விலாங்கு

”ஐயா வணக்கம்” ”நமஸ்காரம்.க்ஷேமமா இருங்கோ…” ”இல்லீங்க…இப்ப பேட்டியெல்லாம் எடுக்கிறதுன்னாக்க அதுக்கு ஒரு மொறை இருங்குங்க…அப்டித்தான் இருக்க முடியும்…” ”அதான் சொல்றேன்…நன்னா க்ஷேமமா இருங்கோ” ”அப்டிச் சொல்றீங்களா? சரிங்க… கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா?” ”பேஷா கேளுங்கோ.. பிரஸ்னோத்தரம் இதம் ஏவம் வ பிரம்ம வதிஷ்யாமின்னு சொல்லியிருக்கே” ”யாருங்க?” ”பெரியவா…” ”பெரியவான்னாக்க?” ”ரிஷிகள்…”

”அப்டீங்களா? அய்யா இப்ப நீங்க சொன்னதை திரும்ப ஒருவாட்டி சொன்னீங்கன்னாக்க நல்லாருக்கும்..வேகமா சொல்லிட்டீங்க காதிலே உழுவல்லை” ”ஆபத்ஸ்தம்பஸூத்ரத்திலே உள்ளதுடா அது.ரொம்ப ஸூக்ஷ்மமான அர்த்தம்லாம் அதுக்கு உண்டு… அதைப்பத்தி பேச ஆரமிச்சா இன்னிக்கெல்லாம் பேசிண்டே இருக்கலாம்…நேரமில்லேன்னோ? நீ கேள்விகளைக் கேளு…”

”இல்லீங்கய்யா…நீங்க அந்த பாட்டை ஒருவாட்டி மறுபடியும் சொல்லீட்டீங்கன்னாக்க கேள்விகளுக்குள்ர போயிடலாம்…” ”அது பாட்டு இல்லை..வேதவாக்யம்…சூக்ஷ்ம ஸ்ரத்தயோடே மந்த்ரணம் பண்ண வேண்டியது…” ”ஆமாங்க..அதான் சொல்லிட்டு மேலே போகலாம்னு…” ”என்ன போட்டு படுத்தறாய்? பிரஸ்ன குணோ மனஸ் இதம் பிரம்ம பவிஷ்யாமின்னு சொன்னாக்க பிரம்மத்திலே எல்லாத்தையும் அர்ப்பணம் பண்ணிண்டு காரியங்களை செய்றதுன்னு அர்த்தம்”

”இல்லீங்க…நீங்க மொதல்லே வேற மாதிரி சொன்னமாதிரி இருந்திச்சு…அதான்” ”இல்லியே…அது வேதவாக்யம்னா…மாத்தப்படாது..அபச்சாரம்…” ”அப்டீங்களா? நான் மொதல்ல வேற மாதிரி கேட்டுதோன்னு கொழம்பிட்டேன்…” ”என்ன கொழப்பம்ங்கிறேன்? பிரஸ்ன மனோ வாக்ய குணோ தத்ர வதிஷ்யாமின்னு சொன்னா பிரம்மத்திலே எல்லாத்தையும் அர்ப்பணம் பண்ணிண்டு காரியங்களை செய்றதுன்னு அர்த்தம்” ”அய்யா இப்ப நீங்க சொன்னது முன்னாடி சொன்னது இல்ல…இது….” ”அதாண்டா சொல்றேன், பிரச்னஸ்வர நிதோ…” ”சரிங்க இப்ப கேள்விகளுக்குள்ள போலாங்களா?” ”அதான் அப்பவே புடிச்சு சொல்லிண்டிருக்கேனே…”

