கனவுகளை விட்டுச்சென்றவர்

jayakand_1

ஜெயகாந்தன் மறைந்தார். எழுத்தாளனின் மறைவு என்பது ஒரு தொடக்கம். அவனை முழுமையாக தொகுத்துக்கொள்ள, அனைத்துக்கோணங்களிலும் அவனுடைய பங்களிப்பைப்பற்றி அறிய அது ஒரு வாய்ப்பு. அத்தனை பேரிலக்கியவாதிகளும் இறந்தபின்னர் உயிர்த்தெழுபவர்கள்தான். ஜெயகாந்தனை இன்று ஒரே வீச்சில் எப்படித் தொகுத்துக்கொள்வேன்?

நமக்கு சங்ககாலத்திற்குப்பிறகு இலக்கியவாதி என்ற அடையாளம் மட்டும் கொண்ட பெரிய ஆளுமைகள் இல்லாமலாயினர். இலக்கியமும் மதமும் ஒன்றாக ஆயிற்று.நாயன்மார்களோ சேக்கிழாரோ ஆழ்வார்களோ கம்பனோ மதம் சார்ந்த மரியாதையையே பெற்றனர். மற்றபடி இலக்கியவாதிகள் என்றால் அதிகாரத்தை அண்டிப்பிழைப்பவர்கள், பரிசில் வாழ்க்கை வாழ்ந்த மொழிநுட்பத் திறனாளர்கள். இலக்கியவாதி என்பவன் பிரபுக்களின் அவையிலுள்ள பலரில் ஒருவன் என்ற எண்ணமே மக்களிடமும் இருந்தது

இந்த மனநிலை காரணமாக இங்கு இலக்கியவாதிக்கு மதிப்பு இருந்ததில்லை. இங்கே ஜனநாயகமும் நவீனக்கல்வியும் வந்தபோது நவீன இலக்கியமும் உருவாகியது.நவீன எழுத்தாளன் பிரபுக்களின் தாசன் அல்ல, அவன் மக்களை நோக்கிப் பேசுபவன்,. அவர்களின் கனவுகளை சமைப்பவன், இலக்குகளைச் சுட்டிக்காட்டுபவன், தன் காலகட்டத்தில் அவன் தனித்தவன், முன்னால்செல்பவன் என்ற நிலை உருவானது.

’கேளடா மானுடா’ என்று பீடத்தில் ஏறி நின்று பாடிய பாரதி அந்த வகையில் தமிழுக்கு முதன்மையான நவீன இலக்கியவாதி. அரச அவையைத் துறந்து இதழியல் நோக்கி அவர் போனதே அவ்வகையில் ஒரு பெரிய குறியீடு. ஆனால் அவரைப் புரிந்துகொள்ளாமல் அவமதித்துத் துரத்தியது தமிழ்ச்சமூகம்.

அந்த இழிவு என்றும் இங்கு எழுத்தாளர்களுக்கிருந்தது. ஜனநாயகத்தின் வழியாக உருவாகிவந்த புதிய அரசர்களான அரசியல்வாதிகளுக்கு, நவீனத் தொழில்நுட்பம் மூலம் உருவாகிவந்த புதிய தெய்வங்களான நடிகர்களுக்கு இருந்த இடத்தை தமிழகம் எழுத்தாளர்களுக்கு அளித்ததில்லை- இன்னும் அளிக்கவில்லை

அத்தகைய சூழலில் தமிழ் எழுத்தாளனின் முகமாக தருக்கி நிமிர்ந்து நிற்க, சமூகத்தை நோக்கி கைசுட்டிப் பேச, எழுத்தாளனுக்குரிய வாழ்க்கையை வாழ துணிவுகொண்டவர் ஜெயகாந்தன். எழுத்தன்றி எந்தத் தொழிலும் செய்யமாட்டேன் என அவர் எடுத்த முடிவு, எந்நிலையிலும் கலைஞனாக மட்டுமே வாழ்வேன் என அவர் கொண்ட உறுதி அவரை தனித்து நிறுத்தியது. அவருக்கிருந்த இடதுசாரிப்பின்புலமும் வங்காளத் தொடர்புகளும் அதற்குக்காரணமாயின. அவர் அவ்வகையில் ஒரு முன்னோடி. ஒரு அடையாளம். நவீனத்தமிழிலக்கியத்தின் பதாகை.

இரண்டாவதாக, இங்கே முற்போக்கு இலக்கியம் உருவானபோது அதன் குரலாக எழுந்துவந்தவர் அவர். இந்தியாவெங்கும் முற்போக்கு என்னும் மார்க்ஸிய அடிப்படைகொண்ட இலக்கியம் மரபை முழுமையாக நிராகரிப்பதாக, இந்திய எதிர்ப்பும் ஐரோப்பிய வழிபாடும் கொண்டதாக, இருந்தபோது ஜெயகாந்தன் இந்தியாவின் ஞானமரபிலிருந்த சாராம்சமான விஷயங்களுடன் மார்க்ஸியத்தை இணைக்கமுயன்றார். மார்க்ஸியம் இந்தியாவின் ஞானமாக ஆகவேண்டுமென கனவுகண்டார்

ஆகவே அவருக்கு மார்க்ஸ் அளவுக்கே விவேகானந்தரும், வள்ளலாரும், முதன்மையானவர்களாக இருந்தார்கள். வள்ளுவரும் தாயுமானவரும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். அவர்களை இடதுசாரி மேடைகளில் முன்வைக்க அவரால் முடிந்தது. பொருள்முதல்வாதமான மார்க்ஸியம் மரபின் ஆன்மீகசாரத்தை இழந்துவிடலாகாது என்ற அவரது அறிவுறுத்தல் இன்றும் இடதுசாரிகள் முன் நின்றுகொண்டிருக்கிறது. இந்தியாவின் முற்போக்கு எழுத்தாளர்களிடையே ஒரு கோட்பாட்டாளராக ஜெயகாந்தன் முதன்மையானவர் என்று இந்த ஒருகாரணத்தாலேயெ துணிந்து சொல்லமுடியும்

