‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–41

41. எழுபடை

கம்பனன் ஹுண்டனின் அறையை அடைவதற்கு முன்னர் இடைநாழியிலேயே அவன் உவகைக் குரலை கேட்டான். கதவைத் திறந்ததும் அக்குரல் பெருகி வந்து முகத்தில் அறைந்தது. “அடேய் கம்பனா, எங்கு சென்றிருந்தாய்? மூடா, மூடா” என ஹுண்டன் நகைத்தான். கையை சேக்கையில் அறைந்தபடி “என்ன நிகழ்ந்தது தெரியுமா? நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். என் கால்களைக் கட்டிவைத்திருந்த கொடிகள் நாகங்களாக மாறி வழுக்கிச்செல்வதை உணர்ந்து நோக்கினேன். வலக்காலை அசைக்க முடிந்தது. அப்போது அருகே இருளுக்குள் ஓர் அழுகையோசை கேட்டது. பெண்குரல் அழுகை. விழித்துக்கொண்டேன். விழித்ததுமே என் வலக்காலை மெல்ல அசைத்துப்பார்த்தேன். மூடா, என் கால் அசைந்தது… இதோ பார்!” அவன் தன் காலை மெல்ல அசைத்தான். “கல் நெகிழ்கிறது, கல் நெக்குவிடுகிறது” என்று கூவினான்.

கம்பனன் நெடுமூச்சுடன் “நன்று அரசே, நான் சில செய்திகளுடன் வந்துள்ளேன்” என்றான். “சொல்!” என்றான் ஹுண்டன். ஆனால் அவன் தன் காலை அசைத்து நோக்குவதிலேயே ஈடுபட்டிருந்தான். “தங்கள் பட்டத்து அரசியார் இன்று மண்நீங்கினார். சற்றுமுன்னர். செய்தியை இன்னமும் நகருக்கு அறிவிக்கவில்லை.” ஹுண்டன் “ஆம், அவள் சில நாட்களில் இறக்கக்கூடுமென சொன்னார்கள். நகர்அறிவிப்பு செய்க! குலங்கள் கூடுக! முறைப்படி ஈடேற்றம் நிகழ்க! ஆவன செய்!” என்றபின் “உயிர்கொண்டதுமே கால் தன் இருப்பை எனக்கு அறிவித்தது. குளிரோ வெம்மையோ அல்ல. வலியல்ல. தொடு உணர்வுகூட அல்ல. அது இருக்கிறது என என்னிடம் அந்த இருப்புணர்வாலேயே அறிவித்தது” என்றான்.

“இன்னொரு செய்தி” என்று கம்பனன் தொடர்ந்தான். “குருநகரியின் அரசன் நகுஷன் உயிருடனிருக்கிறான். மகவாக இருக்கையில் நாம் அவனை கொல்லும்படி ஆணையிட்டு கொடுத்தனுப்பினோம். அரசியர் அவனை கொல்லவில்லை.” ஹுண்டன் விழிதூக்கி நோக்கி “எங்கிருக்கிறான்?” என்றான். “அவர்கள் குழவியை ஓர் ஒற்றனிடம் கொடுத்தனுப்பினர். அவன் அதை காட்டில் விட்டுவிட்டான். அக்குழவி வசிட்ட குருநிலையில் வளர்ந்து ஆற்றல்மிக்க இளைஞனாகியதாக சொல்கிறார்கள். படைகொண்டுசென்று அவன் குருநகரியைக் கைப்பற்றி முடிசூடினான். ஆயுஸின் மைந்தன் அவன் என அறிவித்தான். இப்போது அங்கே அரசனென அமர்ந்திருக்கிறான்.”

ஹுண்டன் சற்றுநேரம் கூர்ந்து நோக்கியபின் “ஆம், அது இயல்பே. அவர்கள் அவனை எதிர்பார்த்திருந்திருப்பார்கள்” என்றபின் “என் இடதுகாலிலும் அசைவு எழும் என ஓர் உள்ளுணர்வு சொல்கிறது” என்றான். “ஆம், இது தொடக்கமே” என்றான் கம்பனன். “குருநகரியில் அவன் என்ன செய்கிறான்?” என்றான் ஹுண்டன் காலை அசைத்து நோக்கியபடி. அவனிடம் அதிர்ச்சியோ வியப்போ வெளிப்படவில்லை என கம்பனன் கண்டான். அது அவனுக்கும் வியப்பை அளிக்கவில்லை. அனைவரும் அறிந்த ஒன்று எப்படி மந்தணமாக நீடிக்கமுடியும் என அவன் எண்ணிக்கொண்டான். அனைவரும் வெறுக்கும் ஒன்றென அது இருக்குமென்றால் இயல்வதே என பின்னர் தோன்றியது.

