‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 22

பகுதி ஐந்து : நெற்குவைநகர்

[ 2 ]

பிருகுகுலத்து ஊருவரின் மைந்தனான ருசீகன் வசிட்டரிடமிருந்து விண்ணளந்தோனை வெல்லும் மந்திரத்தைப் பெற்றபின் தன் ஏழுவயதில் திரிகந்தகம் என்னும் மலைமேல் ஏறிச்சென்றான். வெண்மேகமாக வானில் எழுந்த ஐந்து தேவதைகளாலும் எரிவடிவான ஏழு நாகங்களாலும் காக்கப்படும் திரிகந்தகம் மானுடர் பாதங்களே படாததாக இருந்தது. முன்பு திரிபுரத்தை எரிக்க வில்லெடுத்த நுதல்விழி அண்ணல் தன் சிவதனுஸை தென்திசையில் எமபுரியில் ஊன்றி கிழக்கிலிருந்து மேற்குவரை சூரியன் செல்லும் பாதையை ஒளிரும் நாணாக அதில்பூட்டி எரியம்புகளை எய்தபோது அதில் ஒன்று அங்கே வந்து தைத்து அடியிலா உலகம் வரை சென்று நின்றது என்றன புராணக்கதைகள்.

அன்றுமுதல் மானுடர் தீண்டாத மலையாகத் திகழ்ந்த அதன் சரிவில் ருசீகனின் பாதங்கள் பட்டன. மலை சினந்து பேரொலி எழுப்பியது. வெண்ணிற மேகச்சிறகுகளுடன் ஐந்து தேவதைகளும் வானிலெழுந்தன. அவன் காலடிவைத்த இடங்களிலெல்லாம் அனல் மழையை பெய்யவைத்தன. விண்ணளந்தோனின் சொல் நாவில் ஒலிக்க ருசீகன் மலைமேல் ஏறிச்சென்றான். ஏழு நாகங்களும் சிவந்து கொழுத்துருண்ட அனல்ஓடைகளாக அவனை வந்து சூழ்ந்துகொண்டன. அவன் ஏழுநாட்கள் ஏறி திரிகந்தகத்தின் உச்சியை அடைந்தான். அங்கே அனல்பீடத்தில் ஏறி நின்று தவம் செய்தான்.

அவன் முன் உருகிய மஞ்சள்நிறப்பெருக்காக எழுந்த விண்ணளந்த பெருமான் “மைந்த, உன் அகம் கோரும் வரமென்ன?” என்றார். “எந்தை கடலில் இட்ட அந்த குதிரைமுகத்துப் பெருநெருப்பை நாடுகிறேன். அதை எனக்கு மீட்டளிக்கவேண்டும்” என்றான் ருசீகன். “அது நிகழாது. உன் தந்தை தன் அகத்தைக் குளிர்வித்து அவ்வனலை கடலுக்குள் விட்டார். அதை நீ அடையமாட்டாய்” என்றார் பெருமாள். “நான் என்றுமணையாத நெருப்பை விழைகிறேன். மூவுலகை எரித்துண்ட பின்னும் பசி குன்றாது அது என் கையில் எஞ்சவேண்டும்” என்றான் ருசீகன்.

“மைந்தனே, உன் வஞ்சம் எவர் மீது? உன் குலத்தை அழித்தவர்களை உன் தந்தை எரித்தழித்து தன் வஞ்சம் குளிர்ந்து விண்ணகம் மேவிவிட்டார். உன்னிடம் எஞ்சுவது எது?” என்றார் பெருமாள். “இறைவா, மூதாதையர் கண்ணீரைக் கண்ட என் தந்தை என் தாயின் விழிநீரைக் காணவில்லை. அவளும் பார்கவ குலத்தவளே. அவளுடைய குருதிச்சுற்றம் முழுவதும் ஹேகயர்களால் கொல்லப்பட்டது” என்றான் ருசீகன். “மைந்த, தவத்தை வெல்லும் தெய்வமொன்றில்லை. உன் விருப்பத்திற்கு ஏற்ப அணையாத நெருப்புள்ள படைக்கலம் ஒன்றை அளிக்கிறேன்” என்றார் நாராயணன்.

“ஊழிமுதற்காலத்தில் பிரபஞ்சசிற்பியான விஸ்வகர்மன் மண்ணைச்சூழ்ந்திருக்கும் தொடுவானின் வடிவில் இரு மாபெரும் விற்களை சமைத்தார். ஒன்றை தழல்விழியோனுக்கும் இன்னொன்றை எனக்கும் அளித்தார். முப்புரமெரித்த சிவதனுஸை விதேகமன்னன் தேவராதனுக்குக் கொடுத்தார்.நான் என் வில்லை உனக்களிக்கிறேன். உன் வழித்தோன்றல்கள் வழியாக அது சிவகணங்களிடம் சென்று சேரட்டும்” என்று சொல்லி மலைமுகடென வளைந்த மாபெரும் வில்லை அளித்து மறைந்தார்.

