யானைடாக்டர் [சிறுகதை] – 2

அவருடன் சேர்ந்து மிருகங்களை நானும் பழகிக்கொண்டேன். குக்கி யானையின் காலில் மிதித்து ஏறி மத்தகத்திலமர்ந்து காட்டுமரங்களின் கிளைகளினூடாகச் சென்றேன். ஆள் மேலே ஏறியதும் தன் உயரத்தை அந்த ஆளின் உயரத்துடன் சேர்த்துக் கணக்கிட்டுக்கொள்ளும் யானையின் நுட்பத்தை ஒவ்வொருமுறையும் பிரமிக்காமலிருக்க முடியவில்லை. டாக்டர் கே கரடி ஒன்றுக்கு காலில் கட்டுபோட்டபோது அந்தக் கால்களை பற்றிக்கொண்டேன். மான்களின் சாணிகளை பாலிதீன் பைகளில் சேகரித்து சாம்பிளுக்குக் கொண்டுவந்தேன். ஒரே மாதத்தில் புழுக்கள் பூச்சிகளின் கைக்குழந்தைகள் என்று காண என் கண்ணும் பழகிவிட்டது.

குண்டுக்குண்டாக மென்மையாக புசுபுசுவென்று ஆவேசமாகத் தின்றுகொண்டு நெளிந்துகொண்டிருக்கும் புழுக்களில் தெரியும் உயிரின் ஆவேசத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது மனம் மலைப்புறும். வெண்ணிறமான தழல்துளிகளா அவை? அறியமுடியாத மகத்துவம் ஒன்றால் அணுவிடை வெளி மிச்சமில்லாமல் நிறைக்கப்பட்டது இப்பிரபஞ்சம் என்று அப்போது தோன்றி புல்லரித்துவிடும். உண் என்ற ஒற்றை ஆணை மட்டுமே கொண்ட உயிர். அந்த துளிக்கு உள்ளே இருக்கின்றன சிறகுகள், முட்டைகள். ஒவ்வொரு கணமும் உருவாகும் ஆபத்துக்களை வென்று மேலெழுந்து அழியாமல் வாழும் கற்பனைக்கெட்டாத கூட்டுப்பிரக்ஞை.

பூச்சிகளுடன் மனிதன் மோதக்கூடாது என்று டாக்டர் கே சொல்வார். மனிதன் செய்யும் பெரிய பிழை என்னவென்றால் பூச்சிகளை அவன் தனித்தனியாகப் பார்த்து தன்னுடன் ஒப்பிட்டுக்கொள்கிறான். பூச்சிகள் ஒட்டுமொத்தமான அறிவும் உணர்வும் கொண்டவை. கோடானுகோடி பூச்சிகள். நாள்தோறும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் மாபெரும் திரள் அது. அப்படிப்பார்த்தால் அவை மனிதத் திரளைவிட பற்பலமடங்கு பெரியவை. மனிதனின் பூச்சிக்கொல்லியுடன் மோதுவது தனிப்பூச்சி அல்ல, ஒரு பூச்சிப்பெருவெளி. அவற்றின் சாரமாக உள்ள அதிபிரம்மாண்டமான பூச்சிமனம். அது அந்த பூச்சிக்கொல்லியை சில மாதங்களில் சாதாரணமாக வென்று செல்லும்.

ஒரு வெண்புழுவை கையில் எடுத்துக்கொள்வேன். அது நெளிந்து நெளிந்து மென்மையாக மேலேறும்போது கையில் ஒரு கைக்குழந்தையை எடுத்துக்கொள்ளும் அதே முரண்பட்ட மன எழுச்சி உருவாகும். மிக மென்மையான மிக எளிய ஓர் உயிர். ஆனால் முடிவற்ற சாத்தியங்களும் மகத்தான ஆற்றலும் உள்ளே உறங்குவது. அதிபிரம்மாண்டமான ஒன்றின் பிரதிநிதி. சிலசமயம் புழுவை உதடருகே கொண்டு வந்து அதன் கண்களைப்பார்ப்பேன். உணவைத்தவிர எதையுமே பார்க்கத்தேவையற்ற கண்கள். ஆனால் அதற்கு என்னை தெரியும் என்று தோன்றும். அது ஒரு சிறிய மின்னணுக்கண். அதன் வழியாக பூச்சிப்பெருவெளி என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதை நோக்கி புன்னகை செய்வேன். ஆம், ஒருவேளை நீ என்னையும் தின்று வளரக்கூடும். பரவாயில்லை. மண்மீது நானும் நீயும் ஒன்றுதான். செல்லக்குட்டி..பூக்குட்டி என்று கொஞ்ச வேண்டும் போலிருக்கும்