“அரசே, அவன் அசோகசுந்தரியை மணம் செய்துகொண்டிருக்கிறான்” என்றான் கம்பனன். “யார்?” என்று ஹுண்டன் தலைதூக்கி கேட்டான். “நகுஷன்… குருநகரியின் அரசன்.” ஹுண்டன் காலை மெல்ல அசைத்து “நினைக்க நினைக்க மேலும் உயிர் ஊறுகிறது” என்றபின் “யாரை?” என்றான். கம்பனன் சற்று சினத்துடன் “குருநகரியின் அரசன் உங்களால் விரும்பப்பட்ட அசோகசுந்தரியை மணம்புரிந்துள்ளான்” என்றான். ஹுண்டனின் வாய் திறந்தபடி நின்றது. “எப்போது?” என்றான். “சில நாட்களுக்கு முன்… செய்திகள் வந்திருக்கின்றன. இங்கே குலத்தலைவர்களின் பூசல் தலைக்குமேல் இருந்தமையால் நான் எந்தச் செய்தியையும் நோக்கவில்லை. சற்றுமுன்னர்தான் அனைத்தையும் அறிந்தேன்.”

ஹுண்டன் பெருமூச்சுவிட்டான். அவன் விழிகள் மாறிவிட்டதை உணர்ந்த கம்பனன் அக்கணம் தோன்றிய எண்ணத்தை அப்படியே சொல்லாக்கினான். “நேற்றிரவுதான் அவர்களின் மணக்கூடல். அவளை அவன் புணர்ந்தபோதுதான் உங்கள் உடலில் உயிர் வந்துள்ளது.”  ஹுண்டன் “என்ன சொன்னாய்?” என்ற கூச்சலுடன் கைகளை ஊன்றி எழப்போனான். கை தளர்ந்து மஞ்சத்திலேயே சரிந்தான். “என்ன சொல்கிறாய்?” என்று தளர்ந்த குரலில் கேட்டான். “அவள் கன்னிமையை இழந்ததுமே அவளிட்ட தீச்சொல் விலகத் தொடங்கிவிட்டது” என்றான் கம்பனன்.

“ஆம், உண்மை” என்றான் ஹுண்டன். “ஆனால் அவள் ஏன் அழுதாள்?” கம்பனன் புரியாமல் “யார்?” என்றான். “அவள்தான். நான் கனவில் கேட்டது அவள் அழுகையைத்தான்.” கம்பனன் “அது உங்கள் விழைவு. அவள் மகிழ்ந்துகொண்டாடியிருக்கவே வாய்ப்பு” என்றான். “அல்ல, அவள் அழுதாள். வலியோ துயரோ இல்லாத அழுகை… ஏக்கம்கொண்டு அழுவதுபோல.” கம்பனன் அவனை நோக்கிக்கொண்டு நின்றான். “அவள் அழுதாள், உண்மையிலேயே நான் அதை கேட்டேன்” என்றான் ஹுண்டன். “ஓரிரு சொற்களும் என் காதில் விழுந்தன.” கம்பனன் “என்ன சொற்கள்?” என்றான். “நான் போகிறேன்… நான் போய்விடுகிறேன் என்று அவள் சொன்னாள்” என்றான் ஹுண்டன்.

கம்பனன் பெருமூச்சுடன் “நாம் ஏதறிவோம்? எவ்வண்ணமாயினும் நமக்கு நன்றே நிகழ்கிறது. நீங்கள் எழப்போகிறீர்கள்” என்றபின் திரும்பி நடந்தான். “அமைச்சரே” என பின்னால் அழைத்த ஹுண்டன் “இன்று தண்டனைக்குரிய அனைவரையும் விடுதலை செய்துவிடுங்கள்…” என்றான். அவன் விழிகளை நோக்காமல் “அவ்வண்ணமே” என்றான் கம்பனன். அவன் மேலும் சொல்லுக்காக காத்து நிற்க “என் கல்தன்மை எப்போது முற்றிலும் விலகும்?” என்றான். “நாம் எதிர்பார்ப்போம்… இது தொடக்கம்தான் என என் உள்ளம் சொல்கிறது” என்றான் கம்பனன்.

திரும்பி அமைச்சுநிலைக்கு நடக்கையில் அவன் உள்ளம் குழம்பி அலைபாய்ந்தது. தானாகவே அத்தருணத்தில் நாவிலெழுந்த சொற்றொடர் என்றாலும் அது உண்மையாக இருக்கக்கூடும் என உள்ளம் உறுதிகொள்ளத் தொடங்கியது. அதைமட்டும் உறுதிசெய்யவேண்டும், அவர்களின் மணஇரவு நேற்றா? ஆமெனில் ஏதோ தொடங்கவிருக்கிறது. அமைச்சுநிலைக்குச் சென்று அமர்ந்து குருநகரி குறித்த அனைத்து  ஓலைகளையும் வரவழைத்து படித்துப்பார்த்தான். ஓர் ஓலையில் நகுஷனும் தேவியும் தங்க காமக்குடில் அமைக்கும் செய்தியிருந்தது. அவன் மணஇரவு நாளை தேடினான். பிறிதொரு ஓலையில் அதுவும் இருந்தது. முந்தையநாள்தான் அந்நிகழ்வு நாள்குறிக்கப்பட்டிருந்தது.

tigerவிபுலையின் இறப்புச்சடங்கு நாகநகரியில் எந்தப் பரபரப்பும் இல்லாமல் நடந்து முடிந்தது. அவள் உடலை கொண்டுவந்து அரண்மனை முற்றத்தில் நகரின் வணக்கத்திற்காக  படுக்கவைத்திருக்கையில் கம்பனன் அதன் பெருக்கம் கண்டு உளம் அதிர்ந்தான். மானுட உடலின் அனைத்து அமைப்புக்களையும் அது இழந்து தசைத்திரளாக வழிந்து சரிந்து பிதுங்கி உப்பிக் கிடந்தது. அதை நோக்கி நின்றபோது உள்ளிருந்து ஒன்று தன் உருவை தானே சிதைக்க முற்பட்டது போலிருப்பதாக நினைத்துக்கொண்டான். அல்லது உள்ளிருக்கும் அது எட்டுத்திசையிலும் திமிறி முட்டி வெளிக்கிளம்ப முயன்றதா?

