‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 68

பகுதி பத்து : மண்நகரம்

[ 2 ]

அதிகாலையிலேயே நகரை சுற்றிவிட்டு அரண்மனையை ஒட்டிய களமுற்றத்துக்கு வந்த துச்சாதனன் துரியோதனனிடம் பணிந்து “களம் அமைந்துவிட்டது மூத்தவரே” என்றான். “நாளை படைக்கலப்பயிற்சிக்கு நாள்குறித்திருக்கிறார் பிதாமகர்” என்றான். “இப்போது அங்கே கொற்றவையை பதிட்டை செய்து குருதிப்பலி கொடுத்து களபூசை செய்துகொண்டிருக்கிறார்கள்.”

கதைப்பயிற்சியை நிறுத்தி மெல்லிய மூச்சுடன் “நாளைக்கா?” என்று துரியோதனன் கேட்டான். “ஆம், விழாவில் இந்நகரத்து மக்கள் மட்டும் கலந்துகொண்டால்போதும் என பிதாமகர் எண்ணுகிறார் என்றார்கள். முன்னரே நாள் குறித்தால் செய்திபரவி வேற்றுநாட்டவர் குவிந்துவிடுவார்கள் என்றாராம்.” துரியோதனன் புன்னகையுடன் “சூதர்களும் ஒற்றர்களும் நிறைந்த இந்நகரில் பாரதவர்ஷத்தின் அனைத்து தேசத்தின் விழிகளும் சூழ்ந்துள்ளன” என்றான்.

துச்சாதனன் புன்னகைசெய்து “இந்நிகழ்வில் விரும்பத்தகாதது எதுவோ நிகழுமென எண்ணுகிறார் பிதாமகர் என்று தோன்றுகிறது” என்றான். மீண்டும் கதாயுதத்தை எடுத்தபடி துரியோதனன் “ம்?” என்றான். “இந்தச் சிலவருடப் பயிற்சிகள் முடிவதற்குள்ளாகவே அனைத்து பகைமைகளும் முனைகொண்டுவிட்டன அல்லவா?” என்றான் துச்சாதனன். துரியோதனனின் கனத்த தசைகள் நெளிவதை எப்போதும்போல பெருவிருப்புடன் நோக்கியபடி “அஸ்தினபுரியில் என்றும் பேசப்படும் பேச்சென்பது நமது சினங்களும் வஞ்சங்களும் மட்டுமே” என்றான்.

துரியோதனன் ஒன்றும் சொல்லாமல் கதாயுதத்தை சுழற்றிக்கொண்டிருந்தான். “நான் இந்திரவிழா முற்றத்தில் களத்தைச் சென்று நோக்கினேன்” என்று சொன்ன துச்சாதனன் சற்று தயங்கி “வேங்கையின் வாய் போன்றிருக்கிறது அந்த மண்ணின் நிறம்” என்றான். கதாயுதத்தைc சுழற்றிய துரியோதனன் அதை நிலத்தில் வைத்த உலோக ஒலி கேட்டது. அவன் திரும்ப அதைத்தூக்கியபடி புன்னகைசெய்தான்.

பயிற்சி முடிந்து நீராடி வெண்பட்டாடை அணிந்து துரியோதனன் அரண்மனைக்கு வெளியே வரும்போது நகரம் பெருமுரசு போல முழங்கிக்கொண்டிருப்பதைக் கேட்டான். “நிமித்திகர் செய்தியை அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று துச்சாதனன் மெல்லிய குரலில் சொன்னான். “ஆம், முரசொலியைக் கேட்டேன்” என்றான் துரியோதனன். பின்பு முற்றத்தில் இறங்கி கையசைத்து சூதனை வரவழைத்து “எடு ரதத்தை” என்றான்.

வெண்புரவிகளுடன் துரியோதனனின் அரச ரதம் வந்து நின்றதும் ஏறிக்கொண்டு “நகரைச்சுற்றிவா” என்று ஆணையிட்டான். துச்சாதனன் அவனருகே நின்று “களமாடுதல் இங்கே பலமுறை நடந்துள்ளது. இவ்விழாவையும் எளிமையாகவே நிகழ்த்தவேண்டுமென பிதாமகர் எண்ணுகிறார்” என்றான். துரியோதனன் புன்னகையுடன் “அவர் அஞ்சுவது அழைக்கப்படாமலேயே வந்துசேரும் விருந்தாளியை…” என்றான்.

