‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 90

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 3

விதுரர் தன் அணிப்படையினருடனும் அகம்படியினருடனும் காம்பில்யத்தை அடைந்தபோது அந்தியாகி விட்டிருந்தது. ஆகவே காம்பில்யத்திற்கு சற்று அப்பால் கங்கைக் கரையிலேயே படகுகளை கரைசேர்த்து இரவு தங்கினார்கள். நீண்டபயணத்தால் களைத்துவிட்டிருந்த படகோட்டிகள் படகுகளைக் கட்டியதுமே ஆங்காங்கே படுத்து துயிலத் தொடங்கினர். இரவுக்காவல் வீரர்கள் மட்டும் நீண்ட வேல்களும் வாள்களுமாக படகுகளின் அமரங்களில் காவலிருக்க விண்மீன்கள் முழுதாக எழுவதற்குள்ளாகவே அனைவரும் துயின்று விட்டிருந்தனர்.

விதுரர் தன் பெரும்படகின் மூன்றாம் அடுக்கின் கூரைமேல் அமர்ந்து அப்பால் பற்றி எரியும் காடு போல் தெரிந்த காம்பில்ய நகரையே நோக்கிக்கொண்டிருந்தார். அவர் அருகே நின்றிருந்த கொடிமரத்தின் மேல் அஸ்தினபுரியின் கொடி படபடத்துக்கொண்டிருந்தது. கொடிமரத்தின்மேல் ஏதோ பெரிய பறவை ஒன்று வந்து அமர்வதுபோலவும் எழுந்து விலகுவதுபோலவும் தோன்றிக்கொண்டிருந்தது. முதலில் சற்று வேடிக்கையாக இருந்த அது நேரம் செல்லச்செல்ல வதையாக மாறியது. அதை நிறுத்தமுடியுமா என்று எண்ணிக்கொண்டிருந்தபோது காற்று மேலும் வலுக்க சிறகடிப்பொலி துடிப்பொலியாகியது. அங்கே ஒரு பறவை கட்டிப்போடப்பட்டிருப்பது போல. அது உச்ச விசையுடன் விடுபடத் துடிப்பதுபோல.

கீழிருந்து படிகள் வழியாக குண்டாசி மேலே ஏறிவந்தான். தலைவணங்கி கொடிமரத்தூணுக்கு அப்பால் பாதிமறைந்து தயங்கி நின்ற அவனை நோக்கி அருகே வரும்படி விதுரர் கையசைத்தார். அவன் அருகே வந்து அவர் காலடியில் அமர்ந்துகொண்டான். “துயிலவில்லையா?” என்றார் விதுரர். அவன் பெருமூச்சுவிட்டபின் சிலகணங்கள் கடந்து “இரவுகளில் துயில்வது கடினம் தந்தையே” என்றான். கௌரவர்களில் அவன் மட்டுமே அவரை தந்தையே என்று அழைத்தான். அவர் அவன் தலையைத் தொட்டு “மருத்துவர்கள் அளித்த மருந்துகளை அருந்துகிறாய் அல்லவா?” என்றார்.

குண்டாசி “ஆம், அவை பெரும்பாலும் என்னை துயிலச் செய்கின்றன. துயில் விட்டு எழுவது என்பது ஒவ்வொருநாளும் நான் அடையும் பெரும் வதை” என்றான். விதுரர் “சோமன் இரக்கமற்றவன் என்பது மூத்தோர் சொல். மிக இனியவன். இனிமையாலேயே கொல்பவன். சோமனுக்குப் பிடித்த உணவு சோமரசத்தில் ஊறவைத்த மானுட இதயங்கள். அவற்றை அவன் எளிதில் தவறவிடுவதில்லை. அவன் கையிலிருந்து அவற்றை மீட்பது கண்ணீராலும் தவத்தாலும்தான் முடியும். நீ மீண்டுவிட்டாய். அதை உன் முகத்தைப் பார்க்கும் எவரும் அறியமுடியும்” என்றார்.

குண்டாசி “எனக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளை நான் அறிவேன் தந்தையே” என்றான். மெல்ல சிரித்தபோது பக்கவாட்டில் அவன் கண்களில் தீப்பந்தத்தின் செவ்வொளி மின்னியது. “ஆனால் குடி இனியது என்று மட்டும் சொல்லாதீர்கள். மூடர்களுக்கு மட்டுமே அது இனியது. அறிந்தவனுக்கு அது காலடியில் அதலம் வாய்திறந்த மலைவிளிம்பில் அறுந்துகொண்டே வரும் வேரில் பற்றியபடி தொங்கிக்கொண்டிருப்பது போன்றது… ஒவ்வொரு கணமும் அச்சம், துயரம். நினைவழிவது ஒன்றைத்தவிர அதிலிருந்து தப்ப வழி இல்லை. ஆகவே மீண்டும் குடிக்கிறோம்…” என்றான்.

பற்களைக் கடித்தபடி குண்டாசி சொன்னான் “குடிகூட பெரிய நோயல்ல தந்தையே. அது உருவாக்கும் அகநிலைகள்தான் சித்தச்சிதறல். மீளவே முடியாது சுழற்றியடிக்கும் பெருநரகம். என்னென்ன பாவனைகள்! எத்தனை விதமான அகநடிப்புகள்!” தலையை கையால் மெல்ல அறைந்துகொண்டான். “ஏன் குடிகாரன் ஆனேன் என்று எதையேனும் கற்பித்துக்கொள்ளாமல் அறிவுடையோன் வாழமுடியாது. அது அவனுடைய பிழைதான் என எண்ணிக்கொண்டால் அவன் தன்னிரக்கத்தால் செத்துவிடுவான். ஆகவே பிறரை குற்றம் சாட்டுகிறான். குலத்தை, குடும்பத்தை, உறவினரை, உயிர்கொடுத்த தந்தையை. அனைவரும்தான் அவனை குடிகாரனாக்கியவர்கள். ஒவ்வொருநாளும் ஒரு புதிய எதிரியை கண்டடைகிறான். அவர்கள் மேல் வெறுப்பும் கசப்பும் கொள்கிறான். வசைபாடுகிறான். காறி உமிழ்கிறான், ஏளனம் செய்கிறான். அந்தக்கசப்பு வழியாக அவன் அந்தநாளை ஓட்டுகிறான். கள்மயக்கின் இடைவெளிகள் வழியாகத் தெரியும் தன்னுணர்வை கடந்துசெல்கிறான்.”