கையில் எரியுமிழும் நாராயணவில்லுடன் வந்த ருசீகன் ஹேகயர்களின் நூற்றியிருபது ஆயர்குடிகளை எரித்தழித்தான். அவர்களின் ஆநிரைகள் தழலெழுந்தகாட்டுக்குள் பொசுங்கி மறைந்தன. மைந்தர்கள் வெந்துரிந்த நிணமும் கருகிய கைகால்களுமாக எரிந்தழிந்த இல்லங்களின் சாம்பலுக்குள் விரைத்துக்கிடந்தனர். ருசீகனை அஞ்சிய ஹேகயர்கள் கண்ணீருடன் வானை நோக்கி மூதாதயரை அழைத்து கதறியபடி தங்கள் அரசனான கணியின் அரண்மனை முற்றத்தில் வந்து குழுமினர். அவன் சினம்கொண்டெழுந்து தன் படைகளுடன் ருசீகனை தேடிச்சென்றான்.

கணியின் படைகள் காடுகள் தோறும் ருசீகனை தேடிச்சென்றன. அவன் தங்கிய அனைத்து தவக்குடீரங்களையும் அங்கிருந்த பிரம்மசாரிகள் தவமுனிவர்களுடன் சேர்த்து கொன்றழித்தான். ருசீகனுக்கு உணவளித்த பழங்குடிகள் அவனுக்கு நிழல்கொடுத்த மரங்கள் அனைத்தையும் கணி அழித்தான். நூறாவது நாள் கிரௌஞ்சவனம் என்னும் காட்டில் கணியின் படைகளை ருசீகன் தன் அனல்வில்லுடன் எதிர்கொண்டான். அவனது அம்புகள் வந்து தொட்ட கணியின் படையின் தேர்கள் தீப்பற்றின. குஞ்சிரோமமாக தழல் பற்றி எரிய புரவிகள் அலறியபடி மலைச்சரிவுகளில் பாய்ந்திறங்கி ஆழத்தில் உதிர்ந்தன. ஹேகயர்களின் தலைமுடிகளும் ஆடைகளும் பற்றிக்கொண்டன.

தன் முழுப்படையையும் இழந்த கணி திரும்பி குடிகளிடம் ஓடிவந்தான். “நெருப்பை ஏவலாகக் கொண்டவனை நாம் வெல்லமுடியாது. உயிர்தப்பி ஓடுவதே வழி” என்று அவனுடைய அமைச்சர்கள் சொன்னார்கள். ஹேகயர்கள் யமுனைக்கரையில் இருந்து கூட்டம் கூட்டமாக தங்கள் உடைமைகளையும் ஆநிரைகளையும் மைந்தர்களையும் கொண்டு வெளியேறினர். தங்கள் மூதாதையர் வாழ்ந்த மண்ணை திரும்பித்திரும்பி நோக்கியபடி விழிநீர் சொரிந்து கொண்டு விந்தியனைக் கடந்து நர்மதையை நோக்கி குடிபெயர்ந்தனர்.

புதிய நிலத்தில் புலிகளுடனும் பாம்புகளுடனும் கோடையின் காட்டுத்தீயுடனும் மழைக்காலத்து தொற்றுநோயுடனும் பொருதி நிரைநிரையென மாண்டனர். எஞ்சியவர்கள் அங்கே சிறிய குடியிருப்புகளை அமைத்தனர். கிருதவீரியனின் தந்தை தனகனின் ஆட்சியில் அங்கே சிறு ஜனபதம் ஒன்று முளைத்தெழுந்தது. அதற்கு மாகிஷ்மதி என்று பெயர்வந்தது. கிருதவீரியனின் ஆட்சிக்காலத்தில் அந்த ஜனபதத்தின் செல்வம் திரண்டு ஓர் அரசாகியது. ஆயர்குடிகளில் ஆநிரைகள் தழைத்தன. மாகிஷ்மதியைச் சுற்றி மரத்தாலான சிறு கோட்டை எழுந்தது. அதன் நடுவே சிறிய தாமரைமுகடுடன் ஹேகயனின் அரண்மனை அமைந்தது.