காவல்மாடம் ஒன்றின் கீழே யானைமேல் அமர்ந்த நிமித்திகன் உரத்தகுரலில் செய்தியை அறிவித்துக்கொண்டிருந்தான். அவன் பட்டுத்துணியில் எழுதப்பட்ட திருமுகத்தை வாசித்து முடித்ததும் பெருமுரசம் அதிர்ந்தது. கூடி நின்ற மக்கள் திகைத்தவர்கள் போல சில கணங்கள் சொல்லற்று நின்றனர். பின்பு அவர்களனைவரும் ஒரே குரலில் சேர்ந்துபேசும் ஒலி எழுந்தது. அவர்கள் முகங்கள் எதிலும் மகிழ்வோ களியாட்டமோ இல்லை என்பதை துரியோதனன் கண்டான். விரும்பத்தகாத செய்தி ஒன்றைk கேட்ட நிலைகொள்ளாமையையே வெறித்த விழிகளும் அலையடித்த உடல்களும் சுளித்த முகங்களும் காட்டின.

துரியோதனனின் ரதத்தைக் கண்டதும் கூட்டம் உருகிய மெழுகு உலர்ந்து இறுகுவதுபோல அமைதியடைந்தது. அவர்கள் நெருங்கியபோது அனைவரும் பிரிந்து பரவி தலைவணங்கி நின்றனர். துரியோதனன் நிற்கச்சொல்கிறானா என்று நோக்கியபின் ரதமோட்டி ரதத்தை முன்செலுத்தினான். அக்கூட்டமே அங்கில்லாதது போலிருந்தன துரியோதனனின் பார்வையும் உடலும். எப்போதும் எந்த இடத்திலும் அவ்விடத்துக்கு முற்றிலும் அப்பால் மலைச்சிகரங்கள் போல எழுந்து நிற்பவன் அவன் என துச்சாதனன் வியந்து எண்ணிக்கொள்வதுண்டு.

நகரெங்கும் மக்கள் உப்பரிகைகளிலும் தெருவோரங்களிலும் நின்று பதற்றமடைந்த நாரைக்கூட்டம் போல கைகளை அசைத்து ஓசையிட்டுக்கொண்டிருந்தனர். துரியோதனன் தலையைத் திருப்பாமல் மெல்லியகுரலில் “அங்கே என்ன நடக்கிறது?” என்றான். அவன் நாவும் உடலும் விழிகளும் பேசும் மொழியை அறிந்திருந்த துச்சாதனன் கண்களைத் துழாவி அரசப்பெருவீதியில் இருந்து பிரியும் சிறுவீதியில் ரதம் ஒன்று நிற்பதைக் கண்டான். “தருமன் ரதமிறங்கி மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறான் மூத்தவரே” என்றான்.

துரியோதனன் “அதை நான் அறிவேன். மக்களில் எவர் அவனிடம் கூடுதல் ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான். துச்சாதனன் பார்த்துவிட்டு “மக்கள்…” என்றான். “படைவீரர்கள் விலகி நின்று நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.” துரியோதனன் புன்னகை புரிந்தான். “பொதுமக்களிலும் அவனிடம் பேசிக்கொண்டிருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் முதியவர்கள்” என்றான் துச்சாதனன். “அர்ஜுனன் வந்திருந்தால் இளையவர்களும் கூடியிருப்பார்கள்.”

அவர்கள் வடக்குவாயிலை நோக்கிச் சென்றனர். தொலைவிலேயே அங்கு பாகர்கள் அனைவரும் எதற்காகவோ கூவிச் சிரித்துக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. யாரோ ஒருவன் சிரித்தபடி ஓடிவந்து அவர்களின் ரதத்தைக் கண்டதும் சைகை காட்ட ஓசை அடங்கியது. “இரண்டாவது பாண்டவன் அங்கிருக்கிறான் மூத்தவரே” என்றான் துச்சாதனன். துரியோதனன் ஒன்றும் சொல்லவில்லை. “ஒன்று அடுமனையில். இல்லையேல் யானைக்கொட்டிலில். சூதர்களும் பாகர்களும் சேர்ந்து ஓர் அரசை அமைத்தால் அவனே அரசன்.” துரியோதனன் திரும்பாமலேயே புன்னகை புரிந்தான்.

