‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 18

பகுதி நான்கு : வெற்றித்திருநகர்

[ 3 ]

பெருநீர்கங்கையில் பயஸ்வினி, மிதவாஹினி, யாமினி என்னும் மூன்று காட்டாறுகள் கலக்குமிடத்தில் இருந்தது பிரமாணகோடி என்னும் முனம்பு. காட்டாறுகளில் மழைக்கால வெள்ளம் வந்தபோது எழுந்துபடிந்த சேற்றுக்குவைகள் காலப்போக்கில் இறுகி நிலமாகி உருவான அதன் பெரும்பகுதியில் மென்சதுப்புப் பரப்புகள்மேல் நீலப்பச்சைநிறமான கோரையும் வெண்ணிறப்பூக்குச்சங்கள் எழுந்து காற்றிலாடும் நாணலும் நிறைந்திருந்தன. மையத்தில் நீர்மருதுகளும் ஆயாமரங்களும் ஒதியமரங்களும் செறிந்த சோலை அகன்ற இலைகளினாலான ஒளிபுகாத தழைக்கூரையுடன் நின்றது. அரசகுலத்தவரின் வேட்டைப்பயிற்சிக்கும் நீர்விளையாடலுக்குமாக ஒதுக்கப்பட்டிருந்த அந்தச்சோலையில் பிறர் புகுவது தடைசெய்யப்பட்டிருந்தது. கங்கையின் கரையிலும் மூன்று காட்டாறுகளுக்கு அருகிலும் காவல்மாடங்களில் எப்போதும் வேலேந்திய வீரர்கள் இருந்தனர்.

கங்கைவழியாக மூன்று படகுகளில் கிருபரும் அவரது மாணவர்களும் மதியவெயில் நீரலைகளை ஒளிபெறச்செய்திருந்த உச்சிநேரத்தில் வந்துசேர்ந்தனர். படகுகள் பாய் சுருக்கி வேகமிழந்ததும் குகர்கள் அவற்றை பிரமாணகோடியின் முதலைமுகம் நோக்கித் திருப்பினர். நெருங்கியதும் இரும்புக்கொக்கியை பட்டுநூலில் கட்டி வீசி கரைமரங்களில் ஒன்றில் சிக்கவைத்து இழுத்து படகுகளைக் கரைசேர்த்தனர். படகுகள் முகம் திருப்பி அன்னையின் முகம்தேடும் முதலைக்குட்டிகள் போல மெல்ல அணுகிச்சென்றன. படகுகள் நின்றதும் கிளைகளில் தொற்றி ஏறிய சேவகர்கள் படகுகளை வடங்களால் வேர்களுடன் சேர்த்துக் கட்டி அசைவழியச்செய்ய கிருபரும் தசகர்ணரும் இறங்கி மரங்களின் வேர்களுக்குமேல் கால்வைத்து உள்ளே சென்றனர்.

பீமன் அந்நிலத்தைப் பார்த்தபடி படகின் பாய்மரத்தருகே நின்றிருந்தான். அந்த முனம்பின் நிலம் முழுக்கவே காட்டாற்றின் சதுப்பாலானது என்பதனாலும் வருடத்தில் பாதிநாள் கங்கைநீர் பொங்கி நிலத்தைமூடியிருக்கும் என்பதனாலும் அங்குள்ள மரங்களெல்லாமே மூச்சுக்காக தங்கள் வேர்களை மண்ணுக்குமேல் கொண்டுவந்து படரவிட்டிருந்தன. தரையில் எங்கும் செடிகளோ புதர்களோ காணப்படவில்லை. மரங்களின் வெண்ணிற செந்நிற வேர்கள் பாம்புக்குவைபோல ஒன்றுடன் ஒன்று பின்னி அடர்ந்து வலைபோல ஆகி விரிந்து நிலமாகத் தெரிந்தன. தடித்தெழுந்த வேர்கள்மேல் கால்வைத்துத்தான் செல்லவேண்டியிருந்தது. கிருபரும் தசகர்ணரும் உறுதியான மண்ணில் நடப்பவர்கள் போன்றே அதில் நடந்து சென்றனர். சுமைகளை ஏந்திய சேவகர்கள் விழுதுகளையும் மரத்தடிகளையும் பற்றிக்கொண்டு தள்ளாடி நடந்தனர். முதல்சேவகன் அடிதவறி விழுந்தபோது கௌரவர்கள் உரக்க நகைத்தனர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவராக விழுந்துகொண்டிருந்தனர்.

