறிந்தவையாக இருந்தன. குருதித்தடம் முகர்ந்துசெல்லும் ஊனுண்ணி விலங்குபோல. சௌம்யன் என்னும் கந்தர்வன் சரிதை சுசரிதை என்னும் இரு காட்டுதேவதைகளைப் புணரும் இடத்தை சென்றடைந்தான். முதல் வரியே படபடப்பை ஊட்டியது. எவரோ தன்னை நோக்கும் உணர்வை அடைந்தான். நிமிர்ந்து அறையின் தனிமையை உறுதிசெய்தபின் மீண்டும் படித்தான்.

உடல்கள் இணைவதன் சொற்காட்சி. வெறும் உடல். உயிர்விசையால் நிலையழிந்து விலங்காகி புழுவாகி நெளியும் நுண்மொழிதல். பதினெட்டு பாடல்களைக் கடந்ததும் அவன் புரவி கால்தளரலாயிற்று. சலிப்புடன் மேலும் எத்தனை பாடல்கள் என்று நோக்கினான். அறுபது பாடல்கள் கொண்ட ஒரு பாதம் அது. சுவடியை மூடி கட்டிவைத்துவிட்டு சலிப்புடன் எழுந்து சாளரம் வழியாக நோக்கினான். இலைகள் சுடர உச்சிவெயில் இறங்கிய சோலைக்குள் பறவைகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. ஒளிச்சிதறல் வட்டங்களாகி நிழல்கள் கண்ணிகள் எனத் தெரிந்தன.

அந்த அமைதியும் அசைவின்மையும் உள்ளத்தை அமையச்செய்ய அவன் சலிப்புற்றான். உள்ளிருந்து ஒரு விசை எழுக, விரைக, பறந்தலைக என்றது. அச்சுவரை உடைத்து வெளியேறவேண்டும் என. தசைகளெங்கும் தினவென அந்த வேட்கை எழுந்ததும் ஒருகணம்கூட அறைக்குள் அமர்ந்திருக்க இயலாதென்று தோன்றியது. மது கொண்டுவர இத்தனை நேரமா? என்ன செய்கிறார்கள்? அத்தனைபேரும் நீருக்குள் உடல்கள் என மெல்ல அசைகிறார்கள். கிளைகள் தாலாட்டுகின்றன. உதிரும் இலைகள் மிதந்திறங்குகின்றன. எங்கும் விரைவென்பதே இல்லை. புரவி ஒன்றில் ஏறி மலைச்சரிவில் பீரிட்டிறங்கவேண்டும். கற்கள் தெறித்து உடன் உருண்டு வர. காற்று கிழிபட்டு இரு காதுகளிலும் ஊளையிட்டுப் பறந்தலைய.

மீண்டும் சுவடியை எடுத்து புரட்டினான். சாரங்கரின் ‘கிரௌஞ்ச சந்தேசம்’. சுவடிகளை புரட்டிச்சென்றபோது ஒரு வரியால் நிறுத்தப்பட்டான். புன்னகையில் நீண்டும் பேசுகையில் குவிந்தும் செவ்வுதடுகள் அழகிய மீன்கள் என நீந்திக்கொண்டிருக்கின்றன. புன்னகையுடன் விழிசரித்து அவன் அக்காட்சியை நிகழ்கனவில் கண்டான். சுருங்கியும் நீண்டும் செல்லும் செக்கச்சிவந்த மென்மையான மீன். அவன் உடல் தித்திப்படைந்தது. சூழ்ந்திருந்த காற்று தேன்விழுதென மாறியதுபோல. மீண்டும் ஒரு வரியை படித்தான். ‘உன் எண்ணங்களின் இனியமதுவில் கால்சிக்கிக்கொண்டன இரு கருவண்டுகள். சிறகடித்து சிறகடித்து தவிக்கின்றன’. ஆனால் அந்த ஒப்புமைக்குள் செல்லமுடியவில்லை. மீண்டும் அந்த முதல் ஒப்புமைக்கே சென்றான். அதை அன்றி பிறிதை அன்று எண்ணமுடியாதென்று தோன்றியது.

