பனிமனிதன் -கடிதங்கள்

article-2463934-18C923B300000578-435_634x445

 

திரு. ஜெயமோகன் அவர்களே!

என் ஏழாம் வகுப்பு படிக்கும் மகனுக்கு பனிமனிதனை வாசித்து காண்பித்தேன். எங்களிருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது – கதையைப்படித்த பொன்னான தருணங்கள்! இருவருமே சாயங்காலம் வருவதற்காக கிட்டத்தட்ட தவமிருக்கவே தொடங்கியிருந்தோம் – தினமும் பத்திலிருந்து பதினைந்து பக்கங்கள் மட்டுமே படிப்போம். சங்கல்ப் (என் மகன்) இந்தக்கதை முடியவே கூடாதென்று தினந்தோறும் சொன்னபடியே இருந்தான்! நேற்றுடன் முடிவடைந்தது – பனிமனிதனின் சீக்குவல் வேண்டுமென மிகவும் விரும்புகிறான்!

பனிமனிதனின் கதை, குழந்தைகளுக்கு மட்டுமானது அன்றி, அனைத்து தரப்பினருமே படிக்கவேண்டும்! வீரம், வெற்றி ஆகியவற்றைத்தாண்டி ஈரம், நல்குணம் போன்ற இந்திய வாழ்வியலைக் கொண்டாட, நிறைவாழ்வு வாழ பனிமனிதன் மிகவும் உதவுவான். பனிமனிதனில், நல்லவனாக வாழ்வதற்கான சாவிகளை நீங்கள் நிறையவே புதைத்துள்ளீர்கள், அதில் சிலவற்றையெடுத்து, என் மகனுக்கும் கொடுத்துள்ளேன்!

சரி, பனிமனிதன் – பாகம் 2 ஐ, உடனடியாக அனுப்பிவைக்கவும்!

மிக்க நன்றி

பி.ஆர். கல்யாண்

***

அன்புள்ள கல்யாண்

பனிமனிதனின் தொடர்ச்சியாக திபெத் அல்லது லடாக் பின்னணியில் ஒரு நாவல் எழுதும் எண்ணம் இருந்தது. இப்போதும் உள்ளது. பார்ப்போம். அந்நாவலிலேயே அந்தக்குறிப்பு உண்டு.

ஏதாவது சிறுவர் இதழில் தொடராக எழுத முடிந்தால் நல்லது என நினைக்கிறேன்

ஜெ

***

அன்புள்ள ஜெ

என் மகனுக்குப் பனிமனிதனை நான் முதல் எட்டு அத்தியாயங்கள் வாசித்துக் கேட்கவைத்தேன். அவனுக்கு 7 வயது .மூன்றாம் வகுப்பு. அதன்பின் அவனே உட்கார்ந்து எழுத்துக்கூட்டி மிச்சத்தைப் படித்துவிட்டான். இமையமலை பற்றி ஒரே பரவசமாகப் பேசிக்கொண்டிருக்கிறான்.

குழந்தைகளுக்குக் கதைகள் சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதும் மாயாஜாலங்கள் இருக்கவேண்டும் என்பதும் நாமே போட்டுக்கொள்வதுதான். பல குழந்தைக்கதைகளில் ‘ஹாரிபாட்டர் அந்த ராட்சதச் சிலந்தியிடம் பேசினான்’ என்ற வகையில் மிகவும் எளிமையான விவரிப்புதான் வரும். இதில் இயற்கை வர்ணனை மிகவும் விரிவாக வருகிறது. ஆனால் அதுதான் பிள்ளைகளுக்குப் பிடித்திருக்கிறது. தொடக்கவரியே இமையமலையை வர்ணிப்பதுதான்

ஏன் என்று நான் நிறைய யோசித்தேன். பிள்ளைகள் வெளியுலகை கற்பனைசெய்துகொண்டே இருக்கின்றன. மொத்தத்தில் வீட்டை விட்டு கிளம்பியாகவேண்டும். இப்படி அற்புதமான கனவுபோன்ற நிலவர்ணனைகள் அவர்களுக்கு பெரும் மனக்கிளர்ச்சியை அளிக்கின்றன. அவர்கள் அங்கே சென்றுவிடுகிறார்கள். வீட்டுக்குள் நடப்பது போல கதை எழுதினாலோ வகுப்பில் நடக்கும் கதைகளோ அவர்களுக்குப் பிடிப்பதே இல்லை என்பது இதனால்தான்

ஜெயலட்சுமி

***

அன்புள்ள ஜெயலட்சுமி

நாவல் வெளிவந்தபோது அன்று ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்த தேவதேவன் இதைத்தான் சொன்னார்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
அடுத்த கட்டுரையு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’