‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39

ele1நாகக் களமுற்றத்தில் அமர்ந்து அரவான் சொன்னான். நான் இப்போது நூற்றெட்டு இதழ்களுடன் விரிந்த பெருந்தாமரையின் இதழ்கள் ஒன்றன்மீது ஒன்றென மெல்ல படிந்து ஒற்றை வளையமென்றாகி குவிந்து மொட்டாகி இறுகி செண்டாகி மணியாகி மூடிக்கொள்வதை பார்க்கிறேன். உறுதியான ஓர் எண்ணம் மலரை உலோகமென்றாக்கும் என்பதை அறிந்தேன். மலர்ச்சூழ்கைக்குள் பாண்டவ இளையோனாகிய அபிமன்யு முழுமையாகவே சிக்கிக்கொண்டான். அவனைச் சூழ்ந்து கௌரவர்களின் பெருவீரர்கள் அனைவரும் குலைத்த வில்லுடன் நிறைந்த ஆவநாழியுடன் வந்து வளையமென்றானார்கள்.

நெடுநேரம் என்ன நிகழ்கிறதென்று அபிமன்யுவுக்கு புரியவில்லை. வெறிகொண்டு அம்பு தொடுத்து அவன் துரோணரை பின்னடையச் செய்துகொண்டிருந்தான். துரோணருக்கு உதவ வந்த கர்ணனையும் அவன் தன் அம்புகளால் எதிர்கொண்டான். கர்ணனின் தேரிலறைந்து அதன் பொற்பூச்சுத் தகடுகளை நெளியவைத்த தன் அம்புகள் அவனை மேலும் மேலும் வெறி கொள்ளச் செய்தன. கர்ணனின் தேர் நீரில் மூழ்கும் கலம் என கௌரவப் படைக்குள் பின்னடைவதை அவன் தன் வில்திறனின் வெற்றியென்றே கருதினான். சூதர்களின் சொற்கள் அவனுள் எழுந்தன. என்றும் வாழும் காவியங்களை அவன் இளைய உள்ளம் நேர்முன் எனக் கண்டது.

கர்ணனை மறு எல்லை வரை கொண்டு சென்று வீழ்த்தும்பொருட்டு பேரம்பொன்றை எடுத்தபோதுதான் தன்னைச் சூழ்ந்து கௌரவர்களின் அனைத்து முதன்மை வில்லவர்களும் நாணேற்றிய வில்லுடன், சினமெழுந்த கண்களுடன் நின்றிருப்பதை பார்த்தான். சிக்கிக்கொண்டுவிட்டோம் என்று உணர்ந்ததும் அவனுள் முதலிலெழுந்தது ஒரு களிப்புதான். பிற எவருக்கும் நிகழாத ஒன்று தனக்கு நிகழ்ந்துள்ளது. ஆயிரம் பல்லாயிரம் வருடங்கள் சூதரும் புலவரும் சொல்லி விரிக்கும் தகைமை கொண்ட ஒன்று. அக்களத்தில் பொருதி வீழ்ந்த பல்லாயிரவரில் ஒருவனாக அன்றி எப்போதும் தனித்தவனாக அவனை ஆக்கும் ஒன்று. உரக்க நகைத்தபடி அவன் கூவினான் “வருக! கௌரவ வில்லவர் அனைவரும் வருக! வில்லென்றால் என்னவென்று நோக்கி அறிக!”