பீமன் வேர்களில் நடப்பதெப்படி என அவர்கள் விழுவதைவைத்தே கண்டுகொண்டான். இறங்கி வேர்களின் முடிச்சுகளிலும் கவைகளிலும் மட்டும் கால்வைத்து நடந்தான். அப்போதும் அவன் தடுமாறிக்கொண்டிருந்தான். தருமன் “மந்தா, என்னைப் பற்றிக்கொள்” என்று சொன்னதுமே விழுந்துவிட்டான். அவன் நிலத்தை அடைவதற்குள் பீமன் அவன் தோள்களைப் பற்றி நிறுத்தினான். “மூடா, நான் விழுவேன் என அறியமாட்டாயா நீ?” என்றான் தருமன். சிறுவனாகிய பார்த்தன் ஓரிரு முறை அடிவைத்ததுமே வேர்களின் பின்னலைப் புரிந்துகொண்டு மிக விரைவாக வேர்ப்புடைப்புகள் மேல் கால் வைத்து முன்னால் சென்றான். தருமன் புன்னகையுடன் அவனை நோக்கியபின் “விட்டில் போலத் தாவுகிறான்” என்றான்.

பீமன் துரியோதனனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் ஒருகணம் கூட தயங்காமல் வேர்களில் கால்வைத்து இறங்கி அமைதியாக நடந்து சென்றான். பீமன் உட்பட பாண்டவர்கள் கௌரவர்கள் அனைவருமே சமநிலைக்காக கைகளை விரித்துக்கொண்டு நடந்தபோது அவன் மட்டும்தான் இயல்பான கைகளுடன் சென்றான். “அவனுக்கு அங்கே காட்டுக்குள் ஒரு வனதெய்வத்தின் அருள் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் மந்தா. அவனால் இப்போது குறுவாட்களை தன் பார்வையாலேயே வளைக்கமுடிகிறது” என்றான் தருமன். “அவன் நடப்பதைப்பார். அத்தகைய நடையை நீ எப்போதாவது மானுடர்களில் பார்த்திருக்கிறாயா?” தருமன் இரவும்பகலும் துரியோதனனையே எண்ணிக்கொண்டிருந்தான். பீமனிடம் அவனைப்பற்றி மட்டுமே பேசினான். “அவன் நம் குலத்தை அழிப்பவன் என்று நிமித்திகர் சொல்கிறார்கள். நான் மூன்று வெவ்வேறு நிமித்திகர்களை வரவழைத்து கேட்டுவிட்டேன். அவன் கலியின் பிறப்பு. இந்த பாரதவர்ஷத்தை அவன் அழிப்பான். அதற்குமுன் நம் குலத்தை வேரறுப்பான்.”

தமையனின் சொற்களை முற்றிலும் சிந்தையை விட்டு விலக்க பீமன் பயின்றிருந்தான். ஆனால் அச்சொற்களின் பொருளைத்தான் சித்தத்தில் ஒட்டாமல் உதிர்க்கமுடிந்தது என்றும் அவ்வுணர்வு தன்னுள் நிறைந்துகொண்டுதான் இருக்கிறது என்றும் அவன் அறிந்தான். அவன் கூடுமானவரை தருமனை தவிர்த்தான். தன் உலகில் எப்போதும் தனித்தலைந்த அர்ஜுனனை நெருங்கவில்லை. தங்களுக்குள்ளேயே விளையாடி பிறரில்லாமல் வாழ்ந்த நகுலனும் சகதேவனும் அவனை ஏற்கவில்லை. அவன் அரண்மனையை விட்டு வெளியேறி யானைக்கொட்டிலிலும் குதிரைநிரைகளிலும் அலைந்தான். கோட்டைவழியாக நகரைச் சுற்றிவந்தான். தெற்குவாயில் வழியாக மயானங்களிலும் வடக்குவாயில் வழியாக புராணகங்கையின் சதுப்புக்காடுகளிலும் திரிந்தான்.

மானுடர் தங்களுக்கான சின்னஞ்சிறு உலகங்களை உருவாக்கிவைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள் என்று பீமன் எண்ணிக்கொண்டான். அதனுள் செல்லுபடியாகும் எளிய விதிகள், அவ்விதிகளைப் பின்பற்றி அடையும் எளிய வெற்றிகள். அதனுள் நுழையும் ஓர் அயலான் அவ்விதிகளை கலைத்து வெற்றிகளை தடுத்துவிடுவான் என்பதுபோல கைகளால் தடுத்து வேலியிட்டுக்கொண்டு பகைநிறைந்த விழிகளால் நோக்குகிறார்கள். அவன் நுழையும் எந்த ஆட்டக்களத்திலும் உடனடியாக அங்கிருந்த அனைவராலும் வெறுக்கப்பட்டான். அவனால் இயல்பாக நுழையக்கூடியதாக இருந்தது சிறுவர்களின் களியுலகம் மட்டுமே. அங்கே அவன் தன்னை ஒரு எளிய குரங்காக மாற்றிக்கொண்டு உள்ளே நுழையமுடிந்தது. பேருடல் கொண்டவற்றை சிறுவர்கள் விரும்பினார்கள். அதை அவர்களால் வெல்லவும் முடிந்ததென்றால் அவர்கள் களிவெறிகொண்டார்கள். அவன் அவர்கள் முன் அறிவில்லாத பெருவானரமாக சென்றான். அவர்களிடம் பிடிபட்டு அடிவாங்கினான். அவர்களால் கட்டப்பட்டு நின்று முகத்தைக் கோணலாக்கி கெஞ்சினான். அவர்களைச் சிரிக்கவைத்து தானும் சேர்ந்து சிரித்தான்.

