அண்ணாச்சி

நம் மண்ணின் எல்லா எழுத்தாளர்களுடனும் அல்லது அவர்களுடைய படைப்புகளுடுனாவது ஓரளவு பரிச்சயம் உள்ளவன் நான்.

அண்ணாச்சியை தவிர.

மருந்துவாழ் மலையைப் பற்றி அறிய ஒரு முறை நெய்தல் கிருட்டிணனுடன் அண்ணாச்சியை சந்திப்பதாக இருந்ததும் தவறிப்போனது.

ஒரு கட்டத்தில் தான் எதையுமே சாதிக்கவில்லை என்ற துயரம் அவருக்கு இருந்ததாக பதிவு செய்துள்ளீர்கள். அண்ணாச்சி போன்ற கர்ம யோகிகளுக்கு அது ஒரு பொருட்டேயில்லை.

“பொறவு?”

அந்த ‘பொறவு’தானே ஒரு விதமான puzzle-உடன் நம் எல்லோரின் வாழ்க்கையையும் முன் நகர்த்திக் கொண்டு இருக்கின்றது…

‘பொறவு’ இல்லையேல்…..

அழகம்பெருமாள்
இயக்குநர்

அன்புள்ள பெருமாள்,

மருத்துவாமலையை பார்க்க நீங்கள் ‘குண்டு’ கிருஷ்ணனை அழைத்துபோன கொடூரத்துக்கு கடுமையான கண்டனங்கள்.

எனக்கும் மருத்துவாமலை அண்ணாச்சியின் நினைவையே உருவாக்குகிறது.
ஜெ

டியர் ஜெ,

ஏன் குடி இத்தனை முக்கியமாய் இருக்கிறது? எழுத்தும் குடியும் இணைந்தவையா? கேரள பாதிப்பா? எழுத்து கொடுக்கும் புத்தித்  தெளிவை மனம் மறுக்கிறதா?


wishes,

Erode Nagaraj.

1. http://ramsabode.wordpress.com/2006/10/07/erode-nagaraj/

2. http://www.chennaionline.com/chennaicitizen/2004/02nagarajan.asp

3. http://www.nscottrobinson.com/southindiaperc.php

அன்புள்ள ஈரோடு நாகராஜ்,

குடி எழுத்தாளர்களுக்கு – உண்மையான எழுத்தாளர்களுக்கு- முக்கியமல்ல. ஆனால் அது ஒரு யட்சி போல. அவன் சற்றே திரும்பிப்பார்த்தால் போதும், பின்னால் வர ஆரம்பித்துவிடும். ஏன் என்றால் எழுத்தாளர்கள் கலைஞர்களின் மனம் அப்படிப்பட்டது. ஒரு விஷயத்தில் மிகுந்த ஆவேசத்துடன் ஈடுபடுவது அவர்களின் பாணி. ஆற்றில் அவர்கள் கால் நனைப்பதில்லை, தலைகுப்புற குதிக்கிறார்கள். ஒரு விஷயம் மனதில் புகுந்துவிட்டதென்றால் அது நாட்கணக்கில் வாரக்கணக்கில் போட்டு ஆட்டி வைக்கும். ஒரு விஷயத்தில் மனம் ஈடுபட்டதென்றால் அதில் உப்பக்கம் காண்பதுவரை உத்வேகம் அடங்காது. கிட்டத்தட்ட அப்ஸெஸிவ் கம்பல்ஸிவ் நியுரோஸிஸ் போல. இதனுடன் சரியாக இணைந்துகொள்வது குடி.

இது இசைக்கலைஞர்களுக்கும் பொருந்தும். [ஆகவே கவனமாக இருங்கள். மோகினியை திரும்பிப் பார்க்கவேண்டாம்] 

ஜெ

Dear J,

இத்தகைய சுய தரிசன அல்லது எதையும் இறுதிவரை அறிந்துகொள்ளும் தீராக்க் காதல் அத்தகையோருக்கு குடி போன்ற விஷயங்களிலும் வருவது பரிதாபத்திற்குறியதாகவே படுகிறது.

என்னைச் சேர்ந்தவர்களிடமும் ஏன் சிஷ்யர்களிடமும் அதை சொல்லி வருகிறேன். குடியோ புகையோ மனித மனத்தைக் காட்டிலும் பலம வாய்ந்ததாகவே பெரும்பாலும் இருப்பதால், avoid first puff and first sip… that is the best way of doing it என்று சொல்வேன்.

இதில் பலர் ஒருவனுக்கு ஒருத்தி போல, ஒரு கடை பானம், ஒரே brand, அதே bar (டுப்ளின் அல்லது வெஸ்ட் மினிஸ்டர்) என்று பெருமை வேறு பட்டுக்கொள்வது சில சமயங்களில் சிரிப்பாகவும் இருக்கிறது.

ஆம். எழுத்தாளர்கள் மட்டுமல்ல; பல கலைஞர்களும் பெண்களும் இன்னும் சிறுவர்களும் கூட.

வருத்தமாயும் இருக்கிறது.

wishes,

Erode Nagaraj.