அவன் தன் அம்புகளால் அவர்கள் அனைவரையும் மாறி மாறி எதிர்த்தான். நூறு கைகள் எழுந்து வந்ததுபோல். தன் மூதாதையைப்போல் உடல் முழுக்க விழி பெருகியவன்போல். நூறு அம்புகள் ஒரே தருணம் எழுந்து அவன்மேல் பாய சூழ்ந்து அணுகிய ஒவ்வொரு அம்பையும் தனித்தனியாக நோக்கினான். ஒரே கணத்தில் பல அம்புகளை அறைந்து வீழ்த்தினான். அவன் திறனின் உச்சத்தைக் கண்டு சூழ்ந்திருந்த கௌரவப் பெருவீரர்கள் திகைப்பும் பின் அச்சமும் அடைந்தனர். அர்ஜுனனுக்கு வைத்த பொறியில் அவன் வந்து சிக்கிக்கொண்டது அவர்களுக்கு முதலில் அளித்த ஏமாற்றத்தை அந்த அச்சம் போக்கியது. அத்தருணத்தில் அவனை அவ்வாறு வீழ்த்தாவிடில் அந்தப் போர் ஒருபோதும் முடிவடையப்போவதில்லை எனும் உணர்வை அங்கிருந்த அனைவருமே அடைந்தனர்.

அபிமன்யு சல்யரின் வில்லை உடைத்தான். பூரிசிரவஸின் தலைக்கவசமும் உடல்கவசமும் உடைந்து தெறித்தது. அவன் தன் தேரை பின்னிழுத்து கவசவீரர்களுக்கிடையே மறைந்துகொண்டான். துரியோதனன் வெறிக்கூச்சல் இட்டபடி எழுந்து வர அவன் கவசத்தை உடைத்து தோளில் மூன்று அம்புகளால் அறைந்து தேர்த்தட்டில் நினைவிழந்து விழச்செய்தான். கௌரவ மைந்தராகிய குபந்தனும் கேரகனும் கேதுவும் கௌசலனும் க்ஷமகனும் க்ஷுபனும் குரோதகனும் கும்பனும் கந்தகனும் கணகனும் கஜகர்ணனும் கர்பனும் காத்ரனும் அவன் அம்புகள் பட்டு தேர்த்தட்டுகளிலிருந்து அலறி வீழ்ந்தனர். மைந்தர்கள் இறப்பதைக் கண்டு துரியோதனன் “அங்கரே, இவனை வீழ்த்த உங்களால் மட்டுமே இயலும்” என்று கூச்சலிட்டான். கர்ணன் தன் வில்லின் நாணை இழுத்து முரலல் ஒலியெழுப்பியபடி அபிமன்யுவை நேர்நின்று எதிர்த்தான். நாகபாசனின் தேருக்குப் பின் ஆயிரம் தலையுடன் சேடன் எழுந்ததுபோல் நாகர்படை பொங்கி வளைந்து அலைநிலைத்ததுபோல் நின்று, நா பறக்க, விழி ஒளிர ததும்புவதை நான் கண்டேன். ஆனால் அபிமன்யு எதையுமே காணவில்லை. அவன் நோக்கியதெல்லாம் துள்ளும் விஜயத்தை, அதிலேறி காற்றிலெழும் அம்புகளை மட்டுமே.

கர்ணன் அபிமன்யுவை சூழ்கைக்கு உள்ளிழுக்கையில் ஊமைச்சீற்றம் கொண்டிருந்தான். அது அபிமன்யு மீதான சினமல்ல, தன் மீதான சினமும் அல்ல, இலக்கின்றி ஒவ்வொரு கணமும் உருமாறும் கசப்பு. எங்கு விழி படுகிறதோ அதன்மீது முழு நஞ்சையும் உமிழும் பொருமல். அபிமன்யு அவனை அறைந்து அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருக்கையில் ஒருகணம் அவன் அம்பினால் தன் நெஞ்சக்கவசம் உடைந்து உயிர் அகலக்கூடுமெனில் நன்றே எனும் எண்ணம் அவனில் வந்துசென்றது. பின் எங்கெங்கோ இருந்து முகங்கள் எழுந்து அவனை சூழ்ந்தன. இளிவரல்கள், அறைகூவல்கள், பின்னர் துளித்த ஒரு துளி விழிநீர். தன் சீற்றத்தை திரட்டிக்கொள்ள அவன் முயன்றான். ஆனால் நெஞ்சிலெழுந்த விசை விஜயத்தை சென்றடையவில்லை.

