‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 4

பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார் 

[ 1 ]

சதசிருங்கத்திலிருந்து ஐந்து புத்தம்புதிய பாதைகள் அஸ்தினபுரி நோக்கிக் கிளம்பின. அது மரங்கள் பூத்த பின்வேனிற்காலம். சதசிருங்கத்திலிருந்து குந்தியும் ஐந்து மைந்தர்களும் சேவகரும் சேடியரும் சூழ காட்டுக்குள் நுழைந்தனர். ஹம்சகூடத்து மலர்வனத்திலிருந்து அஸ்தினபுரிக்குக் கிளம்பிய மிகமெல்லிய ஒற்றையடிப்பாதையில் வில்லேந்திய வீரர்கள் முன்சென்றபின்னர் பின்வந்த குந்தி தன் முதல்மைந்தனிடம் “தருமா, உன் வலதுபாதத்தை முதலில் எடுத்துவை” என்று ஆணையிட்டாள்.

குடுமித்தலையில் நீலமலர் சூடியிருந்த தருமன் விழிவிரித்து நிலம்நோக்கி, இலைவெளிக்குள் தெரிந்த ஒளிவானை ஒரு கணம் ஏறிட்டு, குனிந்து அம்மண்ணைத் தொட்டு தன் தலையில் வைத்து வணங்கியபின், தந்தையை எண்ணி தன் வலக்காலை எடுத்துவைத்தான். அவனுக்குப்பின் எதையும் பார்க்காத பீமன் தன் கனத்த பாதத்தை வைத்து நடந்தபோது மண் அதிர்ந்து குழிந்தது.

சேடியர் கைபற்றி நடந்த பார்த்தன் தமையன்களிருவர் முன்செல்வதையும் சூழ்ந்திருந்த காட்டையும் ஒரு விழியோட்டலால் பார்த்தபின் தன் வலக்காலெடுத்து வைத்தான். நகுலனையும் சகதேவனையும் சேடியர் மண்ணிலிறக்கி அவர்களின் சிறிய வலக்கால்களை ஒருசேரத் தூக்கி அம்மண்ணில் வைத்தனர். சேடியர் தோள்பற்றி நடத்திய குழந்தைகள் இருமுறை மென்பொதிப்பாதம் தூக்கி வைத்து இளம்கால்களில் தள்ளாடி திரும்பி சேடியர் ஆடைகளைப் பற்றிக்கொண்டு அண்ணாந்து தூக்கிக்கொள்ளும்படி குதித்து எம்பின.

குந்தி குனிந்து அப்பாதையைப் பார்த்து தன்னுள் சுருளவிழ்ந்து நீண்டுசென்ற பெரும்தொலைவை உணர்ந்து நீள்மூச்செறிந்து சேடியரிடம் போவோமென தலையசைத்து காலடியெடுத்து வைத்தாள். இளங்காலையில் குளிர்ந்திருந்த காட்டுப்பாதையில் பன்றிகள் உழுதுபுரட்டியிருந்த புதுமண்ணின்மேல் சிறு குருவிகள் இரைதேடி சிறகசைத்து எழுந்தமர்ந்துகொண்டிருந்தன. காலடிகேட்டு அவை எழுந்து மணிவிழி திருப்பி, கூரலகு திறந்து சில்லொலி எழுப்பின. முதல் குருவியான காமினி தன் துணைவனாகிய குலிகனிடம் ‘ஐந்து கண்கள்!’ என்றாள். அவன் திரும்பிப்பார்த்து ‘ஆம், ஐந்துபாதைகள்!’ என்றான்.

ஒளிவிடும் சின்னஞ்சிறு பூச்சிகள் நுண்யாழிசைத்து சிறகதிர சூழப்பறப்பதாக இருந்தது சகதேவனின் பாதை. அவை ஒவ்வொன்றின் பார்வையையும் உணர்ந்தவனாக அவன் மென் தொடைகளால் சேடியின் இடையில் உதைத்து எம்பிஎம்பிக் குதித்து வாய்நீர் மார்பில் சொட்ட சிரித்தும் நாக்கைநீட்டி சிற்றொலி எழுப்பியும் சுட்டுவிரலை வளைத்துச் சுட்டிக்காட்டினான். இசைமேல் ஏறிச்சென்ற கொசுக்கள். நீலமணியுடலை காற்றில் எவ்வி விம்மல் ஒலிக்கப் பறந்து இருந்தெழுந்த ஈக்கள். துடிப்பின் துளியான தெள்ளுக்கள். ஒளிரும் கருவிழி மட்டுமேயான வண்டுகள். கண்ணீரை நூலாக்கி அதிலாடும் சிறு வெண்சிலந்திகள். ஒளியூடுருவும் அஸ்வினிப்பூச்சிகள். பால்துளிகள், பனித்துளிகள், குருதித்துளியென இந்திரகோபம்.

கைகளை வீசி சகதேவன் அவற்றைப் பற்ற முயன்றான். பட்டு நகம் நீண்ட சின்னஞ்சிறு விரல்களை விரித்து அவற்றின் அசைவை அவன் நடித்தான். கால்களை எம்பி அவற்றுடன் பறக்க முனைந்தான். பறக்கும் மலர்கள். இமைக்கும் விழிகள். இசைக்கும் யாழ்கள். சிதறும் வண்ணங்கள். சுழலும் ஒளிப்பொறிகள். அவன் ‘அதோ நான் அதோ நான்!’ என்றான். அவன் சொல்வதென்ன என்று விளங்காத சேடிப்பெண் “அதோ… அதோபாருங்கள் அரசே… பாறை. பாறைக்கு அப்பால் மலை!” என்றாள். “பாறை… எவ்வளவு பெரிது! எத்தனை அசைவற்றது!”