இன்மதுவுடன் சேடியர் வந்தனர். பெண்களின் காலடியோசையை தன் செவிகள் தெளிவாக தனித்தறிவதை உணர்ந்தான். நெஞ்சு படபடத்தது. அவர்களின் உருவை ஒருகணம் முன்னரே உள்ளம் வரைந்துகொண்டது. அவர்களில் ஒருத்தி சற்று பருத்த மூத்த வயதினள் என்றும் இருவர் இளையவர்கள் என்றும் அவன் அகம் நோக்கிக்கொண்டிருந்தபோதே அவர்கள் கதவைத் திறந்து மதுக்கோப்பைகளும் நுரைசூடிய குடுவையில் மதுவுமாக உள்ளே வந்தனர். அவர்களை ஒருகணம் நோக்கியதுமே நெஞ்சு படபடக்க அவன் விழிகளை தாழ்த்திக்கொண்டான்.

கண்முன் அவர்களின் சிலம்பணிந்த கால்கள் நடமாடின. கோப்பைகள் உரசும் ஒலி, மது தளும்பும் சிரிப்பு. மூச்சொலி, அணிகளின் குலுங்கல். உடை கசங்கலின் நுண்ணொலி. வியர்வையும் மலரும் சாந்தும் குங்குமமும் நறுஞ்சுண்ணமும் கலந்த மணம். ஏன் என்னால் விழிதூக்கி அவர்களை நோக்கமுடியவில்லை? ஏன் உடல் பதறிக்கொண்டிருக்கிறது? நெஞ்சின் ஓசையே காதுகளில் நிறைந்திருந்தது. “அரசே, இன்மது பரிமாறலாமா?” அவன் நிமிராமல் “ஆம்” என்றான். அவ்வொலி மேலெழவில்லை. வியர்வை பூத்த உடல்மேல் சாளரக்காற்று மென்பட்டுபோல வருடிச்சென்றது. அவர்கள் சென்றுவிட்டால் போதும் என விழைந்தான்.

மது ஊற்றப்படும் ஓசை. ஒருத்தி மெல்லிய குரலில் ஏதோ சொன்னாள். பிறிதொருத்தி சிரித்தாள். மூத்தவள் அதை அடக்கினாள். முதலிருவரும் குயிலும் குருவியும். இவள் மயில். கோப்பையை வாங்கியபோது அவன் அப்பெண்ணின் விரல்களை நோக்கினான். நிமிர்ந்து அவர்களின் கண்களைக் கண்டதுமே திடுக்கிட்டு நோக்கு தாழ்த்திக்கொண்டான். அவள் சிரிப்பு படர்ந்த குரலில் “ஏதேனும் தேவையா?” என்றாள். “இல்லை” என்றான். அவர்கள் அவனுக்காக காத்திருக்க அவன் ஒரு மிடறு அருந்திவிட்டு கோப்பையை பீடத்தின் மேல் வைத்தான். “இவள் இங்கே நின்று தங்களுக்கு பரிமாறுவாள்” என்றாள் மூத்தவள். “வேண்டாம்” என்று அவன் பதறிய குரலில் சொன்னான். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “இல்லை… வேண்டாம்” என்றான்.

பக்கவாட்டில் எவரோ நின்றிருக்கும் உணர்வு எழ திடுக்கிட்டு நோக்கியபோது அங்கே ஆடியில் அம்மூவரும் தெரிந்தனர். ஒருத்தி மாநிறமான மெல்லிய உடலும் நெளியும் கூந்தல் கரைவகுத்த நீள்முகமும் கனவுதேங்கியவை போன்ற பெரிய விழிகளும் சிறிய மூக்கும் குமிழுதடுகளும் நரம்போடிய மெல்லிய கைகளும் கொண்டவள். இன்னொருத்தி நுரைபோன்ற கூந்தலும் உருண்ட முகமும் சிரிப்புஒளிரும் சிறிய விழிகளும் பெரிய சிவந்த உதடுகளும் தடித்த கழுத்தும் கொண்டவள். நீலநரம்புகள் படர்ந்த வெண்ணிறத் தோல். உயரமற்ற உடல்.