ஹேகயர்களை முற்றாக அழித்தொழித்ததாக எண்ணிய ருசீகன் சந்திரவம்சத்து மன்னனாகிய காதியை அடைந்து அவன் மகளை பெண்கேட்டான். கொலைப்பழி கொண்ட பிருகுபிராமணனுக்கு பெண் தர விரும்பாத காதி கரிய காதுகள் கொண்ட ஆயிரம் வெண்புரவிகளை கன்யாசுல்கமாகக் கொண்டுவரும்படி கேட்டான். ருசீகன் கங்கைக்கரையில் இருந்த சுவனம் என்னும் சோலைக்குச் சென்று தவமிருந்தான். தவத்தில் ஒருமை கூடாதபோது அவன் களம் வரைந்து தன் மூதாதையரை வரவழைத்து தன் தவம் கனியாதது ஏன் என்றான்.  அவன் உள்ளங்கையிலிருக்கும் அனலையும் அவ்வனலை அம்புகளாக்கும் நாராயண வில்லையும் துறந்து எளிய வைதிகனாக ஊழ்கத்தில் அமரும்படி மூதாதையர் கூறினர்.

நாராயணவில்லையும் அனல்நிறைந்த அம்பறாத்தூணியையும் கங்கைக்கரையில் ஒரு மரப்பொந்தில் வைத்துவிட்டு ருசீகன் தவம்செய்தான். அவனது தவம் கனிந்து பெருமழைவடிவில் வருணன் அவன் முன் இறங்கி நின்றான். கரிய செவிகள் கொண்ட ஆயிரம் வெண்புரவிகள் வேண்டுமென்று ருசீகன் கேட்டான். வருணன் புன்னகைத்து “என் அலைகளையே மன்னன் கேட்டிருக்கிறான். அவ்வாறே ஆகுக!” என்றான். பெருமழை மூத்து வெள்ளப்பெருக்காயிற்று. கரிய சேற்றுத்திவலைகள் சிதறியெழ ஆயிரம் வெண்ணிற நீரலைகள் காதியின் அரண்மனை முற்றத்தில் சென்று முட்டின. உப்பரிகை திறந்து வந்த காதி அவற்றைக் கண்டு முகம் மலர்ந்தான்.

காதியின் மகள் சத்யவதியை ருசீகன் மணந்தான். அப்போது சால்வமன்னனாகிய குசாம்பனின் மைந்தன் தியூதிமானின் நாட்டில் பெருங்காட்டுத்தீ எழுந்து குளிர்ச் சோலைகளையும் அடர்காடுகளையும் புல்வெளிகளையும் பல்லாயிரம் நாக்குகளால் நக்கியுண்டு பேரோசையுடன் மலையிறங்கி ஊர்களுக்குள் வந்துகொண்டிருந்தது. பன்னிரு ஆயர்கிராமங்களை அது உண்டது. ஆயர்கள் தியூதிமானின் அரண்மனை வாயிலில் வந்து நின்று கதறினார்கள். பெரும்படைபலம் இருந்தும் எரியின் படையை எதிர்கொள்ள சால்வநாட்டரசன் தியூதிமான் அஞ்சினான்.

அச்செய்தி அறிந்து ருசீகன் வந்து அவனைப்பார்த்தான். நெருப்பை அடக்கும் வல்லமை தனக்குண்டு என்றும் அவனுடைய நாட்டில் காட்டுத்தீ எழுமென்றால் அதை ஊருண்ணாமல் தடுக்க தன்னால் முடியும் என்றும் சொல்லி அவனைத் தேற்றிவிட்டு தன்னந்தனியாக காட்டுக்குள் சென்றான்.  கங்கைக்கரையில் சுவனத்தில் பலாசமரத்தின் அடியில் இருந்த தன் நாராயணவில்லை எடுத்து அதில் அனலம்புகளைத் தொடுத்து அனலை என்னும் நெருப்பை உருவாக்கினான். பாம்புகளை உண்டு வாழும் ராஜநாகம் போல தீயை மட்டுமே உண்டு வாழும் அனலை அந்தக் காட்டுநெருப்புகளை வளைத்து உண்டு அழித்தபின் சுருண்டு ருசீகனின் அம்பறாத்தூணிக்குத் திரும்பியது.

சால்வமன்னன் தியூதிமான் அந்தக் காடு முழுவதையும் ருகீகனுக்கு கொடையளித்தான். அங்கே ருசீகன் தன் மனைவி சத்யவதியுடனும் அவளுடைய உடன்பிறந்த தங்கையர் பதின்மருடனும் குடியேறினான். அவனுடைய குருதி அங்கே நூறு மைந்தர்களாக முளைத்து எழுந்து மீண்டும் பிருகுகுலம் உருவானது. சத்யவதி நான்கு மைந்தர்களைப் பெற்றாள். சூனபுச்சனில் இருந்து ஜாதவேத கோத்திரமும் சூனஸேபனில் இருந்து ஜ்வலன கோத்ரமும் சூனசேனாங்குலனில் இருந்து ஃபுஜ்யு கோத்ரமும் உருவாயின. அவர்கள் அனலோன் அருள் பெற்ற வைதிகர்களாக அறியப்பட்டார்கள்.