“உச்சகட்ட வெறுப்பும் சினமும் மூண்டு எழுகையிலேயே முற்றிலும் இயலாமையையும் அறியும் ஒருவனைப்போல இரக்கத்திற்குரியவன் யார்?” அவன் தொடர்ந்தான். “அவன் தன்னை கோமாளியாக்கிக் கொள்கிறான். அல்லது ஆணவம் மிக்கவனாக காட்டுகிறான். தன்னந்தனித்து நின்று உலகின் முன் அறமுரைப்பவனாகவும், ஊழால் பழிவாங்கப்பட்டவனாகவும், அநீதியாகப் புறக்கணிக்கப்பட்டவனாகவும் சித்தரித்துக்கொள்கிறான். தீமையே உருக்கொண்டவனாக தோற்றம் தருகிறான். அன்பு கொண்டு உருகி அழுகிறான். உலகை நோக்கி இறைஞ்சுகிறான். ஒவ்வொரு நாளும் ஒரு வேடம். ஒவ்வொன்றும் கடும் தன்னிரக்கத்திலேயே சென்று முடியும் என்பதை அவன் நன்கறிவான். அழுது கண்ணீர்வடிய அவன் துயில்கிறான். அதே தன்னிரக்கம் ஊறித்தேங்கிய உள்ளத்துடன் விழித்தெழுகிறான்.” குண்டாசி உடனே சிரித்தான். “தந்தையே, நான் அடிவாங்கி அழுது துயின்றேன் என்றால் விழித்தெழுகையில் ஒரு மெல்லிய நிறைவை உணர்வேன். நான் செய்தவற்றுக்குரிய தண்டனையையும் முன்னரே பெற்றுவிட்டேன் அல்ல்வா?”

“நான் குடிப்பவர்களை எப்போதும் பார்த்துவருகிறேன்” என்றார் விதுரர். “ஒவ்வொரு போருக்குப்பின்னரும் குடிவெறியர்கள் கூடிவிடுவார்கள். போரற்ற வெறுமை நிலையிலும் குடிவெறியர்கள் உருவாகிறார்கள். பாரதவர்ஷம் அவர்களிடம் கருணை காட்டுவதில்லை. குடி மீறிப்போன வீரர்கள் உடனடியாக படைக்கலங்கள் பிடுங்கப்பட்டு துரத்தப்படுகிறார்கள். வைசியர்களும் சூத்திரர்களும் தொழில்களில் இருந்து அகற்றப்படுகிறார்கள். அவர்கள் பின்னர் தனிச்சமூகமாக மாறுகிறார்கள். நகரின் மானுடக்குப்பைகளாக வாழ்ந்து விரைவிலேயே செத்துவிடுகிறார்கள். பாரதவர்ஷத்தின் அத்தனை நகரங்களிலும் அடித்தளங்களில் குடிகாரர்கள் நிறைந்திருக்கிறார்கள். நகரம் விரிவாகும்தோறும் அவர்களும் பெருகுகிறார்கள். ஆம், குப்பைகள், கழிவுப்பொருட்கள்… வேறுவழியே இல்லை.”

குண்டாசி “குடிகாரர்கள் சமூகம் அல்ல தந்தையே, அவர்கள் ஒவ்வொருவரும் தனியர்கள். ஏனென்றால் குடிக்காதவர்களுக்கு குடிகாரர்களின் உலகம் தெரியாது. குடிப்பவர்கள் பிறரைப்பற்றி நினைப்பதில்லை” என்றான். விதுரர் சிரித்து “நமது சமூகங்கள் போரையும் உழைப்பையும் மையமாக்கியவை மைந்தா. அவற்றில் இருந்து விலகியவனை அழித்தபடிதான் அவை மேலே செல்லமுடியும்” என்றார். குண்டாசி மீண்டும் பெருமூச்சு விட்டபடி அமைதியானான்.

விதுரர் அவனை ஓரக்கண்ணால் நோக்கிக்கொண்டிருந்தார். அவன் உடலில் ஒரு மெல்லிய நடுக்கம் இருந்துகொண்டிருந்தது. உலர்ந்த உதடுகளை அடிக்கடி நாவால் நக்கியபடி முகத்தில் ஏதோ ஊர்ந்து செல்வதுபோல கன்னங்களையும் மூக்கையும் காதுகளையும் நடுங்கும் விரல்களால் வருடியபடி மறுகணம் எழுந்து செல்லப்போகிறவன் போல அமர்ந்திருந்தான். அவன் உண்மையிலேயே மீண்டுவிட்டானா? மீளமுடியுமா?

