சம்ஸ்காரா- கடிதங்கள்

anandamurthi

மதிப்புமிகுந்த எழுத்தாளர் செயமோகன் அவர்களுக்கு,

தாங்கள் எழுதியிருந்த சமசுக்காரா கட்டுரைகளை வாசித்தேன். முதலில் நவின் கட்டுரை ஏமாற்றம் கொடுக்கவே உங்களதை வாசித்தேன் இரண்டுமே எனக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. நான் அந்த நாவலை இருமுறை வாசித்துள்ளேன். நண்பர்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன். அந்த நாவல் குறித்து விரிவாகவும் எங்கள் மத்தியில் பேசப்பட்டுள்ளது. எங்கள் அளவுக்கு அந்த நாவலை ஆழ புரிந்துகொண்டவர்கள் குறைவு என்றே நம்புகிறேன்.

பிராமணியத்தை எதிர்க்கும் ஒரு போராளியை இவ்வளவு மட்டமாக நீங்கள் இருவருமே தவறான புரிதலுடன் காட்டியுள்ளீர்கள். மோடியை நேரடியாக எதிர்த்ததன் மூலமே அரசியல் நிலைபாடு என்னவென்று தங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவரது கருத்துகளை தத்துவத்துக்குள் திணித்து ஆன்மிக நூல் போல சித்தரித்துள்ளீர்கள்.

இதுதான் வாசிப்பா? அந்த நாவலில் பிராமணியத்தைக் கிண்டல் செய்யும் ஒருவனிடமும் சனாதனம் இருப்பதுபோல மட்டமாக்குவதுதான் விமர்சனமா? தங்கள் ஆக்கங்கள் எந்த நோக்கத்திலும் எழுதப்படட்டும். ஆனால் அடுத்தவர்களின் எழுத்துப்போராட்டத்தை மலினப்படுத்தாமல் இருந்தால் அதுவே பேருதவி. தங்கள் நிலைபாட்டை அறிய விரும்பும்

ஈசுவர்

***

அன்புள்ள ஈசுவர்

அனந்தமூர்த்தியை தீக்கா ஆக்கிய வாசிப்பு வல்லமைக்கு வணக்கம். இங்கு எதுவும் சாத்தியமே என நிறுவிவிட்டீர்கள்

ஜெ

***

அன்புள்ள ஜெ,

அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா பற்றி மீனாட்சி முக்கர்ஜி மிக விரிவான ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார். மீனாட்சி முகர்ஜியின் அந்தக்கட்டுரை வழியாகவே மேற்குலகில் சம்ஸ்காரா புகழ்பெற்றது என்று சொல்வார்கள். அதிலுள்ள மேற்கத்திய நோக்கிலான ‘மீட்பு’ கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாமென நினைக்கிறேன். அந்தக்கட்டுரை மேற்கத்தியநோக்கில் அமைந்தது. அதாவது சிந்தனை, பாலியல் அனைத்திலும் ‘சுதந்திரம்’ மட்டுமே ஆன்மிக விடுதலை என்று அது சொல்கிறது. அந்தக்கட்டுரை மிகமுக்கியமான ஒன்று

சுந்தரம்

முந்தைய கட்டுரைகுறளுரை கடிதங்கள்-1
அடுத்த கட்டுரைவானதி- நினைவுகளினூடாக…