டாக்டர் கே இலக்கியங்களில் அபாரமான ஈடுபாடு கொண்டவர். தேடி வரும் ஒரு ஆதிவாசிக்கிழவியைக்கூட ஏமாற்றம் கொள்ளச்செய்யாத, ஒரு மிருகத்தின் சிகிழ்ச்சையைக்கூட மறுநாளைக்கு ஒத்திப்போடாத கடுமையான அன்றாட வேலைகளுக்கு நடுவே அவர் உலகின் முக்கியமான அறிவியலிதழ்களில் உலக அறிவியல் சமூகமே கொண்டாடும் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார். அக்கட்டுரைகள் அடங்கிய இதழ்கள் அவரது மர அலமாராவில் சீராக அடுக்கப்பட்டிருக்கும். அந்த இதழ்களின் மற்ற கட்டுரைகள் புரியாத அறிவியல் நெடியுடன் இருக்க டாக்டர் கே எழுதிய கட்டுரை மட்டும் உற்சாகமான கச்சித நடையில் மெல்லிய நகைச்சுவையுடன் அழகிய கவிதைமேற்கோள்களுடன் இருக்கும். அவருக்கு பிடித்தமான கவிஞர் லார்ட் பைரன்.

ஒருமுறை காட்டுக்குள் நானும் அவரும் சென்றுகொண்டிருந்தபோது டாக்டர் கே கைகளை ஆட்டினார். ஜீப் நின்றது. அவர் சத்தமின்றி சுட்டிக்காட்டிய இடத்தில் புதருக்குள் ஒரு செந்நாயின் காதுகள் தெரிந்தன. அது எங்களை வேவுபார்ப்பதை உணர்ந்தேன். அவர் இன்னொரு இடத்தைச் சுட்டிக்காட்டினார். அங்கே இன்னொரு செந்நாய் தெரிந்தது. சில நிமிடங்களில் அந்தக்காட்சி தெளிவாகியது. ஆறு செந்நாய்கள் ஆறு திசைகளிலாக மையத்தில் இருப்பதை காவல்காத்து நின்றன.

‘அங்கே அவர்களின் தலைவன் அல்லது குட்டிபோட்ட தாய் நகரமுடியாமல் கிடக்கிறது’ என்றார் டாக்டர் கே ஆங்கிலத்தில். கண்களை அங்கேயே நாட்டியபடி மிகமெல்லிய முணுமுணுப்பாக ‘ இங்கேயே இருங்கள். அசையவேண்டாம். கைகளை தூக்கக்கூடாது. நான் மட்டும் போய்ப்பார்த்துவிட்டு வருகிறேன்’ என்றார். நான் பதற்றத்துடன் ‘தனியாகவா?’என்றேன் . ‘இல்ல, அதுங்களுக்கு என்னை தெரியும்’ ‘இல்லடாக்டர், ப்ளீஸ் …செந்நாய்கள் ரொம்ப ஆபத்தானவைன்னு சொன்னாங்க’ ‘கண்டிப்பா ஆபத்தானவைதான்…பட்…’ திரும்பி ‘திஸ் இஸ் மை ட்யூட்டி’ என்றபின் மெல்ல கதவைத்திறந்து இறங்கி அந்த செந்நாய்களை நோக்கிச் சென்றார்.

என் வழியாக ஒரு குளிர்ந்த காற்று கடந்து சென்றது. கைகளால் மெல்ல என் பைக்குள் இருந்த சிறிய துப்பாக்கியை தொட்டேன் .அதன் குளிர் ஆறுதலை அளித்தது. டாக்டர் மேடேறி அந்த நாய்களின் அருகே சென்றார். புதருக்குள் இருந்து முதல் நாய் தலை தூக்கி காதுகளை முன்னால் மடித்து அவரைப் பார்த்தது. அவர் நெருங்க நெருங்க தலையை கீழே கொண்டுவந்து மூக்கை நன்றாக நீட்டி அவரை கவனித்தது. மற்றநாய்கள் இருபக்கமும் சத்தமே இல்லாமல் அவரை நோக்கி வருவதைக் கண்டேன். சில நிமிடங்களில் அவர் அந்த ஆறுநாய்களாலும் முழுமையாகச் சூழப்பட்டுவிட்டார்.

டாக்டர் கே முதல் செந்நாயின் அருகே சென்று அசையாமல் நின்றார். சிலநிமிடங்கள் அந்த நாயும் அவரும் ஒரு மௌனமான பிரார்த்தனை போல அப்படியே நின்றார்கள். பின் அந்த நாய் நன்றாக உடலை தாழ்த்தி கிட்டத்தட்ட தவழ்ந்து அவர் அருகே வந்தது. முகத்தை மட்டும் நீட்டி அவரை முகர்ந்தது. சட்டென்று பின்னால் சென்றபின் மீண்டும் வந்து முகர்ந்தது. ஹுஹுஹு என்று ஏதோ சொன்னது. புதர்களுக்குள் நின்ற மற்ற நாய்கள் நன்றாக நிமிர்ந்து தலைதூக்கி நின்றன.