அவன் சிரித்துக்கொண்டு சொட்டும் வாயால் ஒற்றைப்பால்துளிப் பல்காட்டிச் சிரித்து துள்ளித் துள்ளி எழுந்தான். அவன் கையருகே இரு ஒளிக்கதிர்களை சிறகெனச் சூடி ஒரு தும்பி பறந்துசென்றது. அவன் நீட்டிய கையின் விரல்கள் நடுவே ஒரு ஈ விம்மியபடி சுழன்றது. நிறைதுளித் தேனுடன் பிங்கலன் என்னும் தேனீ அவனைக்கண்டு அருகே வந்து அவன் கண்களை நோக்கியபின் சுழன்று விலகிச் சென்றது. தன் கூடு சென்று தேனைச் சொட்டியபின் தோழர் முன் நின்று தான் கண்ட பேரழகனின் விழிகளை விவரிக்க நடனமொன்றைத் தொடங்கியது.

இலைச்செறிவிலிருந்து நீட்டி நின்ற மலர்க்கொத்திலிருந்து எழுந்தன சிறுபூச்சிகள். வண்ணவிசிறியென விரிந்து காற்றில் படபடத்து எழுந்தமைந்து அவனை நோக்கி வந்து பொய்விழி விரித்து அவனை நோக்கி பின் திரும்பிச்சென்றது ஒரு வண்ணத்துப்பூச்சி. காற்றிலமைந்து திரும்பியது கணநேரச் சிறுத்தை. தோகை விரித்து மீண்டது மாயமயில். காற்று அதையள்ளி பச்சை இலைகளுக்கப்பால் செலுத்த அவன் எம்பிக்குதித்து கைநீட்டி வீரிட்டான். “இந்தா… இதோ பழம்… பழம்வேண்டுமா?” என்று சேடி கேட்டபோது அவன் வாயருகே வந்த அவள் கையை தள்ளிவிட்டு அழுதான்.

கலைந்த காட்டுக்குள்ளிருந்து நூறு வண்ணத்துப்பூச்சிகள் எழுந்தன. கபிலநிறப்புரவியொன்று காற்றில் குஞ்சியுலைத்தது. இளநீல விழியொன்று இரு இமை தவிக்க ஏனென்று வினவியது. செங்கனல் கீற்றுகளிரண்டு காற்றை அறிந்தன. பிங்கலக் குதிரைக்கூட்டம் குளம்பின்றிச் சிதறிப்பரந்து குவிந்து சென்றது. எங்கும் பற்றிக்கொள்ளாமல் நெருப்பு பரிதவித்தது. சொல்லற்ற விழிகள் திகைப்பொன்றையே அறிந்திருந்தன. அவன் தன் வாய்க்கு மேல் கையை மடித்து அழுத்தி அசைத்தபடி உள்ளங்கால்களை வளைத்து சிறுகட்டைவிரலை நெளித்துக்கொண்டிருந்தபின் வாய்நீர் குழாய் சிறுநெஞ்சில் சொட்டி வழிய சேடியின் தோளில் தலைசாய்த்து துயின்றான். கனவுக்குள் அவன் சிறகுகளுடன் பறந்தெழுந்தான்.

மலர்களால் ஆனதாக இருந்தது நகுலனின் பாதை. பல்லாயிரம் காலூன்றி பல்லாயிரம் கைநீட்டி வண்ணங்களேந்தி நின்றன மரங்கள். எரிமஞ்சள் கொழுந்துகள். செவ்வெரித் தழல்கள். பொன்னொளிர் மணிகள். நீலக்குலைகள். அவன் சிறுவிழிகளுக்குள் காட்டின் வண்ணங்கள் சிறுதுளியெனச் சுழன்று சுழன்று கடந்துசென்றன. சிறுமேனியில் பூமுள் என புல்லரித்திருந்தது. இடக்கையை மடித்து வாய்க்குள் வைத்து சேடியின் தோளில் தலைசாய்த்து அவன் இல்லாமலிருந்துகொண்டு வந்தான்.

அவள் குனிந்து “என்ன பார்க்கிறீர்கள் அரசே? என் இளவரசர் என்ன பார்க்கிறார் அப்படி?” என அவன் மென்கன்னத்தில் தன் மூக்கை உரசியபோது கலைந்து அசைந்து கையால் கன்னங்களைத் தடவியபின் மீண்டும் வண்ணங்களில் ஆழ்ந்தான். தன் இடைக்குழந்தை நெடுந்தொலைவிலிருப்பதை அஞ்சியவள் போல அவன் கன்னங்களைப்பற்றித் திருப்பி “இதோ யானை வரப்போகிறது! யானை…”  என்று அவள் சொன்னாள். அவன் இமைகள் ஒருமுறை தாழ்ந்து எழுந்தன.

