வண்ணக்கடல் நிறைவு

vannakkadal

வெண்முரசு தொடரின் மூன்றாவது நாவலாகிய வண்ணக்கடல் இன்றுடன் முடிகிறது. என் வழக்கம்போல ஒரு புறவயமான வடிவத்தை மட்டுமே முடிவுசெய்தபின் எழுதத் தொடங்கினேன். நான் எழுதுவதென்ன என்பது எழுதும்போதே எனக்கும் தெரியவருவதன் ஈர்ப்பே என்னை எழுதச்செய்தவிசை.

வண்ணக்கடல் என பெயரிட்டபோது இளைய பாண்டவர்கள்-கௌரவர்களின் உலகாக இது வரும் என நினைத்தேன். ஆனால் முதல் பத்து நாட்களுக்குள்ளேயே இதன் திசையும் இலக்கும் வேறு என நானே கண்டுகொண்டேன். மழைப்பாடல் மகாபாரதத்தில் உள்ள பெண்களினூடாகச் சொன்ன நாவல் என்றால் இது புறக்கணிக்கப்பட்டவர்கள், தோற்கடிக்கப்பட்டவர்கள், கடந்து செல்லப்பட்டவர்களின் கதையாக விரிந்தது.

எப்படி அன்னையரின் விழைவும் ஏமாற்றமும் மகாபாரதத்தின் அடிப்படை விசைகளை அமைத்தனவோ அதேபோல புறம்நிற்க நேர்ந்தவர்களின் வஞ்சமும் கண்ணீரும் மகாபாரதத்தின் ஆழத்து அனலாக அமைந்துள்ளன. மகாபாரதத்தின் மையத்தை நெருங்கும் பாதைகளை இவையே அமைக்கின்றன. வண்ணக்கடல் என்ற தலைப்பும் இறுதியில் இயல்பாக பொருந்தி வந்ததை இக்கதை என் ஆழ்மனதில் எத்தனைதூரம் சென்றிருக்கிறது என்பதற்கான சான்றாகவே காண்கிறேன்.

எழுதும்தோறும் விரிந்து வந்த இக்கதை எனக்களித்த பெரும்கிளர்ச்சியே இதை எழுதியதனால் நான் அடைந்த ‘ஊதியம்’. அது மிகப்பெரியது. குறிப்பாக இதன் நிலக்காட்சிகள். பெரும்பாலும் நான் நேரில்கண்ட நிலங்கள் அவை. அவை என்னுள் எத்தகைய கனவாக நிறைந்துள்ளன என்று எழுதும்போதே அறிந்தேன்.

இதை எழுதும்போது பிழைதிருத்தி உதவிய ஸ்ரீனிவாசன்-சுதா தம்பதியினருக்கு நன்றி. ஓவியங்கள் வழியாக என் கனவை எனக்கே காட்டிய ஷண்முகவேலுக்கும் உதவிய ஏ.வி. மணிகண்டனுக்கும் நன்றி.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 71
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 13