”சரிங்க…இப்ப பாத்தீங்கன்னு சொன்னா இந்துமதத்திலே பல பிரிவுகள் இருக்குங்க…ஒண்ணுக்கொண்ணு பல குழப்பங்கள் இருக்கு” ”யாருக்கு?” ”பலபேருக்கு இருக்கு…எனக்கும் இருக்கு” ”என்னத்தை கொழப்பம்?” ”இல்லீங்க…இப்ப பாத்தீங்கன்னு சொன்னா சைவம் பெரிசா அசைவம்…ஸாரி  வைஷ்ணவம் பெரிசான்னு சிலபேரு ஆர்க்யூ பண்றாங்க” ”பாவம்…அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவர் வாயிலே மண்ணு…இது பழம்பாட்டு…அரியும் சிவனும் ஒண்ணுண்ணா அந்த ஒண்ணு என்ன?” ”என்ன?” ”அதான் கேழ்வி…என்ன? ”  ”சொல்லுங்க…”

”பிரம்மம்! அதான் பரிபூரணம். பிரம்மத்திலேருந்து எதை எடுத்தாலும் பிரம்மம்தான் மிச்சமிருக்கும்… பிரம்மத்திலே எதைப்போட்டாலும் பிரம்மம்தான் மிச்சமிருக்கும்…தெளிவாச் சொல்லணும்னா பிரம்மத்தோட பிரம்மத்தைச் சேர்த்தாலும் பிரம்மம்தான் மிச்சமிருக்கும்…இன்னும் தெள்ளத்தெளிவாச் சொல்லணுமானா பிரம்மத்தோட லக்ஷம்கோடி பிரம்மத்தை ஒண்ணு சேத்தாலும் பிரம்மம்தான் மிச்சமிருக்கும்…புரியறதோல்லியோ? ”புரியுதுங்க” ”சரி மேலே கேளுங்கோ”

”அய்யா இப்ப பிரம்மம்னு சொன்னீங்க…அதை யாராலயும் ஒண்ணும் செய்யமுடியாதுன்னு சொன்னீங்க…ஆனா சிவனும் விஷ்ணுவும்…” ”தம்பி சிவனும் விஷ்ணுவும்  ஒண்ணும் கெடையாது…. அதெல்லாம்  மானஸ பாவங்கள். சகுண உபாஸனையிலே பரம்பொருளை அப்டி பலவகையா ரூபகம் பண்ணி ஸேவிக்கிறது நம்ம ஸனாதன மதத்தோட வழக்கம்…” ”இல்லேன்னா சொல்றீங்க? ” ”ஹிந்து தர்மப்பிரஹாரம் இல்லே…” ”அப்டீன்னா?” ”அதாவது இருக்குன்னா இருக்குன்னு அர்த்தம் இல்லேன்னா இல்ல …”

”புரியறதுங்க…இப்ப பாத்தீங்கன்னா…” ”தம்பிக்குப் புரியல்லை…இப்ப இது என்னது?” ”சட்டை” ”இது?” ”பாண்டு” ”சரி..இது?” ”என்னங்க நீங்க ? இது கர்சீபுங்க” ”இது எல்லாத்தையும் துணிதான்னு சொன்னா நீ ஏத்துக்குவீயா?”. ”ஆமாங்க” ”அவ்ளவுதான்..அதைமாதிரித்தான்…துணீன்னு ஒட்டுமொத்தமாப் பாத்தா துணி…சட்டை பாண்டுன்னு பாத்தா சட்டை பாண்டு…” ”சரிங்க…இப்ப ஒரு கேள்விங்க…இந்தத் துணிய யாரோ சட்டை பாண்டா தச்சிருக்காங்கல்ல …”

”பெரிய தத்துவக்கேள்வியா கேட்டுப்பிட்டீரே…பிரம்மத்தை யாருமே வெட்டமுடியாது தெக்க முடியாது… அயர்ன் பண்ணவும் முடியாது…அதுவெ அதையெல்லாம் பண்ணிண்டிடும்” ”எதுக்கு?” .”போது போக வேண்டாமா..என்ன கேழ்வி இது? அது அப்டீல்லாம் பண்ணல்லேண்ணா நாம எதுக்கு அதைப்பத்திப் பேசப்போறம்?”