ஒளிவெள்ளத்தைக் கிழித்து அசைந்தன இலைநுனிக்கூர்கள். காற்றில் உலையும் அல்லிகளிலிருந்து உதிரும் மலர்ப்பொடிகளையும் கண்டது குழந்தையின் கண். இதழ்களுக்குள் தேங்கிய ஒளியின் விளிம்புவட்டம். இதழ்க்குடுவைக்குள் விழும் புல்லிவட்டத்தின் நிழல். மலர்நிழல் விழுந்த மலரின் வண்ணத்திரிபு. வண்ணங்கள் ஒளியை அறியும் முடிவிலி. விஷம்குளிர்ந்த நீலம். தழலெரியும் மஞ்சள். குமிழிகள் வெடிக்கும் கொழுங்குருதி…

விண்பனித்து திரண்ட முதல்துளியென சிற்றுடலில் விழித்த பிரக்ஞை உணர்வு குடியேறா வண்ணங்களில் உவமை நிகழா வடிவங்களில் தன்னைக் கண்டு நீ பிரம்மம் என்றது. குழந்தையின் கைகள் குளிர்ந்து வாயிலிருந்தும் தோளிலிருந்தும் நழுவிச்சரிந்தன. அதன் கால்கள் மெல்லிய வலிப்பு போல இருமுறை சொடுக்கி உலுக்கிக்கொள்ள சேடி திரும்பி “என்ன?” என்றாள். ஒளி மயங்கிய விழிகளுடன் குழந்தை பெருமூச்சு விட்டு துவண்டு அவள் தோள்களில் தலைசாய்த்து மெல்ல முனகியது.

பறவைகளின் பாதையில் சென்றுகொண்டிருந்தான் பார்த்தன். வெயில் அலையடித்த விசும்புநுனியில் மெல்லச்சுழன்ற செம்பருந்தின் விழிகளை அவன் விழிகள் ஒருகணம் சந்தித்துச்சென்றன. அவன் ‘ம்’ என முனக அது திகைத்து காற்றில் மூழ்கி கீழிறங்கி சிறகசைத்து நீந்தி மீண்டும் மேலே சென்றது. ஏரிக்களிமண் நிறத்தில் காற்றில் பிசிறிய மென்சிறகுகளை அசைத்து எம்பி சிற்றடி எடுத்துவைத்து மண்ணில் குனிந்து கொத்திய பிலுக்கான்குருவிகளில் ஒன்று ‘ஆ! ஒருவன்’ என்றது. ‘ஆம் ஆம் ஆம்!’ என ஒலித்து அவையனைத்தும் சிறகுவிரித்து காற்றின் சரடுகளைப்பற்றி மேலேறி ஆடிய மரக்கிளைகளில் அமர்ந்துகொண்டன.

புதர்களுக்கிடையே காற்றசைவு போல ஓடிய செம்போத்து ஒன்று எழுந்து கனல்துளிவிழி உருட்டி நோக்கி ‘ஆம்! ஒருவன்!’ என்றது. அதன் உறுமல் ஒலிகேட்டு மரக்கிளைகளில் நிழலுக்குள் அமர்ந்திருந்த காடைகள் ‘ஆம்!’ என்றன. ஒவ்வொரு ஒலியையும் அவன் தனித்துக்கேட்பதை, ஒவ்வொரு விழிகளையும் அக்கணமே அவன் விழிவந்து தொடுவதை அவை உணர்ந்து திகைத்துச் சிறகடித்து எழுந்தன. பறவைவிழிகளைச் சந்திக்கும் முதல்மானுடக் கண்கள் என்றது ஒரு பெண்குயில். இலைப்படர்ப்புக்குள் வெண்கருமை வரியோடிய உடலுடன் அமர்ந்திருந்த அதன் விழிகளை நோக்கி பார்த்தன் புன்னகை செய்ய அது மரப்பட்டைக்குப்பின் சென்றது. அதன் காதலன் உச்சிக்கிளையிலமர்ந்து ‘இங்கே இங்கே’ என குரலெழுப்பியது.

மரங்கொத்திகளின் தாளத்தில் பறவைக்குரல்கள் சுழன்றிசைக்க தன் இசைக்குள் அமிழ்ந்திருந்த அக்காட்டில் அவன் ஒருவன் மட்டுமே நடந்துகொண்டிருந்தான். இலைத்தழைப்பின் உச்சிவிதானத்திலிருந்து வெயிலில் ஏறிக்கொண்ட காகங்கள் நிழல்மேல் நிழலென வந்து மண்ணிலமர்ந்து திரும்பி நோக்கி கரைந்தன. கண்வரைக்கும் அலகு நீண்ட நாகணவாய்கள் அமர்ந்திருக்கும் நிறத்தை சிறகுவிரித்து மாற்றிக்கொண்டன. நீலச்சிறுமணி மீன்கொத்தியொன்று கூரம்புபோல கடந்துசென்றது. அனைத்தும் அவன் விழிகளை அறிந்திருந்தன. அனைத்தும் அவன் விழிகளுடன் விளையாடின.

மிருகங்களாலானது பீமனின் பாதை. அவன் பாதையில் காலெடுத்து வைத்த முதலதிர்விலேயே அப்பால் ஈரப்புதர்க்குழியில் குட்டிகளுடன் படுத்திருந்த தாய்ப்பன்றி பிடரிமுள்மயிர்கள் சிலிர்க்க மெல்ல உறுமி ‘அவன்!’ என்றது. கரும்பட்டுச்சுருள் குட்டிகள் அன்னையின் அடிவயிற்றில் மேலும் ஒண்டிக்கொள்ள ஒன்றுமட்டும் சிவந்த சிறுமூக்கைத் தூக்கி காதுகளை முன்னால் குவித்து எழுந்து புதருக்குள் நின்று மண்ணை குழித்துச்செல்லும் கனத்தபெரும் பாதங்களைப் பார்த்து வாலைச்சுழித்து சற்று முன்னால் வந்து உடல்முடி சிலிர்க்க பலாப்பிஞ்சு என மாறி மெல்ல சிறுகாலெடுத்துவைத்து மேலும் நெருங்கி தலையை மண்ணளவுதாழ்த்தி சிறுவிழிகளால் நோக்கி ‘நீ’ என்றது.