முற்றிலும் அபிமன்யு சூழ்ந்துகொள்ளப்பட்டதும் கர்ணன் திகைத்தவன்போல் வில்லைத் தாழ்த்தி தேர்த்தட்டில் வெறுமனே நின்றான். பூரிசிரவஸும் சல்யரும் கிருபரும் துரோணரும் இணைந்து அவனைத் தாக்க மலர்சூழ்கை ஒரு பெரும் நீர்ச்சுழியென சுழல அதன் மையத்தில் விசைகொண்டு தன்னைத்தான் சுற்றியபடி அவன் போரிடுவதை வெறித்து நோக்கியபடி அவன் நின்றான். “தாக்குக! நம் மைந்தருக்கு பழிநிகர் செய்க! அவன் மானுடனே அல்ல! குருதிப்பலி ஆடும் கொடுந்தெய்வம்” என துரியோதனனின் ஆணையை அவன் கேட்டான். ஆயினும் அவனால் கை தூக்க இயலவில்லை.

அவனுக்கு வலப்பக்கம் தேர்த்தூணில் உடல் சுழற்றி எழுந்தது கார்க்கோடகன் எனும் நாகம். “எழுக உன் நஞ்சு! எழுக உன் கூர்வாளி!” என்று அது கர்ணனிடம் சொன்னது. “மாநாகனே, அறிக! உமிழப்படாத நஞ்சு மணியென்றாகும். மணி வெறும் ஒளி மட்டுமே. உமிழப்படுகையிலேயே நஞ்சு பொருள்கொள்கிறது” என்று அது கூறியது. இடப்பக்கம் எழுந்தது அஸ்வமுகன் எனும் பெருநாகம். “கொல் அவனை! ஒவ்வொரு கணமும் நீ இழந்தவை அனைத்திற்கும் நிகரென இப்பழியை கொள்! இங்கு ஒருமுறையேனும் முழுமையாக வெல்! கொல் அவனை! கொல்!” என்று அறைகூவியது. நாகங்கள் அவனைச் சூழ்ந்து திளைத்து “கொல்! கொல்! கொல்!” என்றன. “ஆயிரம் பாறைகளில் அறைந்து சிதறிய அலை பின்வாங்குகையிலேனும் விசைகொண்டாக வேண்டும். நாகனே, கதிரவன் மைந்தனே, இத்தருணத்தில் எழுக உன் விசை! இப்போதெழுக உன் சீற்றம்!” என்றது அஜமுகன் என்னும் மாநாகம்.

கர்ணனின் கையிலிருந்து விஜயம் தயங்கியது. அத்தருணம் தேர் திரும்ப உரக்க நகைத்தபடி ஒருகணம் அவனை நோக்கிய அபிமன்யுவில் இளைய அர்ஜுனன் தோன்றி மறைந்தான். சீற்றம்கொண்டு தன் நாணை இழுத்து அம்புகளால் அபிமன்யுவை அறைந்தான். மேலும் மேலுமென அறைந்து அபிமன்யுவின் தோள்கவசங்களை உடைத்தெறிந்தான். அவன் நெஞ்சக்கவசம் உடைந்து தெறித்தது. வில் அறுந்தது. தேரிலிருந்து அவன் பாய்ந்திறங்கிய கணம் புரவிகள் கழுத்தறுபட்டு சரிந்தன. கவிழ்ந்த தேருக்குப் பின்னால் பாய்ந்திறங்கி விழுந்து கிடந்த வீரனொருவனின் வில்லை எடுத்து அபிமன்யு அவர்களை எதிர்கொண்டான்.