மூத்தவள் அவர்களைவிட உயரமானவள். பெரிய கொண்டையும் வலுவான கழுத்தும் திரண்ட தோள்களும் இறுகிய இடைக்குமேல் பெரிய குவைகளென முலைகளும் உருண்ட பெரிய கைகளும் கொண்டவள். உறுதியான நோக்குள்ள கண்கள். செதுக்கப்பட்டவை போன்ற உதடுகள். அக்குழலை அவிழ்த்திட்டால் தொடைவரை அலையிறங்கக்கூடும். இளஞ்செந்நிறமான அவள் கைகளில் நரம்புகளே இல்லை. வளையல்கள் சற்று இறுக்கமாக இருந்தன. வளையல் படிந்த தடம் உருண்ட மணிக்கட்டில் தெரிந்தது. விரல்களில் செம்பாலான நாகமோதிரம் ஒன்றை அணிந்திருந்தாள்.

அவன் நோக்கை விலக்கிக்கொண்டான். “இல்லை… நீங்கள் செல்லலாம்… எனக்கு ஒரு குவளை போதும்” என்றான். “ஒரு குவளையா?” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்றபின் அவன் நிமிர்ந்து அவளை நோக்கி “நான் மயங்கி காலத்தை வீணாக்க விழையவில்லை” என்றான். அவள் மெல்ல சிரித்து உதடுகளை மடித்து “ஆம், அது நன்று. மதுவருந்துவது அதன் நெகிழ்வை அறிந்து மகிழ்வுகொள்வதற்காக. துயில்வதென்றால் மது எதற்கு?” என்றாள். பின்னர் திரும்பி குவளைகளை எடுத்துச்செல்லும்படி விழிகளால் ஆணையிட்டாள். அவர்கள் அவற்றை எடுத்துக்கொண்டு செல்கையில் முகங்கள் சற்று கூம்பியிருப்பதை பக்கவாட்டுத் தோற்றத்திலேயே கண்டான்.

அவர்கள் கதவை மூடியதும் அவள் அவனருகே வந்து “நீங்கள் விரும்பியது என்னை. ஆகவே நானே இங்கிருந்தேன்” என்றாள். அவன் பதறி “யார் சொன்னது?” என்றான். “ஆடியில் உங்கள் நோக்கை கண்டேன். நிலைத்ததும் தேடியதும் என்னுடலையே.” அவன் “இல்லை” என்றான். “ஆம்” என்று சொல்லி அவள் அவன் தோளை தொட்டாள். அவன் உடல் துடிக்கத் தொடங்கியது. “இன்று நான் உங்களுடன் இருக்கிறேன்.” அவன் பேசாமலிருந்தான். ஆனால் உடல் அனல்கொண்டது. காதுகளும் கண்களும் எரியத்தொடங்கின. அவள் அவன் தலைமேல் கையை வைத்து “நான் இருக்கட்டுமா?” என்று தாழ்ந்த குரலில் கொஞ்சலாக கேட்டாள்.

அக்குரல்மாற்றம் அவனை பின்னாலிருந்து உதைக்கப்பட்டதுபோல திடுக்கிடச் செய்தது. எழுந்து நின்று “வேண்டாம். செல்க!” என்றான். அவள் “ஏன்?” என்றாள். எழுந்ததுமே அவன் உடலின் அதிர்வுகளும் அடங்கிவிட்டிருந்தன “செல்க… செல்க!” என்று கைநீட்டி சொன்னான். குரல் உடைந்து பிற எவருடையதோ என ஒலித்தது. “செல்… செல்!” என்று அவன் உரக்க சொன்னான். அக்குரல்மாற்றத்தால் அவள் திகைத்து “ஆணை” என தலைவணங்கி வெளியே சென்றாள்.