அவர்களின் ரதம் அணுகியதும் யானைக்கொட்டில்களுக்குப் பொறுப்பாளரான கனகர் ஓடிவந்து ரதமருகே நின்று வணங்கினார். துரியோதனன் அவர் பக்கம் பார்வையைத் திருப்பாமல் அமர்ந்திருக்க துச்சாதனன் “யானைகள் எவையேனும் நோயுற்றிருக்கின்றனவா?” என்றான். “இல்லை இளவரசே… அனைத்தும் நலமாகவே உள்ளன” என்றார் கனகர். “நாளை களத்துக்கு வரும் யானை எவை?” என்றான் துச்சாதனன். “நூறு களிறுகளை பிதாமகர் சுட்டியிருக்கிறார். சாமரகர்ணியும் காலகேயனும் அங்காரகனும் தீர்க்கநாசனும் சுஜாதனும் பட்டமணிந்து வரும் முதற்களிறுகள்” என்றார் கனகர்.

“களமிறங்கப்போகும் களிறுகளுக்கருகே களமிறங்கவிருக்கும் எவரும் செல்லலாகாது” என்றான் துச்சாதனன். கனகரின் உடலில் சிறிய மாறுதல் நிகழ்ந்தது. “ஆணை” என்றார். துச்சாதனன் “உம்” என்று சொல்ல சாரதி ரதத்தைக் கிளப்பினான். ரதம் புழுதிபடிந்த பெரியசாலைக்கு வந்து தெற்கு வாயில் நோக்கித் திரும்பியது. “களத்துக்குச் செல்லவா மூத்தவரே?” என்றான் துச்சாதனன். “வேண்டாம். மாதுலரைப்பார்த்துவருவோம்” என்றான் துரியோதனன். “ஆணை” என்று சொன்ன துச்சாதனன் “ம்” என சாரதிக்கு ஆணையிட்டான்.

துரியோதனன் ரதம் நின்றதும் அதை உப்பரிகையிலேயே கண்டுவிட்ட சகுனி இறங்கி கூடத்துக்கே வந்து கைவிரித்து எதிர்கொண்டு “அறிவிப்பு இன்று வந்துவிடுமென ஒற்றர்கள் சொன்னார்கள். அப்போதுமுதலே நோக்கியிருந்தேன்” என்றார். “நகரைச்சுற்றிவந்தேன்” என்றான் துரியோதனன். சகுனி புன்னகையுடன் “மக்கள் நிலையழிந்திருப்பார்களே?” என்றார். துரியோதனன் ஏறிட்டு நோக்க “சென்ற பதினைந்தாண்டுகளாகவே அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அந்த அச்சம் கூடிக்கூடி வருகிறது. ஏதோ நிகழவிருக்கிறது என்ற அச்சத்தின்மீதுதான் எளிய மக்கள் எப்போதும் அமர்ந்திருக்கிறார்கள்” என்று சொல்லி “வருக” என்று மாடத்துக்கு அழைத்துச்சென்றார்.

உப்பரிகையில் அமர்ந்ததும் அங்கே சகுனி ஏன் எப்போதும் அமர்ந்திருக்கிறார் என்பதை துச்சாதனன் மீண்டும் அறிந்து வியந்துகொண்டான். அங்கிருந்து நோக்கியபோது நகரின் கிழக்கு தெற்குக் கோட்டை முகப்புகளும் மூன்று அரசவீதிகளும் கண்ணுக்குத்தெரிந்தன. சகுனி அமர்ந்தபடி “இத்தனை அச்சத்துக்குப் பிறகும் ஏதும் நிகழாமல் போகுமென்றால் அனைவரும் ஏமாற்றம் கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்று மெல்ல நகைத்தார்.

தேன் கலந்து சுக்கு போட்டுக் குளிரச்செய்த இன்னீரை சேவகன் கொண்டுவந்து வைத்தான். துரியோதனன் “என்ன நிகழுமென எண்ணுகிறீர்கள்?” என்றான். “அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் ஒரு விற்போர் நிகழலாம். ஆனால் அது எப்படி நிகழவேண்டுமென துரோணர் இன்றே வகுத்துவிட்டிருப்பார். அர்ஜுனன் வெல்வான்” என்றார் சகுனி. “உனக்கும் இரண்டாவது பாண்டவனுக்கும் ஒரு கதாயுத்தம் நிகழும். அது நிகர்நிலையில் முடியும்.” உதடு கோணிய புன்னகையுடன் “பிறிதொருவகையில் அது நிறைவடைய முடியாது” என்றார். “ஆம்” என்றான் துரியோதனன்.

