வாசகர்களுடன் உரையாடுதல்

bas

வாசகர்களின் நிலை -கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

அந்த “இல்லுமினாட்டிக்கு”(கம்னாட்டி போல ஒலிக்கவில்லை?) உங்கள் பதில் பிரமாதம். ஆனால், நீங்கள் கூறியதை அவர் சீரியசாக எடுத்துக்கொண்டால் இன்னொரு புனைகதை எழுத்தாளன் தமிழில் கிடைக்க வாய்ப்பு அதிகமே. ஏனென்றால் அவருடைய உரைநடை சிறப்பாகவே இருந்தது. எப்படியோ, மிகச் சிறிய பதிலைப்பெற்ற மிகப்பெரிய பதிவு என்ற வகையிலே அவர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார். ஆனாலும் இரண்டு வரி பதிலை எழுத இருபது பக்கக் கடிதம் படிக்க வேண்டிய(முழுதும் படித்தீர்களா என்ன?) உங்கள் நிலை கலவரப்படுத்துகிறது. இது போல எத்தனை கடிதங்களை நீங்கள் தினமும் எதிர்கொள்கிறீர்கள்? மிக மோசமான கேள்விகளிலிருந்தும் ஒரு சிறிய இழையை எடுத்துக்கொண்டு வரலாறு, பண்பாடு, சமூகம் போர்த்துக்கொண்ட சிறந்த ஆடையை நெய்து விடுகிறீர்கள் என்பது வேறு விஷயம்.

என்னுடைய பெயரை அச்சில் பார்ப்பதற்காக சிறுவயதில் மதனுக்கு எத்தனை கேள்விகள் கேட்டிருப்பேன் என்று யோசித்துப்பார்க்கிறேன்? கண நேரப்பரவசம் தாண்டி, உங்கள் பதில் எத்தனை பேரை செறிவடையச்செய்கிறது  என்ற நினைப்பே நான் கேள்வி கேட்க ஒரே காரணம். நான் உங்களுக்கு சமீப காலமாக கேள்விகள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கிறேன். “அடடா, இவர் நேரத்தை வீணடிக்கிறோமோ” என்று நான் நினைத்த கேள்விகளுக்கு மிக நீண்ட பதில்கள் வந்ததும், மாய்ந்து மாய்ந்து வரைந்த கேள்விகளுக்கு பதில் வராமல் போனதும் உண்டு. அந்த கேள்விகளை நான் “ஞாபகப்படுத்துகிறேன் பேர்வழி” என்று Forward செய்ததும் உண்டு. எத்தனை நாட்களுக்குள் உங்களிடமிருந்து பதில் வரவில்லையென்றால் அந்தக் கேள்விக்கு பதில் எப்போதும் வராது எனக்கொள்ளலாம்? மிக நீண்ட நாட்களுக்கு ஆறப்போட்டும் கேள்விகளுக்கு பதிலளிப்பீர்களா?

அன்புள்ள,

கிருஷ்ணன் சங்கரன்

பீனா

பீனா

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

சமீபத்தில் பீனா என்ற என்ற மலையாளப் பெண் எழுத்தாளரை சந்தித்தேன். அவர் சிறுபெண்ணாக இருந்தபோது வைக்கம் முகமது பஷீர் ஐநூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதியிருக்கிறார். அனேகமாக இரண்டுநாட்களுக்கு ஒரு கடிதங்கள். அவற்றில் முக்கியமானவை அவரால் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பஷீரின் ஒரு கட்டுரை கிடைப்பதற்காக இதழ்கள் தவமிருந்த காலகட்டம் அது. அவர் ஏன் இக்கடிதங்களை எழுதினார் என எழுத்தாளர் – வாசகர் அல்லாதவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

எல்லா காலகட்டத்திலும் எழுத்தாளர்களிடம் உரையாட வாசகர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் புனைவிலக்கியம் ஏதோ ஒருவகையில் அதை எழுதுபவனின் ஆளுமையை வாசகன் முன் கொண்டுசென்று நிறுத்துகிறது என்பதுதான். எழுத்தாளனை நாம் நன்கறிவோம் என்று வாசகர்களுக்குத் தோன்றுகிறது. ஆகவே கடிதங்கள் எழுதாவிட்டாலும் அவனுடன் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