ஆனால் மிக விரைவிலேயே அவனுள் இருந்த யானை அவ்விளையாட்டில் சலிப்புற்றது. சற்றுநேரம் கழிந்ததும் அவன் அவர்களை சிறுவர்களாக்கி உதறிவிட்டு தனித்து விலகி தன்னுடைய பேருடலுக்குள் ஒடுங்கிக்கொண்டு தனித்திருந்தான். அவன் யானையென நுழைய முடிந்தது துரியோதனனின் உலகில் மட்டுமே. அவனை எதிர்கொள்ளும் நிகர்வல்லமைகொண்ட யானை. யானை என்பது அப்பேருடலே என யானை நன்கறியும். இன்னொரு யானையைப் பார்க்கையில் அது முதலில் மத்தகத்தோடு மத்தகம் சேர்த்து அதன் உடலையே அறிகிறது. அதனூடாக தன் உடலையும் அறிகிறது. இன்னொரு யானையுடன் உடல்முட்டி கொம்புகள் பிணைத்து துதிக்கைதழுவி விளையாடும் யானை தன் பேருடலைத்தான் கொஞ்சிக் கொள்கிறது, தான் யானையாக இருப்பதைத்தான் அது கொண்டாடுகிறது.

தன் தோள்களை துரியோதனன் அறிந்த அளவுக்கு வேறெவராவது அறிவார்களா என்று பீமன் எண்ணிக்கொண்டான். பிற அனைவருக்குமே அவை அச்சத்தையே முதலில் எழுப்புகின்றன. பின் திகைப்பை. அச்சமும் திகைப்பும் அவர்களை விலக்குகின்றன. அதன்பின் அவர்களின் விழிகள் அவற்றை வியந்து நோக்குகையில் அவனை ஒரு விலங்காக அல்லது கற்சிற்பமாக அல்லது புராணத்திலிருந்து எழுந்துவந்த ஒரு தேவனாக மட்டுமே காண்கின்றன. அவனை ஈன்ற குந்தியின் விழிகள் கூட அவனை நெருங்கிவரவில்லை. அனகையின் விழிகள் அவனை இன்னும் வளர்ந்த மைந்தனாக எண்ணத்தொடங்கவில்லை. அவனுடைய பேருடலை எதிர்கொள்ள அவள் கண்டடைந்த வழியாக இருக்கும் அது. அவளுடன் இருக்கையில் முதற்சிலகணங்கள் குழந்தையாக ஆனதன் விடுதலையை அடைவான். பின்னர் அந்த விடுதலையை அவன் அடைவதை அவனே பார்க்கத் தொடங்கும்போது அது நடிப்பாக தெரியத்தொடங்கும். அதை வெல்ல அவனை கொஞ்சும் அனகையை நோக்கி சினத்தைக் கொட்டுவதுதான் அவன் கண்டடைந்த வழி. ஒவ்வொருமுறை அவன் அருகணையும்போதும் “நீ என்னை இப்போதெல்லாம் வெறுக்கிறாய்… என்னைக் கண்டாலே சினம்கொள்கிறாய்” என்பாள் அனகை.

துரியோதனன் விழிகள் மட்டுமே தடையற்ற பேரன்புடன் அவன் உடலை தொட்டுத் தழுவின. அவனுடைய மெல்லிய இடக்கரம் தன் தோளைத் தொடும்போது பீமன் தன் உடல் வளர்ந்து இரண்டாக ஆகிவிட்டதுபோல் உணர்வான். அவை எப்போதும் மிக அனிச்சையாகவே வந்து தொட்டுத் தழுவி விலகின. ஆனால் அவற்றில் ஒரு முறைமை இருந்ததை அவன் உணர்ந்திருந்தான். ஒரு பயிற்சியில் அவனுடைய தசைகளில் எது அதிகக் களைப்பை அடைந்திருக்கிறதோ அதைத்தான் எப்போதும் துரியோதனனின் கைகள் தீண்டின. அதற்கு முன் அப்பயிற்சி முழுக்க அவன் விழிகள் அங்கே தீண்டியிருந்தன என்று காட்டுவது அந்தத் தொடுகை என அவன் அறிவான். துரியோதனன் உடலின் தசைகளை தன் கனவுகளில் காணும்போது அவற்றை அத்தனை நுட்பமாக அவன் பார்த்திருப்பதை அவனும் அறிவான்.