“அவ்வண்ணமென்றால் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையேயான சமநிலை இந்தப்போரில் குலையும்” என்றார் சகுனி. துரியோதனன் விழி தூக்கினான். “நீயும் பீமனும் நிகர். கௌரவர்களுக்கு பாண்டவர்கள் நிகர். ஆனால் இவ்வரசகுலத்து வீரர்களில் எவரும் அர்ஜுனனுக்கு நிகரல்ல அல்லவா?” துரியோதனன் தலையசைத்தான். “களத்தில் அர்ஜுனனின் வில்விரைவை வெளிப்படுத்தும் பயிற்சிகளை விரிவாக ஒருங்குசெய்திருப்பார் பிதாமகர். உறுதி” என்றார் சகுனி. சிலகணங்கள் நிலையற்று அமர்ந்திருந்துவிட்டு துரியோதனன் எழுந்தான். “ஆம், நாளையுடன் நாம் ஒருபடி கீழே இறக்கப்பட்டுவிடுவோம் மாதுலரே.”

“பீஷ்மர் அஞ்சுவது அதைத்தான். மைந்தரின் களம்புகுதல்விழாவை நிகழ்த்துவது பற்றி துரோணர் சென்று சொன்னபோது பிதாமகர் மூன்றுமுறை வெவ்வேறு காரணங்கள் சொல்லி ஒத்திப்போட்டார். மூன்றாம் முறை யாதவ அரசி சௌனகரை அழைத்து அவளுடைய கூரிய சொற்களை பீஷ்மரிடம் அனுப்பினாள். பீஷ்மரின் நல்லாசியுடன் களம்புகுதல் நிகழ்ச்சியை அவள் அவளுடைய தாய்வீடான மார்த்திகாவதியில் நிகழ்த்துவதாகவும் அவர் வந்தமர்ந்து தன் மைந்தர்களை வாழ்த்தவேண்டும் என்றும் அவள் சொன்னாள். அதிலுள்ள பொறியை பிதாமகர் உடனே உணர்ந்துகொண்டார். மைந்தர்களுக்கு களம்புகுதல் சடங்கை நிகழ்த்தக்கூட அஸ்தினபுரியில் அனுமதி இல்லை என்ற செய்தியாகவே அது மாறும்.”

சகுனி தொடர்ந்தார் “ஆனால் அரசு சூழ்தலில் எப்போதும் பிதாமகரை எவரும் கடந்து சென்றதில்லை. இன்றைய அரசர் திருதராஷ்டிர மன்னரே என்றும் அவரே முடிவெடுக்கவேண்டும் என்றும் சொல்லி அதை மன்னரின் அவைக்களத்துக்கு அனுப்பினார். திருதராஷ்டிரர் என்னமுடிவெடுப்பார் என்று பிதாமகருக்குத் தெரியும். அவர் களம்கூடவே ஆணையிடுவார். அது கௌரவர்கள் பாண்டவர்களுக்கு அளிக்கும் கனிவாகவே கொள்ளப்படும்.” புன்னகையுடன் சகுனி சொன்னார் “அவ்வண்ணமே நிகழ்ந்தது. நான் சென்று அவரிடம் சொன்னேன், இக்களத்தில் சமநிலை வெளிப்படாது, அர்ஜுனனே முன்னிலைப்படுவான் என்று. மகிழ்ந்து கைவிரித்து அவ்வாறெனில் அதுவே நிகழட்டும். நம் இளையமைந்தன் நம் கண்முன் வென்று நிற்பதைப்போல நமக்கு பெருமை ஏது என்றார்.”

“நேற்று என்னை பிதாமகர் அழைத்தார்” என்றார் சகுனி. “உன்னிடம் பேசவேண்டியதை எல்லாம் என்னிடம் சொன்னார். எந்தப்பூசலும் வெளித்தெரியாமல் இந்தக் களமறிதலை நிகழ்த்தி முடிக்கவேண்டும் என்றார். மகதத்தில் ஜராசந்தன் முடிசூட்டிக்கொண்டிருக்கிறான். அவன் குலத்து அசுரர்களும் நிஷாதர்களும் அவனை சூழ்ந்திருக்கிறார்கள். கம்சன் அவனுடைய வலக்கரமாகவும் காசிமன்னன் இடக்கரமாகவும் இருக்கின்றனர். இருவருமே நம்மால் புண்பட்டவர்கள். நம் ஆற்றலில் விரிசல் என்பது அவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்யும். அஸ்தினபுரியின் நலனுக்கு அது நல்லதல்ல என்றார். அதற்கு நானே பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.”