அதைவிட  எழுத்தாளர்கள் வாசகர்களிடம் பேச விரும்புகிறார்கள். பெரும்பாலும் எல்லா முக்கியமான எழுத்தாளர்களும்  வாசகர்களிடம் தொடர்ச்சியான தொடர்பில் இருந்தவர்களே. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் , வல்லிக்கண்ணன், தி.க.சிவசங்கரன், ஞானி போன்றவர்கள் அனேகமாக ஒவ்வொரு நாளும் வாசகர்களுக்கு கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தனர். வல்லிக்கண்ணன் ஒருநாளில் சராசரியாக இருபது கடிதங்கள் எழுதுவார் என்று என்னிடம் சொன்னார். சுந்தர ராமசாமி பத்துக்கும் குறைவில்லாமல். இப்போது வண்ணதாசன் எழுதுகிறார். இவற்றில் மிகசிறு பகுதி நூல்களாக வெளிவந்துமுள்ளது.

இக்கடிதங்கள் ஓர் அறுபடாத உரையாடலை உருவாக்குகின்றன. ஒரு பண்பாட்டு உரையாடல் இது. எல்லா அறிவுச்சூழல்களிலும் நிகழ்வது.  இன்றைய இணையச்சூழலில் என் கடிதங்கள் பிரசுரமாகின்றன என்பதே வேறுபாடு. ஒப்புநோக்க நான் எழுதும் கடிதங்கள் மிகக்குறைவு. வெண்முரசு போல நீண்ட படைப்புகள் எழுதுவதனால் எனக்கு நேரச்சிக்கல் உண்டு. இவ்வசதிகள் இல்லாத நாட்களில் வெறிகொண்டவர்கள் போல கடிதங்கள் எழுதி இலக்கியமெனும் இயக்கத்தை முன்னெடுத்த முன்னோடிகள் வணக்கத்துக்குரியவர்கள்.

நான் கடிதங்களுக்குப் பதிலளிப்பதில் உள்ள அடிப்படை ஒன்றே. அக்கடிதம் எனக்கு ஏதேனும் சொல்லவேண்டும், அல்லது அதைச்சார்ந்து நான் ஏதேனும் சொல்வதற்கிருக்கவேண்டும். பெரும்பாலான தருணங்களில் நான் சொல்வதற்கு இருக்கும் விஷயம்சார்ந்து வரும் கடிதங்களுக்கு உடனே பதிலளிக்கிறேன். கடிதங்கள் வரும்போது நான் எந்த உளநிலையில் இருக்கிறேன், பொழுது உள்ளதா என்பதும் முக்கியமான அளவுகோல். மேலும் ஒருவரின் ஒரு கடிதத்திற்கு பதிலளிப்பது ஏறத்தாழ அதேபோன்ற பல கடிதங்களுக்கான பதில்தான்.

பொதுவாக ஏதேனும் எழுதமுற்படுபவர்கள்தான் ஏற்கனவே எழுதிக்கொண்டிருப்பவர்களுடன் ஒரு தொடர்பை விழைகிறார்கள். உரையாடலை முன்னெடுக்கிறார்கள். எனக்குக் கடிதம் எழுதிய பெரும்பாலானவர்கள் இன்று கதையோ கட்டுரைகளோ எழுதுபவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். இதில் விதிவிலக்குகள் மிகச்சிலவே. அந்த விதிவிலக்குகளில் மிகமிக அரிதாகவே நல்ல எழுத்தாளர்கள் இருப்பார்கள்.

