ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 9

With Jeyamohan(1)

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம் நலமறிய விழைவு.

உதகையின் குளிர்சிலிர்ப்பில், மலையுச்சியில், ஒத்த இயல்புடைய நண்பர்கள் சூழ, இளமை ததும்பும் இலக்கிய ஆளுமை கொண்ட, உலகின் முக்கிய இலக்கிய ஆளுமையுடன் இரண்டு நாட்கள் உரையாடல், கேலிப்பேச்சுகள், விசாரிப்புகள் என்பது எவ்விதத்திலும் இந்திய இலக்கிய உலகில் கனவிலும் சாத்தியமற்றதே!

அதிலும், நான் எழுதிய சிறுகதைகளை நண்பர்கள் படித்து அவற்றைப் பற்றிய சிறிய விவாதம் தங்கள் முன்னிலையில் நடைபெற்றதை பெரும்பேறன்றி என்னவென கொள்வேன். உண்மையில் எனக்கு சிறுகதைகளை விட என் கவிதையினைப் பற்றியே எனக்கு சில அறிவுரைகள் தேவைப்பட்டது. நேரம் காரணமாக அவற்றை பற்றிய வாதம் ஏற்படவில்லை. அதில் பாதகம் ஒன்றுமில்லை.

இப்படி ஒரு நிகழ்வில் நானும் ஒரு அங்கம் என்பதே என்னை வரலாற்றின் துளி என்பதிலிருந்து சற்றே இனிமை கொண்ட தேன் துளியாக மாற்றிவிடுகிறது.

தங்களின் ஞாபகத்திறன் உங்களை கவனிக்கும் அனைவரும் அறிந்து வியந்து வருவதே. ஆனால் அதை தாங்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்பதை அருகிருந்து சற்றே அறிய முடிந்தது.

முகம் அறிமுகம் கொண்ட பின் `பெயர்` என்ற முதல் வார்த்தை மூலமே அறிமுகம் நிகழ்கிறது. யாருடைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உடனே அதை அதற்கு தொடர்பான பெயர்களுடனோ, சம்பவங்களுடனோ, படிமங்களுடனோ தொடர்பு படுத்திக்கொள்கிறீர்கள். அது உருவாக்கும் காட்சிகள் மூலம் நாங்கள் எங்களை நீங்கள் கவனித்ததாக நினைப்பதைத் தாண்டி அதிகம் கவனித்துக்கொள்கிறீர்கள்.

unspecified

என் பெயர் கமலக்கண்ணன். கூடவே நண்பரின் பெயர் தாமரைக்கண்ணன். உண்மையில் என் பெயரின் மேல் எனக்கு ஈர்ப்பு அதிகம். என் பெயரை நான் பலவகைகளில் எழுதி பார்ப்பதுண்டு. ஆனால் `அரவிந்தாக்‌ஷன்` என்ற பதமும் என் பெயரைக் குறிப்பது என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன். அது என்னை வியக்க வைத்தது. அது நான் அவ்வப்போது தேடியலையும் புனைவுப்பெயரோ என்று தோன்றியது.

அடுத்ததாக தங்கள் நகைச்சுவைத் திறன். அது பல கட்டுரைகளிலும், வெண்முரசின் சில பாகங்களிலும் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. இருப்பினும், சில பள்ளித் தோழர்கள் அனைவரையும் சிரிக்கவைப்பதற்காக தன் முகத்தைக் கோணி, அழுவது போல் நடித்து, பாவங்களுடன் செய்யும் நகைச்சுவையைத் தங்களிடமும் கண்டது அரியது. அதை எண்ணி எண்ணி மனம் சிரிப்பில் கொப்பளித்து அதன் குமிழ்கள் என் முகத்தைப் புன்னகை என வெளி காண்பித்தது. `ஏன் சிரிக்கிறீர்கள்` என்று என் சூழலில் உள்ளோர் கேட்பதும் நிகழ்ந்தது.

உங்களைப் பெரிதும் விவாதங்களுக்கு உள்ளிழுக்காமல், பல இழைகளில் கருத்துக்களை விளக்கவேண்டிய ஆசிரியராக மாற்றிவிட்டது சற்றே எனக்கு அதிருப்தியைத் தந்தது. உதாரணமாக, `விவாதத்தின் வழிமுறைகள்`. ` கதை, கதைகோர்வு, மைய இழை – வேறுபாடுகள்` போன்ற விசயங்களில் அதிக நேரம் விரயமானதென தோன்றுகிறது.

unspecified

இவற்றிற்கு காரணம் எங்களின் அறியாமையாகவோ அல்லது ஈரோட்டில் தங்களுக்கு ஏற்பட்ட முன் அனுபவத்தி விளைவாகவோ (அல்லது இரண்டுமாகவோ) இருக்கலாம் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

இவையன்றி, தங்கள் நடைதிறன், இசையின் மீதுள்ள காதல், நீங்கள் மேற்கோளிட்ட கமல்ஹாசன் சொன்ன நகைச்சுவைகள், சிவாலய ஓட்டம் போன்ற அரிய பல கருத்துகள் எண்ண எண்ண எனக்குள் தேனில் ஊறும் கரும்பென இனிக்கிறது.