அந்த உடலை ஒன்றென எண்ண முடியவில்லை. அந்தத் தோல்பைக்குள் அவள் பலவாக இருந்திருக்கிறாள். ஒவ்வொன்றும் பிரிந்துசெல்லத் துடித்து உள்ளே பூசலிட்டு தளர்ந்து அமைந்திருக்கின்றது. ஓரிரு தோல்கட்டுகளை மெல்ல வெட்டிவிட்டால் அவள் அப்படியே பன்றிக்கூட்டம் போல பரவி அகன்றுவிடுவாள் என்று தோன்றியது. அவளை நோக்கிய அத்தனைபேரிலும் அந்தத் திகைப்பே முதன்மைகொண்டிருந்தது. “உள்ளங்கால்கள் எத்தனை சிறியவை, நாய்நாக்கு போல!” அவள் பாதங்கள் செந்நிறமாக நடைதெரியா குழந்தைகளுக்குரியவை போலிருந்தன. மணிக்கட்டின் தசைமடிப்புகளுக்குப்பின் உள்ளங்கைகளும் மிகச்சிறியவையாக இருந்தன.

அவளமைந்த பாடையை எட்டுபேர் கொண்ட குழு மாறிமாறி சுமந்து சிதைக்கு கொண்டுசென்றது. ஹுண்டன் தொட்டு அனுப்பிய அனல் அவளை எரியூட்டியது. “எரிந்து முடிய நாளையாகும்போல” என எவரோ சொன்னபோது வந்திருந்த சிறிய கும்பலுக்குள் சிரிப்பொலி எழுவதை கம்பனன் கேட்டான். மனிதர்கள் இறப்பின்போது சிரிப்பார்கள் என அவன் அறிந்திருந்தான். அவர்களுக்கு இழப்பென்று தோன்றவில்லை என்றால், சூழலில் பெருந்துயரென பரவிநிற்கவில்லை என்றால், இறப்பு என்பதும் ஒரு கொண்டாட்டம் மட்டுமே.

ஹுண்டன் அவளை ஒரு கணமும் நினைக்கவில்லை. எரியேற்றிய பின் திரும்பிவந்து சந்தித்த கம்பனனிடம் “என் இடதுகாலிலும் அசைவு தெரிகிறது. ஆம், இன்னும் அதன் தசைகளை நான் அசைக்கமுடியவில்லை. ஆனால் அசைக்கமுடியும் என அது என்னிடம் சொல்கிறது. அது இருப்பதை இப்போதுதான் நான் உள்ளிருந்து உணர்கிறேன். அது குழவிபோல என்னை தூக்கு தூக்கு என அடம்பிடிக்கிறது” என்றான். கம்பனன் “நான் ஒற்றர்களிடம் கேட்டேன், அரசே. அவர்களின் மணஇரவு நேற்று. இரவுக்குப்பின் நோயுற்றிருக்கும் அவளை திருப்பி அகத்தளத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள். மருத்துவச்சிகள் அவளை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.

“அவளுக்கு என்ன ஆயிற்று?” என்றான் ஹுண்டன். “அறியேன், அவள் இளம்கன்னி போன்றவள். அச்சம் கொண்டிருக்கலாம்” என்றான் கம்பனன். “அவன் எப்படி இருக்கிறான்?” என்றான் ஹுண்டன். “அதைப்பற்றி செய்தி இல்லை. பிழையாக ஏதுமில்லை என எண்ணுகிறேன்” என்றான் கம்பனன். “அவன் கல்லாகிவிட்டானா?” என்று ஹுண்டன் கேட்டான். திகைத்துநோக்கிய கம்பனன் “ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள்?” என்றான். ஹுண்டன் “ஒன்றுமில்லை, அவன் கல்லாகவில்லை என்றால் அவன் என் எதிரி, அவனை நான் கொன்றாகவேண்டும்” என்றான். “நான் செய்திகளை அறிந்து சொல்கிறேன்” என்றான் கம்பனன்.

ஒற்றர்களிடம் செய்திகளை உடனடியாக பறவைத்தூதாக அனுப்ப ஆணையிட்டான் கம்பனன். நகுஷன் நலமாக இருப்பதாக செய்தி வந்தது. ஆனால் அசோகசுந்தரி நாளுக்குநாள் நோய்கொண்டிருப்பதாக, நலிந்துகொண்டே செல்வதாக செய்திகள் வந்தன. பின்னர் தெளிவாக அனைத்தும் வந்துசேர்ந்தன. கம்பனன் அகத்தளத்திற்குச் சென்று ஹுண்டனை கண்டான். அவன் இருகால்களும் அசைவுகொண்டிருந்தன. படுக்கையில் புரளவும் கால்களை மடித்து எழுந்தமரவும் அவனால் முடிந்தது. அந்த உவகையில் அவன் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தான்.