“ஆனால்…” என ஏதோ சொல்ல வந்த துரியோதனனை கையமர்த்தி “ஆம், பிதாமகர் என் விழிகளை நோக்கிச் சொல்லும் எச்சொல்லும் எனக்கு ஆணையே. நான் அதை மீறமுடியாது” என்றார் சகுனி. “ஆகவே இந்தக் களம்புகுதலில் நாம் அடங்கித்தான் செல்லவேண்டியிருக்கிறது. நாம் நேருக்குநேர் மோதும் நிலையில் இல்லை என்பதும் உண்மை. இதை எவ்வகையிலும் நாம் மறுத்துக்கொள்ளவேண்டியதில்லை.” பெருமூச்சுடன் துரியோதனன் அமர்ந்து கைகளைக் கோர்த்துக்கொண்டான். பின்பு சினத்துடன் “அவ்வாறெனில் ஒரே வழிதான்… நான் பீமனை களத்தில் கொல்கிறேன்” என்றான். “அது இப்போது உன்னால் முடியாது மருகனே” என்றார் சகுனி.

சினம் பற்றி ஏற கைகளை ஓங்கி ஒன்றுடன் ஒன்று அறைந்தபடி துரியோதனன் எழுந்தான். “ஏன்? என்னை புயவல்லமை இல்லாத பேதை என்கிறீர்களா? அவன் முன் நான் தோற்றுவிடுவேன் என்கிறீர்களா?” சகுனி அவனுடைய பெரிய கைகளை நோக்கி புன்னகை செய்து “திரைவிலக்கி உன்னிடம் திருதராஷ்டிர மாமன்னர் எழுவதைக் காண்பது உவகை அளிக்கிறது” என்றார். “ஆனால் உனக்கு விழியிருக்கிறது… அவன் தோள்கள் உன்னைவிடப் பெரியவை. அவன் கால்கள் உன்னைவிடவும் விரிந்தவை. இன்றையநிலையில் அவனை வெல்ல உன்னால் இயலாது. நிகர்நிலையில் போரைமுடிப்பதே நமக்கு நல்லது.” துரியோதனன் மீண்டும் தன் கைகளை ஓங்கி அறைந்துகொண்டான். உறுமியபடி அறைக்குள் ஒருமுறை சுற்றிவந்தான்.

“நான் சொல்வது உண்மை. உண்மையை உன்னிடம் நானாவது சொல்லவேண்டுமல்லவா?” என்றார் சகுனி. துரியோதனன் பற்களைக் கடித்து சுருங்கிய விழிகளுடன் நோக்கியபின் திரும்பி படிகளில் இறங்கி கூடத்தைக் கடந்து ஓடினான். துச்சாதனன் எழுந்தான் “அவரை சினப்படுத்திவிட்டீர்கள் மாதுலரே” என்றான். “ஆம், இல்லையேல் அவன் பீமனிடம் தோற்கவும் கூடும். போர் கொலை நோக்கு கொண்டிருக்கட்டும். அப்போதுமட்டுமே உன் தமையனால் பீமனை எதிர்கொள்ள முடியும்” என்றார் சகுனி. “ஏனென்றால் பீமனின் ஆற்றலை தன் வஞ்சத்தாலும் சினத்தாலும் மட்டுமே துரியோதனன் நிகர்கொள்வான்.”

வெளியே துரியோதனனின் ரதம் கிளம்பிச்சென்றுவிட்டிருந்தது. இன்னொரு புரவியில் துச்சாதனன் அரண்மனைக்குச் சென்றபோது துரியோதனன் மீண்டும் பயிற்சிக்களத்தில் கதையைச் சுழற்றிக்கொண்டிருப்பதைக் கண்டான். கரியநெருப்பின் தழல்கள் போல அவன் உடலின் தசைகள் நெளிந்தன. “புராணப்புகழ்கொண்ட அசுரர்களுக்கு நிகரானவன் அவன். எரிந்துகொண்டிருப்பது வரைதான் அவனுக்கு ஆற்றல். அவன் உயிர்விசையே காமமும் குரோதமும் மோகமும்தான்” என்று சகுனி சொன்னதை அவன் நினைத்துக்கொண்டான். நெருப்பைப்போலவே துரியோதனன் மூச்சொலி எழுந்தது.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

இல்லை நாகமா? ஏதேனும் பாதாளநாகங்கள்தான் அவன் வடிவில் வந்திருக்கின்றனவா? சூதன் ஒருவன் பாடியதை துச்சாதனன் நினைவுகூர்ந்தான். விண்ணில் உலவும் மாநாகங்களான ராகுவும் கேதுவும்தான் துரியோதனன் தோளில் இரு பெருங்கரங்களாக வந்துள்ளன என்றான் அவன். சினம் கொண்டு துரியோதனன் எழும்போது அவ்விரு கரங்களும் புடைத்து எழுந்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் பேரொலியைக் கேட்கையில் அது உண்மையோ என்று துச்சாதனன் அச்சம் கொண்டான். கொலைவல்ல பெருங்கரங்கள் எதற்காக மண்ணுக்கு வந்தன? எதற்காகக் காத்திருக்கின்றன?