 

 

அன்புள்ள ஜெ

அண்ணாச்சி குறித்த உங்கள் கட்டுரை  படித்தேன் மிகச்சிறப்பாக ருந்தது

ராஜ சுந்தரராஜன்

அன்புள்ள ஜெ,

அண்ணாச்சியை  நேரில் கண்டது போல் இருந்தது. ‘எனி’ என்று சொல்வது அசல் அகஸ்திஈஸ்வரம் பாசை. அதேபோல ‘அப்புறம்’ என்பதற்குப் பதிலாக ‘பெறவு’ என்பது. அண்ணாச்சி அசலான மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

[நான் கன்யாகுமாரி அருகே சிற்றூரைச் சேர்ந்தவன்]

ஜெயச்சந்திரன்

அன்புள்ள நண்பருக்கு

அகஸ்தீஸ்வரம் மொழிக்கு அப்படி பல ருசிகள். அது நாஞ்சில் மொழியின் மச்சான் முறை. எனக்குத்தெரிந்து அம்மொழி பேசும் ஒரே நண்பராக அண்ணாச்சிதன் இருந்தார்
ஜெ,

 

மார்த்தண்டன் பற்றிய கட்டுரையின் கடைசி வ்ரிகளை படிக்க முடியவில்லை. கண்களில் நீர் நிறைந்துவிட்டது

 
மனுஷ்யபுத்திரன்

 

அன்புள்ள ஜெயமோகன்,
 
நலமா? உங்களிடம் பேசியே நீண்டநாட்களாகிவிட்டன. கடுமையான வேலைப்பளுவில் சிக்கிக்கொண்டுவிட்டேன். இதற்கு நடுவில் சொல்வனம் இதழின் வேலைகள் வேறு. விழி பிதுங்குகிறது.
 
இரண்டாம் இதழில் கவிஞர் ராஜமார்த்தாண்டன் குறித்து வெ.சா ஒரு கட்டுரை எழுதுகிறார். ராஜமார்த்தாண்டனின் சில கவிதைகளையும் தனியாக வெளியிடலாமென்றொரு எண்ணம். பொத்தாம் பொதுவாக சில கவிதைகளை வெளியிடுவதைவிட, அவருடைய கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தவற்றைத் தேர்வு செய்து தந்தால், நீங்கள் தெரிவு செய்த கவிதைகள் என்று குறிப்பிட்டே வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
 
இந்த யோசனை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இன்றோ, நாளையோ உங்களுடன் தொலைபேசுகிறேன்.
 
அன்புடன்,
சேதுபதி
 
பி.கு: ராஜமார்த்தாண்டன் குறித்த உங்களுடைய ‘அண்ணாச்சி’ கட்டுரைத்தொடர் மிக நன்றாக இருந்தது. அது குறித்து சுகாவும், நானும் பேசிக்கொண்டிருந்தோம். வளையலுக்குள் மோதிரவட்டம் என்ற உவமையும், யானை மேல் வருதல் என்ற உவமையும் மிகவும் பிடித்திருந்தன
அன்புள்ள சேதுபதி,
அண்ணாச்சியின் கல்லுரிக்கால டைரி ஒன்று வேதசகாயகுமாரிடம் இருக்கிறது. அதில் கவிதைகள் உள்ளன. இலக்கியக் குறிப்புகள் சிலவும் உள்ளன. அவற்றில் சிலவற்றை பிரசுரிக்கலாம். உங்கள் விலாசத்துக்கு ஜெராக்ஸ் எடுத்து அனுப்புகிறேன்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்

 

அவருக்கான இன்பங்களை இயற்கை அதுவரை மறைத்து வைத்திருந்தது. ஆகவேதான் அவரை அது மீண்டெழச்செய்தது.
 
அண்ணாச்சியைப்பற்றிய இந்தச்சொற்கள் மனதைத்தொடுவனவாக இருந்தன. என் அம்மா அடிக்கடிச் சொல்வதுண்டு. வேறு சொற்களில், ஆனால் இதே பொருளில். அந்தச் சொற்கள் என்னுடைய நம்பிக்கையை பெருமளவுக்கு பெருக்கியிருக்கின்றன. உங்கள் சொற்கள் கவித்துவமானவை. என் அம்மாவை நினைவுகூரச்செய்தன

 

 

 

அ 
அன்புள்ள அ
உங்கள் கடிதம். உண்மைதான், வாழ்க்கையின் ஒரு கடத்தில் நின்று திஉம்பிப்பார்க்கும்போது சென்ற நிகழ்ச்சிகளில் நல்லவை கெடுதலானவை அனைத்துக்குமே ஒரு தர்க்கம் இருப்பது போலத்தோன்றுகிறது. அனைத்துமே நாமறியாத ஓர் ஒழுங்கில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. நாம் நிகழ்ச்சிகள் வழியாக ஒழுகிச்சென்றுகொண்டே இருக்கிறோம்.
எல்லாம் நன்மைக்கே என்ற மனநிலை நல்லது. அது உண்மையா இல்லையா தெரியாது, வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லாம் சின்ன விஷயம் என்பது ஒரு பெரிய உண்மை. 
ஜெ
  • அண்ணாச்சி 4
  • அண்ணாச்சி – 3
  • அண்ணாச்சி.1
  • ராஜமார்த்தாண்டன் கடிதங்கள்
  • அண்ணாச்சி 2
  • ராஜமார்த்தாண்டன் அஞ்சலி,சென்னை
  • சொல்வனம்
  • ராஜ மார்த்தாண்டனுக்கு நினைவஞ்சலி
  • முந்தைய கட்டுரைவாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்
    அடுத்த கட்டுரைகிளி சொன்ன கதை : 1