கம்பனனைக் கண்டதும் “இன்று இரு கால்களையும் மடித்தேன். இச்சிதையிலிருந்து உயிர்கொண்டு எழுந்துவிட்டேன்” என்று அவன் கூச்சலிட்டான். கரியமுகத்தில் வெண்பற்கள் மின்ன “என் கால்கள் மீண்டு வந்துவிட்டன. இன்னும் சில நாட்கள்தான்… கம்பனா, மூடா, நான் மீண்டுவிட்டேன். தேர்ச்சகடம் ஏறிச்சென்ற நாகம் தன் எஞ்சிய உடலை விழுங்கி உணவும் மருந்துமென்றாக்கி அதிலிருந்த உயிரை தான் பெற்று மீண்டெழும் என்பார்கள்… இதோ நான்” என்றான்.

“ஆம் அரசே, இன்னும் சில நாட்களில் நீங்கள் மீண்டெழுவீர்கள்” என்றான் கம்பனன். “எப்படி சொல்கிறாய்?” என்றான் ஹுண்டன். “அங்கே அசோகசுந்தரி இறந்துகொண்டிருக்கிறாள். அவள் நலியுந்தோறும் நீங்கள் ஆற்றல்கொள்கிறீர்கள்” என்றான் கம்பனன். ஹுண்டன் விழிகூர்ந்து நோக்கி “அவள் எப்படி இருக்கிறாள்?” என்றான். “அவள் முதுமைகொண்டபடியே செல்கிறாள். ஒவ்வொருநாளும் பல ஆண்டு அகவை கடந்துசெல்கிறது. நடுவயதாகி முதுமகளாகிவிட்டாள். உடல்வற்றி உயிர் அணைந்துகொண்டிருக்கிறது. இன்னும் சிலகாலமே…” ஹுண்டன் கண்களை மூடி படுத்திருந்தான். அவன் உடலில் தசைகள் இறுகி நெளிந்தன. தாடை அசைந்தது.

விழிகளைத் திறந்து “அவள் உயிர்?” என்றான். “ஆம், அரசே” என்றான் கம்பனன். “அவ்வாறெனில் அவள் என் அன்னை” என்றான் ஹுண்டன். கம்பனன் என்ன சொல்வதென்று அறியாமல் நோக்கினான். “அவள் என்னை ஈன்றிருக்கிறாள். அவள் மைந்தன் நான்” என ஹுண்டன் உரக்கக் கூவினான். “என்ன நடந்தது? அவள் ஏன் இறந்தாள்? அவள் அழுதது எனக்கு மட்டும் ஏன் கேட்டது?” அவன் இரு கைகளாலும் தன் மார்பை அறைந்தான். “அவள் என்னிடம் முறையிட்டாளா? எனக்கு ஆணையிட்டாளா என்ன?” கம்பனன் “தங்கள் எண்ணம் மிகையானது, அரசே” என்றான்.

“அவளுக்கு நிகழ்ந்தது என்ன? அதை சொல்க!” என்றான் ஹுண்டன். “அவள் வல்லுறவுகொள்ளப்பட்டாள். அந்த அதிர்ச்சியால்தான் இறந்தாள்” என்றான் கம்பனன். சில கணங்கள் ஹுண்டன் அப்படியே உறைந்தான். பின் நாகச்சீறலுடன் மூச்சிரைத்து மீண்டான். “ஆம், அவ்வாறே எண்ணினேன்… அமைச்சரே, நாம் குருநகரியை வெல்லவேண்டும். அவனை கொல்லவேண்டும். அவளுக்கு நாம் செய்யும் கடன் அது.” கம்பனன் “அரசே, அது எளிதல்ல. நம் குலங்கள் சிதறுண்டிருக்கின்றன. நாம் ஆற்றலின்றி இருக்கும் காலம் இது. அவனோ பெருவலிமை கொண்டிருக்கிறான்” என்றான்.

“எண்ணிக் கணக்கிட்டு மைந்தர் அன்னைக்காக எழுவதில்லை” என்றான் ஹுண்டன். “நான் ஏன் கல்லானேன் என்பதற்கான விடை இன்று கிடைத்தது. இப்படுக்கையில் கிடந்து நான் இதுவரை உழன்றது அதை எண்ணியே… ஒரு படைவீரனும் உடன்வரவில்லை என்றாலும் நான் செல்வேன். களம்படுவேன்.” கம்பனன் “தங்களுக்கு உரைக்கவேண்டியது என் கடமை. ஆணையென்றால் தலைகொடுப்பது அடுத்த கடமை” என்றான். “எழுக, நம் படைகள்!” என்றான் ஹுண்டன்.