”சரிங்க …இப்ப பிரம்மம்னா என்னன்னு சொல்ல முடியுங்களா?” ”பேஷா சொல்லலாமே…அதைப்பத்தி எட்டு விஷயங்கள் சொல்லலாம்னு சொல்லியிருக்கு… அதாவது அதைப் பாக்கமுடியாது, கேக்கமுடியாது, தொடமுடியாது, அதை ருசிக்க முடியாது. அதோட…” ”சரிங்க…அப்ப அதை எப்டீங்க அறியிறது? ” ”புஸ்தகத்திலே படிச்சுதான்…அதைப்பத்தி புஸ்தகங்களிலே நெறைய சொல்லியிருக்காங்க…ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்னா என்ன?”

”சர்பத்தோட வாசம் எதமா இருக்கு..” ”அப்டியும் சொல்லலாம்… ஆனா பெரியவா அதை இங்க உள்ள எல்லாமே அதுதான்னு சொல்லியிருக்க்கா…இந்த மைக்கு , நீ வச்சிருக்கிர மூக்குக்கண்ணாடி, அந்தா அங்க சோடாப்புட்டி வச்சுண்டு நிக்கிறானே ஒரு அசடு அவன் எல்லாமே பிரம்மம்தான்…பிரம்மனா என்னான்னு கேக்கப்படாது..ஏன்னா எல்லாமே பிரம்மம்தான்…” ”ஸாரிங்க தெரியாம கேட்ட்டுடேன்..” ”பாவால்ல..சின்னப்பையன் தானே நீ”

”சரிங்க…இப்ப சிவனும் விஷ்ணுவும் ஒண்ணும் இல்லேண்ணா எதுக்குங்க கோயில்லாம்? ” ”முட்டாப்பயலா இருக்கியே? பிரம்மத்த எப்டி கோயிலிலே வெக்க முடியும்?  அந்தக் கோயிலே அதானே? வச்சாலும் பக்தாள் கண்ணுக்குத்தெரியாதுல்லியோ? என்னத்துக்கு வம்பு…அதான் சிவனையும் விஷ்ணுவையும் வச்சு கும்பிடுறது…தம்பிக்கு சிவ வழிபாடா விஷ்ணுவழிபாடா?” ”ரெண்டுமே கெடையாதுங்க” ”நாஸ்திகம், இல்ல? மோரையைப்பாத்தப்பவே நெனைச்சேன்…”

”அதுவும் கெடையாதுங்க…இந்த வேலைய முடிச்சு வீட்டுக்குப்போனாக்க ராத்திரி பன்னிரண்டு மணி ஆயிரும்ங்க…அப்டியே தூங்கிடறது…காலம்பற எட்டுமணிக்கு எந்திரிச்சா குளிச்சு சாப்பிட்டுட்டு நேரா வந்திடறதுங்க.. அங்கங்க சிக்னல்களிலே ரெஸ்ட்டு எடுக்கிறதுதானுங்க…இப்டியே போய்ட்டிருக்கு…சாமி பூதம்னு ஒண்ணையுமே யோசிக்கிறதிலீங்க..” ”சரி, ஹாலிடேய்ஸ்ல? ”சிக்கன் எடுப்போம்…அப்றம் டிவியிலே சினிமா..மானாடமயிலாட… ஜெயிக்கப்போவது யாரு…அப்ரம் போரடிச்சா எப்பவாச்சும் தியேட்டர் ஓட்டல்னு போறது… ”

”பாத்தீங்களா, நீங்க ஒரு சரியான ஹிந்து லைஃப்லே இருந்துண்டிருக்கீங்க….நீங்க ஹிந்துதான்..இனிமே கேட்டா ஹிந்துன்னு சொல்லிடுங்கோ” ”அப்டீங்களா? நமக்குத்தான் சிவன் விஷ்ணு ஒண்ணுமே தெரியறதில்லீங்களே…” ”எதுக்குத்தெரியணும்?தெரிஞ்சா நீங்க சைவாளோ வைஷ்ணவாளோ ஆயிடறீங்க… ஒண்ணுமே தெரியல்லேன்னா நீங்க ஹிந்து… சாமியப்பத்தி நீங்க எதுக்கு தெரிஞ்சுகிடணும்? அவாளுக்கு ஒங்களைப்பத்தி தெரிஞ்சாபோறாதா? ” ”அதெப்டி தெரியும்?” ”அதான் நாங்க இருக்கோமே…என்ன பூஜை வேணும்னாலும் சொல்லுங்கோ அமோஹமா செஞ்சுப்பிடலாம்”