அவன்சென்ற பாதையிலிருந்த அனைத்து மிருகங்களும் அவனை அறிந்தன. தேன்கூடு நோக்கி பாறையொன்றில் தொற்றி ஏறிய பெருங்கரடி நீள்நகப்பிடியை மேலும் இறுக்கி கரிய தலையைத் திருப்பி நோக்கி தன் உடலுக்குள்ளேயே உறுமிக்கொண்டது. மான்கூட்டங்கள் துள்ளி விலகிச்சென்று தலைதிருப்பி நோக்க அவன் காலடி ஒவ்வொன்றும் அவற்றின் உடலில் விதிர்த்தது. மரக்கிளை தழுவிக்கிடந்த மலைப்பாம்பு ஒன்று மெல்ல நழுவி கீழிறங்கி உடலற்ற பெரும்புயமென புடைத்து நெளிந்து மீண்டும் வளைந்து தன்னைத் தான் தழுவி இறுகிக்கொண்டது. அப்பால் எழுந்த கரும்பாறை தன் இருள்அளை வாய் திறந்து வேங்கை முழக்கத்தால் அவனை அறிந்தேன் என்றது.

அடர்மரங்களினினூடாகச் சென்ற பாதையின் வலப்பக்கத்திலிருந்து மூச்சு சீறக்கேட்டு திரும்பிய சேவகர்கள் புதர் விலக்கி எழுந்த இரு வெண்தந்தங்களைக்கண்டு திகைத்து பின்னால் நகர்ந்து வேல்களைத் தூக்கி வில்களை நாணேற்றி கைநீட்டி அசையவேண்டாமென சைகையாற்றினர். மண்மூடிய சிறுகுன்றுபோல சிறுசெடிகள் முளைத்த மத்தகமும் வெடித்தகளிமண் போன்று வரியோடிய துதிக்கையுமாக எழுந்து வந்த பெருங்களிறு நகம் சிரித்த கால்பொதிகளைத் தூக்கி வைத்து அவர்களை நோக்கி வந்து நின்று தன் துதிக்கையை நீட்டி விரல்மூக்கை அசைத்து மணம் தேடியது.

பீமன் தயங்காநடையுடன் அதை நோக்கிச்சென்றான். “அரசே!” என்று கூவியபடி அவனைப் பிடிக்கச்சென்ற அனகையை குந்தி “அவனை விடு” என்று சொல்லி கைபற்றித்தடுத்தாள். அவன் யானையை அணுகியதும் அதன் செவிகள் அசைவிழக்க தலையைக் குலைத்தபடி அது இரண்டடி பின்வாங்கியது. அவன் மேலும் நெருங்க ‘யார்?’ என்ற ஒலியுடன் அது மேலும் ஒரு அடி பின்னகர்ந்து தலையைக் குலுக்கியது. அவன் அணுகி அதன் முன் கை நீட்டி நின்றபோது அதன் செவிகள் முன்கூர்ந்து நுனிக்கிழிசல் தொங்கல்கள் காற்றிலாடின. துதிக்கை நீண்டு வளைந்தெழுந்து அதன் செந்நுனி தவித்து அவன் தோளைத்தொட்டு தலைக்குச் சென்றது. அதன் மூச்சு சீறி அவன் கூந்தல் பறந்தது.

அவன் அதன் இரு தந்தங்களையும் இரு கைகளால் பற்றி துதிக்கைமேல் தன் கைமுட்டியால் அறைந்தான். தொலைதூரக் கருமேகத்துக்குள் இடியோசை என யானை மெல்ல உறுமி மத்தகம் தாழ்த்தி அவன் கால்களை துதிக்கையால் வளைக்க முயன்றது. அவன் அதன் தொங்கிய ஈர வாயை கையால் அசைக்க ‘ஆம், நீதான்!’ என்று அது உறுமியது. பீமன் “செல்வோம்” என்றான். அவர்கள் யானையைக் கடந்துசெல்ல யானை நீள்மூச்சொலிக்க பாதையோரமாக செவிகளை ஆட்டி தன்னுடலில் தானே ததும்பி நின்றது. அவர்கள் சென்ற வழியே அதுவும் சிறுதூரம் வந்து பின் நின்று துதிக்கை தூக்கி மத்தகத்தின் மேல் வைத்து ‘சென்றுவருக’ என ஒலித்தது.

ஒலிகளால் நிறைந்தபாதையில் தருமன் நடந்தான். ஆடும் கிளைகளில் குலைந்துலைந்து சிலிர்த்து நடுங்கியதிரும் இலைத்தழைப்புகளுக்குள் சென்ற காற்று காயத்ரியாக இருந்தது. கிளைகளில் அறையும் கனத்த கொடிகளில் அனுஷ்டுப் ஒலித்தது. உரசிக்கொள்ளும் கிளைகளில் உஷ்ணுக் விம்மியது. கல்அலைத்தொழுகிய கறங்குவெள்ளருவியின் பிருஹதியை, கால்பட்டுத் தவம்கலைந்த பெரும்பாறை மலைச்சரிவிறங்கும் திருஷ்டுப்பை அவன் கேட்டான். மயில்களின் அகவலில், சிம்மக்குரலின் அறைதலில், மான்குளம்புகளின் துள்ளலில், பாம்பிழையும் தூங்கலில் அழியாச்சொல் குடியிருந்த காட்டை அவன் அறிந்தான்.