ஏனென்றால் முந்தையதலைமுறை எழுத்தாளர்களுடன் நட்பையும் உரையாடலையும் தவிர்க்கும் புதிய எழுத்தாளர்கள் தாழ்வுணர்ச்சி மிக்கவர்களாக, அதை மேட்டிமை உணர்ச்சியாக மாற்றி நடிப்பவர்களாக, தங்கள் எழுத்துக்கள் மேல் நம்பிக்கையற்றவர்களாக, இலக்கியம் என்னும் ஒட்டுமொத்த இயக்கம் மேல் ஆர்வமற்றவர்களாக இருப்பார்கள். ஓரிரு அந்தரங்கக் குறிப்புகளை புனைவுகளாக அவர்களால் எழுதமுடியும். ஓரிரு அபிப்பிராயங்களைக் கருத்துக்களாக்கிச் சொல்லவும் முடியும். அதன்பின் ஆற்றாமைகளும் கசப்புகளுமாக நின்றுவிடுவார்கள். எஞ்சிய வாழ்நாளெல்லாம் வம்புகளில் உழல்வார்கள்.

மாறாக இலக்கியத்தை ஒரு பேரியக்கமாக எண்ணுபவர்கள், பெரும்கனவுகளுடனும் தன்னம்பிக்கையுடனும் உள்ளே நுழைபவர்கள் முன்னோடிகளுடனான உரையாடலையே முதலில் திறக்கிறார்கள். காலப்போக்கில் தாங்கள் தனியர்கள் அல்ல, ஒரு பெரும் இயக்கத்தின் சிறுதுளிகள் என உணர்கிறார்கள். அந்தப்பெருமிதம் அவர்களுக்கு இருப்பதனால் வீண் என்னும் உணர்வு எப்போதும் அணுகுவதில்லை. சென்ற முப்பதாண்டுக்கால இலக்கியவாழ்க்கையில் நான் இதற்கு விதிவிலக்காக எவரையும் பார்த்ததில்லை.

இலக்கியம் என்னும் அறிவியக்கம் குறித்த அறிதலேதும் இல்லாமல் இன்றைய இணையச்சூழலில் இருந்து மேலோட்டமாக இலக்கியத்தை அறிமுகம் செய்துகொண்டிருக்கும் பலர் இந்தக்கடிதங்களை விந்தையாகப் பார்ப்பதும் கேலிக்குரியதாக எண்ணுவதும் எனக்குத் தெரியும். அவ்வப்போது அதை என் நண்பர்சூழலில் எவரேனும் எரிச்சலுடன் சுட்டிக்காட்டுவார்கள்.  இணையம் அமைப்பு சாராமல் இலக்கியத்தை முன்னெடுக்கும் வாய்ப்பை அளிக்கிறது. அதேசமயம் சம்பந்தமில்லாதவர்களுக்கு முன் இலக்கியம் சென்று நின்றாகவேண்டிய சங்கடத்தையும் உருவாக்குகிறது. இலக்கியம் ஒருவகை அந்தரங்கச் செயல்பாடு என்பதனால் சுரணைஅற்றவர்களின் நோக்கு பெரும் தொல்லை. ஆனால் வேறுவழியில்லை, இணையம் என்னும் ஊடகம் தேவை என்றால்  அதை பொருட்படுத்தாமல் முன்னால் செல்லவேண்டியதுதான்.

இந்த இணையதளம் வரத்தொடங்கி பத்தாண்டுகளாகின்றன. இந்தக் காலகட்டத்திற்குள் இந்த தளத்தின் வாசகர்கடிதங்கள் வழியாக எந்தெந்த விஷயங்கள் சார்ந்து எத்தனை ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்துள்ளன என்று, எவ்வளவுபெரிய அறிவுப்பரிமாற்றம் நடந்திருக்கிறது என்று எவரும் பார்க்கமுடியும். தமிழ்ச்சூழலில் இதற்குச் சமானமான ஓர் இலக்கிய உரையாடல் இதற்கு முன்னர் எப்போதாவது நிகழ்ந்துள்ளதா என்று  ஆர்வமுள்ளோர் மதிப்பிடலாம். இது இணையம் அளிக்கும் நல்வாய்ப்பு. அது மிகச்சிறப்பாக, பொறுப்புடன் இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்னும் நிறைவு எனக்குண்டு.

ஜெ

முந்தைய கட்டுரைவிளையாட்டு
அடுத்த கட்டுரைநேர்கோடு- மலேசியாவிலிருந்து இன்னொரு இலக்கிய இதழ்