பகல் முழுக்க துரியோதனன் தன் பயிற்சிக்களத்திலேயே இருந்தான். ஓய்வெடுக்கையில் பலகையில் படுத்து கண்களை மூடிக்கொண்டான். அவன் உதடுகள் எதையோ சொல்லிக்கொண்டிருப்பதுபோல அசைந்தன. இமைகளுக்குள் விழிகள் விழப்போகும் நீர்த்துளிகள் போல தத்தளித்தபடியே இருந்தன. அவனருகே நின்றிருந்த துச்சாதனன் அவனிடம் ஒரு சொல் பேசவும் அஞ்சினான். ஆணைகளுக்காக வந்த அனைவரையும் அவன் மெல்ல அழைத்துச்சென்று ஓரிரு சொற்கள் பேசி அனுப்பினான். அன்னை துரியோதனனை பார்க்கவேண்டுமென சேவகனை அனுப்பியபோதுகூட “அவர் அந்நிலையில் இல்லை” என்று சொல்லி அனுப்பினான்.

இரவு இருள்வதுவரை துரியோதனன் பயிற்சிக்களத்திலேயே இருந்தான். பின்னர் நீராடிவிட்டுச்சென்று மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். சற்றுநேரத்திலேயே அவனுடைய குறட்டை ஒலி கேட்கத்தொடங்கியது. துச்சாதனன் அவன் காலடியிலேயே தன் மஞ்சத்தை ஓசையில்லாமல் விரித்து படுத்துக்கொண்டு எண்ணங்கள் மெல்ல விசையழிந்து ஒன்றுடன் ஒன்று கலந்து மூழ்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தபோதே துரியோதனன் ஏதோ முனகியபடி எழுந்துகொண்டான். மஞ்சத்தில் சிலகணங்கள் அமர்ந்திருந்துவிட்டு அவன் எழுந்து சென்று உப்பரிகையில் உலவத்தொடங்கினான்.

இருண்ட தூண் ஒன்றுக்கு இப்பால் நின்றபடி நோக்கிக்கொண்டிருந்தான் துச்சாதனன். விழுங்கிய இரையை உடைத்து நொறுக்க விழைபவை போல நெளிந்தன கரிய பெருநாகங்கள். காமம் கொண்டவை போல தழுவிக்கொண்டன. வன்மம் எழுந்தவை போல பின்னி முறுகின. சினமெழுந்து ஓங்கி முட்டிக்கொண்டன. புண்பட்டவை போல வலியில் முறுகியும் இறுகியும் நெளிந்தன. தளர்ந்து நிலம் நோக்கியபின் மீண்டும் சீறி எழுந்தன.

இரவெல்லாம் அங்கே நின்று தமையனை நோக்கிக்கொண்டிருந்தான் துச்சாதனன். காஞ்சனத்தின் ஒலி எழுந்ததும் துரியோதனன் நின்று கீழ்வானை நோக்கினான். அங்கே ஒளியேதும் தோன்றியிருக்கவில்லை. காஞ்சனம் எழுந்ததுமே நகரம் சினம் கொண்டு எழுந்த களிறுபோல இருளாகவே எழுந்து கொண்டதை கேட்டான். பெருமுரசு வரிசைகளின் ஒலியை மீறி நகரத்தின் ஒலி எழுந்தது. இருளுக்குள் நூற்றுக்கணக்கான தீபங்கள் விழிதிறப்பதைக் காணமுடிந்தது.

நேற்று விழா அறிவிப்பைக் கேட்டபோது இருந்த அனைத்து ஐயங்களையும் தவிப்புகளையும் இரவுமுழுக்க பேசியும் எண்ணியும் மக்கள் கடந்து விட்டார்கள் என்று துச்சாதனன் எண்ணிக்கொண்டான். இனி இன்று நடப்பதெல்லாம் அவர்களுக்கு திருவிழாக்கொண்டாட்டங்கள் மட்டுமே. இதில் நகரமே அழிந்தாலும் அதுவும் கொண்டாட்டத்தின் பகுதியே. போரும் மக்களுக்கு ஒரு திருவிழாதான் என்று சகுனி சொன்னதை துச்சாதனன் நினைவுகூர்ந்தான். சாமானியரின் எதிரி சலிப்பு மட்டுமே என்பது சகுனியின் விருப்பமான சொற்றொடர்களில் ஒன்று.