சதசிருங்கத்துக்கும் அஸ்தினபுரிக்கும் நடுவே இருந்த ஐயங்களின்மேல் குழப்பங்களின் மேல் அச்சங்களின் மேல் கால்வைத்து நடந்துகொண்டிருந்தாள் குந்தி. பாண்டுவின் இறப்புக்குப்பின் பதினொன்றாம் நாள் மாண்டூக்யரும் மூன்று கௌதமர்களும் இந்திரத்யும்னத்தின் கரையில் கூடியபோது அவள் தன் மைந்தர்களுடன் நகர் திரும்புவதாகச் சொன்னாள். அது மறைந்த மன்னனின் விருப்பம்தானா என்றார் ஏகத கௌதமர். தன் விருப்பமென்னவென்று அவன் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றாள் குந்தி. அவன் அவர்களுக்கு ஒரு பெயர் மட்டுமே என்றாள்.

தான் முடிவெடுத்துவிட்டதாகவும் மறுநாளே கிளம்புவதாகவும் அவள் சொன்னபோது மாண்டூக்யர் ‘அவ்வாறே ஆகுக’ என்றார். ஐந்து குழந்தைகளுக்கும் வாழும் உறவென்பது அவள் மட்டுமே என்பதனால் நூல்நெறிப்படி அவளை மறுக்கவியலாது என்று அவர் சொன்னபோது மூன்று கௌதமர்களும் தலையசைத்தனர். திரிதகௌதமர் புன்னகையுடன் “தானறிந்த உலகில் தானறியா ஆடலுக்கு மைந்தர்களை இறக்கிவிடுவதுதான் அனைத்துப்பெற்றோரும் செய்வது” என்றார். மாண்டூக்யர் அவரைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டார்.

மறுநாள் பாண்டுவின் சிதைச்சாம்பல் விலக்கி அங்கே வெந்து வெண்சுண்ணவடிவாகக் கிடந்த எலும்புகளை எடுத்தனர். இருவர் எலும்புகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து கிடந்தன. ஏழு எலும்புகளை எடுத்து அவற்றை பாண்டு என உருவகித்தார் காசியபர். ஐந்து எலும்புகளை எடுத்து அவற்றை மாத்ரி என உருவகித்தார். பச்சைமண்கலங்களில் அவற்றை அடைத்து மண்தட்டால் மூடியிட்டு தேன்மெழுகால் விளிம்புகள் மூடி மஞ்சள்பட்டால் முடிந்து இரு சந்தனப்பெட்டிகளில் எடுத்துக்கொண்டு  அவர்கள் கிளம்பினர்.

சதசிருங்கத்திலிருந்து வைத்த முதல் அடியிலேயே அவள் அஸ்தினபுரியை அடைந்து விட்டாள். ஏழாண்டுகளுக்கு முன் விட்டுவந்த கோட்டை முகப்பை, கொடிபறக்கும் காவல்மாடங்களை, திறந்து காத்திருக்கும் பெருவாயில்களை, வண்டிகள் அணிவகுத்து உள்ளே நுழையும் சாலையை, வேல்களின் ஒளியை, வாளுறைகளின் ஒலியை, குதிரைகளின் வாசனையை அறிந்தாள். தன் நெஞ்சுக்குள் நிகழப்போகும் ஒவ்வொன்றையும் மீண்டும் மீண்டும் நிகழ்த்திக்கொண்டாள். ஓர் உச்ச உணர்வில் அவள் விழித்து தன்னிலை அறிந்தபோது மானுடர் வாழ்வது எத்தனைமுறை என்ற எண்ணத்தை அடைந்து புன்னகையுடன் நெடுமூச்செறிந்தாள்.

ஐந்து மைந்தர்களையும் மீளமீள விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தாள் குந்தி. ஐவரும் செல்லும் இச்சிறிய செம்பாதையின் இருபக்கமும் தெய்வங்கள் வந்து நோக்கி நிற்கின்றனவா என்ன? பின்னாளில் எப்போதோ இதை சூதர்கள் பாடப்போகிறார்கள். காவியங்கள் விவரிக்கவிருக்கின்றன. எண்ணிஎண்ணிச் சலித்த அகம் ஒரு கணம் அனைத்திலிருந்தும் விலகியபோது யார் இவர்கள், என்ன செய்யவிருக்கிறார்கள் என அவளுக்குள் வாழ்ந்த யாதவச்சிறுமி திகைத்தாள். மறுகணமே பின் தங்கிய குட்டி அன்னையை நோக்கி ஓடுவதுபோல தன்னை நோக்கி தானே ஓடியணைந்தாள்.

மூன்றுநாட்களில் கந்தமாதன மலையைக் கடந்து மேலும் நான்குநாட்கள் நடந்து நாகசதத்தை அடைந்து தென்கிழக்காகத் திரும்பி மலையிறங்கிச்சென்றனர். ஒவ்வொருநாளும் உயர்ந்த மரங்களுக்கு நடுவே கட்டப்பட்ட மரவுரித்தூளிகளில் அவளும் மைந்தர்களும் துயில கீழே எரியும் பந்தங்களுடனும் படைக்கலங்களுடனும் சேவகர்கள் காவலிருந்தனர். அதற்குள் அவள் அஸ்தினபுரியில் பலகாலம் வாழ்ந்துவிட்டிருந்தாள். அனைத்து இக்கட்டுகளையும் கடந்திருந்தாள். மரவுரித்தூளியில் காலையில் எழுகையில் மணிமுடி சூடிய சக்ரவர்த்தினியாக இருந்தாள்.

