காலடி ஓசையிலே

mohammad-rafi-aug8
முகம்மது ரஃபி

இரண்டுபேருடைய காலடியோசைகள் மட்டுமே எனக்குத் தெரியும். எத்தனை ஓசைகளிலும். எத்தனை ஆயிரம் காலடிகளிலும். எப்படி என்று விளக்க முடியாது. ஏன் என்றும் சொல்லிவிடமுடியாது. அவற்றை நினைவில் வைத்திருப்பது என்னுள் வாழும் தூய விலங்கு ஒன்று. ஒன்று அம்மா, இன்னொன்று அருண்மொழி.

இரு காலடியோசைகளுடனும் உணவுகளின் நினைவும் எப்படியோ கலந்துள்ளது. அருண்மொழி வரும் ஓசை கேட்டால் பத்துநிமிடத்திற்கு முன்னர் சாப்பிட்டுவிட்டு வந்திருந்தால்கூட சாப்பிடுவதற்காக உள்ளம் தயாராகிவிடும். அதன்பின்னரே நிலைமை புத்திக்குத் தட்டுப்படும். வலிகளில் தனிமைகளில் வெறுமைகளில் அக்காலடியோசைகளை நானே கற்பனைசெய்துகொள்வேன். அஞ்சி ஒளிந்துகொள்ளும். தப்பியோடும், சிக்கிக்கொள்ளும் கனவுகளில் அவை அப்பால் ஒலித்து என்னைக் காப்பாற்றுகின்றன. அவர்களின் மொத்த ஆளுமையையே காலடிகளாக்கிக் கொண்டுவிட்டேனா என்ன? இருக்கலாம். தேவியின் காலடிகளைப்பற்றி மட்டுமே பாடிய மரபு கொண்ட கேரளப் பண்பாடு என்னுடையது.

அக்காலடிகளிலிருந்து விழியொளிகளை பிரிக்கமுடியாது., இருவருக்கும் கருணை மிக்க பெரிய விழிகள் என்பது என் நற்பேறு. எழுதுக என ஆணையிட்ட தெய்வங்களின் அருள். அம்மாவின் பெயர் அகல்விழி. இவள் சுபாஷிணி. விசாலாக்‌ஷியும் அருண்மொழியும் இரு மொழிகள். நான் நாளும் சுவைக்கும் இரு அமுதப்பெருக்குகள் . இந்த மொழிகளின் அழகில் என்னை இழக்காது நினைவறிந்தபின் ஒருநாளும் கடந்துசென்றதுல்லை.

காலடிகள் விழியசைவுகளாக மாறும் சில உளமயக்கத் தருணங்கள் உண்டு. அம்மா இறந்துபோன பின்னரும் அவள் காலடிகளைக் கேட்பதுண்டு. ஒரு ஒரு மழைநாளில் காசர்கோட்டில் என் தன்னந்தனிய வீட்டில் அவள் காலடிகளை ஈரத்தரையில் கண்டதுமுண்டு. அருண்மொழியின் காலடிகள் கனவிலெழுந்தால் விழிக்கையில் காலையில் ஒளி மேலும் துலக்கம் கொண்டிருக்கும்.

அவ்வனுபவம் ஒரு வரியென அமைந்ததனால் எனக்கு மிகவும் பிடித்தபாடல்களில் ஒன்று ஓராயிரம் பார்வையிலே. ‘உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்’. அப்பாடலின் உச்சவரி அது. காலடியை அறியமுடியும். விளக்கமுடியாது. அம்மாவின் காலடிகளில் அவள் எனக்கெனக் கொண்டுவருவன கூட தெரியும். அருண்மொழியின் காலடிகளில் அவளுடைய உளநிலை தெரியும். அவள் நினைத்துக்கொண்டிருக்கும் பாடலைக்கூடச் சொல்லிவிடமுடியுமெனத் தோன்றும்

எனக்கு ஒருவயதிருக்கும்போது இந்தியில் வெளிவந்த உஸ்தாதோன் கி உஸ்தாத் என்றபடத்தில் இடம்பெற்ற சௌபார் ஜனம் லேங்கே என்னும் பாடல்தான் அதற்கு மூலம் என்றும் அற்புதமான மலையாளப்பாடல்கள் வழியாக என் உள்ளத்திற்கு அணுக்கமானவரான ரவி பாம்பே அதன் இசையமைப்பாளர் என்றும் மிகப்பின்னர்தான் அறிந்துகொண்டேன். [ரவிசங்கர் சர்மா] ரவி இசையமைத்த பாடல்கள் பல மலையாளத்தின் உணர்வுநிலைகளாகவே மாறிவிட்டவை. ஆழ்ந்த துயர்கொண்ட மெட்டுக்கள் அவருடையவை.