முதல் நாய் அவர் அருகே நெருங்கி அவரது பூட்ஸ்களை நக்கியது. பின் அது அவர்மேல் காலைத்தூக்கி வைத்து அவர் கையை முகர்ந்தது. அதன் உடல்மொழி மாறுவதை கண்டேன். நம்மை வரவேற்கும் வளர்ப்புநாய்போல அது வளைந்து நெளிந்து உடலைக்குழைத்து வாலைச்சுழற்றியது. அவரைப்பார்த்துக்கொண்டு வாலாட்டியபடியே பக்கவாட்டில் நடந்து சென்றபின் துள்ளி ஓடி கொஞ்சதூரம் போய், காதை பின்னால் தழைத்துக்கொண்டு நான்குகால் பாய்ச்சலில் அவர் அருகே ஓடி வந்து நின்று, மீண்டும் முன்னால் துள்ளி ஓடியது. அவரை ஒரு விசேஷ விருந்தாளியாக அது நினைப்பது தெரிந்தது. அவர் வந்ததில் அதற்கு தலைகால் புரியாத சந்தோஷம் என்று தெரிந்தது. அந்த கௌரவத்தை எப்படி கொண்டாடுவதென்று அதற்கு புரியவில்லை.

மற்றநாய்களும் வாலைச்சுழற்றுவது புதர்களின் அசைவாக தெரிந்தது. பின் ஒரு நாய் முதல்நாய் நின்ற இடத்தை எடுத்துக்கொள்ள பிற நான்கும் அவற்றின் பழைய இடத்துக்குச் சென்றன. டாக்டர் கே புதர்களுக்குள் குனிந்து எதையோ பார்ப்பது தெரிந்தது. பின் அவர் அமர்ந்துகொண்டார். அங்கே அந்த நாய் குவ் குவ் குவ் என்று நாய்க்குட்டி போல ஏதோ சொல்வது மட்டும் கேட்டது. அரைமணி நேரம் கழித்து டாக்டர் கே திரும்பிவந்தார். காரில் ஏறிக்கொண்டு ‘போலாம்’ என்றார்

‘என்னசார்?’ என்றேன். ‘அங்க அவங்க தலைவன் அடிபட்டு கெடக்கறான்’ என்றார். ‘என்ன அடி?’ ‘சிறுத்தைன்னு நெனைக்கறேன். வலதுகால் சதைபேந்து போயிருக்கு. எலும்பும் முறிஞ்சிருக்கலாம்…’ ‘நாம என்ன பண்றது?’ என்றேன். ‘ஒண்ணுமே பண்ண வேண்டாம். அது அவங்களோட வாழ்க்கை, அவங்க உலகம்…நாம பாகக்வேண்டியது ரெண்டுமூணு விஷயம்தான். அந்த நாயை யாராவது மனுஷங்க ஏதாவது பண்ணியிருக்காங்களாங்கிறது முதல்ல. அப்டீன்னா குற்றவாளிய கண்டுபுடிச்சு தண்டிக்கணும். ரெண்டு, வழக்கமா இல்லாத ஏதாவது தொற்றுநோய் இருக்கான்னு பாக்கணும். இருக்குன்னா உடனடியா நடவடிக்கை எடுக்கணும்…’

நான் ’அப்டியே விட்டுட்டு போறதா, அது செத்துட்டா?’ என்றேன். ‘சாகாது…ஆனா அந்த நாய் இனிமே தலைவன் இல்லை. அனேகமா என்னை கூட்டிண்டுபோச்சே அவன்தான் இனிமே தலைவன்…’ ‘நாம ஏதாவது மருந்து போட்டா என்ன?’ ‘என்ன மருந்து? நம்மளோட வழக்கமான ஆண்டிபயாட்டிக்குகளா? காட்டுமிருகங்களோட ரெஸிஸ்டென்ஸ் என்ன தெரியுமா? இந்த மருந்துகளை குடுத்து பழக்கினா அப்றம் காட்டுக்குள்ளயும் ஊரைமாதிரி மூணுகிலோமீட்டருக்கு ஒண்ணுன்னு ஆரம்ப சுகாதார நிலையம் தெறக்கவேண்டியதுதான்’

நான் பெருமூச்சுடன் ‘அந்த நாய் உங்கள அடையாளம் கண்டது அமேஸிங்கா இருந்தது…’ என்றேன். ‘நாய்னா என்னன்னு நினைச்சே? சச் எ டிவைன் அனிமல்…மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோட எச்சப்புத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கானே அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…’ டாக்டர் கே முகம் சிவந்தார். ‘பைரன் கவிதை ஒண்ணு இருக்கு. ’ஒரு நாயின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகம்’ . படிச்சிருக்கியா?’

‘இல்லை’ என்றேன். அவர் காட்டையே சிவந்த முகத்துடன் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு திடீரென்று மந்திர உச்சாடனம் போலச் சொல்ல ஆரம்பித்தார். ‘When some proud son of man returns to
earth, Unknown to glory, but upheld by birth..’
நான் அந்த அவ்வரிகளை அவரது முகமாகவே எப்போதும் நினைத்துக்கொள்வேன்.

ஆனால் நாய் வாழ்க்கையில் உன்னத நண்பன்
வரவேற்பதில் முதல்வன்! பாதுகாப்பதில் முந்துபவன்!
அவன் நேர்மை நெஞ்சம் உரிமையாளனுக்கே சொந்தம்,
அவனுக்காகவே உழைக்கிறான் உண்டு உயிர்க்கிறான்!