நினைத்திருந்ததற்கு முற்றிலும் மாறாக நாகர்குடிகள் அனைத்து வஞ்சங்களையும் மறந்து ஹுண்டனின் கொடிக்கீழ் அணிநிரந்தன. அது ஏன் என எத்தனை எண்ணியும் கம்பனனால் உணரமுடியவில்லை. அன்றிரவு தன் இல்லத்தில் உடல்தளர்ந்து படுத்திருந்த தந்தையிடம் மஞ்சத்தின் அருகமர்ந்து அவன் “குடிகள் எண்ணம் என்ன எந்தையே? இதில் சூது ஏதேனும் உண்டோ என்றுகூட உள்ளம் ஐயுறுகிறது” என்றான். மூச்சிரைப்பால் மூக்கு சற்றே மேல்நோக்கி இருக்க படுத்திருந்த அவர் தளர்ந்த குரலில் “அவர்கள் அரசனையும் குடித்தொகையையும் விட்டுப்பிரிய விரும்பவில்லை. இது அதற்கு உகந்ததாகத் தெரிகிறது போலும்” என்றார்.

“அவர்கள் வஞ்சம் கொண்டிருந்தனர்” என்றான் கம்பனன். “ஆம், ஊடாக அன்பும் கொண்டிருந்தனர். அரசன் மீண்டுவிட்டான் என அவர்கள் அறிந்ததுமே அவ்வஞ்சம் மறைந்துவிட்டது. அவர்கள் அவன்மேல் வஞ்சம் கொண்டமைக்கு வருந்துகிறார்கள். அறம்முகிழ்த்த ஒன்றை ஆற்றி அதிலிருந்து மீள விழைகிறார்கள்” என்றார் முதியவர். “மைந்தா, தொல்குடிமக்களின் வீழ்ச்சி அவர்கள் அறத்தால் அன்றி பிறிதொன்றுக்காக எழுவதில்லை என்பதனால் அமைகிறது. அவர்கள் அருகுபோல் வேரோடி வாழ்வது அவர்களுடன் என்றும் அறம் வாழ்கிறதென்பதனால் நிகழ்கிறது.”

tiger

ஹுண்டனின் தலைமையில் நாகர்குலத்தின்  பதினெட்டு பிரிவுகளும் ஒன்றிணைந்து குருநகரிமேல் படைகொண்டுவரும் செய்தியை அறிந்ததும் நகுஷன் திகைத்தான். “எப்போதுமே மலைக்குடிகள் நேரடியாக அரசுகளின்மேல் படைகொண்டு வந்ததில்லை… அவர்களுக்கு எப்படி அத்துணிவு வந்தது?” என்று பத்மனிடம் கேட்டான். “அரசே, மலைக்குடிகள் நிலம்வெல்ல ஒருபோதும் ஒருங்கிணைவதில்லை. அவர்களின் எல்லைகள் தாக்கப்பட்டாலொழிய அவர்கள் போருக்கிறங்க மாட்டார்கள்” என்றான் பத்மன். நகுஷன் “நாம் எங்காவது எல்லைமீறிவிட்டோமா?” என்று கேட்டான். “இல்லை, நாம் நம் எதிரியரசர்களைக்கூட இந்நாட்களில் எண்ணியதில்லை” என்றான் பத்மன்.

இரண்டு நாட்களில் அதற்கான விடை தேடிவந்தது. ஹுண்டன் அனுப்பிய போர் அறைகூவல் மலைக்கழுகு ஒன்றின் காலில் கட்டப்பட்ட ஓலையென குருநகரியை வந்தடைந்தது. அதை நகுஷனிடம் கொண்டுவந்து தந்த பத்மன் “அவன் அசோகசுந்தரிக்காக படைகொண்டுவருகிறான்” என்றான். “அரசிக்காகவா? அவன் ஏன் எழவேண்டும்?” என்றான் நகுஷன் திகைப்புடன். “ஓலையை வாசித்து நோக்குக!” என்றான் பத்மன். வாசித்தபின் அதை மீண்டும் சுருட்டியபடி “என்ன சொல்கிறான்? அவன் எப்படி அவளுக்கு மைந்தனாவான்?” என்றான் நகுஷன். “அவர் இழந்த உயிரை அவன் அடைந்திருக்கிறான் என நம்புகிறான்” என்றான் பத்மன்.

“விந்தைதான். பழங்குடிகளின் உள்ளங்கள் எப்படி செல்கின்றன என்பதை எண்ணவே கூடவில்லை” என்றான் நகுஷன் சிரித்தபடி. “அவருக்கு நீங்கள் இழைத்த பிழைக்கு நிகர்செய்யவேண்டுமென போருக்கு எழுந்துள்ளான். உங்களை வென்று உங்கள் குருதிதோய்ந்த வாளை அரசியின் எரியிடம் மீது வைத்து வணங்கி அவர் எரியிடத்து மண்ணில் ஒருபிடி எடுத்துச்சென்று அவன் ஆளும் நாகநகரியில் ஒரு ஆலயம் அமைக்கப்போவதாக சொல்லியிருக்கிறான்” என்றான் பத்மன். “ஆம்” என்று நகுஷன் மீசையை நீவியபடி சொன்னான். “அது பொய்யோ மெய்யோ, அச்சொற்கள் குடிகளின் உள்ளங்களை வெல்லும். நாகர்குடிகள் அவனுடன் ஒருங்கிணைந்து போருக்கெழுந்தது அதன்பொருட்டே” என்றான் பத்மன்.

