புண்படுதல் – கடிதங்கள்

monkey laughing 2

 

அன்புள்ள திரு.ஜெயமோகன்!

புண்படுதல் வாசித்தேன்

நகைச்சுவை என நினைத்து ஏதோ கூறிவிட்டு இரண்டுமுறை உதை பட்டிருக்கிறேன்.

முதல் முறை,கோவில் வாசலில் விட்டிருந்த நண்பரின் காலணி காணாமல் போய்விட்டது.’பரதாழ்வான் வந்துவிட்டுப் போயிருக்கிறான்’என்று கூறினேன்.

நண்பர் வைணவர். வந்தது பாருங்கள் அவருக்குக் கோபம்.காலணி தொலைந்த‌

ஆதங்கமும் சேர்ந்து என்னை காய்ச்சி எடுத்துவிட்டார்.இராமாயணம் , பரதன், ஆழ்வார்கள் அனைவரையும் நான் கேவலப்படுத்தி விட்டேன் என்று கத்திவிட்டு கையையும் ஓங்கிவிட்டார்.

நாய் பிரியரான நண்பர் மூன்று நாய்களுடன் காலையில் நடைப்பயிற்சிக்கு வந்தார். எதிரே வந்த நான் ‘குட் மார்னிங், பைரவ சுவாமி’ என்றேன். கோபம் தலைக்கேறி கன்னத்தில் அறைந்து விட்டார்.

அன்புடன்,

கே.முத்துராமகிருஷ்ணன்

ஆங்கரை,லால்குடி

***

அன்புள்ள ஜெ

புண்படுதல் பற்றிய உங்கள் கட்டுரை முற்றிலும் உண்மை. இதை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். கடுமையான கிண்டல்கள் மட்டும் அல்ல சாதாரணமான வரிகளேகூட பலரையும் இங்கே புண்படுத்துகின்றன. சாதி மதம் எல்லாம் மிகக்கவனமாகத் தெரிந்துகொண்டுதான் பேசவேண்டியிருக்கிறது.

இதற்குப் பலகாரணங்கள் இருக்கலாம். இங்கே மக்களுக்கிடையே உரையாடலே முன்னர் நிகழ்ந்ததில்லை. சாதி சாதியாக ஒரு கூட்டுக்குள்தான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆகவே கிண்டல்கள் புரிந்துகொள்ளப்படுவதில்லை.

நான் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தன் மனைவியை என்னிடம் ‘உன் தங்கச்சி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். நான் வேடிக்கையாக ‘நான் அப்டி நினைக்கலை மாப்ள’ என்று சொன்னேன். இருபதாண்டுக்கால நட்பு அப்படியே முறிந்தது

ராம்சங்கர்

முந்தைய கட்டுரைசிங்கை சந்திப்பு -கடிதம்
அடுத்த கட்டுரைபிரம்பும் குரலும்