குண்டாசி “தந்தையே, நான் உண்மையிலேயே மீண்டுவிட்டேனா?” என்றான். விதுரர் திடுக்கிட்டு “இது என்ன வினா? ஐயமிருந்தால் ஆடியில் பார். உன் முகமும் கண்களும் எல்லாம் மாறியிருக்கின்றன. மட்கிய மரம் முளைவிட்டெழுவதைப்போல நீ உயிர்கொண்டுவிட்டாய் என்கிறார்கள் அரண்மனையிலுள்ள அனைவரும். இன்னும் சில நாட்களில் நீ முழுமையாகவே மீண்டு விடுவாய்” என்றார். குண்டாசி சிரித்து “நீங்கள் திடுக்கிடுவதைக் கண்டேன் தந்தையே” என்றான்.

விதுரர் அவன் தலைமேல் கை வைத்து “ஆம், என் அகம் ஏங்குகிறது. ஏனென்றால் உன்னை மண்ணில் வந்த தேவருலகக் குழந்தைபோல பார்த்தவன் நான். கௌரவர்களிலும் பாண்டவர்களிலும் நான் உனக்களித்த முத்தங்களை எவருக்குமே அளித்ததில்லை” என்றார். அவர் கண்களில் கண்ணீர் நிறைந்தது. “உனக்காக தனிமையில் நான் விட்ட கண்ணீரை உன் அன்னையும் விட்டிருக்க மாட்டார்.” குண்டாசி கைநீட்டி அவரது பாதத்தை தொட்டான். “தந்தையே, இது தங்களுக்காக. இனி இல்லை…”

விதுரர் ”ஆனால் இன்றும் நீ குடித்தாய்” என்றார். “ஆம், குடிக்காமலிருக்க முடியவில்லை. சற்று குடித்தேன். ஓரிரு மிடறு. அவ்வளவுதான். மீண்டுவிடுவேன் தந்தையே. உறுதியாக மீண்டுவிடுவேன்” என்றான் குண்டாசி. “நான் மீள்வதும் வாழ்வதும் என்னிடமில்லை. அது அங்கே காம்பில்யத்தில் நாளை நடப்பதில் இருக்கிறது. அவர்களுக்குத் தெரியும் என்ன நிகழ்ந்தது என்று. நாளை அவர்கள் என்னைக் கண்டதும்…” குண்டாசி தொழுவது போல மார்பில் கைகளை வைத்துக்கொண்டான். “நான் சென்று அவர்களின் காலடியில் விழுந்துவிடுவேன். எந்த அவையாக இருந்தாலும். இந்நகரே சூழ்ந்திருந்தாலும்… ஆம். அது மட்டுமே நான் செய்யக்கூடுவது.”

“தருமனின் ஓலையைப்பற்றி சொன்னேனே?” என்றார் விதுரர். “உன்னை அவன் அள்ளி தன் நெஞ்சோடு அணைத்துக்கொள்வான்… ஐயமே இல்லை.” குண்டாசி, “அது எனக்கு வியப்பூட்டவில்லை தந்தையே. அவர் அவ்வாறுதான் செய்யமுடியும். அர்ஜுனரும் நகுல சகதேவர்களும்கூட என்னை ஏற்பார்கள். நான்…” அவனால் பேசமுடியவில்லை. மூச்சு அடைக்க சிலகணங்கள் தவித்தபின் “மூத்தவர் பீமன் என்னை ஏற்கவேண்டும்… அவர் ஏற்காவிட்டால் என்னை நான் ஏற்கமுடியாது” என்றான்.

“அவன் ஏற்காமலிருக்க மாட்டான். அவர்கள் நால்வருமே மூத்தவனின் குரல் அன்றி வேறு சிந்தை அற்றவர்கள்” என்றார் விதுரர். “ஏற்பார். அவரது சொல்லும் சித்தமும் ஏற்கும். ஏனென்றால் அது மூத்தவரின் ஆணை. தந்தையே, அவரது தோள்களும் கரங்களும் ஏற்கவேண்டும். அவரது உடல் என்னை ஏற்கவேண்டும். அதை அவர் என்னை தொடும்போதே நான் உணர்ந்துகொள்வேன்… அதன்பின்னர்தான் நான் கள்மயக்கில்லாமல் துயில்வேன்.”

“மைந்தர் உள்ளங்களில் மூதாதையர் வந்தமரும் கணங்கள் உண்டு மைந்தா. மூதாதையரை வேண்டிக்கொள். நாம் அவர்களின் குருதி. அவர்களின் கனவுகளின் நுனி. அவர்கள் விண்ணுலகில் இருந்து நம்மை கனிந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை அவர்கள் கைவிட மாட்டார்கள்” என்றார் விதுரர். “விசித்திரவீரியரைப் பற்றி இன்னும் சொல்கிறார்கள் சூதர்கள். பெருங்கருணை கொண்ட மாமனிதர். மானுடரின் சிறுமையை முழுதறிந்தபின்னரும் சிரித்துக்கொண்டு கடந்து சென்றவர். அவரது வாழ்த்து உன்னுடனும் என்னுடனும் இருக்கட்டும்…”

குண்டாசி மீண்டும் பெருமூச்சு விட்டான். ”தந்தையே, இந்நாட்களில் ஒருமுறை விசித்திரவீரியரை எண்ணிக்கொண்டேன். அங்கே குஹ்யமானசம் என்னும் குளத்தின் அருகே குடிலில் வாழும் ஸ்தானகமுனிவர் விசித்திரவீரியரின் தோழர் என்றார்கள். அவரைக் காண்பதற்காக சென்றேன். கூரை விலகிப் பறந்த சிறுகுடிலில் சுள்ளிக்கட்டு போல ஒட்டிச்சுருங்கிய உடலுடன் அமர்ந்திருந்தார். எரியும் விழிகள் மட்டும் இல்லையேல் இறந்த உடலென்றே சொல்லிவிடலாம். அவரை வணங்கி காலடியில் அமர்ந்தேன். அவர் என்னிடம் ஏதோ சொல்லவிருக்கிறார் என்று எதிர்பார்த்தேன்.”

