ஜனநாயகம், அறம், தத்துவம்

 

1

அறம் விக்கி

வணக்கம்,

புதிய வாசகர்களுடன் உங்களை பார்க்க சந்தோஷமாக இருக்கின்றது. 2002ல் சங்கசித்திரங்கள், விஷ்ணுபுரம் வழியாக உங்களை படித்து அறிமுகம் செய்து கொண்டு 2009ல் சந்தித்த பொழுது இருந்த பரபரப்பே நியாபகம் வருகின்றது.

நாகர்களின் வரலாறு வெண்முரசில் விறுவிறுப்பாக இருக்கின்றது. இதை வேறு எங்கும் வாசித்தது இல்லை.  நாக சிலைகளை கோவில்களில் காணும் பொழுது அது என்ன என விளங்கிக் கொண்டதே இல்லை.  இங்கு சிவா விஷ்ணு கோவிலிலும் அய்யப்பன் சன்னதி பின்னால் ஒரு சிலை உண்டு. வெண்முரசு மூலம் ஒரு அறிமுகம் கிடைக்கின்றது.

வாக்குரிமை பற்றி நீங்கள் எழுதிய நகைச்சுவை பதிலை படித்தேன். வாக்கு என்பது விற்பனைக்கு போவதை பற்றி அண்மையில் உங்கள் அமெரிக்க நண்பரிடம் :-) பேசிக் கொண்டிருந்தேன். அவர் அமெரிக்காவில் இருப்பவன் என்ன வறுமையிலும் ஓட்டுரிமையை விற்க மாட்டான், அது கடின உழைப்பில் சம்பாதித்த உரிமை என்பதால் அதை கவனமாகவே பராமரிப்பான் என்றார். சகலருக்கும் வாக்குரிமை என இந்திய சுதந்திரத்துக்கு பின்னான முதல் தேர்தலின் முன்னரேயே எல்லாருக்கும் கிடைத்து விட்டதால் அதன் அருமை தெரியாமல் போய் விட்டதா?

ஜனநாயகம் என்பது தேர்தல், சட்டமன்றம், நீதிமன்றம், காவல்துறை போல பல நிறுவனங்களின் மீதினிலேதான் இருக்கின்றது. Governing என்பது integration through structure என்பதுதானே? இந்த அமைப்பு பற்றி விரிவாக நமது தமிழ் தளத்தில் அதிகம் யாரும் பேசுவதில்லை. வெண்முரசில் அரச உருவாக்க காலத்திய நியதிகளும், முறைகளும் பற்றி விரிவாக பேசுகின்றீர்கள். நகர நிர்வாகம் முதல் விழா ஒருங்கிணைப்பு வரை அனைத்தும் வருகின்றது. கர்ணனின் அங்க நாட்டில் ஹரிதர் செய்யும் அவை ஓருங்கிணைப்பு ஒரு வரைபடத்தை தந்தது.

ஜனநாயகத்தில் integration through a leader என்பது சிக்கலை தராதா?அம்பேத்கரை பேசும் பல நண்பர்கள் உங்களை போல அவரது தம்மம் பற்றியெல்லாம் பேசுவதில்லை. நீங்கள் ஆல்காட், எம்.சி.ராஜா, அயோத்திதாசர் என விரிவாக எழுதி வருகின்றீர்கள். அவர்களது சமூக பங்களிப்பு, தத்துவ பங்களிப்பு என தனித்தனியாக கவனப்படுத்துகிறீர்கள்.

பொதுவாக வலைத்தளங்களில் அம்பேத்கரின் Annihilation of Caste பற்றி பேசுவதோடு நிறுத்திக் கொள்கின்றார்கள். அவரது ரிபப்ளிக்கன் பார்ட்டி,அவரது constitutional morality வரைக்கும் கூட போவது இல்லை.

2014ல் டெல்லி யுனிவர்சிட்டியில் பாலகங்காதரா என்ற புரோபசர் பேசும் பொழுது இந்திய சூழலில் கதைகள் வழியாகவே நெறிகள் பரப்பபட்டன, அதனால்தான் இந்திய தத்துவத்தில் தனியாக நெறிகள் இல்லை என சொல்லிக் கொண்டு இருந்தார். யூடியுபில் பார்த்தேன்.  ஓரியண்டலிஸ்ட் பாணியில் இந்திய வரலாற்றை அணுகுவதில் பலன் இல்லை என சொன்னார். அதை ராஜன் குருக்கள் கடுமையாக மறுத்தார். அவர் ஒரு அக்கடமிக். அந்த தளத்தில் இருந்து சொல்கிறார்கள்,மறுக்கிறார்கள். அதெல்லாம் இந்தியவியலாளர்கள் ஆய்வு செய்ய வேண்டியது.