அந்த வரிகளை நான் டாக்டர் கேயின் வாழ்க்கைப்பிரகடனமாகவே பலமுறை நினைத்துக்கொண்டதுண்டு . நட்பு மட்டுமே ஆன்மாவாக மாறி நிறைந்து ஒளிரும் கண்களுடன் நட்பேயான வாலுடன் நட்பேயான காதுகளுடன் நட்பேயான குரைப்புடன் நட்பேயான குளிர்நாசியுடன் என் கண் முன்னால் ஒரு நாய் நின்றது. ‘நான் உனக்கு’ என்றது. ‘நீயே நான்’ என்றது. ‘நீ என்னை நம்பலாம், எந்த இறைவனுக்கும் நிகராக’ என்றது. ‘ஏனென்றால் இறையெனப்படுவது ஒன்று உண்டென்றால் அது ததும்பிச் சொட்டிய ஒரு துளியே நான்!’.

அதனருகே அதை சற்றும் கவனிக்காமல் தொடுவானை நோக்கி எதற்காகவோ ஏங்கிக்கொண்டு ஓர் மானுடஅற்பன் நின்றிருந்தான். அவன் நான். வாழ்நாளெல்லாம் தேடிக்கொண்டிருந்தவன் அதிகாரத்தை, இன்பத்தை ,அடையாளங்களை… அதற்கான சதுரங்கங்கள், அதற்கான அணிவகுப்புகள், அதற்கான புன்னகைகள், அதற்கான அர்த்தமற்ற ஆயிரம் சொற்கள். ‘Man, vain insect!’ என்ற பைரனின் கர்ஜனையை நான் அன்று அந்தக்காட்டில் டாக்டர் கேயின் செக்கச்சிவந்த தணல்முகத்தில் இருந்து கேட்டேன்.இடிமுரசுகள் அதிர வானமே சுட்டுவிரல் நீட்டி மனிதனை நோக்கிச் சொன்னது ‘ உனது அன்பு ஆசை மட்டுமே. உனது நட்போ ஏமாற்று. உனது புன்னகை போலி, உனது சொற்கள் வெறும் மோசடி’

என் மனம் நெகிழ்ந்து கண்கள் நிறைந்தன. நான் என்ற நினைப்பே என்னை கூசச்செய்தது. என் உடம்பே அழுக்குபட்டு நாறிக்கொண்டிருப்பது போலிருந்தது. அழுக்குச்சட்டையை கழற்றிவீசுவதுபோல என்னை உதறிவிட்டு நான்குகால்களுடன் அந்த அதிதூய பசுமைவெளியில் பாய்ந்துசெல்லவேண்டும். இந்த காற்றும் இந்த வெயிலும் என்னை அன்னியமென ஒதுக்காமல் அணைத்துக்கொள்ளும். அங்கே வலி உண்டு நோய் உண்டு மரணம் உண்டு. ஆனால் கீழ்மை இல்லை. ஒருதுளிகூட கீழ்மை இல்லை. ’உன்னை நன்கறிந்த எவரும் அருவருத்து விலகுவர். உயிர் கொண்ட கீழ்ததரப் புழுதியே நீ’ நான் விசும்பி அழுதபடி ஜீப்பை நிறுத்திவிட்டேன். டாக்டர் கே என்னை திரும்பிப் பார்க்காமல் உறைந்த தழல்போல அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தார்.

மனிதனின் கீழ்மைகளை ஒவ்வொருநாளும் முகத்திலறைந்தது போலப் பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் காட்டில் இருக்கவேண்டும். அனேகமாக இங்கே சுற்றுப்பயணம் வருபவர்கள் படித்தவர்கள், பதவிகளில் இருப்பவர்கள். ஊரில் இருந்தே வறுத்த பொரித்த உணவுகளுடனும் மதுக்குப்பிகளுடனும்தான் வருவார்கள். வரும் வழிதோறும் குடித்துக்கொண்டும் தின்றுகொண்டும் இருப்பார்கள். வாந்தி எடுப்பார்கள். மலைச்சரிவுகளின் மௌனவெளியை காரின் ஆரனை அடித்துக்கிழிப்பார்கள். முடிந்தவரை உச்சமாக கார் ஸ்டீரியோவை அலறவிட்டு குதித்து நடனமிடுவார்கள். ஓங்கிய மலைச்சரிவுகளை நோக்கி கெட்டவார்த்தைகளை கூவுவார்கள்.