“அவர் விசித்திரவீரியரிடம் இடைவெளியில்லாமல் பேசிக்கொண்டிருந்தவர் என்கிறார்கள். அதன்பின் பேசவே இல்லை. இப்போது இரண்டு தலைமுறைக் காலமாகிறது” என்று விதுரர் சொன்னார். குண்டாசி “ஆனால் அவர் என் கனவில் வந்தார். சிரித்துக்கொண்டே இருந்தார். கண்களில் நீர் வழிய உடல் அதிர சிரித்துக்கொண்டிருந்த அவரைக் கண்டதும் நான் விழித்துக்கொண்டேன். நானும் சிரித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். அதன்பின் நானும் சிரிக்கத் தொடங்கினேன்” என்றான். விதுரர் மீண்டும் அவன் தலையைத் தொட்டு “அது விசித்திரவீரியரின் நகைப்பு. அது உனக்கு என்றும் ஒளியாக உடனிருக்கட்டும் மைந்தா” என்றார்.

காம்பில்யத்தின் கோட்டைவாயிலில் முதற்சாமத்தின் சங்கு ஒலித்தது. பெருமுரசம் ஒருமுறை முழங்கி அமைந்தது. “இந்நகரம் இன்று துயிலாது” என்றான் குண்டாசி. “அதன் நினைவில் என்றும் வாழப்போகும் நாள் அல்லவா?” விதுரர் “மைந்தா, நகரங்கள் மானுடரைவிட நீண்ட வாழ்நாள் கொண்டவை. அவற்றுக்கு சக்ரவர்த்திகள்கூட கங்கைக்கு குமிழிகளைப் போலத்தான்” என்றார். பந்த வெளிச்சத்தில் நிழல்கள் நீண்டு வானிலெழுந்து ஆடிக்கொண்டிருந்தன.

“தந்தையே, நீங்கள் பாண்டவர்களை நகருக்கு அழைத்துவந்தபின் என்ன நிகழும்?” என்றான் குண்டாசி. ”உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை மைந்தா. மணிமுடியை துறப்பதாக தருமன் எழுதியிருக்கிறான். ஆனால் அது அவன் அன்னையின் முடிவென்று தோன்றவில்லை. அவ்வாறு அவன் மணிமுடிதுறந்தாலும் அரசர் அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அஸ்தினபுரிக்கு தருமனே அரசன் என்றே அவர் சொல்கிறார். நாட்டை அளிக்க துரியோதனன் ஒப்பமாட்டான். சகுனியும் கணிகரும் ஒப்பமாட்டார்கள்.”

சிலகணங்களுக்குப்பின் “நாட்டை இரு பகுதிகளாகப் பிரிப்பது அன்றி வேறு வழியே தெரியவில்லை. அதை அரசர் ஏற்றுக் கொண்டாரென்றால் அனைத்தும் சின்னாட்களில் முறையமைந்துவிடும் என நினைக்கிறேன்” என்றார் விதுரர். குண்டாசி “இளையோனாகப் பிறந்தமை பெரும் வரம் என உணர்கிறேன் தந்தையே. சுமைகள் இல்லை. கடமைகள் மட்டுமே உள்ளன. ஏதேனும் ஒரு போரில் மூத்தவருக்காக தலையுடைந்து மூளைசிதறி செத்து விழுந்தால்போதும். வீரசொர்க்கம். முழுமை…” அவன் சிரித்ததை சினத்துடன் திரும்பிப்பார்த்த விதுரர் “என்ன பேச்சு இது… மூடு வாயை” என்றார்.

குண்டாசி மேலும் சிரித்தபடி எழுந்து கீழே செல்ல திரும்பினான். “மீண்டும் குடிப்பதற்கா?” என்றார் விதுரர். “என்னை பொறுத்தருளுங்கள் தந்தையே. என் உடலுக்குள் இருக்கும் பேய் இனியும் காத்திருக்காது…” என்றபின் அவன் படிகளில் இறங்கினான். “வேண்டாம் மைந்தா” என்றார் விதுரர். “ஒரு மிடறு. சற்றே துயிலும் வரை… ஒரே ஒரு மிடறு” என்றான் குண்டாசி படிகளில் இறங்கியபடி. விதுரர் பெருமூச்சுடன் உடலை தளர்த்திகொண்டார்.

அவர் சற்றுநேரம் அமர்ந்தபடியே துயின்றிருக்கவேண்டும். போர்முரசின் ஒலியும் படைக்கூச்சல்களும் கேட்டு விழித்துக்கொண்டார். கொலைதிகழ் பெருங்களத்தில் குருதியாடியபடி சென்றுகொண்டே இருந்த கனவை நினைத்து வாயைத் துடைத்துக்கொண்டு எழுந்தார். வாய்திறந்து நீர்க்காற்றில் துயின்றிருந்தமையால் தொண்டை உலர்ந்து தோலால் ஆனதுபோலிருந்தது. அவர் படிகளின் வழியாக இறங்கிய ஒலி கேட்டு ஓடிவந்த சேவகன் “விடியலுக்கான முரசு அது அமைச்சரே. முதற்கதிர் எழும்போது நமது அணிப்படகுகள் நகரணையவேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். இளைய அரசர் சத்யஜித்தும் பட்டத்து இளவரசர் சித்ரகேதுவும் துறைக்கு வந்து நம்மை வரவேற்கிறார்கள்” என்றான்.

