படைப்புகள்:கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்களிடம் அறிந்துகொள்ள, விவாதிக்க,பகிர என்று எவ்வளவோ
இருக்கிறது என்னிடம்.உங்களைப் பற்றி என் பேச்சில் குறிப்பிடாத நாளே இல்லை.போதும்.

தங்களின் பல நூல்களை நான் இன்னும் படித்தவன் இல்லையென்றாலும், தங்களின் சங்கச் சித்திரங்களைப் படிக்க ஆர்வமாக உள்ளேன். எங்குக் கிடைக்கிறது என்கிற விபரம், முடிந்தால் தெரியப்படுத்துங்கள்.

மற்ற நூல்களைப்போல் இந்நூலுக்கான விபரம் கிடைக்கப்பெறவில்லை.

 நன்றி,
ச.முத்துவேல்.

அன்புள்ள முத்துவேல்

சங்க சித்திரங்கள் நூலை கவிதா பதிப்பகம் வெளியிடிருக்கிறது. கவிதாபதிப்பகம் பாண்டிபஜாரில் மாசிலாமணி தெருவில் இருக்கிறது . அவர்களின் நூல்கள் நியூ புக்லேன்ட்ஸ் கடையில் கிடைக்கும்.

அல்லது எனி இன்டியன் காம் இணையக் கடையிலும் கிடைக்கும்

உயர்திரு ஜெ சார் வணக்கம்,
 
நான் தற்ப்பொழுது உங்களின் நவீனதமிழ் இலக்கிய அறிமுகம் என்ற நூலை வாசித்துக்கொண்டுள்ளேன். இந்த நூலின் மூலம் நீங்கள் தமிழுக்கு மிகப்பெரிய தொண்டு செய்துள்ளீர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.  அடுத்த தலைமுறை வாசகர்கள் இந்த நூலின் மூலம் உங்களுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளவர்கள் ஆகிறார்கள்.
இந்த நூலில் உள்ள  நூற்பட்டியலில் தமிழுக்கு வேருமொழியில்லிருந்து (இந்திய மொழி உட்பட)  மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்பட்டியல் ஒன்றையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து முடிந்தால் அடுத்த பதிப்பில் அதை செய்யலாம்.

ஊமை செந்நாய் பற்றி எனது கருத்து

ஊமை செந்நாய் பற்றிய தங்களின் முத்துலிங்கத்துடனான உரையாடலில் கதையில் உள்ள பல குறியீடுகள் பற்றி சொல்ல தவறிவிட்டீர்கள் அல்லது வாசகனாக அக்கதையில் தோல்வியுர்றீர்கள் என்றுதான் சொல்லதொன்ருகிறது. 
 
 கதையில் வரும் யானை எனக்கு இந்தியாவாக தோன்றுகிறது.பிரித்தானியர்கள் இந்தியாவை கைப்பற்ற பல இந்தியர்களே துனையிருந்ததை போன்றே அக்கதையில் வரும் ஊமை செந்நாயும் மற்ற சமையல்காரனும் தோன்றுகிறார்கள்.கதையின் முடிவில் ஊமை செந்நாய் தன்னை காப்பாற்ற வரும் துரையை புறக்கணித்ததன் மூலம் துரையை தோற்கடித்தது அஹிம்சையின் மூலம் காந்தி பிரித்தானியர்களை வென்றதை எனக்கு ஞாபகபடுத்துகிறது. இது அக்கதையின் மூலம் நான் அடைந்த அனுபவம்.இன்னும் பல வாசகர்களுக்கு வேறுமாதிரியான அனுபவம்   இருந்திருக்கலாம்.

பின் குறிப்பு : நவீனதமிழ் இலக்கிய அறிமுகம் என்ற நூலை எழுதியது போல தத்துவ அறிமுகம் என்ற நூல் ஒன்று தங்களால் எழுதப்பட்டால் நன்றாக இருக்கும்.
ஒருவேளை அப்படி ஒரு நூலை எழுதியிருந்தால் தெரியப்படுத்துங்கள் நான் வாங்கி படிக்கவேண்டும். இனிமேல் தான் எழுத வேண்டும் என்றால் எழுதும் முன் எனக்கு அவசியம் தெரியப்படுத்துங்கள் என்னிடம் சில கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கு உண்டான பதில்களையும் அதில் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான் கருத்து.

அன்புடன்
பெருமாள்
கரூர்

 

அன்புள்ள பெருமாள்,
நான் எழுதிய ‘கண்ணீரைப் பின் தொடர்தல்’ என்ற நூலில் இந்திய மொழிகளில் இருந்து தமிழில் வந்த நல்ல நாவல்களின் பட்டியல் உள்ளது. அது முக்கியமான 20 நாவல்களை அறிமுகம்செய்யும் நூல்.

ஊமைச்செந்நாய் கதை பற்றி கதையின் ஆசிரியன் சொல்லும் எல்லைக்குள் நின்றே சொல்லியிருக்கிறேன். பொதுவாக கதையை எழுத்தாளர்கள் விளக்கக் கூடாது. அது வேறு வகையில் வாசகன் வாசிப்பதை தடுப்பதாக அமைந்துவிடும்.

தத்துவ அறிமுகம் என்று ஒரு நூலை எழுத எண்ணம் உண்டு, பார்ப்போம். என்னுடைய இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலில் ஆரம்பத்தில் சுருக்கமான அறிமுகம் உண்டு. அந்நூல் இப்போது அச்சில் இல்லை. விரிவாக்கம் செய்து மறு பதிப்பு போட எண்ணம் உண்டு
ஜெ

தேசிய புத்தக நிறுவனம் [ Nathional Book Trust ] வெள்யிட்டுள்ள முக்கியமான தமிழ் நாவல்கள்

சாகித்ய அக்காதமி வெளியிட்டுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்

முந்தைய கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 8
அடுத்த கட்டுரைமொழியாக்கம்:கடிதங்கள்