பீதகூடத்தின் காட்டில் அவளை முதல்கதிர் எழுந்த காலையில் எழுப்பிய அனகை “இறையருள் துணை நிற்கட்டும் அரசி. இன்று வைகானச மாதம் பன்னிரண்டாம் வளர்நிலவுநாள்” என்றாள். “நல்லவை நிகழட்டும்” என்று சொல்லி எழுந்து தன் கைகளை விரித்து நோக்கியபின் குந்தி நூலேணி வழியாக கீழிறங்கினாள். அங்கு வந்த இரவிலேயே அப்பால் நீரோசை கேட்டிருந்தாள். “அது காட்டாறா?” என்றாள். அனகை “ஆம் அரசி. கங்கைக்குச்செல்லும் மனஸ்வினி என்னும் சிற்றாறின் துணையாறுகளில் ஒன்று. தெளிநீர் ஓடுவது” என்றாள். அவள் முன்னால் நடக்க கையில் வேலுடனும் வாளுடனும் அனகை பின்னால் நடந்தாள்.

காட்டாற்றை அணுகியதும் குந்தி அனகையிடமிருந்து வாளை வாங்கிக்கொண்டு புதர்களைக் கடந்து காட்டாற்றின் கரைக்குச் சென்றாள். வழுக்கும் உருளைப்பாறைகளின் சரிவில் மெல்லக் காலெடுத்துவைத்து இறங்கி காட்டாற்றை அடைந்தாள். பாறைகள் நடுவே வெண்ணிறச்சிதர்களாக உடைந்து பெருகி இறங்கி பரவி நுரைத்து மறுபக்கம் இறங்கி ஒலித்து மறைந்துகொண்டிருந்த காட்டாற்றின் விளிம்பில் குனிந்து தெளிநீரை இரு கைகளாலும் அள்ளி முகத்தில் விட்டு கழுவிக்கொண்டாள். மீண்டும் அள்ளக்குனிந்தபோது அப்பால் நீருக்குள் இருந்து கருநிற உடல்கொண்ட ஒரு வேடன் எழுவதைக் கண்டாள்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

சேற்றிலூன்றிய வாளைக் கையிலெடுத்து “யார் நீ?” என்றாள் குந்தி. “படைக்கலமில்லாதவன், எளிய மலைவேடன்” என்றான் அவன். அவள் வாளைத்தாழ்த்தி “நான் நீராடவிருக்கும் இடம் இது… எழுந்து வெளியே வா” என்றாள். அவன் “எழுந்து வர கால்களில்லாதவன் நான்” என்றான். திகைப்புடன் அவள் அவன் கால்களை நோக்கி நீருக்கடியில் அவன் பாம்புடல் கொண்டு நெளிவதைக் கண்டாள். வாளைச் சுழற்றி அவள் எறியப்போவதற்குள் அவன் நீருள் பாய்ந்து சிறிய தண்ணீர்ப்பாம்பாக மாறி மூழ்கி மறைந்தான்.

அவள் நீர்ப்பரப்பை விழிகளால் துழாவியபடி நிற்கையில் இன்னொரு பாறை இடுக்கில் அவன் தலை எழுந்துவந்தது. “அஞ்சவேண்டாம் அஸ்தினபுரிக்கரசி. என் பெயர் கார்க்கோடகன். கஸ்யப பிரஜாபதிக்கு கத்ருவெனும் முதலன்னையில் பிறந்த பெருநாகம் நான். அழிவற்றவன்” என்றான். வாளைத்தாழ்த்திய குந்தி “என்னவேண்டும் உனக்கு?” என்றாள். அவன் எழுந்து பாறைமேல் அமர்ந்துகொண்டான். இடைக்குக்கீழே அவனுடைய கரிய அரவுடல் நீரலைகளுடன் இணைந்து நெளிந்தது. “அதே வினாவை உங்களிடம் வினவவே இங்குவந்தேன்… அரசி, உங்களுக்கு வேண்டியதென்ன?” என்றான்.

“நான் ஓர் அன்னை” என்று குந்தி சொன்னாள். “அன்னையர் வேண்டுவது மைந்தரின் நலம் அன்றி வேறென்ன? என் மைந்தன் அஸ்தினபுரியை ஆளவேண்டும். அவன் தம்பியர் அவனைச்சூழ்ந்து காக்கவேண்டும். என் குலம் அவர்களின் குருதியில் தழைக்கவேண்டும்.” .

கார்க்கோடகன் முகம் மாறியது. இமையாவிழிகளில் ஒளியுடன் அவன் பேச்சும் மாறியது. “உன் மைந்தன் என்றால் சூரியபுத்திரன்தானே? அவனை நீ இன்னமும் கண்டுபிடிக்கவேயில்லையே?” என்றான். குந்தி கால்கள் குழைந்து மெல்லக் கையூன்றி பாறையொன்றில் அமர்ந்துகொண்டாள். மனமயக்கத்தைக் கீறி வெளியே எழுந்து வந்து வீம்புடன் தலை தூக்கி “ஆம், அவன்தான் என் மகன். அவனை ஒருபோதும் நான் மறைக்கப்போவதில்லை” என்றாள்.

“அஸ்தினபுரிக்குச் சென்றதுமே அவனைக் கண்டுபிடிக்க சேவகர்களை அனுப்புவாய் போலும்” என்றான் கார்க்கோடகன். “அவனையே முதல்பாண்டவனாக அங்கே சொல்வாய். பாண்டுவின் கானீனபுத்திரனான இளஞ்சூரியனே வைதிகமுறைப்படி அஸ்தினபுரியின் அரியணைக்குரியவன் என்பதை நீ மன்றுகூட்டிச் சொன்னால் அவர்களால் மறுக்கவா முடியும்?” அவள் அவன் கண்களையே பார்த்தாள். அவன் சொல்லவருவதென்ன என்று அவள் அகம் அறிந்தது.

