நீலத்தாமரை

https://youtu.be/sox0qfal5ms

சில மலையாளப் பாடல்கள் மலையாளிகளுக்கு ஆழ்ந்த உணர்வுகளை உருவாக்குவன. அவற்றை பிறர் கேட்டால் ‘டியூனே’ இல்லியே’ என்பார்கள். ஆனால் மலையாளிகளுக்கு அவை  ‘மெலடிகள்’  இது வெறும் கடந்தகால ஏக்கமா என்று எனக்கே சந்தேகமுண்டு. ஆனால் அப்படி அல்ல என்று நிரூபிக்கும் சில தருணங்கள் உண்டு. இந்தப்பாடல் கேரளத்தின் தொலைக்காட்சிகளில் இளைய தலைமுறையினரால் அடிக்கடிப் பாடப்படுவது, இளைஞர்களால் விரும்பப்படுவது.

சமீபத்தில் ஒரு வாசகரைச் சந்தித்தேன். மதுரைக்காரர். திருவனந்தபுரம் அருகே தொழில்நிமித்தம் வந்து தங்கி பத்தாண்டுகளாகின்றது. இன்று மலையாள கலாச்சாரத்தின் பெரிய ரசிகர். உண்மையில் அதற்குள் இருக்கிறார். பேருந்தில் பேசிக்கொண்டு போனோம். அவர் இந்தப்பாடலை கேட்டுக்கொண்டிருந்தார். நான் “இது உங்களுக்கு புடிக்குதா?” என்று கேட்டேன். “அய்யோ, கிளாஸிக்ல?” என்றார்

ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் இந்த வரிகளுக்காகவே நான் இதை இளமையில் விரும்பியிருந்தேன். அவராலும் அவ்வரிகளை ரசிக்கமுடிந்தது. மலையாள இயற்கைச்சூழல், பசுமையும் இருட்டும் கலந்த காடுகள் இத்தகைய பாடல்களுக்கு எவ்வகையிலோ அணுக்கமான சூழலை அமைக்கின்றனவா?

பிச்சு திருமலை எழுதி ஏ.டி.உம்மர் இசையமைத்த பாடல். ஐ.வி.சசி இயக்கிய அங்கீகாரம் படத்தில் வந்தது

நீல ஜலாசயத்தில் ஹம்ஸங்கள்
நீராடும் பூங்குளத்தில்
நீர்ப்போளகளுடே லாளனம் ஏற்று ஒரு
நீலத்தாமர விரிஞ்ஞு
ஹ்ருத்யம் பூம்பொய்கையாயி
ஹம்ஸங்கள் ஸ்வப்னங்களாயி
ஆயிரம் ஆயிரம் அபிலாஷங்கள்
தெளிநீர் குமிளகளாயி
அவயுடே லாளனம் ஏற்று மயங்ங்கும்
நீ ஒரு தாமரையாயி
நீலத்தாமரையாஇயி

நிமிஷம் வாசாலமாயி ஜென்மங்ஙள் சஃபலமாயி
நின்னிலும் என்னிலும் உள்பிரேரணைகள் உத்ஸ்வ மத்ஸரமாயி
நிஸயுடே நீலிம நம்முடே முன்னில்
நீட்டிய கம்பளமாயி
ஆத்ய சமாகமமாயி

நீல நீர்நிலையில்
அன்னங்கள் நீராடும் பூங்குளத்தில்
நீரலைகளின் கொஞ்சலை பெற்றுக்கொண்டு
நீலத்தாமரை ஒன்று விரிந்தது

இதயம் பூம்பொய்கையாயிற்று
அன்னங்கள் கனவுகளாயின
ஆயிரமாயிரம் ஆசைகள்
தெளிநீர் குமிழிகளாயின
அவற்றின் வருடலை ஏற்று துயிலும்
ஒரு தாமரை ஆனாய் நீ
நீலத்தாமரை ஆனாய்

நிமிடம் பொருள்பொதிந்ததாயிற்று
பிறவிகள் நிறைவுகொண்டன
உன்னிலும் என்னிலும் உள்விழைவுகள்
விழாக்கொண்டாடின
இரவின் நீலநிறம்
நம் முன்னால் விரித்த கம்பளமாயின
முதல் உறவு நிகழ்ந்தது

முந்தைய கட்டுரைபிரதமன் கடிதங்கள் 7
அடுத்த கட்டுரைதன்னறம் நூல்வெளி