ஒவ்வொரு காட்டுயிரையும் அவர்கள் அவமதிப்பார்கள். சாலைஓரத்துக் குரங்களுக்கு கொய்யாபழத்தை பிளந்து உள்ளே மிளகாய்ப்பொடியை நிரப்பி கொடுப்பார்கள். மான்களை நோக்கி கற்களை விட்டெறிவார்கள். யானை குறுக்கே வந்தால் காரின் ஆரனை உரக்க அடித்து அதை அச்சுறுத்தி துரத்துவார்கள். என்னால் எத்தனை யோசித்தாலும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் காலிமதுக்குப்பிகளை ஏன் அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசி எறிகிறார்கள் என்பது. வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டு மதுக்குப்பியுடன் இருப்பவர்களை இறக்கி பெல்ட்டை கழற்றி வெறியுடன் ரத்தம் சிதற அடித்திருக்கிறேன். ஜட்டியுடன் கடும்குளிரில் அலுவலகம் முன்னால் அமரச்செய்திருக்கிறேன். ஆனாலும் காட்டுச்சாலையின் இருபக்கமும் குப்பிச்சில்லுகள் குவிவதை தடுக்கவே முடிவதில்லை.

மற்ற எந்த மிருகத்தைவிடவும் யானைக்கு மிக அபாயகரமானது அந்த குப்பி உடைசல். யானையின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது. குப்பிகள் அனேகமாக மரத்தில் மோதி உடைந்து மரத்தடியிலேயே கிடக்கும். யானை அதன் மகத்தான எடையுடன் அதன்மேல் காலை வைத்தால் குப்பி நேராக அதன் பாதங்களுக்குள் முழுக்க புகுந்துவிடும். இருமுறை அது காலைத்தூக்கி வைத்தால் நன்றாக உள்ளே செல்லும். அதன் பின்னால் யானை நடக்கமுடியாது. இரண்டே நாட்களில் காயம் சீழ் வைக்கும். புழுக்கள் உள்ளே நுழையும். புழுக்கள் சதையை துளைத்து சீழை உள்ளே கொண்டுசெல்லும். முக்கியமான குருதிப்பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டுவிட்டதென்றால் அதன்பின் யானை உயிருடன் எஞ்சாது.

வீங்கிப் பெருத்து சீழ் வழியும் கால்களுடன் பலநாட்கள் யானை காட்டில் அலையும். ஒரு கட்டத்தில் நடமாட முடியாமலாகும்போது ஏதாவது மரத்தில் சாய்ந்து நின்றுவிடும். ஒருநாளில் முப்பது லிட்டர் தண்ணீர் குடித்து இருநூறு கிலோ உணவு உண்டு ஐம்பது கிலோமீட்டர் நடந்து வாழவேண்டிய உயிர் அப்படி ஐந்து நாட்கள் நின்றால் மெலிந்து உருக்குலைந்துவிடும். முதுகு எலும்பு மேலே துருத்தும். கன்ன எலும்புகள் புடைத்தெழும். காது அசைவது குறையும். மத்தகம் தாழ்ந்து தாழ்ந்து வரும். மெல்ல துதிக்கையை தரையில் ஊன்றி குப்புறச்சரிந்து நிற்கும். பின் மத்தகமே தரையில் ஊன்றும். அடுத்தநாள் பக்கவாட்டில் சரிந்து வயுறு பாறைபோல மறுபுறம் எழுந்து நிற்க விழுந்து கிடக்கும். வாலும் துதிக்கையும் மட்டும் சுழல கண்களை மூடித்திறந்தபடி நடுங்கிக்கொண்டிருக்கும். பிற யானைகள் அதைச்சூழ்ந்து நின்று தலையாட்டி பிளிறிக்கொண்டிருக்கும்.

அதன்பின் யானை சாகும். கடைசி துதிக்கை அசைவும் நின்றபின்னரும்கூட பலநாள் யானைக்கூட்டம் சுற்றி நின்று கதறிக்கொண்டிருக்கும். பின்னர் அவை அதை அப்படியே கைவிட்டு பலகிலோமீட்டர் தள்ளி முற்றிலும் புதிய இன்னொரு இடம் நோக்கிச் சென்றுவிடும். யானையின் தோலின் கனம் காரணமாக சடலம் அழுகாமல் இந்தக்காட்டில் எந்த மிருகமும் அதை சாப்பிட முடியாது. அழுகிய யானையை செந்நாய்கள் முதலில் தேடிவந்து வாயையும் குதத்தையும் மட்டும் கிழித்து உண்ணும். பின்னர் கழுகுகள் இறங்கி அமரும். கழுதைப்புலிகள் கூட்டம் கூட்டமாக வெகுதொலைவிலிருந்து தேடிவரும். மனிதனைவிட நூற்றிஎழுபது மடங்கு அதிக நியூரான்கள் கொண்ட மூளை கொண்ட காட்டின் பேரரரசன் வெறும் வெள்ளெலும்புகளாக மண்ணில் எஞ்சுவான்.

ஒருமுறை முதுமலையில் ஒரு யானைக்கு கால்வீங்கி அது காட்டில் அலைவதாக தகவல் வந்தபோது டாக்டர் கேயுடன் நானும் சென்றேன். காட்டுக்குள் அந்த யானை இருக்குமிடத்தை குறும்பர் ஏற்கனவே கண்டு வைத்திருந்தார்கள். அவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு ஜீப்பில் காட்டுக்குள் நுழைந்தோம். அதுவும் பழங்கால குதிரைப்பாதைதான். நெடுந்தூரம் சென்றபின் ஜீப்பை நிறுத்திவிட்டு நானும் டாக்டரும் காட்டுக்குள் சரிவிறங்கிச் சென்றோம். துப்பாக்கியுடன் இரு வனக்காவலர்களும் மற்ற பொருட்களுடன் இரு குறும்பர்களும் கூடவந்தார்கள்.