கதவு மூடும் ஒலியில் அவன் இழுத்த கையால் விடப்பட்டவன் போல தளர்ந்தான். திரும்பவும் அமர்ந்துகொண்டு மூச்சிரைத்தபடி கண்களை மூடினான். உடலெங்கும் குருதி நுரையழிவதை உணர்ந்தான். மீண்டும் கதவு திறக்கும் ஒலி எழுந்தபோது அவன் உடல் குளிர்ந்திருந்தது. “யார்?” என்றான். “அரசே, நான்தான்” என்றான் பார்க்கவன். அவனருகே வந்து வணங்கி “மாலினியை திருப்பி அனுப்பினீர்கள் என்றாள்” என்றான். “யார்?” என்றான். “இப்போது வந்தவள்… சேடி.” யயாதி “ஆம், அவள் என்னிடம்…” என்றபின் “என்னால் இது இயலாது” என்றான். “ஆம், நான் அதை எண்ணினேன். மற்ற இருவரும் என்னிடம் சொன்னபோதே நீங்கள் இருக்கும் நிலை புரிந்தது.”

யயாதி சீற்றத்துடன் “என்ன நிலை?” என்றான். “முதிரா இளைஞனின் உளநிலை…” என்று பார்க்கவன் புன்னகைத்தான். “காமம் எண்ணங்களிலேயே நிகழமுடியும். உடல் அச்சமும் அருவருப்பும் ஊட்டும்” என்றான். யயாதி “இல்லை…” என்றபின் தயங்கி “ஆம், உண்மை” என்றான். “முதிரா இளமையின் இடரே எதையும் எதிர்கொள்ளமுடியாதென்பதுதான். உடலை எதிர்கொள்ள அஞ்சியே காமத்தை தூய்மைப்படுத்திக்கொள்கிறீர்கள். புகையோவியமென அது நிலம்தொடாது ஒளிகொண்டு நிற்கிறது. அதை மண்ணுக்கிழுப்பது உடல் என நினைக்கிறீர்கள்” என்றான். வாய்விட்டுச் சிரித்தபடி “நாளெல்லாம் எண்ணுவது பெண்ணை. ஆனால் பெண்ணுடல்மேல் வெறுப்பு. அந்த இரு நிலையைக் கடப்பதன் பெயரே அகவை எய்துதல்” என்றான்.

யயாதி நாணத்துடன் சிரித்து “ஆம்” என்றான். அச்சிரிப்பினூடாக அவர்கள் அத்தருணத்தின் இறுக்கத்தை கடந்தனர். “உங்களிடம் குற்றவுணர்ச்சி ஏதேனும் உள்ளதா?” என்றான் பார்க்கவன். “அதை நானே கேட்டுக்கொண்டேன். இல்லை, உடை களைந்து நீரில் குதித்தவனின் விடுதலையையே உணர்கிறேன்” என்றான் யயாதி. பார்க்கவன் “ஒருவேளை இனி அது எழக்கூடும். அவ்வாறு எழவேண்டியதில்லை” என்றான். “அரசே, மைந்தனுக்கு தந்தை அளிக்கும் கொடைகளில் முதன்மையானது முதுமை அல்லவா? அத்தனை தந்தையரும் கைக்குழவியாக மைந்தர் இருக்கும்நாள் முதல் துளியாக மிடறாக அளிப்பது தானடைந்த முதுமையைத்தானே?” என்றான்.