ஒரு படைப்பிலக்கியவாதியாக, கலைஞனாக, ஜெயகாந்தனின் பங்களிப்பு என்ன? சென்ற தலைமுறையைச்சேர்ந்த ஜெயகாந்தனின் தீவிர வாசகர் ஒருவர் சொன்னார். ‘என் சொந்த வாழ்க்கையைப்பற்றி நானே முடிவெடுக்கலாம், அதற்கான உரிமையும் பொறுப்பும் எனக்கு உண்டு என்று எனக்கு ஜெயகாந்தனின் எழுத்துக்கள் கற்பித்தன’ இன்று சிந்தித்தால் வேடிக்கையாக இருக்கும். ஆனால் சாதி, மதம், சமூகக்கட்டுப்பாடுகளைக் கடந்து ‘நான் சிந்திக்கிறேன்’ என ஒவ்வொரு வாசகனையும் உணரச்செய்தவை அவரது படைப்புகள்.

அவை பிரபல இதழ்களில் அன்று வந்தன. பல லட்சம் வாசகர்களை நேரடியாகச் சென்றடைந்தன. அவர்கள் வாசிப்பு என்பது ஒரு பொழுதுபோக்கு என நம்பியிருந்தவர்கள். அவர்களின் பிடரியில் அறைந்து சிந்தித்துப்பார் என்று ஜெயகாந்தனின் கதைகள் சொல்லின. தன்னிடம் விவாதிக்க அறைகூவிக்கொண்டே இருந்த எழுத்தாளர் அவர். இந்தக்காரணத்தால் அவரது எழுத்துக்கள் சற்று உரத்தகுரல் கொண்டவை, கதாபாத்திரங்களும் ஒற்றைப்படையானவையாக அமைந்தன. ஆனால் அவை தமிழ்ச்சமூகத்தை சில அடிப்படை வினாக்களை நோக்கிக் கொண்டுசென்றன

அவரது முக்கியமான கதாபாத்திரங்கள் அறிவார்ந்தவர்கள். அவர் வாழ்ந்த காலகட்டத்தின் பிரச்சினைகளை தாங்களும் ஏற்றுக்கொண்டவர்கள். அந்தக்கதாபாத்திரங்கள் வழியாக வாசகனை அந்தரங்கமாக, தனக்குள் சிலவற்றைக் கேட்டுக்கொள்ள வைத்தார் என்பதே அவரது வெற்றி. அந்த வினாக்கள் மூலம் அவன் மானுட சமத்துவத்தை, ஒருங்கிணைந்த மானுட விடுதலையை நோக்கி வரச்செய்தார். அரைநூற்றாண்டுககலம் இடதுசாரி இலட்சியங்களின் குரலாக இங்கே அவரால் ஒலிக்கமுடிந்தது.

அவரது படைப்புகளின் தலைப்புகள் மேலும் படைப்பூக்கம் கொண்டவை. ’புதியவார்ப்புகள்’, ’சமூகம் என்பது நாலுபேர்’, ’அந்தரங்கம் புனிதமானது’, ’சிலநேரங்களில் சிலமனிதர்கள்’ ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ”எத்தனைகோணம் எத்தனை பார்வை, எங்கோ யாரோ யாருக்காகவோ’ முன்நிலவும் பின்பனியும்’ போன்ற வரிகள் தமிழின் மிகச்சிறந்த கவிதைவரிகளுக்கு நிகரானவை. அவை அப்படைப்புகளின் சாரமாக வாசகன் உள்ளத்தில் வாழ்நாள் முழுக்க நீடிப்பவை

இடதுசாரி எழுத்தாளர் என்றாலும் அவர் வன்முறையை முழுமையாக நிராகரித்தவர். வன்முறை மானுட ஆழத்திலுள்ள புன்மையைத்தான் வெளியே கொண்டுவரும் என நினைத்தார். ஆகவே மார்க்ஸை ஏற்றதுபோலவே அவர் காந்தியையும் ஏற்றுக்கொண்டார். காந்திக்கும் மார்க்ஸுக்குமான அனைத்து முரண்பாடுகளையும் ஜெயகாந்தன் அறிந்திருந்தார். ஆனால் மானுடவிடுதலை என்ற புள்ளியில் அவர்களை ஒருங்கிணைக்கமுடியும் என்று அவர் எண்ணினார்

அதுதான் ஒட்டுமொத்தமாக அவரது பங்களிப்பு. ஒரு தத்துவஇணைவு. ஒரு மகத்தான உரையாடல். அவர் விட்டுச்சென்றுள்ள கனவு அதுதான்.


[தமிழ் இந்து வெளியிட்ட கட்டுரை, 10-5-2015]

===========================================================================================

பழைய கட்டுரைகள்

ஜெகே

ஜெகெ நீடிப்பாரா?

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2

ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1

ஜெயகாந்தன் வாசிப்புகுறித்து

என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”

கலைஞனின் உடல்மொழி ஜெயகாந்தன் ஆவணப்படம்

ஜெயகாந்தன்

ஜெகே இரு கடிதங்கள்

ஜெயகாந்தன் பழையவராகிவிட்டாரா?

ஜெயகாந்தனும் வேதமும்

இருசந்திப்புகள்

மூன்று சந்திப்புகள்

முந்தைய கட்டுரைஇரவு- செந்தில்குமார்
அடுத்த கட்டுரைஇருக்கியளா?