உடலை அறுக்கும் வேய்மூங்கில் இலைகளை அகற்றி டாக்டர் கே முன்னால் சென்றுகொண்டே இருந்தார். தரையில் வேர்முடிச்சுகள் காலை தடுக்கின. நான் மரங்களைப்பற்றிக்கொண்டு நடந்தேன். எழுபதை நெருங்கினாலும் டாக்டர் கே மிகக் கச்சிதமான உடல் கொண்டவர். காடு அவருக்கு மீனுக்கு கடல்போல. கொஞ்சநேரத்தில் காற்றில் யானைகளின் நெடி மெலிதாக வர ஆரம்பித்தது. யானைகள் ஏற்கனவே எங்களைக் கவனித்துவிட்டன என்று தெரிந்தது. மெல்லிய யானை உறுமல்கள் கேட்டன. இன்னும் கொஞ்சம் இறங்கிச்சென்றபோது இருபக்கமு மூங்கில்பத்தைகள் பரவிய ஓடை ஒன்றுக்கு அப்பால் பச்சைநிறமாக வெயில் தேங்கி நின்ற புல்வெளியில் பன்னிரண்டு யானைகள் கூட்டமாக நிற்பதைக் கண்டோம்

இன்னும்கூட யானைகள் இருக்கலாமென்று நினைத்து கண்களை ஓட்டியபோது மேலும் ஆறு யானைகள் மூங்கில் புதர்களுக்குள் மேய்ந்துகொண்டு நிற்பது தெரிந்தது. அங்கே நான்கு குட்டிகள் நிற்பது மேலும் கூர்ந்து நோக்கியபோது தெரிந்தது. டாக்டர் கே தன் கருவிகளை எடுத்து பொருத்திக்கொண்டார்.சிறிய ஏர்கன் போன்ற ஒன்று. அதில் மாத்திரையே குண்டாக இருக்கும்.யானையை கூர்ந்து தொலைநோக்கியால் கவனித்தார். அதன் எடையை அவதானிக்கிறார் என்று தெரிந்தது. எடைக்கு ஏற்பத்தான் அந்த யானைக்கான மயக்கமருந்து அளவை தீர்மானிக்க முடியும்.

அவர் முழுமையாக தனக்குள் மூழ்கி வேலைசெய்வதை பார்த்துக்கொண்டிருந்தேன். கருவிகளைப் பொருத்தி கையில் எடுத்துக்கொண்டதும் ‘நீங்க இங்க இருங்க…நான் போய் பாக்கறேன்’ என்றேன். அவரிடம் எதுவும் சொல்லமுடியாதென்று ஏற்கனவே நன்றாக அறிந்திருந்தேன். ‘அது பெரிய மரத்தடி பக்கத்திலே நின்னிட்டிருக்கு. கீழே விழுந்தா அடிபட்டிரும். அத கொஞ்சம் சதுப்புக்கு கொண்டு வரணும். மத்தயானைகளுக்கு நான் என்ன செய்யப்போறேன்னு தெரியாது. அதனால அதுங்க ரெஸிஸ்ட் பண்ணும்’ என்றார். ‘யானைகளுக்கு தெரியுமா, இந்த காயத்துக்குக் காரணம் மனுஷங்கதான்னு’ ‘கண்டிப்பா…ரொம்பநன்னா தெரியும்’ ‘அப்ப என்ன பண்றது?’ என்றேன். ‘பாப்போம்’ என்றார்.
டாக்டர் கே மெதுவாக கீழே இறங்கி ஓடையைக் கடந்து சேற்றுப்பரப்பில் இறங்கினார். யானைகள் அழுந்த நடந்து உருவான குழிகள் கால் உள்ளே போகுமளவுக்கு ஆழமாக நெருக்கமாக படிந்திருந்தன. அவற்றின் விளிம்புகளில் கால் வைத்து மெதுவாக அவற்றை நெருங்கினார். யானைகளின் நடுவே நின்ற பெரிய பிடியானை உரக்க உறுமியது. அதைக்கேட்டு மற்ற யானைகளும் பிளிறின. ஒரு யானை டாக்டர் கேயை நோக்கி திரும்பியது. அதன் காதுகள் வேகமாக அசைந்தன. தலையை வேகமாக குலுக்கியபடி டாக்டரை நோக்கி வந்தது. டாக்டர் கே அசையாமல் நின்றார். அது மேலும் தலையைக் குலுக்கி எச்சரிக்கை விடுப்பது போல உறுமிக்கொண்டு இன்னும் இரண்டடி முன்னால் வந்தது.