சத்யவதி பெற்ற முதல்மைந்தர் ஜமதக்னி முனிவராகி காடேகினார். தன் இறப்பின் தருணத்தில் மைந்தனை அழைத்த ருசீகர் பிருகு குலத்திற்கு நேர்ந்த பேரழிவை விளக்கினார். ஹேகயகுலத்தில் ஒருவரேனும் எஞ்சுவது வரை பிருகுக்களுக்கு மண்ணில் முழுமையான வாழ்க்கையும் விண்ணில் நிறைவும் கைகூடுவதில்லை என்றார். “மண்ணிலிருந்து அவர்களை முற்றிலுமாக எரித்தழித்தேன். அவர்கள் எவ்வகையிலேனும் எவ்வண்ணமேனும் எஞ்சுவார்களென்றால் அவர்களை அழிக்கும் கடமை உனக்குண்டு” என்று சொல்லி நாராயணவில்லையும் எரிமந்திரத்தையும் மைந்தனுக்குக் கற்பித்துவிட்டு உயிர்துறந்தார். அவர் சிதைக்கு அனலூட்டி நீர்க்கடன்களை முடித்தபின் ஜமதக்னி தன் அன்னையிடம் விடைபெற்று கானகம் சென்றார்.

வசிட்டர் உட்பட்ட ஏழு மாமுனிவர்களிடம் வேதவேதாந்தங்களையும் ஆறுமதங்களையும் கற்றுத்தேர்ந்த ஜமதக்னி கங்கையின் படித்துறையில் அனைத்து மூதாதையருக்கும் முழுப்பலி கொடுத்து முழுநீர்க்கடன் முடித்து துவராடை பெற்று துறவுபூணும் பொருட்டு இறங்கி அர்க்கியமிட அள்ளிய நீர் கைக்குவையில் இருந்து வெம்மைகொண்டு கொதித்தது. அவர் நீரிலோடிய நிமித்தங்களைக் கண்டு எங்கோ ஹேகயர்கள் இன்னும் இருப்பதை அறிந்துகொண்டார். நீரை மீண்டும் நதியிலேயே விட்டுவிட்டு திரும்பிவந்து நாராயணவில்லை கையிலெடுத்துக்கொண்டார்.

கிருதவீரியனின் மாகிஷ்மதியை நெய்வணிகர்கள் அறிந்தபோது சூதர்களும் அறிந்தனர். சூதர்கள் அறிந்தபோது அனைவரும் அறிந்தனர். ருசீகரின் மைந்தர் ஜமதக்னி தன் இரு கைகளிலும் நெருப்புடன் பிருகுகுலத்து அக்னேயர்கள் ஆயிரம்பேர் சூழ விந்தியனைக் கடந்து அவர்களைத் தேடிவந்தார். அவரது பெருஞ்சினத்தால் மீண்டும் ஆயர்குடிகள் எரியத்தொடங்கின. கானகச்சரிவுகளில் நெருப்பு பொழிந்து வழியத்தொடங்கியது. ஆயர்குடிகளின் எல்லைகளை ஒவ்வொன்றாகத் தாக்கி எரியவைத்தார் ஜமதக்னி. அவரது சொல்லுக்கு கட்டுப்பட்ட நெருப்பு சிறுகுருவியாக, செம்பருந்தாக, துள்ளும் மானாக, பாயும் புரவியாக அவருடன் வருவதாக ஆயர்கள் சொன்னார்கள்.

மேய்ச்சல்நிலங்கள் கருகியணைந்தன. ஆநிரைகளை காட்டுத்தீ நக்கியுண்டது. ஆயர்குடிகளின் ஊர்கள் எரிந்தவிந்தன. மாகிஷ்மதியின் மாளிகைமுற்றத்திற்கு சேவகர்களால் கொண்டுவரப்பட்ட கிருதவீரியன் தன்னைச்சூழ்ந்திருந்த எட்டுமலைச்சரிவுகளிலும் நெருப்பு சிவந்து வழிந்திறங்கும் காட்சியைக் கண்டு கண்ணீர் விட்டான். தன் படைகளனைத்தையும் திரட்டி ஜமதக்னி தலைமையில் திரண்டு எதிர்த்த பார்கவகுலத்தவரை வெல்லும்பொருட்டு வடக்குநோக்கி அனுப்பினான். நர்மதையின் ஆற்றின் கரையில் பார்கவர்களை ஹேகயர்கள் எதிர்கொண்டனர்.

பன்னிரண்டுநாட்கள் நடந்தது அப்பெரும்போர். விற்களும் வேல்களுமேந்தி போரிடச்சென்ற ஹேகயர்களை வெறும் கைகளுடன் வந்து எதிர்த்து நின்றனர் பார்கவர்கள். ஜமதக்னியின் மந்திரச் சொல்லால் எரித்துளிகளாக மாற்றப்பட்ட தட்டாரப்பூச்சிகளும் கருவண்டுக்கூட்டங்களும் கருமேகம்போல எழுந்து அவர்களை நோக்கி வந்தன. அவை வருகையிலேயே காற்றிலுரசி தீப்பற்றி எரிந்தபடி வந்து விழுந்த இடங்களிலெல்லாம் எரிமுளைத்தது. ஹேகயர்கள் தங்கள் குலக்கதைகளில் மட்டுமே கேட்டிருந்த நெருப்பின் படையெடுப்பை அறிந்தனர். கூட்டம்கூட்டமாக அவர்கள் வெந்தழிந்தனர்.