ele1இடும்பர்களின் மலையில் வெறியாட்டெழுந்து நெஞ்சில் அறைந்து துள்ளிச் சுழன்றெழுந்து பார்பாரிகன் சொன்னான். இதோ நான் மலர்ச்சூழ்கையின் நடுவே நின்று அந்த இளையவனை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவன் கைகளில் எழுவது தன்னை மட்டுமே எண்ணி முழுவாழ்வையும் நிகழ்த்திய ஒருவனில் மட்டுமே எழும் பேராற்றல். ஆணவம் கூர்த்து முனை கொண்டு சூடிய ஒளி. எவ்வுணர்வும் உச்சமடைகையில் அது தெய்வங்களுக்குரியதாக ஆகிறது. அவன் போரிடுவதைக் காண வெண்ணிற முகில்களிற்றின்மேல் இந்திரன் வந்திறங்கினான். தேவர்கள் முகில்கள் தோறும் பெருகினர். முகில்கள் செறிந்து வான் இருண்டது. கீழ்ச்சரிவில் இடியோசையும் மின்னலுடன் எழுந்தது.

கை பெருகி சித்தம் ஒன்றென்றாகி நின்று அவன் போரிடுகையில் சூழ்ந்திருந்த கௌரவ வீரர்கள் ஒவ்வொருவரும் காற்றெரியில் சுழன்று பதறி பறக்கும் பறவைகள்போல் அலைமோதினார்கள். உடன்வந்த பாஞ்சால வீரர்கள் அனைவரும் கொன்றொழிக்கப்பட அபிமன்யு தன்னந்தனியனாக நின்று போரிட்டான். அவன் அம்புகள் பட்டு சுபலரின் ஏழு படைத்தலைவர்கள் தேர்த்தட்டுகளில் விழுந்தனர். துரியோதனன் தன்னெதிரே தழலென ஆடி நின்றிருந்த அர்ஜுனனை பார்த்தான். நடுங்கும் கைகளுடன் தேரில் அமர்ந்திருந்தான். அவனுக்கு இருபுறமும் துச்சகனும் துச்சாதனனும் வில் சோர தேரில் பின்னடைந்துகொண்டிருந்தனர்.

கோசலமன்னன் பிருஹத்பலன் தன் தேரிலிருந்து வில்லுடன் பாய்ந்திறங்கி “இந்தக் கணத்திற்கென்றே வாழ்ந்தேன், பாண்டவனே” என்று கூவியபடி அபிமன்யுவை நோக்கி சென்றான். உடைந்த அம்புகளில் சிலவற்றை பொறுக்கியபடி எழுந்த அபிமன்யு நாண் தளர்ந்த வில்லுடன் அவனை எதிர்த்தான். அவர்களிடையே போர் தொடங்கியதுமே அது நிகர்நிலையில் இல்லை எனத் தெரிந்தது. “செல்க, கோசலனை காத்துநில்லுங்கள்!” என்று துரியோதனன் கூவினான். பிருஹத்பலன் அபிமன்யுவின் வில்லை உடைத்தான். எஞ்சிய ஒற்றை அம்புடன் அவன் தேர்ச்சகடம் ஒன்றுக்கு அடியில் பதுங்கினான். கர்ணன் நாண்குலைத்தபடி தேரில் அபிமன்யுவை நோக்கி வருவதற்குள் அருகில் உடைந்து கிடந்த தேர் ஒன்றின் மேல் பாய்ந்தேறிய அபிமன்யு அந்த ஒற்றை அம்பை வீசி பிருஹத்பலனின் கழுத்துநரம்பை வெட்டினான். பொத்திய விரல்களின் நடுவே குருதி கொப்பளித்து எழ, வாய் கோணலாகி, கால்கள் குழைய பிருஹத்பலன் களத்தில் விழுந்தான்.