யயாதி மெல்லிய உளக்கிளர்ச்சியுடன் “ஆம்” என்றான். “அதேபோல மைந்தர் தந்தைக்கு அளிக்கவேண்டியதும் இளமையை அல்லவா? தங்கள் இளமையின் மகிழ்வையும் விடுதலையையும்தானே இளஞ்சிறுவர்களாக அவர்கள் தந்தையருக்கு பரிசளிக்கிறார்கள்? தந்தையரின் முதுமையை அதனூடாக அவர்கள் தொடர்ந்து விலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தந்தையர் முதிர்ந்து உடலோய்ந்தமைகையில் மைந்தரின் தோளிலும் காலிலும் சொல்லிலும் விழியிலும் உள்ள இளமையைத்தானே துணைகொள்கிறார்கள்?”

“ஆம்” என்று யயாதி சொன்னான். மீண்டும் மீண்டும் ஒரே சொல்லையே சொல்கிறோம் என உணர்ந்து “உண்மை” என்றான். உள எழுச்சி தாளாமல் எழுந்துகொண்டு “மெய். நான் இதை எண்ணியதே இல்லை” என்றான். “அரசே, அத்தந்தையர் இறந்து மூச்சுலகெய்திய பின்னர் மைந்தர் அளிக்கும் உணவும் நீரும் நுண்சொல்லுமே அவர்களை என்றுமழியா இளமையுடன் விண்ணில் நிறுத்துகிறது” என்றான் பார்க்கவன். “ஆம்” என்றபடி யயாதி அமர்ந்தான். “ஆகவே எங்கும் நிகழ்வது இங்கு அதன் முழுமையுடன் அமைந்தது என்றே கொள்க!” என்றபின் பார்க்கவன் எழுந்தான். “நீங்கள் விழைந்தால் வேட்டைக்கு செல்லலாம். மாலையில் கூத்தர் நிகழ்த்தும் அவைநிகழ்வுகளுக்கு ஒருங்கு செய்துள்ளேன்” என்றபின் தலைவணங்கி வெளியே சென்றான்.

tigerகதவுக்கு அப்பால் ஓசை கேட்டபோது யயாதி சுவடியை மூடிவிட்டு நிமிர்ந்தான். கதவு மெல்ல திறந்தது. அதனூடாக ஆடைவண்ணம் தெரிந்தது. அதிலேயே அவன் சர்மிஷ்டையை அடையாளம் கண்டான். உள்ளம் கிளர எழுந்து நின்றான். அவள் உள்ளே வந்து விழிதிகைத்து நின்று அறியாமல் திரும்பிச்செல்பவள் போல கதவை பற்றினாள். “சர்மிஷ்டை” என அவன் அழைத்தான். “இளமை மீண்டுவிட்டேன். நான் என்றும் விழைந்தது இது.” அவள் உதடுகளை மடித்துக் கவ்வி கண்களில் பதைப்புடன் அவனை நோக்கினாள். “என்ன நோக்குகிறாய்? இது என் இளமையுருவம்… நீ அதை பலமுறை கனவில் கண்டிருப்பதாக சொல்லியிருக்கிறாய்” என்றான். “இல்லை, இது புருவின் உருவம்” என்று பட்டு கசங்கும் ஒலியில் சர்மிஷ்டை சொன்னாள்.

அவனுக்கு அது கேட்கவில்லை. மேலும் உளம் பெருக “பார்! முதிரா இளமையையே அடைந்திருக்கிறேன். என் இளமையைச் சூடியபோதே உன்னைத்தான் எண்ணினேன். உன்னுடனிருக்கையில் நான் இளையவனாக இருக்கலாகாதா என ஏங்கியிருக்கிறேன். அவ்வெண்ணத்தால் அத்தனை தருணங்களிலும் குறையுணர்ந்திருக்கிறேன்” என்றான். களிப்புடன் நகைத்து “உன்னை அத்தனை அகவைநிலைகளிலும் அடைவேன். எச்சமில்லாது காமத்தை அடைந்து ஒழிந்து எழவேண்டும் நான்” என்றபடி அவளை நோக்கி கைவிரித்தபடி சென்றான்.