ஹேகயகுலம் ஆநிரைகளையும் மாகிஷ்மதியையும் கைவிட்டுவிட்டு காடுகளுக்குள் குடியேறியது. அடர்ந்தகாடுகளுக்குள் அவர்கள் மலைவேடர்களைப்போல வாழ்ந்தனர். கானக வாழ்க்கையில் அவர்கள் தங்கள் உடைகளை இழந்தனர். அவர்களின் விழிகள் காட்டுமிருகங்களுடையதாக ஆயின. ஓநாய்களைப்போல உறுமியபடி மிருகங்களை வேட்டையாடினர். பன்றிகளாக அமரியபடி கிழங்குகளை அகழ்ந்தனர். குரங்களைப்போல மரங்களின் மேல் துயின்றனர். ஆயினும் அவர்கள் குலத்தின் முதுபெண்டிர் குலப்பேரழிவின் கதைகளை சொல்லிச்சொல்லி மைந்தரை வளர்த்தனர். ஒவ்வொரு இளைஞனிடமும் மாகிஷ்மதி என்னும் நகரம் வாழ்ந்தது.

கிருதவீரியன் மைந்தன் கிருதசோமன் தன் வீரர்களுடன் மலையிறங்கி வந்து பெருவெள்ளம் சென்று அடங்கிய நர்மதை நதியின் கரையில் உயர்ந்திருந்த மணல் மேட்டில் நூறு நாணல்குடில்களை அமைத்து தங்கினான். அந்தச் சிற்றூரை அவன் மாகிஷ்மதி என்றழைத்தான். ஹேகயகுலம் அங்கே பெருகியது. அவர்கள் யமுனையில் படகோட்டக் கற்றுக்கொண்டனர். மலையடிவாரத்து இடையர்களிடமிருந்து நெய்யைப் பெற்று நர்மதை வழியாக கடலுக்குச் செல்லும் பெரும்படகுகளுக்கு விற்கத்தொடங்கினர். கிருதசோமனின் மைந்தன் கிருதவீரியனின் காலத்தில் மாகிஷ்மதி மரத்தாலான கூரையும் வலுவான தூண்களும் கொண்ட ஐநூறு மாளிகைகளும் நூறுபடகுகள் வந்தணையும் துறையும் கொண்ட கரைநகரமாக வளர்ந்தது.

மாகிஷ்மதியை ஆண்ட ஹேகய குலத்து கிருதவீரியன் நிமித்திகரை அழைத்து அந்நகரின் எதிர்காலம் குறித்து கணித்துக்கொடுக்கும்படி கோரினான். அவர்கள் அந்நகர் மும்முறை எரியாடும் என்றனர். அச்செய்தியைக் கேட்டு நடுங்கி கிருதவீரியன் துயிலிழந்தான். தன் குருதிச்சுற்றத்தில் ஒவ்வொரு முகத்தை நோக்குகையிலும் கண்ணீர் விட்டான். நகரின் ஒவ்வொரு கட்டடத்தையும் எரிக்குவையாக கண்டு நடுங்கினான். தன்குலத்தைக் காக்கும் பெருவீரன் ஒருவனைப் பெறவேண்டுமென்றெண்ணி முனிவரையும் கணிகரையும் அழைத்து வழிதேடினான். அவர்களனைவருமே நாராயணவில்லை எதிர்கொள்ளும் வல்லமை மானுடர்க்கு அளிக்கப்படுவதில்லை என்றனர்.

இனி உயிர்வாழ்வதில் பொருளில்லை என்று எண்ணிய கிருதவீரியன் ஒருநள்ளிரவில் தன் அமைச்சர்களுக்கு ஆணைகளை ஏட்டில் பொறித்து வைத்துவிட்டு நர்மதைப்பெருக்கில் இருந்த அவர்த்தகர்த்தம் என்னும் மிகப்பெரிய நீர்ச்சுழியில் பாய்ந்து உயிர்துறக்க முயன்றான். அந்தச்சுழி பாதாளநாகமான திரிகூடன் தன் துணைவி கீர்த்தியுடன் நீர்விளையாட வரும் வழி. இருபெரும் நாகங்களும் ஒன்றையொன்று தழுவி சுழன்றுகொண்டிருந்தபோது அதன் நடுவே சென்று விழுந்த கிருதவீரியன் ஒரு கணத்தில் பல்லாயிரம் யோசனைதூரம் சுழற்றப்பட்டான். அச்சுழற்சியில் அவன் உடல் சுருங்கி ஒரு அணுவளவாக ஆனான்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