“ஆம், அதற்காகவே இந்த சூழ்ச்சியைச் செய்கிறான் என ஐயுறுகிறேன்” என்றான் நகுஷன். “அச்சூழ்ச்சிவலையில் சிக்கவிருப்பது நம் குடிகளும்கூடத்தான்” என்று பத்மன் சொன்னான். “இச்செய்தியை எப்படி நம் குடிகள் அறிவார்கள்?” என்றான் நகுஷன் பொறுமையிழந்தவனாக. “அரசே, அரண்மனைச்செய்திகள்போல மக்கள் உடனே அறிவது பிறிதில்லை” என்றான் பத்மன். நகுஷன் எழுந்து கைகளால் தொடையைத் தட்டியபடி “நன்று, ஒரு போர் நிகழ்ந்தும் நீணாளாயிற்று. நம் படைக்கலங்கள் துருப்பிடிக்கத் தொடங்கிவிட்டிருக்கின்றன” என்றான்.

எண்ணியதுபோலவே ஒரு நாளைக்குள் குருநகரியெங்கும் அசோகசுந்தரிக்காகவே ஹுண்டன் படையுடன் கிளம்பி வருகிறான் என்னும் சொல் பரவியது. “அவன் அவள் மைந்தன்… அவள் முற்பிறப்பில் ஈன்றவன்” என்றான் ஒரு சூதன். “அவனை ஈன்றபின் அவள் எரிபுகுந்து மீண்டும் பிறந்துவந்தாள். அவள் இங்கே இறந்ததும் அங்கே அவன் வணங்கிய அகல்சுடரில் தோன்றி தனக்கிழைக்கப்பட்ட தீங்கு குறித்து சொன்னாள். வஞ்சினம் உரைத்து மாநாகன் கிளம்பியிருக்கிறான்.” வெவ்வேறு கதைகள் கிளம்பி ஒன்றுடன் ஒன்று முயங்கி நாளுக்கொன்று என வந்துசேர்ந்துகொண்டிருந்தன.

“நம் படைகள் ஐயுற்றிருக்கின்றன” என்று படைத்தலைவன் வஜ்ரசேனன் சொன்னான். “எதன்பொருட்டு இப்போர் என்று என்னிடமே ஒரு முதிய வீரன் கேட்டான். அறத்தின்பொருட்டு அல்ல என்று அறிவேன். நிலத்தின்பொருட்டும் அல்ல. எனில் அரசனின் ஆணவத்தின்பொருட்டா, அல்லது அவன் இழைத்த அறமின்மையின்பொருட்டா என்றான். வாளை ஓங்கி அவன் கழுத்தை சீவ எண்ணினேன். ஆனால் அவன் விழிகளைப்போலவே ஆயிரம் விழிகள் என்னை சூழ்ந்திருந்தன. எனவே எது கடமையோ அதை செய்க. படைமுரசு ஒலித்தபின் ஐயுறுபவன் கோழையோ காட்டிக்கொடுப்பவனோ ஆவான் என்றே கொள்ளப்படும் என்று சொல்லி மீண்டேன்.”

பத்மன் விழிகளைச் சரித்து அமர்ந்திருந்தான். “என்ன செய்வது சொல்லுங்கள், அமைச்சரே! அரசர் நாளை படைப்புறப்பாடுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். புலரியில் அவர்  கோட்டைமுகப்பின் உப்பரிகையில் நின்று படைகளிடம் பேசப்போகிறார். அவருடைய முகத்துக்கு நேராக எதிர்க்குரல் எழுந்து வருமென்றால் பின்னர் போரை வெல்வதைப்பற்றி எண்ணிப்பார்க்கவும் வேண்டியதில்லை.” பத்மன் “நான் அரசரிடம் பேசுகிறேன்” என்றான்.

அன்று மாலையே பத்மன் சென்று படைக்கல நிலையத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த நகுஷனிடம் தன் எண்ணத்தை சொன்னான். “அரசே, குடிகள் மறைந்த அரசியையே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இப்போர் அரசிக்காக நிகழ்வதென்று ஆகிவிட்டது. படைகளின் எண்ணிக்கை வல்லமையால் போர்கள் வெல்லப்படுவதில்லை, படைகள் கொண்ட உளவிசையின் ஆற்றலே வெல்கிறது. நம் முன் வழி ஒன்றே உள்ளது.” வியர்வையைத் துடைத்தபடி அமர்ந்து “சொல்க!” என்றான் நகுஷன். “நாளை உப்பரிகையில் தோன்றியதுமே நம் ஏழு முதன்மைக் குடிகளிலிருந்து நீங்கள் அரசியரை மணம் கொள்வதாக முதலில் அறிவியுங்கள். ஏழு குலத்தலைவர்களும் உங்களுடன் உப்பரிகையில் நிற்கட்டும். படைகளின் உள்ளம் அக்கணமே மாறிவிடும்” என்றான் பத்மன்.   “ஏனென்றால் மங்கல அறிவிப்பின்போது வாழ்த்தாமலிருக்க முடியாது. வாழ்த்தொலிகள் சூழ்ந்து பெருகி எழுகையில் அவ்வுணர்வால் ஒவ்வொருவரும் தூக்கிச் செல்லப்படுவார்கள்.”