உங்களது வெண்முரசினை படிக்கையில் அதன் விவரணைகள், கதை சொல்லும் பாங்கு எல்லாம் நிறைய நெறிகளை, சிந்தனை கட்டமைக்கும் முறைகளை நினைவுப்படுத்தியது. மகாபாரத கர்ணன் கதை விடாமல் ஓரிசா, கேரளா,தமிழ்நாடு, சட்டீஸ்கர், மணீப்பூர் என எல்லா இடங்களிலும் மிக உருக்கமாக , அன்பின், கொடையின் , கருணையின் வீழ்ச்சியாக நாட்டார் கதையாடல்களில் இருப்பதும் நெறிகளை தான் சொல்கிறதோ என தோன்றுகின்றது

அன்புடன்

நிர்மல்

அன்புள்ள நிர்மல்,

நலம்தானே? நீண்டநாட்களாகிவிட்டது கடிதம் பெற்று.

இந்தியமரபில் ’தத்துவம்’ என்பது உண்டா என பேராசிரியர் குந்தர் முதல் அஹேகானந்த பாரதி வரை ஒரு விவாதம் நீள்வதை ஒருமுறை நித்ய சைதன்ய யதி, பீட்டர் மொரெஸ், பீட்டர் ஓப்பன்ஹைமர் ஆகியோர் விவாதிக்கக் கேட்டிருக்கிறேன்.

எந்தச் சரியானபொருளில் மேலைச்சிந்தனையில் தத்துவம் என ஒன்று குறிப்பிடப்படுகிறதோ அவ்வாறு இந்தியசிந்தனையில் இல்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. அந்த வேறுபாட்டைக் குறித்துக்கொள்ளாமல் இருசிந்தனைகளையும் புரிந்துகொள்ளமுடியாது. ஒன்றைவைத்து இன்னொன்றை மட்டம்தட்டுவதெல்லாம் சிந்திப்பவர் செய்வதுஅல்ல.

[இத்தகையவிவாதங்களில் பாலகங்காதரா, ராஜன் குருக்கள் போன்றவர்களின் குரல்களுக்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை. இவர்கள் இருவரையுமே நான் வாசித்திருக்கிறேன்.பொதுவாக இந்தியக் கல்வித்துறையாளர்கள் , அதிலும் நம்மூர் ஜேஎன்யூ அறிஞர்களை, நான் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் எதையும் நமக்குக் கற்றுத்தரமுடியாது, அவர்களின் ஆழமான முன்முடிவுகளையும் காழ்ப்புகளையும் அன்றி]

மேலைச்சிந்தனையில் தத்துவம் என்பது அடிப்படையில் ‘தூயதர்க்கம்’ என பொருள்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு தளத்திலும் சிந்தனைக்கு ஆதாரமாக உள்ள ஒழுங்குமுறையை மட்டும் கொண்டு அமைந்த ஓர் அறிவுத்துறை அது. ராபர்ட் ஆடியின் கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி ஆஃப் ஃபிலாசஃபி ஒவ்வொரு துறையின் தத்துவத்தையும் தனித்தனியாக பிரித்து வரையறுக்கிறது.

இந்தியசிந்தனையில் தத்+வம் என்பது மெப்பொருள் அறிதல் என்று உத்தேசிக்கப்பட்டது. அதற்கான மூன்றுவழிகள் தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு. இவைமூன்றுமே ஒன்றையொன்று நிரப்பி, ஒன்றுக்கொன்று உதவும்வகையில்தான் இங்குள்ள மெய்காண்முறை செயல்பட்டது.

ஆகவே தர்க்கம் அதில் ஓர் அடித்தளம் மட்டுமே. நியாய சாஸ்திரமாக அதுவரையறைசெய்யப்பட்டு அனைத்துவிவாதங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. சந்தஸ் சாஸ்திரத்தையும் ஒருவகையில் தர்க்கம் எனலாம். அது மொழியைவகுத்துரைத்தது

ஆனால் அனைத்துவிவாதங்களிலும் கற்பனைக்கான இடம் இருந்தது. உவமைகள் அறிதலின் அடிப்படைகளாகவே கொள்ளப்பட்டன. நமது பெரும்பாலான தத்துவமேதைகள் கவிஞர்களும்கூட. திருமூலரை கவிஞர் என்பீர்களா தத்துவமேதை என்பீர்களா? மேலைச்சிந்தனை கற்பனையை விலக்கியது, அதன் வழியாக ஒரு புறவயத்தன்மையை அடைந்தது. இந்தியசிந்தனையில் அந்தப்புறவயத்தன்மை பெரிதாகக் கருதப்படவில்லை.