அந்த அணுவை தன் நீண்ட செந்நிற நாக்குநுனியால் தொட்டெடுத்த திரிகூடன் கைகூப்பி நின்று அழுத மன்னனைக் கண்டு அகம் கரைந்தான். “அரசனே, என் மனைவியின் வயிற்றுக்குள் ஆயிரம் நாகங்கள் கருக்கொண்ட புனிதமான தருணத்தில் நீ இங்கு வந்திருக்கிறாய். அக்காரணத்தால் உன்மேல் நான் அருள்கொண்டிருக்கிறேன். உன் கோரிக்கை என்ன?” என்றான். “நச்சுக்கரசே, நாராயணதனுஸில் இருந்து என் குலத்தையும் நகரையும் காக்கும் பெருவீரன் எனக்கு மைந்தனாக வேண்டும்” என்றான் கிருதவீரியன். “எல்லையற்ற ஆற்றலுள்ளது நாராயணதனுஸ். ஆயினும் அதை எதிர்க்கும் இருளுலகம் ஆற்றல் கொண்டதே. உனக்கு என் விஷத்தை அளிக்கிறேன். அதை உன் மனைவிக்குக் கொடு. அவள் கருத்தரித்து மாவீரனைப் பெறுவாள்” என்றான் திரிகூடன்.

திரிகூட விஷத்தை ஒரு சிறிய பொற்செப்பில் வாங்கிக்கொண்டுவந்த கிருதவீரியன் அதை தன் மனைவிக்கு அளித்தான். அவள் அதைப் பருகிய ஏழாம் நாளே கருவுற்றாள். அவளுடைய கரு ஒவ்வொருநாளும் பெருகியது. பத்துமாதமாகியும் அவள் கருவழி திறக்கவில்லை. அதை மதங்ககர்ப்பம் என்றனர் மருத்துவர். இருபதுமாதங்களுக்குப் பின்னர் பெருந்தொடைகளுடனும் நீண்டகைகளுடனும் கூர்விழிகளுடனும் வாய்நிறைந்த பற்களுடனும் பிறந்தான் கார்த்தவீரியன்.

அவன் பிறந்த அக்கணத்தில் ஹேகயர்களின் ஆநிரைகளனைத்தும் மேய்ச்சலை நிறுத்திவிட்டு தலைதூக்கி உரக்கக் கூவின. அப்பேரொலி எழுந்த அக்கணத்தில் தன் மைந்தர்களுடன் மெல்லக்காலடி எடுத்துவைத்து அடிவயிறு மண்ணிலிழைய புதர்களினூடாகப் பதுங்கிவந்து பசுக்கூட்டமொன்றின்மேல் தாவும் பொருட்டு செவி மடித்த சிம்மம் ஒன்று திகைத்து அஞ்சி பின்னால் காலடி வைத்து திரும்பி வால்சுழல பாய்ந்தோடி காட்டுக்குள் மறைந்தது. அது முதுவேனிற்காலமாக இருந்தபோதிலும் விண்ணில் கருமேகங்கள் கூடி இடியோசை எழுந்தது. அளைகளுக்குள் துயின்ற நாகங்கள் வெருண்டு தலைதூக்கிச் சீறி வால்சொடுக்கின.

மைந்தன் பிறந்ததை கிருதவீரியனுக்குச் சொன்ன சேடிப்பெண் மேலும் தயங்கி “அரசே!” என்றாள். ஹேகயன் அக்கண்களில் எழுந்த அச்சத்தைக் கண்டு “என்ன?” என்றான். அவள் சொற்களைக் கோத்துக்கொண்டு “மைந்தர் நலமாக இருக்கிறார். ஆனால் அரசி விண்ணுலகம் சென்றுவிட்டார்” என்றாள். தனக்கு அச்செய்தி ஏன் வியப்பளிக்கவில்லை என்று கிருதவீரியன் எண்ணிக்கொண்டான். இருபதுமாதங்களாக கருவில் வளர்ந்த பேருடல் மைந்தன் அவ்வண்ணமே மண்ணிலிறங்குவான் என அவன் எதிர்பார்த்திருந்தான். நிறைவயிறு கனத்து பின் நிலம்தொட இறங்கி அரசி சீர்ஷை நடக்கமுடியாதவளாக படுக்கையில் விழுந்தே ஏழுமாதங்களாகிவிட்டிருந்தன. அவள் சித்தம் முற்றும்கலங்கி மண்ணைவிட்டு விலகி நெடுநாட்களாகியிருந்தன.