“அவன் மானுடனல்ல. ஏதோ போர்த்தெய்வம் அவன் உடலில் இறங்கியிருக்கின்றது” என்று துச்சகன் கூவினான். “மூத்தவரே, இளைய பாண்டவனில் குடியிருக்கும் ஒன்று ஏழு மடங்கு விசையுடன் இவனில் எழுந்துள்ளது. நம்மால் இவனை வீழ்த்த இயலாது” என்று துச்சாதனன் சொன்னான். தன் வில்லை எடுத்து அம்பால் அவனை அறைவதற்கான ஆற்றலை முற்றாக இழந்து அமர்ந்திருந்தான் துர்மதன். கர்ணனின் அம்புகளால் தேரிழந்து வெறுந்தரையில் நின்றிருந்த அபிமன்யு வீழ்ந்துகிடந்த ஒருவனின் வில்லை தரையிலிருந்து எடுத்து கீழே உதிர்ந்திருந்த அம்புகளை பொறுக்கி எய்தான். அவ்வில்லை அஸ்வத்தாமனின் அம்பு உடைக்க பாய்ந்து தேருக்கடியினூடாக மறுபக்கம் சென்று பிறிதொரு வில்லை மண்ணிலிருந்து எடுத்து போரிட்டான். தன்னைச் சூழ்ந்து பறக்கும் ஒவ்வொரு அம்புக்கும் நெளிந்தும் ஒளிந்தும் தப்பி மேலும் மேலும் விழுந்த அவர்களின் அம்புகளைப் பொறுக்கி அவன் போரிட்டான்.

துரியோதனன் ஒருகணத்தில் “நிறுத்துங்கள்! போதும் இப்போர்!” என்று கூவினான். “மூத்தவரே…” என்று துச்சாதனன் கூவினான். துரியோதனன் கைகளை வீசி “போதும்… அவனை போகவிடுங்கள்… வேண்டாம்!” என ஆணையிட்டான். அவன் குரல் எழுந்த அக்கணத்திலேயே அபிமன்யுவை நோக்கி உருவிய வாளுடன் லக்ஷ்மணன் பாய்ந்தான். “நில்! வேண்டாம், நில்!” என்று துரியோதனன் கூவினான். லக்ஷ்மணன் அபிமன்யுவுடன் வாள் முட்டி போரிடத் தொடங்கியபோது எழுந்த ஓசையில் அந்தக் குரல் மறைந்தது. அவர்கள் இருவரும் வெறிகொண்ட உச்சத்திலிருந்து உச்சத்திற்கு எழுந்து போரிட்டனர். அபிமன்யுவின் வாள் விசையும் சுழற்சியும் கொண்டிருந்தது. லக்ஷ்மணனின் வாள் எடையும் நீளமும் கொண்டிருந்தது. அபிமன்யுவின் வாளை லக்ஷ்மணனின் வாள் உடைத்தது. அக்கணமே நிலத்தில் விழுந்து அதே விசையில் உடைந்த வாளை வீசி லக்ஷ்மணனின் கழுத்தை அறுத்தான் அபிமன்யு. தலை அறுபட்டு பக்கவாட்டில் தொங்க நிலத்தில் தோள் அறைந்து விழுந்து கால்களை உதைத்துக்கொண்டு துள்ளியது லக்ஷ்மணனின் உடல்.

துரியோதனன் ஓசையற்ற, காட்சிகள் ஏதுமற்ற வெட்டவெளி ஒன்றின் சுழிமையத்தில் என தன்னை உணர்ந்தான். எண்ணங்களும் சுழித்து ஒற்றைச் சொல்லென்றாயின. அவன் விழிகளும் வாயும் திறந்திருக்க தலை நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் உடல் பக்கவாட்டில் சரிய அருகிருந்த ஆவக்காவலன் அவனை பற்றிக்கொண்டான். துச்சாதனன் நெஞ்சில் ஓங்கி அறைந்துகொண்டு “கொல்லுங்கள்! விடாதீர்கள்! ஒவ்வொருவரும் களமிறங்குங்கள். இன்று இவன் குருதி கொள்ளாது இப்போர் முடிவுறாது” என்று கூவினான். கிருபரும் துரோணரும் கர்ணனும் அஸ்வத்தாமனும் பூரிசிரவஸும் சல்யரும் சேர்ந்து அபிமன்யுவின் மேல் அம்புகளால் அறைந்து அறைந்து அவனை நிலத்தில் புரட்டினர். உடலெங்கும் அம்புகளுடன் முள்ளம்பன்றிபோல அவன் பாய்ந்து தேருக்கு அடியில் பதுங்கிக்கொண்டு அங்கிருந்து அம்புகளை எடுத்து வீசி காந்தாரத்து போர்வீரர்களை கொன்றான். துரியோதனனின் அணுக்கனான பிருந்தாரகன் கழுத்தின் நரம்பை வெட்டிய அம்பினால் வீழ்த்தப்பட்டு தேர்த்தட்டிலிருந்து சரிந்தான்.