அவள் “விலகு… அணுகாதே!” என கூவினாள். முகம் சுளித்து கைகள் உதறிக்கொண்டன. “அணுகாதே என்னை…” என்று உடைந்த உரத்த குரலில் கூச்சலிட்டு கதவுடன் முதுகு ஒட்டிநின்று நடுங்கினாள். முன்வளைந்த தோள்கள் இறுக கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர “போ… அணுகாதே…” என்றாள். “ஏன்?” என்று அவன் நின்றான். “நீ என் மைந்தனின் இளமையை சூடியிருக்கிறாய்… நீ கொண்டிருப்பது என் மகனை.” அப்போதுதான் அவள் எண்ணுவதை அவன் அறிந்துகொண்டான். தலையை கல் தாக்கியதுபோல அவ்வுணர்வு அவனை சென்றடைந்தது. இருமுறை உதடுகளை திறந்துமூடினான். பின்னர் சென்று தன் பீடத்தில் அமர்ந்துகொண்டான்.

அவள் “மூடா, அதைக்கொண்டு நீ எதை அடையப்போகிறாய்? எந்தப் பெண்ணை?” என்றாள். வெறுப்பில் அவள் கண்கள் சுருங்கி உறுமும் ஓநாய் என பற்கள் தெரிந்தன. “அப்பெண்ணை எந்த விழிகளால் நோக்குவாய்? எந்த உடலால் அடைவாய்? நீ நோக்கியமையால் இந்த உடலை நான் உதறவேண்டும். நோன்பிருந்து இதை உலரச்செய்யாமல் இனி ஆடிநோக்க என்னால் இயலுமா?” அவன் கைவீசி “போ!” என்று கூவினான். அவள் மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தபின் கதவைத் திறந்து வெளியே சென்றாள். கதவு மூடிய ஒலி அவனை அறைந்தது. வியர்வையுடன் நெற்றியைத் தட்டியபடி அவன் அமர்ந்திருந்தான். அனைத்து திகிரிகளும் மணலில் சிக்கி இறுகி அசைவிழக்க எண்ணங்கள் வெம்மைகொண்டன.

பின்னர் விடுபட்டு எழுந்தான். அனைத்தையும் அள்ளி ஓரு மூலையில் குவித்து தன் அகத்தை தூய்மை செய்தான். அப்போது அத்தனை முடிச்சுகளையும் தனித்தனியாகக் காணமுடிந்தது. ஒவ்வொன்றாகத் தொட்டு அவிழ்க்கமுடிந்தது. ஒவ்வொரு விரிதலும் அவனை எளிதாக்கின. எழுந்து இடைநாழியில் நடந்தபோது அவன் முகம் தெளிவுகொண்டிருந்தது. அவனை நோக்கி வந்த பார்க்கவனிடம் “நான் நாளைப்புலரியில் இங்கிருந்து கிளம்புகிறேன். காட்டுக்குச் செல்கிறேன்” என்றான். “எங்கே?” என்று பார்க்கவன் கேட்க “என்னை காட்டு எல்லைக்குக் கொண்டுசென்று இறக்கிவிடுங்கள், போதும்!” என்று அவன் சொன்னான்.

tigerஇளவேனிலில் மலர்பெருகி வண்ணம்பொலிந்திருந்த காட்டினூடாக யயாதி நடந்தான். பின்னர் அறிந்தான் அந்தக் காட்டிற்கு அவன் முன்னரும் வந்திருப்பதை. எப்போது என உள்ளம் வியந்தது. நினைவில் அக்காடு எவ்வகையிலும் எஞ்சியிருக்கவில்லை. மேலும் மேலுமெனச் சென்று முதிரா இளமையைக் கடந்து மீண்டுவந்தான். கனவிலா? ஆனால் அந்நிலத்தை எப்போதேனும் நோக்கியிருக்கவேண்டுமே! அவனால் அதை உணரவே முடியவில்லை. சலித்தபின் அதை அப்படியே உதறிவிட்டு அக்காட்டின் காட்சிகளில் உளம் திளைக்க மெல்ல நடந்தான்.