ஆனால் ஈற்றறையை நெருங்கியதும் கிருதவீரியனின் கால்கள் அச்சத்தில் நடுங்கின. வெளியே வந்து அவனைப்பணிந்த மருத்துவர் “மைந்தன் நலம்” என்று மட்டும் சொன்னார். அவரது விழிகளை சந்திக்க கிருதவீரியன் அஞ்சி தலையை திருப்பிக்கொண்டான். “ஈற்றறைச் சேவைகள் இப்போதுதான் முடிந்தன” என்று இன்னொரு மருத்துவர் வந்து மெல்ல முணுமுணுத்துவிட்டு திரும்பிச்சென்றார். அவரைத் தொடர்ந்து ஈற்றறைக்குள் ஒருகணம் எட்டிநோக்கிய கிருதவீரியன் உடல்விதிர்த்து பின்னகர்ந்துவிட்டான். அன்னையை முழுதாகக் கிழித்து குழந்தை வெளிவந்திருந்தது. அறையெங்கும் சீர்ஷையின் குருதியும் நிணமும் சிதறியிருந்தன. யானைத்தோல் தொட்டிலில் கனத்துக்கிடந்த குழந்தை அவனைநோக்கித் திரும்பி தன் கூரிய விழிகளால் நோக்கியதைக் கண்டு கிருதவீரியன் திரும்பி தன் அவைக்கு விரைந்தோடி ஆசனத்தில் தலையைக் கையால்தாங்கியபடி அமர்ந்துவிட்டான்.

அவைசூழ்ந்த அமைச்சர்கள் அம்மைந்தன் கருவுற்ற நாள் முதல் நிகழ்ந்த நிமித்தக்குறிகள் ஒவ்வொன்றையும் சொன்னார்கள். “இது மானுடப்பிறப்பல்ல அரசே. அசுரரும் அரக்கரும் பிறப்பதற்கு மட்டுமே உரிய வேளை இது” என்றார் தலைமையமைச்சர் பிருஹதர். “இப்பிறப்பால் ஒருபோதும் நன்மை விளையப்போவதில்லை. பேரழிவை உருவாக்குவதற்கென்றே சில மானுடர் மண்ணிலெழுகிறார்கள். அவர்களுக்குள் புகுந்து வந்து ஆடிச்செல்பவை அடியிலியின் பேராற்றல்களே” என்றார் சம்புக நிமித்திகர்.

அவன் தன் தலையைப்பற்றிக்கொண்டு மீளமீள ஒரு சில சொற்றொடர்களையே எண்ணத்தில் ஓடவிட்டு அமர்ந்திருந்தான். மாலைவரை அங்கேயே இருந்தும் எந்த எண்ணமும் எஞ்சி நிற்காத அகத்துடன் எழுந்து எழுந்த அசைவிலேயே தன்னிச்சையாக முடிவை அடைந்து ஒற்றர்படைத் தலைவனை அழைத்து குழந்தையைக் கொண்டுசென்று அடர்காட்டில் விட்டுவிட்டு வர ஆணையிட்டான். அதன்பின் அம்முடிவை அவனே மாற்றிக்கொள்ளலாகாதென்று எண்ணி மகளிரறைக்குள் நுழைந்து நினைவழிய மதுவருந்தி கண்மூடித் துயின்றுவிட்டான்.

மறுநாள் காலை எழுந்ததும் காத்து நின்றது போல கைநீட்டி வந்த மைந்தன் நினைவு அவனைப் பற்றிக்கொள்ள எழுந்தோடி இடைநாழிவழியாக விரைந்து சேவகனை அழைத்து படைத்தலைவனிடம் மைந்தனை என்னசெய்தான் என்று கேட்கச்சொன்னான். காட்டில் அவனை விட்டுவிட்டேன் என்று சேவகன் பதிலிறுத்தான். “இக்கணமே சென்று என் மைந்தனை எடுத்து வாருங்கள்!” என்று கிருதவீரியன் ஆணையிட்டான். பின்னும் மனம்பொறாமல் தானே ஓடிச்சென்று புரவியிலேறி சேவகரும் படையினரும் பின்தொடர காட்டுக்குள் சென்றான். குழந்தையை விட்டுவந்த இருள்காட்டின் சுனைக்கரையை படைத்தலைவன் சுட்டிக்காட்டினான். அங்கே குழந்தை இல்லை. அப்பகுதியெங்கும் சிம்மங்களின் காலடிகள் நிறைந்திருந்தன. நிகழ்ந்ததென்ன என உய்த்து கதறியபடி கிருதவீரியன் அங்கே சேற்றில் அமர்ந்துவிட்டான்.