ravi
ரவி
தமிழில் அந்தப்படம் வல்லவனுக்குவல்லவன் என்னும் பேரில் மறு ஆக்கம்செய்யப்பட்டபோது அதே பாடல் அதே மெட்டுடன் கண்ணதாசன் வரிகளில் டி.எம்.சௌந்தர ராஜன் குரலில் அமைக்கப்பட்டது இசை வேதா.
 முகமது ரஃபியின் பெரும் ரசிகன் நான். மூலத்தைக் கேட்டபின் என் உள்ளம் இயல்பாக சௌந்தரராஜன் குரலை நீக்கம் செய்து ரஃபி சாகிபின் குரலாக அந்தப்பாடலை மாற்றிக்கொண்டுவிட்டது. என் நினைவில் எப்போதுமே அப்பாடல் ரஃபி சாகிப் குரலாகவே கேட்கும் மாயம் நானே எண்ணி வியப்பது. ஆகவே செவிகளில் ஓராயிரம் பார்வையிலே என டி.எம்.எஸ் பாடிக் கேட்கையில் ஒரு சிறு அதிர்ச்சி எழும். ஆனால் இரண்டாவது வரிக்குள் ரஃபி சாகிப் தோன்றிவிடுவார்.
துயரம் ஒரு குரல் ஆகுமென்றால் அது ரஃபி சாகிப்.  அவர் குரலில் கம்பீரம் இல்லை. ஆனால் அவரைப்போல குரலில் ஆன்மாவை வெளிப்படுத்திய பிறிதொரு பாடகர் இந்தியத்திரையிசையில் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ரஃபியை நினைவுறுத்தும் துயரச்சாயல் கொண்டது என்பதனால் கண்டசாலாவும் என் விருப்பத்திற்குரியவர். என் ரசனை ஜேசுதாஸை கேட்டுவளர்ந்தது. அவர்கூட எனக்கு இரண்டாம்பட்சமே.
யூடியூப் உதவியால் இரு பாடல்களைக் காணவும் இன்று முடிகிறது. வல்லவனுக்கு வல்லவன் அபத்தமான கோணங்களும் அசட்டுத்தனமான ஒளிப்பதிவும் கொண்டது உஸ்தாதோன் கி உஸ்தாத் படத்தில் பக்கவாட்டில் பெருகிச்செல்லும் அந்த அருவிப்புகையும், அதன் கொப்பளிப்பும், அலைகள் இரவின் நிலவொளியில் கொந்தளிப்பதும் தெரிந்து தெரிந்து மறையும் உருவெளித்தோற்றமும் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.ஒளிப்பதிவாள ராஜேந்திர மலோன்
நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் – நான்
ஒருநாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்


kanna
இப்பாடலைப்பற்றி இணையத்தில் தேடினேன். ஒருவர் தமிழ்ப் பாடலைப் பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். நல்ல பாடல் என கண்ணதாசனுக்குச் சான்றிதழ் அளிக்கிறார். ஆனால் ‘உன் காலடியோசையிலே உன் காதலை நானறிவேன்’ என்னும் வரி மட்டும் பொருந்தாமலிருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்கிறார்.
இத்தனைக்கும் நல்ல இசைரசிகர் அவர் என நினைக்கிறேன். இதை ஒரு விந்தையாகவே நான் கவனித்திருக்கிறேன். நுட்பமான இசைரசனை கொண்ட பலர் அனைத்துவகையிலும் நுண்ணுணர்வற்றவர்களாக இருப்பார்கள். அவர்களைக் கூர்ந்து நோக்கினால் ஒன்று தெரியும்.. இசையை அவர்களால் உணர்ச்சிகளாக, படிமங்களாக ஆக்கிக்கொள்ள முடியாது. அவர்கள் கேட்பது ஒரு கணக்குக் கட்டுமானத்தின் அழகை மட்டுமே. என்னசெய்வது, அளிக்கப்படவில்லை அவ்வளவுதான்.
மீண்டும் ஓராயிரம் பார்வையிலே. மூலத்தின் வரிகளின் மொழியாக்கம்தான் தமிழிலும் தொகையறாவாக. தொடர்ந்த வரிகளில்தான் கண்ணதாசனின் கவிதை வெளிப்படுகிறது.
நூறு முறை பிறப்பேன்  நூறுமுறை இறப்பேன்
எனினும் அன்பே நாம் உள்ளத்தால் பிரிவதே இல்லை
நாம் இணைவதை எத்தனைகாலம் தான் விதியால் தடுக்கமுடியும்
காதலின் களத்தில் கடமை எத்தனைகாலம்தான் தடை அளிக்க முடியும்?
இந்த அழகின்மேல் பரவியிருக்கும் பெருந்துயர்தான் என்ன?
நாம் பிரியவே இல்லை. பிரிந்தோம் என்பது வெறுமேதான்
எதிர்பார்க்கும் இதயங்கள் ஒருநாள் இணையவே செய்யும்
பிறந்திறந்து செல்லும் இந்த அறியாப்பயணத்தில் உடன்வரும் ஏதோ தாளம் போலும் காலடிகள். உடலின் எடையும் நிகர்நிலையும் அசைவுகளின் இசைவும் காலடிகளில் தெரியும் என்பார்கள். உள்ளம் பருவடிவுகொண்டதுதான் உடல் என்பதால் அது உள்ளுறைவதன் ஓசை என்று தோன்றுகிறது. ஓசையல்ல, ஒரு நுண்மொழி

https://www.youtube.com/watch?v=CTprvBjARLY&feature=youtu.be

http://anondogaan.blogspot.in/2014/07/sau-baar-janam-lenge-lyrics-translation.html

முந்தைய கட்டுரைகல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு
அடுத்த கட்டுரைபசுக்கொலை