அனல் காற்று, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

என் நண்பன் பரிந்துரைக்க, நான் தங்களுடையஅனல் காற்றுநாவலைப் படித்தேன் .

 

என்ன சொல்ல ? தங்களின் எழுத்து என்னை வேறு ஓரு உலகுக்கு கொண்டு சென்று விட்டதுபடித்த இரண்டு நாட்களாக அருண், சந்திரா, சுசி இவர்களின் உலகிலேயே இருக்கிறேன். 14ஆவது அத்யாயத்தை படித்த முடித்த அன்று நான் சில நண்பர்களுடன் வெளியே செல்ல நேர்ந்தது….இன்னும் ஒன்றை முடிக்க இயலவில்லையே என்று ஒரு பக்கம்….அருண், சந்திரா, சுசி இவர்களின் ஆட்சி என் மனதில் இன்னொரு பக்கம்சகஜமாக இருக்க இயலவில்லைஅவ்வளவு பாதிப்பு, தாக்கம் தங்களின் எழுத்துக்கு. பரிந்துரைத்த நண்பனுக்கு மானசீகமாக நன்றி சொன்னேன்.

 

நாவலைப் பற்றி :

 

தங்களின் சொற்களின் நீர் பரப்பில் ஆழ்ந்து போனேன்ஆழம் அதிகமான சில இடங்களில் தத்தளித்தேன் என்பது உண்மை . சில இடங்களில் நான் சற்று சப்தமாக சிரித்துக்க் கொண்டேன். சில இடங்களில் அழுதேன்இப்படி இது வரை என்னில் நிகழ்ந்ததில்லை.

 

சுசி ஆயிரம் அன்னனகளுக்கு சமம் என்று அருண் சொல்லும் இடத்தில் மேலே படிக்க இயலாமல் சிறிது நேரம் தவித்தேன்….எல்லா பெண்களும் பிறக்கும்போதே தாயாய் பிறக்கிறார்கள் என்று மற்றுமொரு இடமும்….இதே நிகழந்தது….

 

நடுத்தர வீட்டில் வீட்டார் இடத்தை தேடுவதும், விருந்தினர் பொருள்களில் சிக்கிக் கொள்வதும் யோசித்துப் பார்க்கையில் எவ்வளவு உண்மை என்றே தோன்றுகிறதுஇப்படி பல இடங்கள்….

 

என்னில் அனலின் கங்குகள் : 14ஆம் அத்தியாயம், அருணின் ஒயா செல் ஃபோன் ஒளிர்தல்கள், ஃபோனை செஸ்டில் வைத்துக் கொள்ளுதல், அருணை இம்சிக்கும் சந்திராவின் அடிக் குரல்…. காற்று வீசினால் மறுபடி பற்றிக்கொள்ளக் கூடும் !

 

உவமைகள் ப்ரம்மிக்க வைத்தன : உறவுகள் நின்று போவதற்கு இளனீரிலிருந்து தண்ணீர் வற்றுதல், உறவுகளும் சதுரங்கமும் இத்யாதி இத்யாதி

 

நாவலின் மையக் கருத்து, அருணின் இந்த வரிகளில் இருப்பதாகவே தோன்றியது எனக்கு :

 

ஏன் எதைப்பற்றியும் கவலைபப்டாமல் எது பிடிக்கிறதோ அதைமட்டும் செய்துகோண்டு செல்லக்கூடாது? எதர்கு இந்த அவஸ்தை? நான் பிரரைப் பயப்படுகிறேனா? ஏன்? இல்லை இது அதுவல்ல. நான் செய்வதை நானே நியாயப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. அப்படி நியாயபப்டுத்திக்கொள்ளத்தான் உலகில் கோடானுகோடி சொற்கள் கணம்தோறும் கொட்டப்படுகின்ரன கோடானுகோடி எண்ணங்கள் கணந்தோறும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

 

எதையும் நியாயப்படுத்திக்கொள்ளாமல் பிடித்ததைச் செய்து வாழ்பவர் எவராவது உண்டா என்ன? அது சாத்தியமா? எல்லாருமே ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள். ஆனால் மண்ணில் எதையும் நியாயபப்டுத்திவிடலாம். கொஞ்சம் கண்ணீரும் கொஞ்சம் சொற்களும்போதும். ஆனால் நான் நல்லவன் என்று நம்பாமல் மண்ணில் உயிர்வாழவே முடியாது. கால்கீழ் பூமி சவ்வாகக் கிழிந்து பாதாளத்துக்குத் தள்ளிவிட்டுவிடும்.

 

 

(என் மனதில் சுசி மற்றும் சந்திராவுக்கு ஒரு பிம்பம் தோன்றியது

சுசி மற்றும் சந்திராவின் உடலமைப்புகளை வர்ணித்த நீங்கள் அருணைமேன்லிஎன்பதோடு விட்டதற்கு ஏதும் காரணங்கள் உள்ளதோ, தெரியவில்லைகண்ணாடியில் அருண்  தன்னை பல இடங்களில் பார்த்துக் கொள்கிறான்…)

 

நான் இதே கதையை அருண் சுசிசுசி என்று அறற்றுவதுக்கு பதில் சந்திராவின் கோணத்திலோ அல்லது சுசியின் கோணத்திலோ அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். சந்திராவும் அருண் சொன்ன நாவலின் அதே மையக் கருத்தை தான் சொல்லி இருப்பாள் என்று எனக்கு தோன்றியது !