அப்பால் மலர்ச்சூழ்கைக்கு வெளியே பீமன் தலைமைகொண்ட பாண்டவர்களின் படையின் கட்டைவிரல் அர்ஜுனன் நடத்திய சுட்டுவிரலுடன் இணைந்து தாமரையின் பின்பக்கம் பெரும் விசையுடன் அறைந்து சிதறடித்துக்கொண்டிருந்தது. அங்கு நின்றிருந்த காலாட்படையினர் பீமனின் கதையாலும் அர்ஜுனனின் அம்புகளாலும் செத்து உதிர்ந்துகொண்டிருந்தனர். ஆனால் ஒழியாது மேலும் மேலும் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டிருந்த அவர்களின் எண்ணிக்கை அவர்களிருவரையும் தடுத்து நிறுத்தியது. வைக்கோற்போரில் முட்டும் யானை என பீமன் ஆற்றலிழந்தான். உதிரும் இலைகளை, சருகுகளை சலிக்காது அம்புகளால் வீழ்த்துவதுபோல் உணர்ந்து அர்ஜுனன் சீற்றம் கொண்டான்.

“கணம் ஒழுகிக்கொண்டிருக்கிறது. இன்னும் சற்று பொழுது. நாம் இதை உடைத்து அவனை மீட்டாக வேண்டும்” என்று திருஷ்டத்யும்னனின் ஆணை ஒலித்தது. “இன்னும் சில பொழுது! இந்தப் படைக்கோட்டையை உடைத்தாகவேண்டும்! இன்னும் சற்றே பொழுது!” என்று முரசுகள் பதறி ஓலமிட்டன. “ஜயத்ரதனும் கிருதவர்மனும் மலர்ச்சூழ்கையை காத்துக்கொள்க! செல்க! மலர்ச்சூழ்கையை காத்து நிலைகொள்க!” என சகுனியின் ஆணை எழுந்தது. சிந்துநாட்டுப் படைகளின் இதழின் முகப்பிலிருந்து பின்னணிக்குச் சென்று ஜயத்ரதனும் கிருதவர்மனும் அர்ஜுனனை எதிர்த்து நின்றனர். இருபுறத்திலிருந்தும் எழுந்த அம்புகளை அர்ஜுனன் தடுத்து போர்புரிந்தான். சகுனியின் ஆணைப்படி பால்ஹிகர் தன் யானையில் ஏறிவந்து பீமனை தடுத்தார். அவனுடைய படைகளை அறைந்து சிதறடித்தார்.