“தசைகளை எளிய மானுடர் வெறுக்கிறார்கள்” என்று துரியோதனன் ஒருமுறை சொன்னான். “நான் பிறந்தபோது பெருந்தசைகளுடன் இருந்தமையாலேயே நான் ஓர் அழிவாற்றல் என சூதர்கள் பாடத்தொடங்கினர். ஏனென்றால் தசை என்பது ஆன்மாவுக்கு எதிரானது என்று அவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. தசை மண்ணைச் சார்ந்தது என்றும் ஆன்மா விண்ணிலிருந்து வருவது என்றும் ஒரு சூதர் பாடியதை நான் கேட்டேன். ஆனால் என் உடலை நான் ஊரும் சியாமன் என்னும் பெருங்களிறைப்போலத்தான் பார்க்கிறேன். யானைமேலிருப்பவன் தானும் யானையாக ஆகிவிடுவதை உணர்வான். யானையில் செல்லும்போது யானையுடலுடன் நடந்துசெல்லும் அசைவை நான் அறிகிறேன்.”

திரும்பிவந்த துரியோதனனின் முதல்பார்வையே தன்னை முற்றிலும் விலக்கிவிட்டதை பீமன் உணர்ந்தான். மீண்டும் மீண்டும் அவன் துரியோதனனை நெருங்கமுயன்றான். தன்பிழை என்ன என்று அவனால் அறிய முடியவில்லை. “மூடா, நீ மந்தன் என்று அன்னை சொன்னது உண்மை என காட்டுகிறாய். அவனுடைய தம்பியர் முன்னிலையில் நீ அவன் உயிரை காத்தாய். உன் பாதுகாப்பில் அவன் இருப்பதாக நீ காட்டிக்கொண்டாய் என அவன் நினைக்கிறான். உன்னைக் கொன்றாலொழிய தம்பியர் முன் அவன் நிமிர முடியாது. எண்ணிக்கொள், அவன் நெஞ்சுக்குள் இப்போதிருப்பது உன் தலையை கதாயுதத்தால் உடைத்து வீசும் பெரும் வஞ்சம் மட்டுமே” என்றான் தருமன். பீமனால் அதை நம்ப முடியவில்லை. தன்னிச்சையாக அவன் செய்தது துரியோதனன் உள்ளத்தை அத்தனைதூரம் தாக்குமென எத்தனை எண்ணியும் எண்ணக்கூடவில்லை. அந்த வஞ்சம்தான் உண்மை என்றால் துரியோதனன் முன்னால் நூறுமுறை விழுந்து தோற்க சித்தமாக இருப்பேன் என்று எண்ணிக்கொண்டான்.

துரியோதனன் தனித்திருக்கும் கணம் அவன் முன் சென்று அவனுடைய விழிகளை நோக்கி அவனுக்கு தன் மேலிருக்கும் சினம் எதற்காக என்று வினவவேண்டுமென அவன் விழைந்தான். ஆனால் ஒவ்வொருமுறை அவ்வாறு சென்று நிற்கையிலும் அவ்விழிகளுக்கு அப்பால் இருக்கும் ஆன்மா மாறிவிட்டிருப்பதையே கண்டு துணுக்குற்றான். தன்னுடைய எந்தச்சொல்லும் அந்த வாயிலினூடாக உள்ளே நுழையமுடியாது என்று உணர்ந்தான். நெடுமூச்சுடன் திரும்புகையில் இன்னொரு தருணம் விளையும் என்று நம்ப தன் சொற்கள் அனைத்தையும் குவித்துக்கொண்டான்.

கானகப்பயிற்சி என்பது வேர்களிலும் கிளைகளிலும் சமன்குலையாது நின்று படைக்கலங்களைக் கையாள்வதாக இருந்தது. உடற்சமன் என்பது என்ன என்பதை கிருபர் விளக்கினார். “உடல் உள்ளமெனும் நுண் சரடில் கட்டப்பட்டு காற்றில் தொங்கும் பருப்பொருள். உடலுக்கும் உள்ளத்துக்குமான சமநிலையே மானுடர்க்கு முதன்மையானது. சமநிலை குலைகிறது என்னும் முதல் எண்ணம் வந்ததுமே உடல் சமநிலையை இழப்பதைக் காணலாம். உடலின் ஒவ்வொரு அசைவும் உள்ளத்தின் அசைவே. உடலின் நிலையழிவும் கொந்தளிப்பும் உள்ளத்தில் நிகழ்பவை. உள்ளம் நிலைபெறும்போது உடல் நிலைபெறுகிறது. ஆனால் உள்ளத்தைப்பற்ற நம்மால் முடியாது. இருந்த இடத்தில் இருந்தே பிரபஞ்சத்தை அறியும் அகல்சுடர் போன்றது உள்ளம்.”