விதுரர் “குண்டாசியை எழுப்பு” என்றபடி நீராடச்சென்றார். நீராடி புதுப்பட்டாடையும் வைரஅணிகளும் பொற்பிடி வைத்த உடைவாளுமாக அவர் படகுமுகப்புக்கு வந்தபோது முழுதணிக்கோலத்தில் குண்டாசியும் வந்துவிட்டிருந்தான். அவன் காதுகளில் இரு விண்மீன்கள் என நீலநிற வைரத்துளிகள் ஒளிதிரும்ப அசைந்தன. விதுரர் கைகாட்ட படகிலிருந்து எரியம்பு ஒன்று எழுந்தது. காம்பில்யத்தில் இருந்து எரியம்பு எழுந்ததும் படகுகள் பாய்களை விரித்தன. முகில்சூடிய மலைமுடிகள் போல அவை நீரில் எழுந்து துறைமேடை நோக்கி சென்றன.

படகுகள் அணுகியபோது காம்பில்யத்தின் கோட்டையின் ஏழு காவல்மாடங்களிலும் நின்றிருந்த வீரர்கள் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியையும் பாஞ்சாலத்தின் விற்கொடியையும் பறக்கவிட்டனர். துறைமேடை முழுக்க நூற்றுக்கணக்கான மூங்கில்கள் நடப்பட்டு அவை தளிரிலைகளாலும் மலர்களாலும் மூடி அணிசெய்யப்பட்டிருந்தன. தளிரும் மலரும் கலந்த தோரணங்கள் செறிவாகக் கட்டப்பட்டு துறைமேடையே பூத்த காடாக மாறிவிட்டிருந்தது. நான்கு வரிசைகளாக மங்கலவாத்தியங்கள் ஏந்திய சூதர்கள் நின்றனர். அவர்களின் நடுவே எண்மங்கலத் தாலங்களுடன் அணிப்பரத்தையர் நிற்க அவர்களைச் சூழ்ந்து மின்னும் கவசங்கள் அணிந்த படைவீரர்கள் ஒளிவிட்ட வாள்களும் வேல்களுமாக நின்றனர்.

துறைமுகப்பில் வேறு கலங்களேதும் நிற்கலாகாதென்று ஆணையிருந்தமையால் அஸ்தினபுரியின் முதற்கலம் கரையணைந்தபோது அது நீராடும் யானையின் அடிவயிற்றை முட்டும் பரல்மீன் எனத் தோன்றியது. துறையில் இருந்து பசுவின் நாக்கு போல நீண்டு வந்த மரப்பாதை மரக்கலத்தை தொட்டதும் கலத்திலிருந்த மங்கலவாத்தியமேந்திய சூதர்கள் இசைத்தபடி நிரைவகுத்து இறங்கிவந்தனர். கரையில் நின்றிருந்த சூதர்களும் இசைக்கத் தொடங்க துறைமேடையே பெரும் இசைக்கருவி என முழங்கியது. இரண்டாவது படகிலிருந்து அஸ்தினபுரியின் அணிப்பரத்தையர் இறங்க அவர்களை காம்பில்யத்தின் அணிப்பரத்தையர் எதிர்கொண்டு மங்கலம் காட்டி வரவேற்றனர்.

விதுரரின் பெரும்படகு கரையணைந்தபோது கோட்டைமேல் பெருமுரசு முழங்கியது. கோட்டைவாயிலைக் கடந்து உள்ளிருந்து அரசகுலத்து அணிநிரை துறைமுகப்பு நோக்கி வந்தது. முகப்பில் ஏழு சூதர்கள் மங்கலம் முழக்கி வர தொடர்ந்து தாலங்களுடன் ஏழு அணிப்பரத்தையர் வந்தனர். முகபடாமிட்ட பட்டத்துயானையும் செவிகளில் வைரங்கள் சுடரும் அரசப்புரவியும் பொற்கவசமிட்ட கொம்புகள் கொண்ட வெள்ளெருதும் வந்தன. அவற்றுக்குப்பின்னால் இளையமன்னர் சத்யஜித்தும் இளவரசர் சித்ரகேதுவும் உருவிய உடைவாளுடன் நடந்து வந்தனர். பாஞ்சாலத்தின் விற்கொடி துவண்ட நான்கு அணித்தேர்கள் அவர்களை தொடர்ந்து வந்தன.

விதுரர் படகிலிருந்து மரப்பாதை வழியாக இறங்கி வந்தபோது அணிப்பரத்தையர் அவர்மேல் மலர்களையும் மஞ்சளரிசியையும் தூவி வாழ்த்துக்கூவினர். மங்கல இசையின் ஒலியில் காட்சிகளே அதிர்ந்தன. சத்யஜித்தும் சித்ரகேதுவும் அருகே வந்து அவர்முன் வாள்களைத் தாழ்த்தி தலைவணங்கி முகமன் கூறி வரவேற்றனர். அவர் தலைவணங்கி அஸ்தினபுரியின் அரசரின் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர்கள் முன்னால் வந்து குண்டாசியை வாழ்த்தி வரவேற்றனர்.

சத்யஜித்தும் சித்ரகேதுவும் விதுரரை வரவேற்று கொண்டு சென்று ரதங்களில் ஏறச்செய்தனர். அவற்றில் அஸ்தினபுரியின் கொடியும் ஏற்றப்பட்டது. அவர்கள் நின்றுகொண்டு கைகூப்பி வாழ்த்துக்களை ஏற்றபடி நகரத்தெருக்கள் வழியாக சென்றனர். முன்னால் பட்டத்துயானையும் அணிப்புரவியும் களிற்றெருதும் சென்றன. பின்னால் இளைய அரசரும் இளவரசரும் வந்தனர். மலர்மாலைகளும் தளிர்த் தோரணங்களும் கொடிகளும் பாவட்டாக்களும் மலர்வளைவுகளுமாக அணிக்கோலம் பூண்டிருந்த நகரின் இரு மருங்கிலும் மாளிகைகளின் உப்பரிகைகளிலும் நின்றிருந்த மக்கள் வாழ்த்துரை கூவி மலர்களை அள்ளி அவர்கள் மேல் வீசினர்.