யானை தலையைக்குலுக்கினால் அது எச்சரிக்கிறது, தாக்குவேன் என்கிறது என்றுதான் அர்த்தம். என் இதயத்துடிப்பை காதுகளில் கேட்டேன். எழுந்து ஓடி டாக்டரிடம் சென்று அவர் அருகே நின்றுகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் கண்ணெதிரே டாக்டரை யானை சிதைத்துப்போட அதைப்பார்த்தபடி சும்மா இருந்தால், அவரது சடலத்தை சுமந்தபடி திரும்பிச்செல்ல நேர்ந்தால் நான் என்னை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. ஆனால் என்னால் அசைய முடியவில்லை. என் நாக்கு வரண்டு உள்ளே இழுத்துக்கொண்டு வாய் காலியாக இருப்பதைப்போல் இருந்தது.

டாக்டர் கே அசையாமல் சில நிமிடங்கள் நின்றார். யானையும் அசையாமல் நின்றது. பிற யானைகள் மொத்தமும் உடலால் அவரைக் கவனிக்கின்றன என்று தோன்றியது. டாக்டர் கே மேலும் முன்னே சென்றார். இப்போது அந்த யானை நெருங்கி வந்தது. ஆனால் தலையை குலுக்கவில்லை. மத்தகத்தை நன்றாக தாழ்த்தியது. அதுவும் எச்சரிக்கை அடையாளம்தான். டாக்டர் கே சீராக அதைநோக்கிச் சென்று அதன் முன் நின்றார். அது பேசாமல் நின்றது. நெடுநேரம். என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. பலமணிநேரம் ஆகிவிட்டதென்று தோன்றியது

என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அந்த யானை பின்வாங்கியது. பெரிய பிடியானை திரும்பி டாக்டர் கே-யை பார்த்து உறுமியபின் வாலை சுழற்றி வைத்துக்கொண்டது. பின்பு ஒவ்வொரு யானையாக மேலே ஏறி மறுபக்க மலைச்சரிவில் மூங்கில் கூட்டங்களுக்குள் சென்றன. கடைசி யானையின் வால்சுழற்சியும் பச்சை இலைகளுக்குள் மறைவது வரை நம்பமுடியாமல் நான் பார்த்து நின்றேன். டாக்டர் கையை தூக்கி எங்களிடம் வரும்படி சைகை காட்டினார். நானும் பிறரும் ஒடைக்குள் இறங்கி சென்றோம்

எங்களைக்கண்டதும் காயம்பட்ட யானை கோபத்துடன் தலையை குலுக்கி முன்னால் வர முயன்றது. பின்பு மெல்ல பிளிறிவிட்டு அங்கேயே நின்றது. டாக்டர் எங்களை மேலும் அருகே வரச்சொன்னார். வனக்காவலர்கள் நின்று விட்டார்கள். நானும் குறும்பர்களும் மட்டும் முன்னால் சென்றோம். யானை சட்டென்று சாய்ந்திருந்த மரம் அதிர நிமிர்ந்து எங்களை நோக்கி வந்தது. அதன் பின்னங்கால் வீங்கி மற்ற கால்களைவிட இருமடங்காக இருந்தது. அதை கிட்டத்தட்ட இழுத்துத்தான் அது முன்னகர முடிந்தது.

அது நாலடி முன்னால் வந்ததும் டாக்டர் அதைச் சுட்டார். மாத்திரை அதன் தோளுக்கு மேல் பதமான சதையில் புதைந்ததும் யானை உடல் அதிர்ந்து அப்படியே நின்றது. காதுகளை அசைப்பது நின்றது. பின்பு வேகமாக அசைக்க ஆரம்பித்தது. அந்த அசைவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. முன்காலை கொஞ்சம் வளைத்து ஆடியது. சட்டென்று பக்கவாட்டில் விழுந்து சேற்றை அறைந்து புல்மேல் விழுந்தது. துதிக்கை புல்மேல் ஒரு தனி விலங்கு போல புரண்டது. துதிக்கையின் நுனி மட்டும் தூக்கி சிறிய நாசிக்குமிழ் அசைய எங்களை வாசம் பிடித்தபின் யானை அசைவிழந்தது.

டாக்டர் கே யானையின் அருகே அமர்ந்து சுறுசுறுப்பாக வேலையை தொடங்கினார். நான் அவருக்கு உதவினேன். எங்களைச்சுற்றி மூங்கில் காடுகளுக்குள் யானைகள் எங்களையே கூர்ந்து நோக்கிக்கொண்டு நிற்பதை உணர்ந்தேன். என் முதுகு மேல் குளிர்ந்த பனிக்காற்று போல அவற்றின் பார்வையை அறிந்தேன். ஏதாவது ஒரு கணத்தில் அந்த யானைகளுக்கு நாங்கள் தவறாக ஏதோ செய்கிறோம் என்று தோன்றினால் என்ன ஆகும்?