கார்க்கோடகன் புன்னகையுடன் தன் கரிய நீளுடலை நீருக்குள்ளிருந்து வளைத்து இழுத்தெடுத்து பாறையைச் சுற்றிக்கொண்டு வைரவிழிகளால் அவளை நோக்கினான். “நீ அவனைத் தேடிக் கண்டடையவேண்டியதில்லை. நானே அவன் எங்கிருக்கிறானென்று காட்டுகிறேன்.” அவன் குரல் பாம்பின் சீறலாக மாறிவிட்டிருந்தது. அவன் உடல் முற்றிலும் வெளிவந்து நெளியும் வால்நுனி பாறைமீது விரைத்து நின்று மெல்ல அசைந்தது. “அவனை அதிரதன் என்னும் தேரோட்டி உத்தரமதுராபுரியின் படித்துறையில் கண்டடைந்தான். அவன் மனைவி ராதையின் நெஞ்சு அவனுக்காகத் திறந்துகொண்டது. அவள் முலையுண்டு சூதமைந்தனாக அவன் அங்கநாட்டில் இப்போது வளர்கிறான்.”

குந்தியின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது. இருகைகளாலும் நெஞ்சைப்பற்றிக்கொண்டு உதடுகளை இறுக்கி அவள் மெல்ல விம்மினாள். “அவனை மன்றில் நிறுத்து. அஸ்தினபுரிக்கு அவனையே அரசனாக்கு. அதையன்றி நீ எதைச்செய்தாலும் சூரியமைந்தனாகிய அவனெதிரே உன் இந்திரமைந்தன் வில்லுடனும் அம்புடனும் நிற்கநேரும். அவர்களில் ஒருவருக்கே இவ்வுலகு இடமளிக்கும்” என்றான் கார்க்கோடகன்.

குந்தி துடித்தெழுந்து கைநீட்டி ஏதோ சொல்லவிழைய அவன் இடைமறித்து ” காலம்தோறும் ஆடிப்பாவைகளை எதிரெதிரே நிறுத்தி ஆடுகிறது படைப்புக்களம். அவர்கள் ஒருவிசையின் இரு முகங்கள். ஒருவன் கரியவைரம். இன்னொருவன் கருமுத்து. இருவர் வீரமும் முற்றிலும் நிகரானது. கொலைக்களத்தில் ஒருவர் அம்பினால் ஒருவர் தலையறுந்து இருவரும் விழுவதும் விதியாக இருக்கலாம்” என்றான்.

குந்தி “இல்லை” என தலையசைத்தாள். அவள் குரல் உள்நோக்கிச்சென்று நெஞ்சுக்குள் சுழன்று வந்தது. “இரு, உன் சூரியமைந்தனை இதோ உனக்குக் காட்டுகிறேன்” என கார்க்கோடகன் தன் வால்நுனியால் நீர்ப்பரப்பை மெல்லத்தொட்டான். அதிலெழுந்த அலைகள் விலகி விலகிச்சென்றழிய தெளிந்த நீர்ப்பரப்பின் ஆடியில் அவள் தன் மைந்தனைக் கண்டாள். ஒளிரும் இரு கருவிழிகளை. குடுமிக்கட்டில் இருந்து மீறி தோளிலாடிய சுரிகுழலை. கூர்ந்த நாசியை. வெண்பல் தெரிய சற்றே மலர்ந்த உதடுகளை. ஒளிவிடும் மணிக்குண்டலங்களை. குழந்தைமை விலகா இளமார்பை. நீண்ட கைகளை.

அவனுடைய உள்ளங்கைகள் சிவந்து மென்மையாக இருந்தன. அவள் அந்தக்கைகளை நோக்கியபின் வேறெதையும் நோக்கவில்லை. அணைப்பவை. கண்ணீர் துடைப்பவை. அன்னமளிப்பவை. அஞ்சேலென்பவை. வழிகாட்டுபவை. வருக என்பவை. என்றுமிருப்பேன் என்பவை. எஞ்சுபவன் நானே என்பவை. என்னிலிரு என்பவை. கைகள். அக்கைகள் மலர்ந்த மரமென அவனுடல்.

அவளருகே உடல்புடைத்தெழுந்து உயர்ந்து வந்த கார்க்கோடகன் “ஐயமே வேண்டாம் அன்னையே. இம்மண்ணில் தோன்றியவர்களில் இவனே நிகரிலா வீரன்” என்றான். “ஏனென்றால் வீரத்தையும் உதறிச்செல்ல முடிபவன் அவன். அடைவதற்காகப் போரிடுபவனல்ல, அளிப்பதற்காகப் போரிடுபவன். சினத்தால் படைக்கலமெடுப்பவனல்ல, பெருங்கருணையால் அதை ஏந்துபவன்.” சீறிய நாகக்குரல் சொன்னது “ஆமென்று ஒரு சொல் சொல். உன் மைந்தனை நீ அடைவாய். வெல்லப்படுவதற்கு உனக்கு இப்புவியிலேதும் எஞ்சியிராது!”

அவள் நடுங்கும் உடலுடன் விம்மி அழுதபடி தன் மைந்தனையே பார்த்தாள். நீரில் அலைபாய்ந்தபடி நின்ற அப்பிம்பத்தின் கண்களை நோக்கிய அவள் பார்வையை அவன் பார்வை சந்தித்தது. உளப்பேரெழுச்சியுடன் அவள் ஏதோ சொல்ல உதடசைத்தபோது அவனும் அவளிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தான். மறுகணம் அவள் அலறிக்கூவியபடி தன் கைவாளை உருவி அந்த நீர்ப்பிம்பத்தை வெட்டினாள். ஒவ்வொரு வெட்டுக்கும் அதிலிருந்து வெங்குருதி எழுந்து தெறித்தது. மாறிமாறி வெட்டும் அவளருகே கரியபேருடல் கொந்தளித்துச் சுழித்தசைய கார்க்கோடகன் கூவினான் “என்ன செய்கிறாய்? நில். என்ன செய்கிறாய்?”