அன்று காலையில்தான் புரு கருக்கிருட்டிலேயே காட்டுக்குச் சென்றுவிட்டிருப்பதை அரண்மனை ஏவலர் உணர்ந்தனர். அவன் சென்ற தடமே எஞ்சியிருக்கவில்லை. “நீரில் மீன் என சென்று மறைவதே துறவு” என்று அமைச்சர் சொன்னார். “அவ்வாறு சென்றவர் மீள்வதில்லை. நாம் அவரை தொடரவேண்டியதில்லை.” அவன் பார்க்கவனிடம் “ஏன் அவன் சென்றான்?” என்றான். “முதுமை கொண்டவர்கள் கானேகவேண்டும் அல்லவா?” என்றான் பார்க்கவன். “அவள் அவனை நேற்று சந்தித்தாளா?” என விழிவிலக்கி யயாதி கேட்டான். “ஆம், அங்கிருந்துதான் உங்கள் அறைக்கு வந்தார்கள்” என்றான் பார்க்கவன். யயாதி திகைப்பு கொண்டவன்போல ஏறிட்டு நோக்கிவிட்டு “நான் உடனே கிளம்பவேண்டும்” என்றான். “நீங்கள் நம் எல்லைக்குட்பட்ட சுமவனத்திற்கே செல்லலாம், அரசே. உங்கள் உளநிலைக்கு உகந்தது அம்மலர்க்காடு” என்றான் பார்க்கவன்.

அவனை காட்டின் எல்லையில் இறக்கிவிட்டபின் பார்க்கவன் விழிகள் நீர்மை மின்ன விடைகொண்டான். நகரம் அகன்றதுமே அவன் விடுதலைகொள்ளத் தொடங்கியிருந்தான். காட்டில் நடந்ததுமே உடல் விசைகொண்டது. காண்பவை எல்லாம் துலக்கமடைந்தன. அங்கு வரும்வரை ஒவ்வொன்றும் எத்தனை சிடுக்கானவை என்றே உள்ளம் திகைப்பு கொண்டிருந்தது. முந்தைய நாள் இரவில் அவன் துயிலவில்லை. ஒவ்வொன்றையாக அணுகி நோக்கி வியந்து விலகிக்கொண்டிருந்தான். ஆனால் காட்டில் இலைப் பசுமைக்குள் நிழலொளி நடனத்திற்குள் அறுபடா சீவிடின் சுதியின்மேல் எழுந்த காற்றோசையின் அலைகளுக்குள் மூழ்கியபோது அவையெல்லாம் மிகமிக எளியவை என்று தோன்றின.

அங்கிருப்பது சலிப்பு மட்டுமே. அச்சலிப்பை வெல்லும்பொருட்டு உள்ளத்தை கலக்கி அலையெழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். அதனூடாக அடையும் உணர்வுகளை அக்கணங்களில் உண்மை என நம்பி அதில் திளைக்கிறார்கள். விழிநீரும் குருதியும். புனலும் அனலும். அவை மட்டுமே அவர்களின் நாட்களை பொருள்கொண்டவையாக ஆக்குகின்றன. அவ்வெடையின்மையை அடைந்தபோது அவ்வாறு அக்காட்டில் சென்றது நினைவில் எழுந்தது. அவன் தந்தையின் வலிமையான கைகளில் சிறு குழவியாக இருந்தான் அப்போது. மிதந்து ஒழுகியபடி அக்காட்டை நோக்கிக்கொண்டு சென்றான்.