VENMURASU_PIRAYAGAI_EPI_90
ஓவியம்: ஷண்முகவேல்

மலர்மழை மஞ்சளரிசிமழை வழியாக விதுரர் சென்றார். அவர் சென்ற வழியெங்கும் காவல்மாடங்களில் இருந்து அணிமுரசுகள் ஒலித்தன. அஸ்தினபுரியின் சீர்வரிசைகளை கொண்டுவந்த பன்னிரு வண்டிகள் அவர்களைத் தொடர்ந்து வந்தன. அரண்மனைக் கோட்டை வாயிலை அடைந்தபோது அகம்படியினரும் அணிநிரையினரும் சூழ துருபதனே வந்து அவரை அழைத்து உள்ளே கொண்டு சென்றார். அரண்மனையின் பெருமுற்றத்தை அடைந்ததும் அரசகுலத்துப்பெண்டிர் நால்வர் வந்து விதுரரை மஞ்சள் திலகமிட்டு வரவேற்றனர்.

அரண்மனைக்குள் சென்றதும் துருபதன் வணங்கி “தங்கள் வருகை அஸ்தினபுரியின் அரசரே நேரில் வந்ததற்கு நிகர் அமைச்சரே. சற்று ஓய்வெடுத்து உடைமாற்றி வருக. சுடரொளி நிறம்மாறும் நேரத்தில் மணநிகழ்வு என நிமித்திகர் நேரம் வகுத்தளித்திருக்கிறார்கள்” என்றார். விதுரர் ”அவ்வண்ணமே ஆகுக” என்றார்.

“இம்மணநிகழ்வில் அரசர்கள் எவரும் பங்கெடுக்கவில்லை அமைச்சரே” என்றார் துருபதன். “அனைவரும் நேற்று முன்தினமே அகன்றுவிட்டனர். அவர்களுக்கு இம்மணநிகழ்வு உகந்ததாக இல்லை என்றனர்” என்றபின் புன்னகைத்து “ஆனால் அதுவல்ல உண்மை. மகதமன்னர் ஜராசந்தர் சென்றபின் அவரது சமந்தர்களும் துணைமன்னர்களும் இருக்க விரும்பவில்லை. அஸ்தினபுரியின் இளவரசர் சென்றபின் அவர்களின் மன்னர்குழாமும் சென்றுவிட்டனர். இங்கிருப்பவர்கள் எங்கள் அருகமைந்த சில சில சிறு மன்னர்கள்மட்டுமே. உசிநாரர்களுக்கும் காளகூடர்களுக்கும் குலிந்தர்களுக்கும் வேறு வழியில்லை. என் எல்லைப்புறத்து அரசர்கள்…” என்றார்.

“அஸ்தினபுரி பாண்டவர்களை ஏற்கிறதா என்ற ஐயம் அரசர்களுக்கு இருப்பது இயல்பே. எந்த அரசகுலத்து மணநிகழ்வும் அரசியல்கூட்டுதான் என அரசர்கள் அறிவார்கள்” என்றார் விதுரர். “இந்நிகழ்வுக்குப்பின் பாண்டவர்கள் அஸ்தினபுரியில் நகர்நுழைகையில் அந்த அச்சம் விலகும்.” துருபதனின் விழிகள் மாறுபட்டன. “இங்கிருந்து அவர்களை தாங்கள் அஸ்தினபுரிக்கு அழைத்துச்செல்லவிருப்பதாக செய்தி வந்தது. அது எனக்கு உவகை அளித்தது. ஆனால் தருமன் அங்கே பட்டத்து இளவரசராகத்தான் நகர்நுழைகிறாரா என அறிய விரும்பினேன்” என்றார்.

“ஆம், பட்டத்து இளவரசராகத்தான். அதுவே அரசரின் ஆணை” என்றார் விதுரர். துருபதன் முகம் மலர்ந்து “அப்படித்தான் நானும் எண்ணினேன். அஸ்தினபுரியின் அரசர் மதவேழமென அகம் விரிந்த மாமனிதர் என்றனர். சில ஐயங்கள் நிலவின. அவை வெறும் வீண்சொற்கள் என நான் அறிவேன். ஆயினும் நான் வினவ எண்ணினேன், அது என் கடமை என்பதனால்…” என்றார். விதுரர் புன்னகைத்து “ஐயங்கள் இயல்பே. அவர்கள் காடுறைந்தமை எழுப்பிய வினாக்கள் அவை. அவற்றை அவர்களின் நகர்நுழைவு முழுமையாகவே அகற்றிவிடும்” என்றார்.

“அவ்வாறே ஆகுக” என்றபின் துருபதன் விடைபெற்றார். அவர் செல்வதை நோக்கியபின் அறைக்கதவை சாற்றிய குண்டாசி “அவர் ஒன்றிலேயே உறுதிகொண்டுவிட்டார் தந்தையே. தன் மகள் பேரரசியாகவேண்டும் என்பதையன்றி எதையும் அவர் எண்ணவில்லை” என்றான். விதுரர் பெருமூச்சுவிட்டு “அவரைப்பற்றி சூதர்கள் சொல்லும் கதைகள் அச்சமூட்டுகின்றன. ஒன்றுக்காக மறுபிறப்பு கொள்ளும் மானுடர் அதற்காக மட்டுமே வாழ்கிறார்கள். அவர்கள் வில்லில் இருந்து கிளம்பிவிட்ட அம்புகள்” என்றார்.