கிழக்கு சிவப்பதற்குள்ளேயே அரங்கேற்றக் களத்தில் அஸ்தினபுரத்துக் குடிமக்கள் ரதங்களிலும், குதிரைகளிலும், மூடுவண்டிகளிலும் வந்து குவிய ஆரம்பித்த ஒலி மழைபோல வந்து அரண்மனையை சூழ்ந்து கொண்டது. அரண்மனையில் முந்தையநாள் இரவே எழுந்த பரபரப்பு பெருகிப்பெருகி அதன் உச்சத்தில் ஒவ்வொருவரும் பிறரை மறந்து தங்கள் வேகங்களில் விரைய முழுமுற்றான ஓர் ஒழுங்கின்மை எங்கும் நிறைந்திருந்தது. அரண்மனைகள் ஏழுபுரவிகள் பூட்டப்பட்ட ரதங்கள் போல ஓடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.

துச்சாதனன் துரியோதனனிடம் களநிகழ்வுக்கு ஒருக்கமாகும்படி சொல்லவிழைந்தான். ஆனால் அவனால் தன் உடலுக்குள் இருளில் மறைந்துவிட்டிருந்த தன் குரலை கண்டுபிடிக்க முடியவில்லை. பெருமூச்சு எழ அதை தன் உடலுக்குள்ளேயே பரவவிட்டு மறைத்துக்கொண்டான். துரியோதனன் கருமையில் இருந்து செந்நிற கூர்நுனிகளுடன் எழுந்து வந்த மேகங்களை நோக்கியபடி நின்றிருந்தான்.

அப்போது சிரிப்பொலிகள் கேட்டன. துச்சாதனன் தன் அமைதியில் இருந்து மீள்வதற்குள் குண்டாசியும் சேனானியும் அபராஜிதனும் இடைநாழிவழியாக ஓடி வந்து உப்பரிகைக்குள் பாய்ந்தனர். “நில்… இல்லையேல் உன் தலை உருளும்!” என்று கூவியபடி வந்த குண்டாசியின் கையில் ஒரு மூங்கில் இருந்தது. முன்னால் ஓடிய  அபயன் துரியோதனனைக் கண்டு திகைத்து நிற்க குண்டாசி ஓடிவந்து “பிடிபட்டான் திருடன்!” என்று கூவியபின்  அபயனின் அமைதியைக் கண்டு திகைத்து துரியோதனனை நோக்கி “நான் காவலன், இவன்தான் திருடன்… அரண்மனையில் புகுந்து…” என்று தடுமாறி சொல்லத் தொடங்கினான். அதேகணம் உள்ளே பாய்ந்துவந்த யுயுத்ஸு “நான் வந்துவிட்டேன்” என்று கிளிக்குரலில் கூவிவிட்டு துரியோதனனைக் கண்டு “நான் வந்தேன்” என மெல்லிய குரலில் சொன்னான்.

துரியோதனனின் முகம் புன்னகையில் விரிந்தது. அரக்குப்பாவை அனலில் உருகுவதுபோல என்று துச்சாதனன் எண்ணிக்கொண்டான். “அனைவரும் களமாடலுக்கு ஒருங்கிவிட்டீர்களா?” என்று சொல்லி துரியோதனன் குனிந்து குண்டாசியின் தலையை வருடினான். அவன் வெட்கத்துடனும் பெருமிதத்துடனும் மற்றவர்களை நோக்கிவிட்டு “ஆம், மூத்தவரே… பட்டாடை அணிந்ததும் ரதத்தில் ஏறிச்சென்றுவிடுவோம்…” என்றான்.  அபயன் “பட்டாடை அணியப்போகிறேன்” என்றான். யுயுத்ஸு “நான் பட்டாடை பட்டாடை!” என்று கையை விரித்து திக்கினான்.