“ஆனால் ஒரு களத்தில், நாம் விழையும் நேரத்துக்கு மட்டும் நம்மால் உள்ளத்தை நிலைபெறச்செய்ய முடியும். உடலே உள்ளமென்பதனால் உடல் நிலைபெறும்போது உள்ளமும் நிலைபெறுகிறதென்பதைக் காணலாம். உடலை கைவசப்படுத்துபவன் உள்ளத்தை வென்றவனாவான்” கிருபர் சொன்னார். “முதலில் கண்கள். உடலில் ஒவ்வொரு கணமும் நிலையிழந்து அசைபவை அவை. விழிகளை நாட்டக் கற்றுக்கொள்ளுங்கள். அசையாத விழிகள் அகத்தை நிலைகொள்ளச்செய்வதை அறிவீர்கள்.” பீமன் அனிச்சையாகத் திரும்பி துரியோதனனின் விழிகளைத்தான் நோக்கினான். அவை இரு ஒளித்துளிகள் என அசைவிழந்திருந்தன.

பகலெல்லாம் பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு அப்பாற்பட்டவனாக இருந்தான் துரியோதனன். பயிற்சியை உள்வாங்க முடியாமல் பீமனின் அகம் அலைந்துகொண்டிருந்தது. “பீமா, உன் அகத்தில் எழுந்தமரும் அலைகளை உன் கை விரல்களே காட்டுகின்றன” என்றார் கிருபர். “உள்ளத்தை வெல்லாதவன் ஒருபோதும் தன் படைக்கலத்தை ஆளமுடியாது. வீரனின் படைக்கலமென்பது பருவடிவம் கொண்டுவந்த அவன் உள்ளமன்றி வேறல்ல.” அனைத்தும் வெறும் சொற்கள் என பீமன் எண்ணிக்கொண்டான். உடலை வென்று, உள்ளத்தை வென்று, படைக்கலத்தை வென்று, உலகை வென்று வெற்றியின் உச்சத்தில் ஏறி தனிமைகொண்டு நிற்கவேண்டும். வெற்றி என்பது ஆணவத்துக்கு மானுடனிட்ட பொன்பட்டுத்திரை. எதன் மேல் வெற்றி? அவனுடைய ஆணவத்தை எதிர்க்கும் அனைத்தின்மீதும். பெண்மீது, மண்மீது, பொன்மீது, தெய்வங்கள் மீது. எழுந்து சென்று அப்பால் வேர்ப்புடைப்பில் அமர்ந்திருந்த துரியோதனனின் காலடிகளில் உடல்மண்ணில்படிய விழுந்து பணியவேண்டுமென அவன் அகம் பொங்கியது.

மாலையில் பயிற்சிகள் முடிந்து உணவருந்துவதற்காக அவன் கங்கையில் கை கழுவச்சென்றான். கங்கையின் அடிப்பகுதியெங்கும் காட்டாறு கொண்டு குவித்த மென்சேறு படிந்திருந்தமையால் நீர்நாணல்களும் சேற்றுக்கொடிகளும் நீருக்குள் காடுபோல அடர்ந்து அலைகளில் ஆடிக்கொண்டிருந்தன. வெள்ளிநாணயங்கள் போலவும் அம்புநுனிகள் போலவும் மாந்தளிர்கள் போலவும் கோதுமைக்கதிர்கள் போலவும் மீன்கள் ஒளிவிட்டபடி அலையடிக்கும் காட்டுக்குள் ஊடுருவி நீந்திக்கொண்டிருந்தன. கைகளைக் கழுவியபின் அவன் அங்கே நின்று மீன்களையே நோக்கிக்கொண்டிருந்தான். முதுகில் சிறிய முள்வரியுடன் நீர்ப்பாம்பொன்று நெளிந்து மேலெழுந்து முகத்தை மேலேழுப்பி அவனை நோக்கியபின் நெளியும் உடலுடன் விலகிச் சென்றது.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

தனக்குப்பின்னால் சருகோசை எழுவதைக் கேட்டுத் திரும்பினான் பீமன். அங்கே நின்றிருந்த சுஜாதன் வெட்கத்துடன் பார்வையை பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு கால்களை அசைத்து “தமையனார் உங்களை அழைத்துவரச்சொன்னார்” என்றான். பீமன் நெஞ்சு படபடக்க “யார்?” என்றான். “தமையனார்…” என்று சொல்லி அவன் காட்டுக்குள் சுட்டிக்காட்டினான். அங்கே நோக்கியபின் பீமன் “மூத்தவரா?” என்றான். “இல்லை, சிறியவர்” என்றான் சுஜாதன். பீமனின் அகம் சற்று கீழிறங்கினாலும் அவன் நெஞ்சின் விரைவு அப்படியேதான் இருந்தது. “எதற்கு?” என்றான். “உணவு உண்பதற்கு… அப்பங்களும் அன்னமும் அதன்பின்…” என அவன் கைதூக்கி சிறுவர்களுக்கே உரிய முறையில் சற்று திக்கி உத்வேகத்துடன் “ஊன்சோறு!” என்றான்.