”இல்லீங்க…எனக்கு அதெல்லாம் நம்பிக்கை கெடையாது…இப்ப கேள்விக்கு போவமுங்களா? ”சரி..கேட்டுண்டே இருங்கோ” ”அதாவது வந்து, இப்ப பாத்தீங்கன்னு சொன்னா சிவன் இருக்காரு…” ”பாத்தேளா, நீங்க உங்க வாயாலே சிவன் இருக்காருன்னீட்டீங்க… அப்ரமென்ன…ஒரு பிரதோஷ பூஜை ஒண்ணு பண்ணிடுங்கோ…” ”எதுக்குங்க?” ”ஹிந்துக்கள் அதெல்லாம் பண்ணணும்டா” ”எதுக்குங்க? ” எல்லா ஹிந்துக்களும் எதுக்கு பண்றா?போர் அடிக்குதேன்னுதான்… உனக்கும் போரடிக்குதுல்ல? பண்ணிப்பிடறது…”

”அய்யா இப்ப பிரம்மம்தான் இருக்கு…அதனாலே சிவன் விஷ்ணு பேதம்லாம் கெடையாதுன்னீங்க…அப்றம் பூஜை எல்லாம் பண்ணணும்கிறீங்க” ”ஹிந்து தர்மம் அதெல்லாம் தெளிவாச் சொல்லியிருக்குடா…பிரம்மத்தைத் தியானம் பண்ணணும் சிவனைக் கும்பிடணும்…சிவனைக் கும்பிடறப்பக் கூட பிரம்மத்தை தியானம் பண்ணலாம். அதான் சிவனையே பிரம்மஸ்வரூபமேன்னு ஸ்துதிகள் சொல்றது…” ”புரியல்லீங்க” ”இப்ப சாதத்துக்கு கொழம்பு விட்டு காய்கறி தொட்டுகிடறதில்லியா அத மாதிரின்னு வை..”

”சரிங்க.. இப்ப பிரம்மம்தான் எல்லாம்னு சொல்லிட்டீங்க…அப்டீன்னா ஒருநாயும் பிரம்மம்தானா? ” ”பின்ன? என்ன கேட்டுட்டே? அது பிரம்மாவோட வாஹனம்னா?” ”சரிங்க, பன்னி?” ”அய்யோ அது பெருமாளோட அவதாரம்னா?” ”அப்டீன்னா எல்லா மனுஷங்களும் பிரம்மம்தானே” ”சரியா சொன்னே…உன் வாய்க்கு சக்கரை போடணும்…” ”அப்ப சாதிவேறுபாடுகள்லாம் இந்துமதத்லே இருக்கப்பிடாதுதானே…” ”இல்லியே…இந்துமதத்திலே எங்க சாதிவேறுபாடு இருக்கு?” ”அப்டிச்சொன்னா என்னங்க?” ”தம்பி ஹிந்துஸமூஹத்திலேதான் சாதிவேறுபாடெல்லாம் இருக்கு…”