இரண்டு நாட்கள் அருமையான உணவும் அன்பான சூழலும் வயிற்றையும் மனதையும் முழுதாய் நிறைத்தன. ஆனால் அறிவு மட்டும் விசித்திரமானது, பெரும்தோறும் பெரும்பசி கொள்கிறது.

பெரும்பசியுடன்

அன்புள்ள

கோ.கமலக்கண்ணன்.

unspecified

அன்புள்ள ஜெ,

ஒரு இலக்கிய வாசகனாக உணர்ந்த பொழுதே என் நண்பர்களின் உலகிலிருந்து விலகத் துவங்கினேன். வாசிப்பு அளித்த நல்ல ரசனைகளையும் அனுபவங்களையும் எங்கும் பகிர முடியாமல் ஒரு இரும்பு கூண்டுக்குள் என்னை நானே சிறை வைத்திருந்தேன். ஏளனத்தினால். ஆரம்பத்தில் கிடைத்த பல திறப்புகளின் அதீத உணர்ச்சி கொந்தளிப்புகளினால் இவ்வானுபவங்களை நண்பர்கள் பலரிடம் பகிர்தேன். அவர்கள் மனதின் ஆழ்த்தில் எங்கோ உரையும் நச்சு நாகம் அதனால் சீண்டபடுகிறது. அந்நாகத்தின் நச்சு அவர்களின் பார்வையிலும் சொற்களிலும் ஏளனமென தெறிக்கிறது. அது நெருக்கமானவர்களிடமிருந்து வரும் பொழுது மேலும் பல இரும்பு சுவர் எழுப்பி இன்னும் என்னை அக்கூண்டிற்குள் குறுக்கிகொண்டேன்.

அக்கூண்டை விட்டு நான் முதலில் வெளியே வந்ததே கோவை வெண்முரசு விவாதத்தில் தான். நான் தனியன் அல்ல என்று உணர்தேன். பின் விஷ்ணுபுரம் விழா, ஊட்டி புதியவர்கள் சந்திப்பு. இப்பொழுது பல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.

உங்களுடனான இந்த சந்திப்பு பல அனுபவங்களை தந்தது. ஒரு நல்ல விவாத சூழலை, சிந்தித்தலை கற்றுகொடுத்துவிட்டீர்கள். இச்சந்திப்பை நடத்திய விஜய் சூர்யன், மீனாம்பிகை, மணி நிர்மால்யா அவர்களிக்கு என் நன்றிகள்.

அன்புடன்,

தாமரை கண்ணன்

unspecified

அன்புள்ள ஜெ,

மன்னித்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு கடிதம் எழுதிய அன்று நடந்த ஒரு சம்பவத்தினால் அவ்வாறு எழுதிவிட்டேன். சனிக்கிழமை அன்று கோவையில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். திரும்பி செல்லும்போது ஈரோடு கிருஷ்ணன் அவர்களுடன் பேருந்தில் இதை பற்றி கேட்டேன். அவர் இலக்கிய வாசிப்பு நம்மை வாசிப்பு இல்லாத நம் நண்பர்களிடமிருந்து சற்று விலக்கத்தை உண்டாகுமே தவிர ஏளனத்தையல்ல, இது personality problem என்றார். அதை நான் அவ்வாறு எடுத்துகொள்ள காரணம் என் மீதான தாழ்வுணர்ச்சியினால் அல்ல, எதிர் பேச்சு மற்றவர்களை புண்படுத்திவிடுமோ என்பதனால் தான். உங்களுக்கு தவறாக கடிதம் எழுதிவிட்டேன் என உறுத்தலாக உள்ளது.

இறுதியாக கிருஷ்ணன் அவர்கள் சொன்னது “treat your self as a royal”. இதை பலமுறை என்னுள் சொல்லிகொண்டேன் மௌன புன்னகையுடன்.

அன்புடன்
தாமரை கண்ணன்.

முந்தைய கட்டுரைஈரட்டிச் சிரிப்பு…
அடுத்த கட்டுரைவல்லவன் கை வில்