பீமன் புன்னகையுடன் எழுந்து அவன் தலையைத் தொட்டு “உனக்கு ஊன்சோறு பிடிக்குமா?” என்றான். “ஆம்” என்ற சுஜாதன் “அண்ணா, நாம் மறுபடியும் குரங்குவிளையாட்டு விளையாடலாமா?” என்றான். “ஆம்… நாளைக்காலை பயிற்சி தொடங்குவதற்கு முன்பு ஆடலாம்” என்றான் பீமன். “நான் குண்டாசியை சேர்க்கமாட்டேன். அவன் கெட்டவன்போல இருக்கிறான். என்னை அவன் கேலிசெய்தான்” என்று சுஜாதன் பீமனின் சுட்டுவிரலைப்பிடித்துக்கொண்டு நடந்தபடி சொன்னான். “அவன் என்னைப்பற்றி தமையனாரிடம் கோள் சொன்னான். நான் அவனுடைய காதுக்குள் கட்டெறும்பைப் போட்டுவிடுவேன் என்று சொன்னேன்” அவன் வேர்களில் தடுக்கிவிழுந்து கைதூக்கி “என்னை தூக்கிக்கொள்ளுங்கள் மூத்தவரே” என்றான்.

பீமன் அவனை ஒற்றைக்கையால் சுருட்டி “யானை… யானை துதிக்கையால் தூக்குகிறது” என்றான். அவன் உரக்க நகைத்தபடி “யானை மத்தகம்! யானை மத்தகம்!” என்று கூவினான். தோளில் அமர்ந்துகொண்டு பீமனின் தலையை கைகளால் அடித்து “விரைவு! விரைவாகச் செல் யானையே” என்றான். அவர்கள் நெருங்கும்போதே அங்கே ஆலமரத்தடியில் கூடி அமர்ந்திருந்த கௌரவர்கள் ஓசைகேட்டு திரும்பிப்பார்த்தனர். சுஜாதனை மேலே பார்த்ததும் குண்டாசி மட்டும் எழுந்து நின்று கையை நீட்டி கூச்சலிட்டான். மற்றவர்கள் நடுவே அமர்ந்திருந்த துச்சாதனனை நோக்கிவிட்டு பீமனை நோக்கினர்.

துச்சாதனன் “வருக மூத்தவரே” என புன்னகையுடன் சொன்னதும் அனைத்து கௌரவர்களும் முகம் மலர்ந்தனர். பிரமதன், அப்ரமாதி, தீர்க்கரோமன், சுவீரியவான், தீர்க்கபாகு அனைவரும் எழுந்து சிரித்துக்கொண்டே பீமனை நோக்கி ஓடிவந்தனர். பீமன் அவர்களை அள்ளி தன் தோள்களிலும் முதுகிலும் ஏற்றிக்கொண்டான். இருவரை இடையில் வைத்தபடி கால்களை அகற்றிவைத்து நடந்துவந்தான். துச்சலன் “அன்னைச் சிலந்தி குஞ்சுகளுடன் வருவது போல வருகிறீர்கள் மூத்தவரே” என்றான். பீமன் நகைத்தபடி “சிலந்தி பசித்தால் குட்டிகளை உண்டுவிடும்… இதோ எனக்குப்பசிக்கிறது” என்றபடி குண்டாசியைத் தூக்கி அவன் வயிற்றை தன் உதடுகளால் கடித்தான். குண்டாசி கைகளை விரித்து கூவிச்சிரித்தான்.

“உணவருந்தவே அழைத்தேன் மூத்தவரே” என்றான் துச்சாதனன். “உங்கள் உடன்பிறந்தார் அங்கே குருநாதர்களுடன் உணவருந்துகிறார்கள். தாங்கள் தனியாக அமர்ந்திருந்தீர்கள்.” பீமன் புன்னகையுடன் “நான் எப்போதுமே அவர்களுடன் உணவருந்துவதில்லை. நான் உணவுண்பதைக் காண்பதை மூத்தவர் விரும்புவதில்லை” என்றான். துச்சாதனன் நகைத்தபடி “ஆம், எனக்குக்கூட தங்களுடன் உணவுண்ணும்போது எறும்பாக மாறிவிட்ட உணர்வு ஏற்படுகிறது” என்றான். பீமன் சிரித்தபடி அமர்ந்துகொண்டான். “மூத்தவர் எங்கே?” எனக் கேட்டதுமே அதை கேட்டிருக்கலாமா என ஐயுற்றான்.