வெறிகொண்டவள் போல அவள் வெட்டிக்கொண்டிருந்தாள். பின் தன்னினைவடைந்து அந்த நீரிலேயே விழுந்தாள். அவளைச்சுற்றி பச்சைக்குருதி நிணத்துண்டுகளுடன் எரிவாசனையுடன் கொழுத்துக்குமிழியிட்டு அலைசுழித்தது. அங்கெல்லாம் அருவியெனக் கொட்டி கற்பாறைகளில் மோதிநுரைத்துக்கொண்டிருந்தது குருதி. பதினான்கு அரவுத்தலைகளுடன் எழுந்து நின்ற கார்க்கோடகன் விழித்த கண்களும் பறக்கும் நாக்கும் ஒளிவிடும் வளைந்த பற்களுமாக மெல்ல அசைந்தான். “வேண்டாம்! வேண்டாம்! வேண்டாம்!” என பித்தியைப்போலச் சொன்னபடி அவள் மூச்சிரைத்தாள். பின்னர் வாளை நீரில் வீசிவிட்டு கதறியழத்தொடங்கினாள்.

பெரியதலைகளை மெல்லத்தாழ்த்தி அவளருகே வந்தான் கார்க்கோடகன். “முடிவெடுத்துவிட்டபின் அழுவதற்கென்ன இருக்கிறது? ஒவ்வொரு தனிமனிதரின் முடிவுகளின் வழியாகவும் காலம் தன் முடிவை நிறைவேற்றுகிறது.” அவள் நிமிர்ந்து அவனுடைய இமையாத கண்களை நோக்கினாள். “நான் ஆழங்களின் அரசன். என் முன் ஒரு எளிய மானுட உயிர் கண்ணீர்விடுவதைக் காண என்னால் முடியாது” என்றான். தன் முதல்தலையை சொடுக்கி நீட்டி அவள் நெற்றியில் தீண்டினான். அவள் நெற்றியைப்பொத்தியபடி பின்னால் சரிந்து குருதிச்சுழிப்பில் விழுந்தாள்.

குருதியின் இனிய அணைப்பில் கருக்குழந்தை போல மிதந்துகிடந்தாள். சுழன்று சுழன்று மென்மையான தசைபோல அதிர்ந்த பாறைகளில் முட்டிக்கொண்டிருந்தாள். “அரசி” என அனகையின் குரலை கருவறைக்கு வெளியே கேட்டாள். “அரசி! நான் வரலாமா? அரசி”‘ அவள் காலைத் தூக்கி ஒரு தசையை மிதித்து உந்தி எழுந்து நீரைப்பிளந்து வெளியே வந்தாள். தலைமுடியை நீவி பின்னால் தள்ளியபடி எழுந்து ஆடைகள் உடலில் ஒட்டி நீர் வழிய நின்றாள்.

அவள் முன் கரும்பாறையில் ஒட்டி மெல்ல உடல் வளைந்து நின்ற நீர்ப்பாம்பு தலையைத் தூக்கியது. “உன் மறுபக்கத்தை புரட்டி வைத்திருக்கிறேன். இனி அழவேண்டியதில்லை” என்றது பெருநாகம். “உன் பாதையில் இனி அறங்கள் தடுக்காது. இனி உனக்கு ஐயங்களும் இருக்காது. தேவையற்ற அனைத்தையும் நீ மறந்துவிட்டிருப்பாய்.” அவள் தலையசைத்தாள். “என்றோ ஒருநாள் என்னை நினைப்பாய். அன்று நான் வந்து உன்னை மீண்டும் புரட்டிப்போடுகிறேன். நீ மறந்தவையெல்லாம் மீண்டு வரச்செய்கிறேன்.” பின்னர் நீர்ப்பாம்பின் உடல் பின்னால் வழிந்து நீரிலிறங்கி சிறிய அலையெழுப்பி மூழ்கி மறைந்தது.

அனகை ஓடிவந்தாள். “அரசி… என்ன ஆயிற்று?” என்றாள். “கால் வழுக்கி நீரில் விழுந்துவிட்டேன்” என்றாள் குந்தி. “நெற்றியில் என்ன குருதி? புண்பட்டுவிட்டதா?” என அனகை தொட்டு நோக்கி “ஆம் குருதிதான். ஆனால் பெரிய புண்ணல்ல…சிறிய கல் குத்தியிருக்கிறது” என்றாள். குந்தி முகத்தை மீண்டுமொருமுறை கழுவி “ஒன்றுமில்லை” என்றாள்.

அங்கிருந்து கிளம்பும்போது காட்டின் இலைநுனிகளிலெல்லாம் கூர்வாளின் ஒளிவந்திருந்தது. சேவகர்கள் முன்னால் செல்ல ஐந்து மைந்தர்களுடன் அவள் தொடர்ந்தாள். இளங்காலையின் ஒளியில் அவள் அப்பாதையை முழுமையாகக் கண்டாள். பூக்குலைகளில் தேனுண்ணப் பூசலிட்டன பூச்சிகள். அவற்றை துரத்தி வேட்டையாடின பறவைகள். ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று வேட்டையாடிக்கொண்டிருந்தது. கொல்வனவற்றின் உறுமலும் இறப்பவற்றின் ஓலங்களும் இணைந்தெழும் ஓங்காரத்தில் அனைத்தும் பிணைக்கப்பட்டிருந்தன.

முந்தைய கட்டுரைவிதிசமைப்பவனின் தினங்கள்
அடுத்த கட்டுரைவண்ணக்கடல் – பகடி