கதவை மெல்லத்திறந்த சேவகன் “பாண்டவர்கள்” என்று அறிவித்தான். குண்டாசி தீபட்டவனைப்போல எழுந்து பின்னால் விலகி சுவர் அருகே சென்று இரு கைகளையும் சுவரில் ஒட்டிக்கொண்டு நின்றான். வலிப்பு கொள்ளப்போகிறவனைப்போல முகமும் உடலும் இழுபட்டு கழுத்துத்தசைகள் இறுகின. அவனை திரும்பி நோக்கியபின் விதுரர் வாயிலை நோக்க தருமன் வந்து கதவைப்பற்றியபடி நின்றான். உணர்ச்சிகளை வெல்ல உதடுகளை கடித்திருந்தான்.

விதுரர் அவனைக் கண்டதும் அனைத்தையும் மறந்தார். அவன் இளமையை கடந்து விட்டிருப்பதாகத் தோன்றியது. நெற்றி மேலேறி மூக்கு சற்று புடைத்து கழுத்துத் தசைகள் மெல்லத் தளர்ந்து இன்னொருவன் எனத் தோன்றினான். அவன் விழிகள் மேலும் கனிந்து விட்டிருந்தன. அவனை நோக்கி கைநீட்டினார். அவனை அள்ளி மார்போடணைக்க எண்ணிய உள்ளம் மறுகணமே தழைந்து அவன் மடியில் தலைவைத்துக்கொள்ள விழைந்தது. ஏன் என மறுகணமே வியந்தது. அவனுடையவை அன்னையின் விழிகள். ஆம், அதனால்தான். ஆனால் ஆண்மகனில் எப்படி வந்தது அன்னைநோக்கு?

தருமன் அருகே வந்து குனிந்து விதுரரின் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் அவனை அள்ளி தன் தோளுடன் அணைத்துக்கொண்டார். அத்தனை தடைகளையும் கடந்து அவரிடமிருந்து அழுகை எழுந்தது. தருமனின் தோள்களில் தன் முகத்தை புதைத்தபடி அவர் கண்ணீர் விட்டார். வெம்மையுடன் துளிகள் அவன் தோளில் விழுந்து வழிந்தன. கால்கள் தளர்ந்து அவன் மேலேயே தன் எடையை முழுக்க சுமத்திக்கொண்டார்.

அவன் தோலின் மணத்தை அறிந்தார். மடியில் தூக்கிவைத்து அவர் கொஞ்சிய அந்த இளமைந்தனின் வாசனை. இத்தனை வளர்ந்தபின்னரும் அது எஞ்சியிருக்கிறதா என்ன? உடலில் அல்ல. உள்ளத்திலும் அல்ல. அவையெல்லாம் மாறிவிட்டன. இது ஆழத்தின் வாசனை. கருவறைவிட்டு மானுடன் கொண்டுவருவது. இறந்தபின் விண்ணுலகு சென்றால் மூதாதையர் இப்படித்தான் தம் மைந்தர்களை அறிந்துகொள்வார்கள். அவனை இறுக அணைக்கவே அவர் நெஞ்சு எழுந்தது. ஆனால் உடல் துவண்டு அவன் மேல் ஆடையென கிடந்தது.

தருமன் அவரை மெல்ல விலக்கி திரும்பிப்பார்த்தான். அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் வாயிலில் நின்றிருந்தார்கள். தருமன் அவர்களைப் பார்த்து தலையசைக்க அவர்கள் வந்து விதுரரை வணங்கினர். விதுரர் கண்ணீர் தாடியில் வழிந்து சொட்ட அவர்களை நோக்கி கைவிரித்தார். ஒவ்வொருவரும் வளர்ந்து மாறியிருந்தனர். தனித்து வேரூன்றி கிளைவிரித்த மரங்களாகிவிட்டிருந்தனர். மைந்தர் வளர்ந்திருப்பது ஏன் அத்தனை உவகையை அளிக்கிறது! ஏன் அத்தனை துயரத்தையும் உடன் சேர்த்துக்கொள்கிறது!

விதுரர் அவர்களை சேர்த்து அணைத்துக்கொண்டார். அர்ஜுனனின் தோள்களை மாறி மாறி முத்தமிட்டார். நகுலனையும் சகதேவனையும் இரு கைகளாலும் தலையைப்பற்றி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு குழல்கற்றைகளை முகர்ந்தார். அவர்களின் கன்னங்களை வருடினார். இளமைந்தர் முகங்களுக்கே உரிய எண்ணைப்பிசுக்கு. சிறிய பருக்கள். கையை உறுத்தும் மென்மயிர் பரவல். அவர்களின் தோள்தசைகள் இறுகி விட்டிருந்தன. அவர்களின் கையிடுக்கில் இருந்து புதுப்புனுகின் வாசனை எழுந்தது. அந்த வாசனை அவர்கள் தலைமுடியில் இருந்தது. தோளிலும் விலாவிலும் இருந்தது.

அவர்களின் உடல்கள் மட்டுமே அவர் முன் இருந்தன. நறுமணம் மிக்க நீரோடையென அவரை அவை சுழித்துச்சென்றன. ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு வாசனை. தருமனின் உடலில் மாவுவாசனை. அர்ஜுனன் உடலில் கந்தகமண்ணின் வாசனை. நகுலனில் வாழைமட்டையின் வாசனை. சகதேவனில் தாழைமடல் வாசனை. முகர்ந்து முகர்ந்து தீராத வாசனைகள். வாசனைகள் வழியாக அவர்களை அவர் கைக்குழந்தைகளாக மீட்டுக்கொண்டார். சிந்தனையில்லாமல் நேற்றும் நாளையும் இல்லாமல் அவர்களுடனிருந்தார். எளிய விலங்கு போல.