“அவர் இப்போதெல்லாம் தனிமையை நாடுகிறார் மூத்தவரே. ஆகவேதான் தங்களை அழைத்தோம்” என்றான் துச்சாதனன். அதற்குமேல் அவன் பேசவிழையவில்லை என்பதைக் கண்டு பீமனும் அதைத் தவிர்த்துவிட்டான். “சேவகர்களிடம் உணவை இங்கேயே கொண்டுவரச்சொல்லியிருக்கிறேன்” என்றான் துச்சலன். பீமன் “கொண்டுவந்தபடியே இருக்கவேண்டும்… எனக்கு கடுமையான பசி” என்றான். சேவகர்கள் பெரிய பெட்டிகளில் அப்பங்களையும் நிலவாய்களில் அன்னத்தையும் கொண்டுவந்தனர். பீமன் உண்ணுவதை இளம் கௌரவர்கள் சூழ்ந்து நின்று உடலெங்கும் பொங்கிய அகவிரைவால் குதித்தபடியும் கூச்சலிட்டபடியும் பார்த்தனர். குண்டாசி பீமனைப்போலவே அமர்ந்து அவனைப்போலவே கைகளை வைத்துக்கொண்டு அப்பத்தை உண்டான். “ஒரு அப்பம்தான் இவன் உண்பான்” என்றான் சுஜாதன். “போடா போடா” என்று கூவியபடி அவனை அடிப்பதற்காக குண்டாசி மெல்லிய கையை நீட்டியபடி எழுந்தான்.

பீமன் உண்டு முடித்ததும் எழப்போனபோது துச்சாதனன் “மூத்தவரே, இனிமேல் பயிற்சிகள் இல்லை அல்லவா? புதியவகை மது ஒன்று உள்ளது, அருந்துகிறீர்களா?” என்றான். “மதுவா?” என்றான் பீமன். “பயிற்சிநாட்களில் மதுவருந்தலாகாது என்று மூத்தவர் ஆணையிட்டிருக்கிறார்.” “இனிமேல் இரவு அல்லவா? நாம் கூடாரங்களில் துயிலவிருக்கிறோம். இங்கே நல்ல குளிரும் உண்டு” என்றான் துச்சலன். “அருந்துவோம் மூத்தவரே. நாம் நம்முடைய பழைய வாழ்க்கையை நோக்கிச் செல்வதற்கு இது வழிகோலட்டும்.” பீமன் கைகளை அறைந்துகொண்டு “எடு…” என்றான்.

துச்சலன் இளம்கௌரவர்களிடம் “அனைவரும் சென்று துயிலுங்கள்… இரவு வரப்போகிறது… செல்லுங்கள்” என அதட்டி அனுப்பினான். துச்சகனும் துச்சாதனனும் சென்று அங்கிருந்த மரத்தின் பெரிய பொந்துக்குள் வைக்கப்பட்டிருந்த வெண்கலத்தாலான நான்கு மதுக்குடங்களை எடுத்து வந்தனர். “இருப்பதில் பெரியது தங்களுக்கு மூத்தவரே” என துச்சாதனன் ஒன்றை பீமனிடம் நீட்டியபின் அமர்ந்துகொண்டான். பீமன் அதை முகர்ந்து “ஊன்நெடி!” என்றான். “ஆம், வழக்கமான வடிநறவம் இது. ஆனால் இதில் ஊனைப்புளிக்கச்செய்து ஒரு ரசம்செய்து கலந்திருக்கிறார் முதுநுளவர்” என்றான் துச்சாதனன். துச்சலன் நகைத்தபடி தன் குடத்தை வாங்கிக்கொண்டு “நெஞ்சின் அனைத்துக் கண்ணிகளையும் இம்மது அவிழ்த்துவிடும் என்று சொன்னார்” என்றான். பீமன் “அங்கே கட்டப்பட்டிருக்கும் குரங்குகளெல்லாம் விடுதலை ஆகிவிடுமே” என்று நகைத்தபடி ஒரே மூச்சில் அதைக்குடித்தான். “ஆம், அழுகிய ஊனின் நெடி” என்று முகம் சுளித்து உடலை உலுக்கியபடி சொன்னான்.