”இருந்தாலும் எல்லாருமே பிரம்மம்னு இந்துமதம் சொல்லுது…அப்ப எதுக்குங்க சாதிவேறுபாடு? எல்லாத்தையும் ஒண்ணா ஆக்கிடலாமே” ”தம்பி இதே கேழ்விய ராமகிருஷ்ண பரமஹம்ஸர்ட்டே ஒத்தன் கேட்டான். எல்லாமே பிரம்மம்னா நான் ஒங்கள அடிக்கவான்னான். அவரு ஒரு கதை சொன்னார், ஒரு யானை கோபமா ஓடிவந்திச்சாம். அப்ப ரோட்டிலே போன ஒரு வேதாந்தி நானும் பிரம்மம் அதுவும் பிரம்மம் பயப்படறதுக்கு ஒண்ணுமில்லைன்னு நேரா போனான்.யானை அவனை தூக்கிபோட்டுட்டுது…அவன் அழுதிண்டே போயி அவனோட குருகிட்டே நியாயம் கேட்டானாம்…அவர் சொன்னாராம் டேய் முட்டாளே, அந்த யானைக்குப்பின்னாலே யானைப்பாகன் ஒத்தன் ஒத்திப்போ ஒத்திபோன்னு சத்தம்போட்டுண்டெ வந்தானே அதை நீ ஏன் கேக்கல்லை, அவனும் பிரம்மம்தானேன்னு”

”அதேமாதிரிங்கிறீங்களா?” ”தம்பி… எல்லாம் பிரம்மம்தான். ஆனாக்க மனுங்கிற ஒரு பிரம்மம் சாதிகளைப் பிரிச்சு வச்சிருக்கிறாரே..அந்த பிரம்மம் சொல்றதை எப்டி மீற முடியும்?” ”மீறுங்கன்னு நான் சொன்னா?நானும் பிரம்மம் தானே? ”கண்டிப்பா…ஆனா மனு பெரிய பிரம்மம். எல்லா பிரம்மமும் சமம்னாலும் சில பிரம்மம் கொஞ்சம் கூடுதலா சமம்னு ஒரு துரை சொல்லியிருக்கான்..கேழ்விப்பட்டிருப்பாய் ஜார்ஜ் ஆர்வெல்னு சொல்லுவாங்க”

”அப்ப பிரம்மத்திலே எல்லாத்துக்கும் ஒரு வழி இருக்குங்கிறீங்க…” ”ஆமா தம்பி…சின்ன வயசிலே நாம என்ன பண்ரோம்? .வெளியே போய் வெளையாடுறப்ப சண்டை பிரச்சினைன்னு வந்தா ஓட்டமா ஓடியாந்து ஆத்துக்குள்ள ஒளிஞ்சுகிடுறோம் இல்லியா? பிரம்மம்னா நம்ம வீடுமாதிரி…எப்ப வந்தாலும் உள்ள எடமிருக்கும்… வேணுங்கிறப்ப வெளியே போய்க்கலாம்..என்ன நான் சொல்றது?”

”அய்யா இப்ப வெளியே நெறையபேர் பார்ப்பனிய ஒழிப்புன்னு பேசறாங்களே அவங்களை பாத்து நீங்க பயப்படுறதில்லியா?” ”எதுக்குப் பயப்படணும்…?அவாளைத் தனியாப்பாக்கிறப்ப தம்பி நல்லாருக்கியா, ஒரு தோஷம் இருக்கிறாப்ல தெரியறதேன்னா கிலியாகிடுவாங்க… பிரதோஷம் ஏகாதஸின்னு பணத்த வாங்கிண்டு காதோடு காது வச்சமாதிரி வந்திடவேண்டியதுதான்…” ”சாதி ஒழிப்பு பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க?” ”சாதி ஒழிய வேண்டியதுதான்…அப்பதான் பிராமணா பிராமணா அல்லாதவாங்கிற ரெண்டு வர்ணம் மட்டும் இருக்கும்…லோஹம் க்ஷேமமா இருக்கும்”

‘ரொம்ப தெளிவா பேசினீங்கய்யா நன்றி” ”ஆசீர்வாதம்” ”நேயர்கள் இதுவரை கேட்டது இஞ்சிக்குடி பஞ்சாட்சரம் அவர்களுடன் நேர்காணல். நடத்தியவர் பிரபு வெங்கடேஷ். வணக்கம்.”
காந்தமுள்

முந்தைய கட்டுரைஏன் நாம் அறிவதில்லை?
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 1, ஜடாயு