“அது ஓர் எளிய சூழ்ச்சி அல்லவா? அரசன் என நான் அதை செய்தாகவேண்டுமா?” என்றான் நகுஷன். “அரசே, படைகொண்டு வருபவர்கள் நாகர்கள். நாகர்கள் இல்லாத நிலமே பாரதவர்ஷத்தில் இல்லை. ஒரு களத்தில் நாகர்கள் வென்றால் நாம் நாவலந்தீவெங்கும் நாகர்களை எழுப்புகிறோம் என்று பொருள்” என்றான் பத்மன். “அவர்கள் ஷத்ரியர்கள் அல்ல. அவர்களை நாம் போராடி வென்றாலும் இழிவே. புயல்காற்று சருகுகளை என நாம் அவர்களை வென்றாகவேண்டும்.” நகுஷன் ஆம் என தலையசைத்தான்.

அன்றே பத்மன் குருநகரியின் தொல்குடிகளை அழைத்து அரசனின் எண்ணத்தை சொன்னான். அவர்களும் அதற்காக காத்திருந்தனர். “ஆம், அதுவே முறை. இன்றைய நிலையில் அரசரின் கைகளென நிற்கவேண்டியவர்கள் அவர் குடிகளே. இன்று வென்றால் நாம் இனியும் வெல்வோம்” என்றார் குலத்தலைவர் ஒருவர். பேச்சுக்கள் முடிந்து உறுதிகளை பெற்றுக்கொண்டு பத்மன் நிறைவுள்ளத்துடன் புலரிக்கு முன்னர் சென்று நகுஷனை பார்த்தான். அனைத்தையும் விளக்கி நகுஷன் உப்பரிகையில் நின்று வீரர்களை நோக்கி சொல்லவேண்டியதென்ன என்று வகுத்துரைத்தான்.

“அரசே, நீங்கள் எழுந்ததும் வீரர்களின் வாழ்த்துரைகள் விசைகொண்டிருக்காதென்றே எண்ணுகிறேன். அதைக் கண்டு உங்கள் முகம் சுருங்கினால் அந்த எதிர்ப்பு மேலும் வீச்சுபெறும். வீரர்களை நோக்கி முகமலர்ச்சியுடன் வணங்கினீர்கள் என்றால் அவர்கள் குழப்பத்துடன் நோக்குவார்கள். உடனே ஏழு குடிகளிலிருந்து ஏழு அரசியரை மணக்கவிருப்பதை அறிவித்து குடித்தலைவர்களை அழையுங்கள். அவர்கள் உப்பரிகைக்கு வந்து உங்களருகே நிற்கட்டும்” என்று பத்மன் சொன்னான். “அவர்கள் தங்கள் கோலைத் தூக்கி ஆட்டி தங்கள் குலங்களை அறைகூவட்டும். வாழ்த்தொலிகள் எழுந்து சூழும்போது எதிர்ப்பு எண்ணம் அழிந்திருக்கும்.”

“அரசே, நம் மக்கள் நாமே பாரதவர்ஷத்தின் தொல்குடிகள் என்னும் பெருமைகொண்டவர்கள். அதிலிருந்து தொடங்குங்கள். எளிய பழங்குடிநாகர் நம் மீது படைகொண்டு வருவது நம் குடிமூத்தாருக்கும் தெய்வங்களுக்கும் இழுக்கு என்று கூறுங்கள். குருநகரியின் பெருமையை விளக்குங்கள். அதன் பெருமை காக்க எழுக என அறைகூவுங்கள். உங்களுடன் குருநகரியின் படைகள் எழும்.”

நகுஷன் “ஆம், அவ்வண்ணம்தான் செய்யவேண்டும்” என்றான். “அனைத்தும் சித்தமாக உள்ளன. நீங்கள் கவசம் பூணுக!” என்றான் பத்மன். கவசமும் அணிகளும் பூண்டு வந்த நகுஷனை அவனே கோட்டைமுகப்பு நோக்கி அழைத்துச் சென்றான். அரண்மனையிலிருந்து கோட்டைச்சுவர்மேல் அமைந்த மந்தணப்பாதை ஒன்றினூடாகவே அந்த உப்பரிகைக்கு செல்லமுடிந்தது. நிமிர்ந்த தலையுடன் எண்ணத்திலாழ்ந்து நடந்த நகுஷனின் அருகே நடந்தபடி அவன் சொல்லவேண்டிய சொற்களை பத்மன் மீண்டும் சொன்னான். “ஐயம் கொள்ளாதீர்கள். தயங்காதீர்கள். அரசன் என எழுந்து நில்லுங்கள். குடித்தலைவனாக குரல்கொடுங்கள்” என்றான்.

கோட்டைமுகப்பிலிருந்த பிறைவடிவ வெளியில் குருநகரியின் படைகள் அணிவகுத்து நிறைந்து நின்றிருந்தன. கரவுப்பாதைக்குள் அமைந்த சிறிய சாளரத்துளைகள் வழியாக வெளியே நோக்கியபடியே வந்தான் பத்மன். இருளில் பந்த ஒளியில் மின்னும் படைக்கலங்களின் முனைகள் இடைவெளியின்றி நிரந்த அம்முற்றம் ஓர் அலையிளகும் ஏரி எனத் தோன்றியது. அங்கிருந்து மானுடக்குரல்கள் இணைந்து உருவான முழக்கம் எழுந்தது. ஒரு பெருமுரசுக்குள் எறும்பென அகப்பட்டுக்கொண்டதுபோல என பத்மன் நினைத்தான்.