அவர்கள் மதுவருந்துகையில் பேசும் பேச்சுக்களைப் பேசினர். பொருளற்ற எளிய சொற்களை மீளமீளச் சொன்னபடி துச்சாதனன் சிரித்துக்கொண்டிருந்தான். பீமனின் நாக்கு தடித்தது. வாயிலிருந்து கனத்த கோழை ஒழுகுவதை அவன் அறிந்தான். தலைக்குமேல் கனமான இரும்புக்குண்டு ஒன்று அழுத்துவதுபோலிருந்தது. “இது மிகவும்… மிகவும்” என அவன் சொல்லத் தொடங்கி அச்சொல்லிலேயே சித்தம் தேங்கி நின்றான். “என்னால் அமர்ந்திருக்கமுடியவில்லை” என்று சொல்ல எண்ணி “படுக்கை” என்றபடி கையை ஊன்றி எழமுயன்றபோது தரையை முன்னாலிழுத்ததுபோல அவன் உடல் பின்னுக்குச் சரிந்து வேரில் தலை அறைபட்டது. அடியிலாத ஆழத்தில் விழுவதைப்போலவும் தலைக்குமேல் எழுந்த மரக்கிளைகளின் இலைகள் திரவமாக மாறிச்சுழிப்பதுபோலவும் தோன்றியது. மீண்டும் எழமுயன்றபோது உடலின் அனைத்துத் தசைகளும் எலும்புகளில் இருந்து அவிழ்ந்து பரவிக்கிடப்பதை உணர்ந்தான்.

அவர்கள் குனிந்து அவனைப்பார்த்தனர். நீர்ப்படிமம் போல முகங்கள் அலையடித்தன. துச்சாதனன் “விஷம் ஏறிவிட்டது… நரம்புகளைப்பார்” என்றான். விஷமா? ஒருகணத்தில் நிகழ்ந்தவை எல்லாம் அவனுக்கு தெளிவாகத் தெரிந்தன. இனியநகையுடன் வந்து நின்ற சுஜாதனின் வெட்கிய விழிகள். “சுஜாதன்… சுஜாதன்” என்று சொன்னபடி பீமன் புரண்டு படுத்தான். அவன் புரண்டாலும் அவன் உடல் அசைவில்லாமலிருந்தது. “சுஜாதன் நல்ல குழந்தை” என்று அவன் சொன்னதை அவன் உதடுகள் சொல்லவில்லை. அவர்கள் எழுந்து நிற்பதைக் கண்டான். அவர்களுடைய கால்கள் அடிமரம்போல ஓங்கியிருக்க தலைகள் மிகத் தொலைவில் மரங்களின் மண்டைகளுடன் கலந்து தெரிந்தன.

அவர்கள் மாறிமாறிப் பேசிக்கொண்டார்கள். மிகத்தொலைவில் எவரோ தன் பெயரைச் சொல்வதை பீமன் கேட்டான். அது தருமனின் குரல் என்றும் பாண்டுவின் குரல் என்றும் தோன்றியது. மீண்டும் அதே குரல். இம்முறை அதை மிகத்தெளிவாகவே பாண்டுவின் குரல் என அறிந்தான். ‘மந்தா!’  பதிலெழுப்ப நாவோ உடலோ அசையவில்லை. பாண்டு மிக அருகே சருகுகளில் காலடிகள் ஒலிக்க நடந்துசென்றார். ‘மந்தா! எங்கிருக்கிறாய்?’ அவருக்கு எப்படித்தெரியும் என பீமன் வியந்துகொண்டான். நாட்கணக்கில் அவன் காடுகளில் இருந்திருக்கிறான். அப்போதெல்லாம் இத்தனை அச்சத்துடன் பாண்டு அவனைத் தேடியதில்லை. அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவர் அத்தனை நுட்பமாக அவனைத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்.

துச்சாதனன் அருகே நின்ற காட்டுக்கொடியை தன் வாளால் வெட்டி உருவினான். அவர்கள் ஓசையே இல்லாமல் மீன்கள் வாயசைப்பதுபோல பேசியபடி காட்டுக்கொடிகளால் அவனைக் கட்டினார்கள். கைகளையும் கால்களையும் தனித்தனியாகக் கட்டியபின் உடலோடு சேர்த்தும் கட்டினர். பின்னர் அவனை புதர்கள் வழியாக இழுத்துக்கொண்டு சென்றனர். கங்கையின் நீர் மரக்கிளைகளையும் நாணல்களையும் அரித்துக்கொண்டுசெல்லும் ஓசையை அவன் கேட்டான். அவர்கள் தன்னை இழுத்து நீரில் சரித்தபோது குளிர்ந்த நீர் தன் உடலில் பட்டு அணைத்து இழுத்துக்கொண்டதையும் அறிந்தான்.

முந்தைய கட்டுரைகுறள் – கவிதையும், நீதியும்.
அடுத்த கட்டுரைஅனல் காற்று எழும் காமம்