தளர்ந்து குதிரைமேலேயே படுத்துவிட்ட கிருதவீரியனை அவன் குடிகள் நகருக்குக் கொண்டுவந்தனர். அவன் பின் எழுந்தமரவில்லை. அவன் கைகளும் கால்களும் நடுங்கிக்கொண்டிருந்தன. குழறாமல் சொல்லெடுக்கவும் சிந்தாமல் உணவெடுக்கவும் முடியாதவனானான். ஒவ்வொருநாளும் நடுங்கும் தலையை குளிர்ந்த விரல்களால் பற்றியபடி வெளுத்து நடுங்கிய உதடுகளால் தன்னுள்ளோடிய குரலில் ‘என் மகன், என் மகன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தான். கண்ணீர் வழிந்து சிவந்த விழிகளுடன் யாரோ என தன் அமைச்சரையும் படைத்தலைவர்களையும் நோக்கினான். அவன் துயில்கையிலும் உதடுகளில் அச்சொல் நின்று அதிர்ந்துகொண்டிருந்தது என்றனர் சேடிகள்.

மாகிஷ்மதியின் புகழ் பரவியபோது கோதாவரிக்கரையில் தவம்செய்துகொண்டிருந்த ஜமதக்னி அதை அறிந்தார். நாராயண வில்லுடன் அவர் மீண்டும் அவர்களின் ஆயர்குடிகள் மீது போர் தொடுத்தார். நெருப்பில் வெந்தெரிந்தது ஹேகயர்களின் ஐந்தாம் தலைமுறை. ஒவ்வொருநாளும் வெந்துரிந்த உடல்களுடன் ஹேகயர்கள் வந்து மாகிஷ்மதியின் முற்றங்களில் தங்கி ஓலமிட்டனர். அவர்களின் இரவுபகலென்னாத அழுகையால் மாகிஷ்மதியில் துயிலரசி அணுகாமலானாள். நகரையாண்ட திருமகள்கள் அனைவரும் கண்ணீருடன் மேற்குவாயில் வழியாக வெளியேற இருள்மகள்கள் கிழக்குவாயில் வழியாக உள்ளே நுழைந்தனர்.

நகரில் கணமும் கண்ணுறங்கமுடியாத கிருதவீரியனை நர்மதைக்கு அப்பால் விரிந்த அடர்காட்டுக்குள் குடிலமைத்து தங்கவைத்தனர் மருத்துவர். அகச்சொற்கள் அனைத்தும் அழிந்து ‘என் மகன்’ என்ற ஒற்றைச்சொல்லாக சித்தம் மாறிவிட்டிருந்த கிருதவீரியன் அங்கும் கண்ணீர் சோர உடல் நடுங்க இரவும் பகலும் மரவுரிமெத்தையில் விழித்திருந்தான். தன் படைகளையும் குடிகளையும் மனைவியரையும் சேவகரையும் அவன் அறியவில்லை. காலையையும் மாலையையும் உணரவில்லை.

ஏழாம்நாள் வேட்டைக்குச் சென்ற கிருதவீரியனின் படைகள் மலைக்குகை ஒன்றுக்குள் சிம்மக்குரல் கேட்டு அதை யானைப்படையால் வளைத்துக்கொண்டனர். குகையைச் சூழ்ந்தபின் அம்புகள் தெறித்த விற்களும் ஒளிரும் வேல்களுமாக அவர்கள் குகைக்குள் சென்றபோது இரு சிம்மங்களின் பிடரிமயிர்க்கற்றையைப் பற்றி இரண்டின் முதுகிலும் கால்வைத்து நின்று ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த மைந்தனைக் கண்டனர். ஓங்கியபேருடல் கொண்டிருந்தாலும் அவன் ஏழுவயதான குழந்தை என்று அறிந்ததுமே அவன் யாரென்று உணர்ந்து அங்கேயே அவன் அடிபணிந்து வணங்கினர்.

அந்த மைந்தனை அவர்கள் அரசனுக்கு முன்னால் கொண்டுவந்தனர். அவனைத் தொடர்ந்து ஏழுசிம்மங்களும் இடியொலி எழுப்பியபடி வந்து குடிலைச்சூழ்ந்துகொண்டன. மைந்தனைக் கண்டதும் கைகளைக் கூப்பியபடி எழுந்த கிருதவீரியன் “நிகரற்ற ஆற்றல் கொண்டவனே, இனி என் குலம் வாழ நீயே காப்பு” என்று கூவியபடி மண்ணில் விழுந்து அவன் கால்களைப் பற்றியபடி அங்கேயே உயிர்துறந்தான். நிகரற்ற வீரம் கொண்டவன் என்று தந்தை அழைத்த பெயரிலேயே சிம்மங்களால் வளர்க்கப்பட்ட அம்மைந்தன் கார்த்தவீரியன் என்று அழைக்கப்பட்டான். ஹேகயகுலத்தின் மீட்பன் அவன் என்றனர் குலமூத்தோர்.

முந்தைய கட்டுரைகோவையில் கண்ணதாசன் விழா
அடுத்த கட்டுரைவெண்முரசு -மழை