துரியோதனன் யுயுத்ஸுவை அப்படியே தூக்கிச் சுழற்றி தன் தோள்மேல் வைத்துக்கொண்டான். கௌரவர்களிலேயே அவன் மட்டும்தான் சிறிய உடல்கொண்டிருந்தான்.  அபயன் எம்பி எம்பி குதித்து “பாவை… பாவை போலிருக்கிறான்” என்றான். “அனைவரும் சென்று பட்டாடை அணிந்து வாருங்கள்” என்றான் துரியோதனன். “மூத்தவரே, நீங்கள் இன்று கதாயுதப்போர் புரிவீர்கள் அல்லவா?” என்றான் குண்டாசி. “ஆம்” என்றான் துரியோதனன். “நீங்களும் களம் ஏறவேண்டும்.” மேலே இருந்த யுயுத்ஸு கைகளை விரித்து “நான் நான் நான் கதை கதையை…!” என்றான். “போடா, நீ பாவை… உனக்கு கதை கிடையாது” என்றான் குண்டாசி. “உண்டு… உண்டு” என்றான் யுயுத்ஸு. “உண்டு… நீயும் கதைப்போர் செய்யலாம்…” என்று சொல்லி அவனை துரியோதனன் இறக்கிவிட்டான்.

“அனைவரும் செல்க!” என்று சொன்ன துச்சாதனன் “மூத்தவரே, களம்புகும் நேரமாகிறது. உதயம் முதல் அஸ்தமனம் வரை முகூர்த்தம்… இன்னும் ஒருநாழிகைக்குள் விடிந்துவிடும்” என்றான். துரியோதனன் தலையை அசைத்தான். அவன் படியிறங்கி நீராட்டறைக்குச் சென்றபோது துச்சாதனன் ஓடிச்சென்று பிற கௌரவர்களை உடைமாற்றி அணிகொள்ளும்படி சொல்லிவிட்டு தான் நீராடி நீலப்பட்டாடை அணிந்து வந்து துரியோதனனின் அணியறை வாயிலில் நின்றான். சேவகர்களால் அணிசெய்யப்பட்டுக்கொண்டிருந்த துரியோதனன் “நேரமாயிற்றா?” என்றான். “ஆம், மூத்தவரே” என்றான் துச்சாதனன்.

துரியோதனன் வெளியே வந்தபோது துச்சாதனன் தன்னை அறியாமலேயே கைகூப்பினான். இளஞ்சிவப்புப் பட்டாடையை இடைக்கச்சமாக அணிந்து, பொற்பின்னல்கள் கொண்ட வெண்ணிற உத்தரீயத்தை தோளில் போட்டு, குழலை நேர்க்குடுமியாக நெற்றியில் கட்டி, அதில் மணியாரம் சுற்றி, காதில் தாரகுண்டலங்களும் மார்பில் செம்மணி ஆரமும் ஒளிவிட தோள்வளைகளும் கங்கணங்களும் அணிந்து வந்த துரியோதனன் ஓவியப்பாவையில் எழுந்த தெய்வம் போலிருந்தான். “ரதங்கள் ஒருக்கமாயினவா?” என்று அவன் கேட்டபோது துச்சாதனன் “ஆம், மூத்தவரே… இதோ” என்றான்.

ரதங்கள் நகர்வழியாகச் சென்றபோது நகரமே பால் பொங்கி நுரைத்த கலம் போல நிறைந்து வெளியே ததும்பிக்கொண்டிருப்பதை துச்சாதனன் கண்டான். ரதசாலைகளில் ஒளிரும் வேலேந்திய வீரர்கள் கொம்புகளை ஊதி மக்களை விலக்கி வழியமைத்தமையால் மட்டும்தான் செல்லமுடிந்தது. காவலர்களின் குதிரைகள் மக்கள் கூட்டத்தில் சுழலில் சிக்கிய சருகுகள் போல அலைக்கழிந்தன.

மெல்ல மெல்ல துரியோதனன் மீண்டும் அமைதியிழப்பதை துச்சாதனன் கண்டான். ரதத்தில் அவனருகே நின்றபோது துரியோதனன் உடலில் இருந்து அனல் எழுந்து தன்மேல் படுவதைப்போல உணர்ந்தான். தமையனை சற்று குளிர்விக்கும் என்பதற்காக “மக்கள் மகிழ்கிறார்கள் மூத்தவரே” என அவன் சொன்னான். “ஆம், அனைவரும் நான் இன்று களத்தில் விழுந்து மாள்வேன் என எண்ணுகிறார்கள்…” என்றான் துரியோதனன் கசப்புடன் சிரித்து. “தலைக்குமேல் எழுந்தவை இடிந்துவிழுவதைப்பார்ப்பதுபோல எளியவனை கிளர்ச்சி கொள்ளச்செய்யும் காட்சி ஏதுமில்லை.”

முந்தைய கட்டுரைஇமயச்சாரல் – 9
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 10