“பொறுங்கள் அரசே, குலத்தலைவர்களும் பிறரும் சித்தமாகிவிட்டர்களா என்று பார்க்கிறேன். அனைத்தும் சித்தமென்றால் நான் தங்கள் மெய்க்காவலனுக்கு கைகாட்டுகிறேன்…” என்றபின் அவன் ஓசையின்றி குனிந்து கரவுப்பாதையின் பெருங்கதவிலமைந்த திட்டிவாயிலைத் திறந்து வெளியே சென்றான். அங்கிருந்து நோக்குகையில் அப்பெரும்படை ஒற்றை உடலென தோன்றியது. பல்லாயிரம் தலைகள். பல்லாயிரம் விழிகள். பல்லாயிரம் கைகள். படையை விராடமானுடன் என ஏன் சொல்கிறார்கள் என அப்போது அறிந்தான்.

அரசன் தோன்றவிருந்த உப்பரிகைமேடைக்கு இரு பக்கமும் குலத்தலைவர்களை தங்கள் கோலுடன் நிற்கச்செய்தான். தீட்டப்பட்ட  இரும்புக்கலங்களால் ஆன குழியாடிகள் நான்கு எதிரே கோட்டைவிளிம்புகளில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு முன்னால் நெய்யூற்றப்பட்ட பந்தங்கள் சித்தமாக இருந்தன.  அவன் படைத்தலைவனை நோக்க அவன் அருகே வந்து பணிந்தான். “படைகளில் மேலும் கசப்பு எழுந்துள்ளது, அமைச்சரே. வாழ்த்தொலிகள் எழாமலிருக்கக்கூட வாய்ப்புள்ளது. நான் நூற்றுவர்களிலேயே பலரை சிறையிட்டு இந்த அணிநிரையை அமைத்துள்ளேன்” என்றான்.

“பார்ப்போம்” என்றான் பத்மன். “அனைத்தையும் சித்தமாக அமையுங்கள்” என்றபின் உப்பரிகைமேடையை நோக்கினான். மூச்சை இழுத்துவிட்டு அந்த முதற்புலரியிலும் தன் உடல் வியர்த்திருப்பதை உணர்ந்தான். அணுக்கக் காவலனின் விழிகளை சந்தித்தபின் கையசைத்தான். பின்னர் திரும்பி ஆடிக்காவலர்களை நோக்கி கையசைத்தான். அரக்கும் நெய்யும் விடப்பட்ட பந்தங்கள் பற்றி எரிந்து தழல்கொண்டன. ஆடிகள் அவ்வொளியை அள்ளிக்குவித்து உப்பரிகைமேல் பெய்தன.  முரசங்களும் கொம்புகளும் குழல்களும் பேரோசையுடன் முழக்கமிடத் தொடங்கின.

எரிகுளம் என சுடர்விட்ட உப்பரிகை மேடையின் கதவுகள் உள்ளிருந்து விரியத் திறந்தன. கைகளைக் கூப்பியபடி நகுஷன் வந்து ஒளியில் நின்றான். அவன் கவசங்களில் பட்ட செவ்வொளியின் தழலாட்டத்தில் அவன் இளஞ்சூரியன் எனத் தோன்றினான். அவனை நோக்கி விழிகள் மட்டுமே உயிர்கொண்டிருக்க ஓசையின்றி அசைவின்றி அமைந்திருந்தது படைத்திரள். தெய்வங்களுக்குரிய வெறித்த விழிகளுடன் அவன் தன் கையை தூக்கினான். “வீரர்களே, குருநகரியினரே!” என அவன் அழைத்தது கோட்டைமுகப்பின் குழிவுமுகடுகளால் அள்ளித் தொகுக்கப்பட்டு காற்றில் வீசப்பட்டு படையினர் அனைவருக்கும் கேட்டது. “நான் குருநகரியின் அரசன். இந்த பாரதவர்ஷத்தை வெல்வேன். இந்திரனின் அரியணையில் அமர்வேன்” என்றான்.

அப்பெரும்படை ஒற்றை உடலெனச் சிலிர்ப்பதை பத்மன் கண்டான். “என் படைவீரர் நீங்கள். என் உடல். பிறிதொன்றுமல்ல. என் ஆணைக்கு அப்பால் எண்ணமில்லை உங்களுக்கு என்று அறிக! வெற்றிக்கென படைக்கலம் கொண்டு எழுக! இது என் ஆணை!” என்றான் நகுஷன். மேலும் சில கணங்கள் படை ஓசையற்றிருந்தது. காற்றிலாடும் பாவட்டாக்களின் சிறகோசை. பின்னர் ஒற்றைப்பெருங்குரலில் “மாமன்னர் நகுஷன் வாழ்க! குருநகரியின் வேந்தன் வாழ்க! சந்திரகுலத்தோன்றல் வாழ்க!” என வாழ்த்தொலிகள் எழுந்து கோட்டைப்பரப்பை அதிர்வுகொள்ளச்செய்தன.

முந்தைய கட்டுரைகாணொளிக்குடும்பம்
அடுத்த கட்டுரைஒற்றைக்காலடி