 

சில விஷயங்கள் மட்டும் satrae நெருடலாய் எனக்கு தோன்றியவை :

 

முதல் 3 சேப்டரில், சுசி இரண்டாவது நாளே அருணிடம் புடிச்சிருக்கா என்று கேட்பது

– 15ஆம் அத்தியாயத்தில் சந்திராவும் நவீனும் அருணை பின் தொடர்ந்ததாகச் சொல்வது

நவீனின் பாத்திரம் ஒரு முறையே வருவது…(சந்திரா நவீனுக்கு எல்லாம் தெரியும், ஏற்றுக்கொண்டான் என்று 15ஆம் அத்தியாயத்தில் சொல்லும் பொழுது , அதற்கு வலு சேர்ப்பதர்க்குமுன்பு ஏதாவது சித்தரித்திருக்கலாமே)

இந்த சிறு விஷயங்களை விட, 14ஆம் அத்தியாயத்திலயே முடித்திருந்தால் நான் இன்னும் 10 நாட்கள் சரியாக தூங்கி இருக்க மாட்டேனோ !! (என் நண்பன் ஒருவனுக்கு எப்பொழுதும் சுபமான முடிவுகள் தான் பிடிக்கும்படத்தின் கிளைமேக்ஸ் சோகமாக இருந்ததோ, தொலைந்தேன்இயக்குனரையும் , அருகிலிருக்கும் என்னையும் திட்டித் தீர்த்து விடுவான்எனக்கோ சோகம் ஆழமாய்ப் பதியும் எனும் ரகம்.)

 

மேற்சொன்னவை என் தாழ்மையான கருத்து.

 

 

கடைசியாக, அருண் சொல்வது போல் சில சமயங்களில் மனம் ஏதேதோ சொல்ல நினைத்தாலும் வார்த்தைகள் வெளிப்படும் போதுஎன்ன இதுஎன்று நினைக்க வைக்கக் கூடும்….என் இந்தக் கடிதமும் அப்படித்தானோநான் தங்களின் எழுத்தால் வெகுவாக பாதிக்கப் பட்டேன் என்பதை இப்படித் தவிர எனக்கு சொல்ல வேறு வார்த்தைகள் தெரியவில்லை.

 

அன்புடன்,

செந்தில் குமார்,

ரஸ் அல் கைமா

ஐக்கிய அரபு நாடுகள்

அன்புள்ள செந்தில்

அனல் காற்று குறித்த உங்கள் கருத்துக்களைக் கண்டேன். பொதுவாக ஒரு கதையின் முஇவு என்பது விவாதித்து முடிவுசெய்யக்கூடிய ஒன்றல்ல. விவாதிக்க ஆரம்பித்தால் அது முடிவிலாது செல்லும் சாத்தியப்பாடுகள் கோண்டது. ஒருந் அல்ல கதை என்பது அந்த எழுத்தாளனின் மனம் அதில் எங்கெங்கே ஈடுபட்டிருக்கிறது என்பதைச் சார்ந்தது. அது இயல்பாக ஒரு இடத்தைச் சென்றுசேர்கிறது. அதை அவன் மாற்றக்கூடாது. சிலசமயம் அது சரியில்லாமல் இருக்கலாம்,. ஆனால் அதுதான் அது.

பல கோணங்களில் ஒரு கதையைச் சொல்லலாம். அந்த வாசிப்புகளை வாசகன் நிகழ்த்தவேண்டும்/ அதற்கான வாய்ப்புகளை அளிப்பதே நல்ல கதை.

ஜெ

அன்புள்ள ஜெ

அனல் காற்று படித்தேன். அது கொஞ்சம் அவசரமாக எழுதப்பட்ட கதை. பல இடங்களில் உங்களிடம் வழக்கமாக காணப்படாத ஓர் அவசரம் தெரிகிறது. அது ஒரு பெரிய குறைதான். ஆகவே அதை உங்களுடைய சிறந்த படைப்புகளில் ஒன்றாக நான் நினைக்கவில்லை. ஆனால் உங்களுக்கே உரியா ஆழ்மான மனதத்துவ அலசல் , நுட்பமாக மனத்தின் ஓட்டங்களை அவதானிக்கும் விதம், அதை சிறப்பாஅக உரையாடல்களில் வெளிப்படுத்தும் விதம் இதெல்லாம் முக்கியமான ஒரு இலக்கியப் படைப்பாக பதை மாற்றிவிட்டிருக்கின்றன

அன்புடன்
சண்முகம்
சென்னை

அன்புள்ள சண்முகம் அவர்களுக்கு

நன்றி. உளவியல் என்று படைப்பில் தனியாக உண்டா என்ன? கதாபாத்திரத்தின் மனம்தானேம் அக்கதாபாத்திரம். மனஓட்டங்களை நேரடியாக எழுதினாலும் சரி செயல்களை மட்டும் எழுதினாலும் சரி உரையாடலையே எழுதினாலும் சரி மனம்தானே வெளிப்படுகிறது?

ஜெ

முந்தைய கட்டுரைஇ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் 2
அடுத்த கட்டுரைவிடைகொடுத்தல்