அபிமன்யு அனைத்துப் படைக்கலங்களையும் இழந்து தரையில் நிற்பதை துரியோதனன் கண்டான். “இது நற்போரல்ல! நான் படைக்கலமில்லாதிருக்கிறேன்! ஒரு வில்லும் அம்பும் எனக்கு கொடுங்கள்! ஒரு தேரை எனக்கு அளியுங்கள்! வீரனாகப் பொருதி உயிர்விட எனக்கு வாய்ப்பளியுங்கள்” என்று அபிமன்யு கூவினான். துரியோதனனை நோக்கி “தந்தையே, மைந்தனென உங்களிடம் நான் கோருவது ஒன்றுதான். ஒரு தேர்! ஒரு வில்! ஓர் ஆவநாழி” என்றான். துரியோதனன் மறுமொழி சொல்வதற்குள் துரோணர் தன் அம்பால் அவன் நெஞ்சை அறைந்தார். குருதி வழிய அவன் தெறித்து மண்ணில் விழுந்து உருண்டு எழுந்து நின்றான். “சொற்களை கேளாதீர்கள். அவனை கொல்லுங்கள்!” என்று துரோணர் கூவினார். “அவன் வில்லில் எழுந்தது தொல்லசுரர்களின் ஆற்றலென்பதை மறக்கவேண்டியதில்லை. கொல்லுங்கள் அவனை” என்றார்.

ele1காந்தாரியின் முன் அமர்ந்து தன் கைகளால் களத்தை அளைந்து சோழிகளை அகற்றியபடி ஒற்றை விழி உறுத்து நோக்கியிருக்க ஏகாக்ஷர் சொன்னார். துரோணரின் சொற்களை நான் கேட்கிறேன். அவரும் அதை பெரும் திகைப்புடன் கேட்கிறார். எங்கிருந்து அது எழுந்ததென்று அவரும் வியக்கிறார். ஆனால் சீற்றத்துடன் அம்புகளை ஏவியபடி தன்னந்தனியனாக அப்படை முன் நின்றிருந்த சிறுவனை அவர் தாக்கினார். பிற கௌரவ வீரர்கள் அனைவரும் வில் தாழ்த்தி திகைப்புடன் அவரைப் பார்த்து நின்றனர். துரியோதனன் தன் வில்லை மடிமேல் வைத்து இரு கைகளாலும் தலையைத் தாங்கி உடல் குறுக்கி அமர்ந்துவிட்டான். கண்களில் கண்ணீர் வழிய துச்சாதனனும், நோக்கை திருப்பி உடல் நடுக்குற துச்சகனும் நின்றிருந்தனர். கர்ணன் தன் வில்லில் கோத்திருந்த அம்புடன் வெறுப்பு நிறைந்த முகத்துடன் அந்நிகழ்வை பார்த்தான். எவரும் ஒரு சொல்லும் உதிர்க்கவில்லை.

மேலும் மேலும் வெறிகொண்டு வசைச்சொற்களை உதிர்த்தபடி துரோணர் அபிமன்யுவை அம்புகளால் அறைந்தார். அவன் தேருக்கு அடியில் ஒளிய அம்புகளால் அதன் சகடத்தை உடைத்து தெறிக்க வைத்து அவனை அடித்தார். அவன் புரண்டு தேர்த்தட்டுக்கு அடியில் சென்று மறைய அவருடைய அம்புகள் தேரையே உடைத்து தெறிக்க வைத்து அவனை வெளிக்கொணர்ந்து தாக்கின. உடலெங்கும் அம்புடன் அவன் மண்ணில் புரண்டு குருதி வழியும் முகத்துடன் கையூன்றி எழ முயன்றான்.

“நீ யார் அர்ஜுனனா? கீழ்மகனே, நீ அர்ஜுனனா என்ன?” என்று துரோணர் பற்களைக் கடித்தபடி கூவிக்கொண்டிருந்தார். “ஆசிரியனுக்கே கற்பிக்கிறாயா? நீ அசுரன். நீ அரக்கன்!” பின்னர் தன் வில்லை ஓங்கி தேர்த்தட்டில் வீசிவிட்டு இரு கைகளையும் விரித்து பீடத்தில் அமர்ந்தார். அபிமன்யு எழுந்து விழுந்துகிடந்த தேர்ச்சகடம் ஒன்றை எடுத்துக்கொண்டு துரோணரை தாக்கச் சென்றான். அதைக் கண்டு துரோணரின் முகம் வெறுப்பில் வலிப்பு கொண்டது. கைகள் நடுங்கின. ஆனால் அவர் வில்லை எடுக்கவில்லை. அஸ்வத்தாமன் பற்களைக் கடித்தபடி தன் வில்லில் அம்பு பொருத்தி நாணை இழுத்தான். அக்கணம் துரியோதனன் “வேண்டாம்… போதும்… நிறுத்துங்கள்… நிறுத்துங்கள் இதை!” என்று கூவினான்.

