வடகிழக்கு நோக்கி 2 – நெடும் பயணம்

இந்த பயணத்தின் மிக முக்கியமான அம்சமே பயணம்தான். பார்த்த நாட்களை விட பயணம் செய்த நாட்களே அதிகமென்ற பிரமை. கல்கத்தாவில் இருந்து சிலிகுரி வரை ரயில் இருக்கை முன்பதிவு செய்திருந்தோம், இரண்டு மாதம் முன்னரே. இருக்கை உறுதியாகவில்லை. ஆகவே பேருந்து முன்பதிவு செய்தோம். அரசு பேருந்து. ஆனால் எங்களிடம் அதற்காக பணம் வாங்கியது தனியார். அவர் அந்த விற்பனையை இன்னொருவருக்கு விற்றார். அவர் இன்னொருவருக்கு விற்றார். கடைசியாக இருக்கையை பதிவுசெய்தவருக்கு எங்களை தெரியாது. முதலில் பணம் வாங்கியவருக்கு ஒன்றுமே தெரியாது

From Sikkim jeyamohan

கல்கத்தா பேருந்து நிலையம் திருவாரூர் பேருந்து நிலையம் போல் இருந்த்து, திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு சுற்றுச்சுவர் உண்டு. ஆகவே அது இன்னும் மேல். இங்கே வண்டி எங்கும் நுழையலாம், வெளியேறலாம். அதை அங்கே உள்ளவர்களே சொல்ல முடியாது. எங்கும் சிறுநீர் கழிக்கலாம். அங்கேயே ரசகுல்லா சாப்பிடலாம். நல்லவேளையாக விஜயராகவனின் நண்பர் ஒருவர் வழிகாட்ட வண்டியை பிடித்தோம், வண்டி கிளம்பும் நிலையில் இருந்த்து. பயணிகளை பற்றி கவலையே இல்லை. அவசரமாக ஏறி அமர்ந்துகொண்டோம்

From Sikkim jeyamohan

ஆனால் கிளம்பும்நிலை என்பது ஒருமணிநேரம் நீடிக்கக்கூடிய ஒன்று. வண்டிக்கு மேலே மூட்டைகளை ஏற்றிக்கொண்டே இருந்தார்கள். ஒரு லாரி அளவுக்கு மூட்டைகள். ஏழு மணிக்கு என்று சொல்லப்பட்ட பேருந்து எட்டரை மணிக்கு கிளம்பியது. எனக்கு பின்னால் சாயும் வசதி வேலை செய்தது. புழுதி அலையலையாக முகத்தில் அறைய மேடுபள்ளமான சாலை வழியாக வெறியுடன் சென்றது வண்டி. ஆனால் வண்டிஓட்டுநரை மிகமிக திறமையானவர் என்றுதான் சொல்ல வேண்டும். எங்கோ ஒரு இடத்தில் வண்டி நின்றது. நல்ல வேளையாக அந்த மோட்டல் சிறப்பாக இருந்தது. விருதுநகர் மோட்டல்களை ஒப்பிட்டால் ஐந்து நட்சத்திர தரம்

From Sikkim jeyamohan

சிலிகுரிக்கு காலை எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தோம். சந்தடியான ஊர். கொஞ்சம் உயரமானதும் கூட .சமவெளியில் தேயிலை தோட்டங்களை இங்கேதான் பார்த்தேன். மக்கள் மஞ்சள் கலந்த மாநிறம் கொண்டவர்கள். கன்னங்கரேலென்ற தோல் கொண்ட மஞ்கோலிய முகங்களை இங்கே காணலாம். மரபணு விளையாட்டு! பொதுவாக நமக்கொரு நம்பிக்கை உண்டு, தென்னகம் முழுக்க கறுப்பாக இருக்கிறார்கள், வடக்கே எல்லாரும் சிவப்பு என்று. திராவிட மாயை! இந்திய இனம் என்பது கறுப்பு, மஞ்சள்,வெள்ளை, இனக்கூறுகள் சீராகக் கலந்த ஒன்று. நம் எல்லாரிலும் எல்லா அம்சங்களும் உண்டு. வங்காளிகளில் மஞ்சள் அம்சம் மேலோங்கி இருக்கிறது. ஆனால் இந்தியா முழுக்க அதிகமாக உள்ள இனக்கூறு கறுப்புதான். வங்காளிகளில் பெரும்பான்மையினர் கறுப்பர்கள். பிகாரிகளும் அப்படியே.

From Sikkim jeyamohan

சிலிகுரியில் எங்களுக்கு வண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து. எங்கள் பயணத்தின் முக்கியமான சிக்கலே எண்ணிக்கைதான். ஒன்பது பேர் . ஒரு வண்டிக்கு அதிகம் இருவண்டிக்கு போதாது. ஒரு டாட்டாசுமோ வண்டியில் நெருக்கியடித்துக்கொண்டு ஏறிக்கொண்டோம். நான் யுவன் வசந்தகுமார் மூவரும் வசதியாக அமர்ந்துகொண்டோம்.. மற்றவர்கள்க்கு நெரிசல்தான். இலக்கிய விவாதங்கள் நக்கல்கள் என்று உற்சாகமாகச் சென்றோம்.

From Sikkim jeyamohan

சிலிகுரி முதல் காங்டாக் வரையிலான பயணம் ஒன்பது மணி நேரம்.வான்தொலைவு அதிகமில்லை. ஆனால் மிகமிக வளைவான சாலை. ஏறி ஏறி குளிர்ந்து குளிர்ந்து சென்றுகொண்டே இருந்தோம். அந்த பயணம் ஒரும்முக்கியமான அனுபவம். மலைச்சரிவுகள், மலை உயர்ச்சிகள். இங்கே மண் அள்ளிக் கொட்டியது போல. மேலிருந்து பாறைகள் உருண்டு சாலையில் கொட்டிக்கொண்டே இருக்கும். சாலையே கீழே மண்ணாக கொட்டி விடும். பயணம் ஒரு சிறிய பதற்றம் கொண்டதாகவே இருந்தது

From Sikkim jeyamohan

மாலை ஐந்து மணிக்கு காங்க்டாக் சென்று சேர்ந்தோம்.

(மேலும்)

வடகிழக்கு நோக்கி 1- தேர்தலும் துவக்கமும்

 

முந்தைய கட்டுரைபொருளியல் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள்,கடிதங்கள்