பீமன் வந்து வாயிலில் நின்ற ஓசைகேட்டு அவர் மீண்டு வந்து நோக்கினார். அவன் குண்டாசியை கண்களைச் சுருக்கிப் பார்த்தான். பிறர் அவனை அடையாளம் காணவேயில்லை என்று விதுரர் உணர்ந்தார். ”இவன்…” என அவர் சொல்ல முற்படுவதற்குள்ளேயே பீமன் அடையாளம் கண்டு கொண்டு இரண்டு காலடிகளில் அவனை நெருங்கி கன்னத்தில் ஓங்கி அறைந்தான். குண்டாசி அலறியபடி சுவர்மூலை நோக்கி விழுந்தபோது அவன் கழுத்தைப்பற்றித் தூக்கி சுவரோடு சாய்த்து “குடிக்கிறாயா? குடிக்கிறாய் அல்லவா? மூடா” என்று கிட்டித்தபற்களுடன் கூவினான். “சொல்… குடிக்கிறாயா?”

குண்டாசி திணறியபடி இருகைகளாலும் அவன் கையை பற்றியபடி “இல்லை மூத்தவரே… இல்லை மூத்தவரே!” என்றான். பீமன் பற்களை இறுக்கி “இனி ஒரு சொட்டு உன் வாயில் விழுந்ததென்றால் அன்றே உன்னைக் கொன்று கங்கையில் வீசுவேன்” என்றான். “இல்லை மூத்தவரே… இனி குடிக்கமாட்டேன்” என்றான் குண்டாசி. பீமனின் கை தளர அவன் துவண்டு விழப்போனான். பீமன் அவனை அள்ளி தன்னுடன் சேர்த்துக்கொண்டு “மூடா, மூடா” என்றான். தன் பெரிய கைகளால் அவன் தோள்களை மாறி மாறி அடித்தபின் மார்புடன் இறுக்கிக்கொண்டான்.

வாயிலில் வந்து நின்ற சேவகன் “மணநிகழ்வுகளுக்கான நேரம் நெருங்குகிறது. அணிச்சேவகர்கள் காத்திருக்கிறார்கள்” என்றான். விதுரர் புன்னகையுடன் நகுலனை விலக்கி “செல்க. அணிசெய்து மணமகன்களாக மேடைக்கு வருக” என்றார். அவன் புன்னகையுடன் பார்வையை விலக்கிக் கொண்டான். தருமன் இதழ் கோணலாக புன்னகை செய்து “அனைத்தும் ஒரு நடிப்பு என ஆயிரம் முறை படித்திருக்கிறோம் அமைச்சரே. அதை அறியும் கணங்கள் இப்போதுதான் தொடங்குகின்றன” என்றான்.

அவர்கள் விடைபெற்று கிளம்பினர். பீமன் குண்டாசியை அதுவரை தன் கைகளுக்குள்தான் வைத்திருந்தான். அவனை விலக்கி இரு தோள்களையும் பற்றி குனிந்து நோக்கி “மூடா, இனி குடித்தாயென்றால்…“ என்று சொல்லத் தொடங்க “இல்லை மூத்தவரே” என்றான் குண்டாசி. பீமன் அவன் தோள்களைப் பற்றி மும்முறை உலுக்கிவிட்டு பிடியை விட்டான். திரும்பி விதுரரை வணங்கிவிட்டு வெளியே சென்றான்.

விதுரர் பெருமூச்சுடன் குண்டாசியிடம் “நிறைவடைந்தாய் அல்லவா?” என்றார். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “இதற்குமேல் என்ன?” என்றார் விதுரர் மீண்டும். “தந்தையே, அவரது உள்ளம் என்னை ஒருபோதும் விலக்கவில்லை என அறிந்தேன். அவரது ஆன்மா என்னை முழுமையாக ஏற்றுத்தழுவியது இப்போது… ஆனால்” அவன் விழிகள் சஞ்சலத்துடன் அசைந்தன. “அவர் உடலால் ஆனவர் தந்தையே. அவர் உடல் என்னை ஏற்கவில்லை. அது இனி ஒருபோதும் எங்களை ஏற்காது.”

“என்ன சொல்கிறாய்?” என்று மூச்சடைக்கும் குரலில் கேட்கும்போதே விதுரர் அந்த வெறும்கூற்று உண்மை என எப்படி தன் அகம் எண்ணுகிறதென்றும் வியந்துகொண்டார். “ஆம், அதுதான் உண்மை. அதை என் உடல் அறிந்தது. வெறும் சதைதான். ஆனால் அது அன்னம் அல்லவா? தெய்வம் அல்லவா? அதற்குத்தெரியும்” என்றான் குண்டாசி. பின்பு சிரித்துக்கொண்டு “ஒருநாள் அவர் கையால் என் தலை உடைந்து தெறிக்கும் தந்தையே. சற்று முன் அதை அத்தனை அருகே உணர்ந்தேன்” என்றான்.

“வாயை மூடு…” என்று விதுரர் சீறினார். “மீண்டும் குடிப்பதற்காக இதையெல்லாம் சொல்கிறாய்…” குண்டாசி “இல்லை தந்தையே. இது உண்மை என நீங்களும் அறிவீர்கள்” என்றான். “இந்தக் கணத்தை நோக்கி சிரிக்கக் கற்றுத்தந்த ஸ்தானக முனிவரைத்தான் இப்போது எண்ணிக்கொள்கிறேன்.”

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைபெருமாள் முருகன் – 12 [கடைசியாக]
அடுத்த கட்டுரைமலையாளம் கற்பது