துச்சாதனன் “மூத்தவரே, நம் மைந்தனைக் கொன்றவன் இவன்” என்று கூச்சலிட்டான். “இவன் தலையை என் கைகளால் உடைக்கிறேன்” என்று அவன் பாய்ந்தபோது அவன் மைந்தன் துருமசேனன் “நில்லுங்கள் தந்தையே, மூத்தவருக்காக நான் முடிக்கவேண்டிய கணக்கு இது” என கதையுடன் அபிமன்யு மீது பாய்ந்தான். அபிமன்யு உடலெங்கும் தைத்து நின்று குருதிவீழ்த்திய அம்புகளுடன் தேர்ச்சக்கரத்தால் துருமசேனனை எதிர்த்தான். துருமசேனனின் அறைகள் பட்டு அந்த தேர்ச்சகடம் உடைந்தது. அறைபட்டு அபிமன்யு மண்ணில் விழுந்தான். துள்ளி அகன்றும் புரண்டும் அவன் கதையின் அறைகளை ஒழிந்தான்.

மலர்ச்சூழ்கைக்கு வெளியே ஜயத்ரதனின் வில்லை முறித்தபின் அர்ஜுனன் காண்டீபம் தாழ்த்தி உரத்த குரலில் “சைந்தவரே, நான் உங்களுக்குச் செய்த உதவிகளுக்காக உளம்கொள்க! நீங்கள் சொன்ன சொற்களுக்காக என்னை விடுக!” என்றான். பின்னணியில் சகுனியின் முரசு “பொருதுக… பொருதுக!” என்று முழங்கியது. அர்ஜுனனை நோக்கி ஒருகணம் தயங்கிய ஜயத்ரதன் மாற்றுவில்லை வாங்கி அவன் மேல் மேலும் அம்புகளை தொடுத்தபடி முன்னேறி வந்தான். அவனை அறைந்து அறைந்து பின்னகரச் செய்துகொண்டிருந்த அர்ஜுனனின் கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்தது.

அபிமன்யு குருதிவழிய நிலைதடுமாறி கால்தளர்ந்து விழுந்தான். அவன் விழிகள் தளர்ந்து மூட கைகள் குழைந்தன. துருமசேனன் அவன் நெஞ்சின் மேல் கால் வைத்து “என் மூத்தவரின் குருதிக்காக இது” என்று கூவியபடி கதையால் அவன் தலையை ஓங்கி அறைந்து உடைத்தான். தலைகோப்பை உடைந்து அகல, வெண்கூழென தலைக்குள்ளிருந்து மூளை வெளிப்பட, கைகால்கள் விதிர்த்து இழுத்துக்கொள்ள அபிமன்யு தன் குருதியால் சேறான மண்ணில் கிடந்து புளைந்தான். அவன் வாயிலிருந்து ஏதோ சொல் எழுவதை கர்ணன் கூர்ந்து நோக்கினான். துருமசேனனும் குருதியும் நிணமும் வழிந்த தன் கதையைத் தாழ்த்தி முழந்தாளிட்டுக் குனிந்து அவ்வுதடுகளை பார்த்தான். ஒரு பெயர் சொல்லப்படுவதுபோல் தோன்றியது. அது என்னவென்று அவர்களால் உய்த்துணரக் கூடவில்லை.

முந்தைய கட்டுரைஇரு அளவுகோல்கள்
அடுத்த கட்டுரைகுகைக்குள்…