நகுஷனின் தொடுகையை தாடியின் வருடலை வியர்வை மணத்தை அவனால் உணரமுடிந்தது. அச்சிறுவயதுக்குப்பின் அங்கே வந்ததே இல்லை. ஆனால் கனவில் அந்த இடம் அச்செனப் பதிந்திருக்கிறது. அங்கிருக்கும் அத்தனை கரவுகளையும் சரிவுகளையும் காணமுடியுமெனத் தோன்றியது. நீர்தெளிந்து வான் விரிந்த சுனை ஒன்றை நினைவுகூர்ந்தான். உடனே அதற்குத் திரும்பும் வழியும் உள்ளத்தில் எழுந்தது. செல்லச் செல்ல மேலும் துலங்கியபடி வந்த திசையில் இலைகள் நீரலையொளி சூடி நின்றிருப்பதைக் கண்டான். நீலச்சுனை காலை வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்தது.

அதன் சேற்றுக்கதுப்பில் பறவைகளின் காலடிகள் மட்டுமே இருந்தன. நாணல்கள் காற்றில் குழைந்தாடின. மெல்லிய அலைகளால் சேறு கலைவுறவில்லை. சேற்றில் நீர்வரிகளைக் கண்டபோது இனிய உணர்வொன்றால் அகம் சிலிர்ப்புகொண்டபின் அது ஏன் என சென்று துழாவிய சித்தம் எதையோ தொட்டுவிட அவன் நின்றுவிட்டான். மென்மையான முலைமேல் எழுந்த தோல்வரிகள். எவர் முலைகள் அவை? மூச்சுத் திணறியது. தலையை அசைத்து அவ்வெண்ணத்தை விரட்டியபின் சுனையை அணுகினான். பேற்றுவரிகள் படிந்த அடிவயிறு. யார் அது?

அங்கே நின்று தன் முகத்தை நீரில் நோக்கியதை நினைவுகூர்ந்தான். தந்தையின் குரல் கரையில் கேட்டுக்கொண்டிருந்தது. கையிலிருந்த மலர்க்கிளையால் நீர்ப்பரப்பை அடிக்க ஓங்கியவன் தன் விழிகளை தான் சந்தித்து திடுக்கிட்டான். உடல் சிலிர்க்க பின்னால் செல்வதுபோல ஓர் அசைவெழுந்தது. குளிர்கொண்டதுபோல உடல் உலுக்கிக்கொண்டது. விழிவிலக்காமல் அவன் நோக்கிக்கொண்டே இருந்தான். பின்னர் அதை நோக்கி கைசுட்டினான். அது அவனை நோக்கி கை சுட்டியது. அவன் புன்னகை செய்தபோது அதுவும் நாணிச்சிரித்தது.

அவன் குனிந்து நீரை நோக்கினான். இது எவர் முகம்? இளமையின் தயக்கமும் நாணமும் இனிய நகையும் கொண்டது. என் முகம். என்னில் நிகழ்ந்துகொண்டே இருப்பது. என்னில் வந்தமர்ந்த பறவை, அஞ்சி எழுந்து சிறகடித்துச் செல்வது. அவன் நீரை அள்ளி முகம் கழுவி சிறிது அருந்தினான். திரும்பியபோது பின்னால் அசைவெழுந்தது. திடுக்கிட்டு நோக்க நீருக்குள் இருந்து அவன் பாவை எழுவதுபோல ஒரு பெண் எழுந்தாள். “யார்?” என்றான் யயாதி. அவள் முகவாயிலிருந்து நீர் உருண்டு சொட்டியது. இளமுலைக் குவைகளில் வாழைத்தண்டில் என வழிந்தது. தோள்களில் முத்துசூடி நின்றது.

“யார்?” என அவன் மீண்டும் உரக்க கேட்டான். அவள் கைதூக்கி தன் குழலை நீவி நீரை வழித்தபின் இடை நீர் விளிம்பிலிருந்து மேலெழ ஒளிகொண்ட மெல்லுடலுடன் எழுந்து அணுகினாள். “யார் நீ?” என்றான் யயாதி. “என் பெயர் அஸ்ருபிந்துமதி” என்று அவள் சொன்னாள்.

முந்தைய கட்டுரைமலேசியாவில் ஒரு சந்திப்பு
அடுத்த கட்டுரைமலம் -கடிதங்கள்