அத்துடன் திருமூலர் ஒரு யோகியும்கூட. உள்ளுணர்வு அவரது முதல் ஆயுதம். மேலைச்சிந்தனை இதை மறைஞானம் [mysticism] என்று சொல்லி விலக்கி தனித்துறையாகக் கண்டது. மேலைநோக்கில் இந்தியாவின் கணிசமான தத்துவஞானிகள் மறைஞானத்தை பூடகமான மொழியில் முன்வைத்தவர்கள் என்றே தெரிவார்கள்.

இந்தியதத்துவம் என்பது தத்துவம் அல்ல இறையியலே [Theology] என பலர் வாதிட்டிருக்கிறார்கள். இந்தியதத்துவம் அறத்தை கையாளும் திராணியற்றது, எனவே அது பயனற்றது என்று கூறியிருக்கிறார்கள். அதை அறியாமல் வழிமொழிபவர்களே இங்குள்ள கல்வியாளர்களில் பலர். அது முற்போக்கெனக் கருதப்படுகிறது.

புறவயமான தர்க்கத்தை காலப்போக்கில் பிரித்து வகுத்துக் கொண்டமையால் மேலைத்தத்துவம் ஒரு பாரபட்சமற்ற கருவியாக ஆகியது. ஆகவே அறவரையறை அதன் ஒரு சவாலாக ஆகியது, ஏனென்றால் காலந்தோறும் மாறுவது, காட்சிதோறும் வளர்வது அறம். Universal Ethics மேலைச்சிந்தனையின் மையப்பேசுபொருள். அதில் அது அடைந்த வெற்றிகள் இன்று உலகமெங்கும் உள்ள சமூக அமைப்பை உருவாக்கியுள்ளன. அடுத்ததாக அறிவியல் விவாதிக்கும் முறைமைகளை மேலைத்தத்துவம் உருவாக்கிய முறைமையைச் சுட்டிக்காட்டலாம். அதுவும் இன்று உலகளாவ உள்ளது

இந்தியதத்துவம் அப்படி ‘புறவயமானதாக’ ஆகவேயில்லை. அதன் ஒருபகுதி மட்டுமே புறவயமான தர்க்கத்துக்குள் நிற்பது. அது ஓர் விவாத அரங்க ஒழுங்கு மட்டுமே. மற்றபடி அதன் மெய்காண்முறை கற்பனை, உள்ளுணர்வு சார்ந்து விரிவது. ஒரு மேலைச்சிந்தனையாளன் இந்தியதத்துவத்தை அறிகையில் இது என்ன கவிதையா இல்லை மறைஞானமா என்று குழம்புவது ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது.

ஆகவேதான் குரு- சீட உறவு இன்றி இந்தியதத்துவம் முறையாகக் கற்கப்பட முடியாததாக உள்ளது. அதை நூல்களிலிருந்து புறவயமாகக் கற்பது வெறும் தகவல்களையே அளிக்கும். நம் கல்வித்துறையாளர்கள் தங்கள் அகந்தையால் குரு என எவரையும் ஏற்கும் தன்மை அற்றிருக்கிறார்கள் என்பதனால் அது அவர்களுக்கு அன்னியமாகவும் உள்ளது.

இந்த இயல்பால் இந்தியதத்துவம் மேலைத்தத்துவம் போல ஒரு தனித்துறையாக வளரவில்லை. அது இந்திய மெய்யியல், இந்தியக்கலை, இந்திய இலக்கியம் ஆகியவற்றுடன் இணைந்துபயிலப்படவேண்டிய ஒன்றாக மட்டுமே உள்ளது. பிரித்துக்கற்றால் பிழையாகப் புரிபடக்கூடியதாகவும் உள்ளது.

ஆகவே அதை மேலைத்தத்துவம் போல மருத்துவம், நீதி போன்ற துறைகளுக்கான அடிப்படைச்சிந்தனையாக நேரடியாகப் பயன்படுத்தமுடியாது. அத்தளங்களில் அதன் செல்வாக்கு என்பது அவற்றின் மையத்தரிசனம் சார்ந்து மட்டுமே செயல்படமுடியும்.

ஆனால், இந்தியதத்துவத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறை மேலைத்தத்துவத்தில் இல்லாதது. வரண்ட புறவயக் கட்டுமானமாக அல்லாமல் உயிர்ப்புள்ள மெய்யறிவுப்பயணமாக தத்துவத்தை வைத்திருப்பது அதுதான்

ஜெ

 

மறுபிரசுரம், முதல்பிரசுரம் Feb 27, 2016 

முந்தைய கட்டுரைராஜாம்பாள்
அடுத்த கட்டுரைபோதாமைகளின் ஒத்திசைவு : அருணசலம் மகாராஜன்