யானையின் காலில் பாதி பீர்புட்டி ஒன்று முழுமையாக உள்ளே ஏறியிருந்தது. அதைச்சுற்றி சீழ் கட்டி சீழில் புழு வைத்து சிறுதேன்கூடு போல பொருக்கோடியிருந்தது. கத்தியால் டாக்டர் கே அந்தப்பொருக்கை வெட்டியதும் பெரிய தயிர்க்கலயம் உடைந்தது போல சீழ் வெளியே கொட்டியது. தேன்கூடு போல சிறிய துளையறைகளுக்குள் வெண்புழுக்கள் நெளிந்தன. டாக்டர் அந்த சீழபட்ட சதையை முழுக்க சிறிய கோடாலி போன்ற கருவியால் வெட்டி எடுத்தார். புழுக்கள் என் கைகளில் ஏறின. அவற்றை சுண்டி எறிந்தேன். மொத்த சீழையும் வெட்டி வீசியபின் பீர்க்குப்பி ஆழப்பதிந்திருந்த சதையை கத்தியால் அறுத்து எடுத்து வீசி காயத்தை நன்றாக விரித்து புட்டியை உருவி எடுத்தார். ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட என் கையளவு பெரிய புட்டி.

‘ஒருவாரம் கூட ஆகலை, பொழைச்சுது’ என்றார் டாக்டர் கே. புட்டியை உருவியதும் மேலும் சீழ் கொட்ட ஆரம்பித்தது. அந்தப்பகுதிச்சதையை முழுக்க வெட்டி ,சீவி எடுத்து வெளியே கொட்டினார். சீழ் வாடை குறைந்து குருதிவாடை எழ ஆரம்பித்தது. குருதி ஊறி சிவப்பாக புண்ணை நனைத்து வழிந்து பின் குமிழியிட ஆரம்பித்ததும் தலையணை அளவுக்கு பஞ்சை எடுத்து அதில் மருந்தை நனைத்து உள்ளே திணித்து இறுக்கி வைத்து பெரிய பேண்டேஜ் நாடாவால் சுற்றிக்கட்டினார். அதன் பசை இறுக்கமாக ஒட்டிக்கொண்டது. அதன் காலின் கூடாரத்துணிபோன்ற தோலின் மீது சிறிய எவர்சில்வர் கிளிப்புகளை குத்தி இறுக்கி அதனுடன் பேண்டேஜை சேர்த்து ஒட்டிக்கட்டி இறுக்கி முடித்தார். அதன் மேல் கீழே கிடந்த கரிய சேற்றை அள்ளி நன்றாக பூசிமூடினார்.

யானையின் காதில் அதை திரும்பவும் கண்டுபிடிப்பதற்கான சிக்னலர் கம்மலை குத்தி அணிவித்து விட்டு எழுந்தோம். எங்கள் உடைகளும் கைகளும் முழுக்க ரத்தமும் சீழுமாக இருந்தது. புழுக்களை உதறிவிட்டு பொருட்களை சேகரித்துக்கொண்டு கிளம்பினோம். திரும்பி வந்து ஓடையில் கைகளை கழுவிக்கொண்டிருந்தபோது பிளிறல் ஒலியுடன் யானைகள் ஒவ்வொன்றாக இறங்கி வந்து அந்த யானையைச் சூழ்ந்து கொண்டன. அந்த யானைப்பாட்டி கிடந்த யானையின் காலில் பெரிதாக தெரிந்த பாண்டேஜை துதிக்கையால் தடவி பரிசோதனைசெய்து மெல்ல பிளிற மற்ற யானைகளும் பிளிறின. சில யானைகள் அப்பகுதியில் பரவிக்கிடந்த குருதியை துதிக்கையால் மோப்பம் பிடித்தன. ஒரு யானை அங்கே நின்று காதுகளை முன்னால் தள்ளி எங்களை பார்த்தது

’பேண்டேஜை அவுத்திராதில்ல?’ என்றேன். ‘அதுக்கு தெரியும்’ என்றார். ‘ஆனா யானைக்கு பொதுவா வெள்ளை நிறம் புடிக்காது. சேறு பூசலைன்னா நிம்மதியில்லாம காலை நோண்டிண்டே இருக்கும்.’ ‘குணமாயிடுமா?’ என்றேன். ’ அனேகமா பதினஞ்சுநாளிலே பழையபடி ஆயிடும். யானையோட ரெஸிஸ்டென்ஸ் பயங்கரம். சாதாரண ஆண்டிபயாட்டிக் கூட அபாரமா வேலைசெய்யும்’ என்றார். முதுமலையில் இருந்து மீண்டும் டாப்ஸ்லிப்புக்கு காரில் திரும்பும்போது டாக்டர் கே சொன்னார் ‘என்ன ஒரு டிவைன் பீயிங். என்னிக்காவது தமிழ்நாட்டிலே யானை இல்லாம போனா அப்றம் நம்ம பண்பாட்டுக்கே என்ன அர்த்தம்? மொத்த சங்க இலக்கியத்தையும் தூக்கிப்போட்டு கொளுத்திர வேண்டியதுதான்’

தொடர்ச்சி

Chapter 1 :  http://www.jeyamohan.in/?p=12433

Chapter 2 :  http://www.jeyamohan.in/?p=12435

Chapter 3 :  http://www.jeyamohan.in/?p=12439

முந்தைய கட்டுரையானைடாக்டர் [சிறுகதை] – 1
அடுத்த கட்டுரையானைடாக்டர் [சிறுகதை] – 3