வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–45

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 3

bl-e1513402911361அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைவாயிலின் பெருமுற்றத்தின் கீழ்எல்லையில் அமைக்கப்பட்டிருந்த மரப்பட்டைக் கூரைக்குக் கீழே பானுமதி அரசணிக்கோலத்தில் நின்றிருந்தாள். அவளுக்கு வலப்பக்கம் அசலையும் அவளருகே தாரையும் நின்றிருக்க இடப்பக்கம் அணுக்கச்சேடி லதையும் செவிலியரும் நின்றனர். பின்புறம் அகம்படிப் பெண்டிர் பேழைகளும் கூடைகளுமாக நிரைகொண்டிருந்தனர். விண்மூடியிருந்த கருமுகில்களிலிருந்து ஒளித்திவலைகளென பெய்திறங்கிய சாரலில் நனைந்த முற்றம் ஓடிநின்ற புரவியின் உடற்பரப்பு என மெல்ல சிலிர்த்துக்கொண்டிருந்தது. அவர்களுக்கு வலப்பக்கம் அஸ்தினபுரியின் கைவிடுபடைகளின் ஏந்திக் கூர்ந்த அம்புகளின் முனைகளில் இருந்து நீர்த்துளிகள் சொட்டின.

மறு எல்லையில் கோட்டைவாயிலின் வலப்பக்கமாக ஏழு வைதிகர்கள் ஓலைக்குடைகளுக்கு அடியில் கங்கைநீர்க் கலங்களுடன் நின்றிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து மங்கலத் தாலமேந்திய சேடியர் பன்னிருவரும் இசைக்கலங்களுடன் சூதர்கள் பதினெண்மரும் நிரைகொண்டிருந்தனர். இடப்பக்கமாக நீரொளியில் மின்னிய இரும்புக்கவசங்களும், கன்றுவிழிகள் என ஒளிகொண்டிருந்த வேல்முனைகளும், நாகத்தோல்போல் மிளிர்ந்த வாளுறைச்செதுக்குகளுமாக அஸ்தினபுரியின் அணிக்காவல் படை நின்றிருந்தது. அவர்களுக்குமேல் பட்டுத்திரையென உலைந்தும், பீலியென வருடிச்சுழன்றும் மலை நின்றது.

முற்றத்திலிருந்து ஊறி, சிற்றோடையாக ஆகி, நாகமென உடல் வளைத்து வந்த நீர்வழிவு பந்தலுக்குள் புகுந்து பானுமதியின் கால்களை நனைத்து வளைந்து அப்பால் சென்றது. குளிரில் நீலநரம்புகள் புடைத்து வீக்கம் கொண்டன அவள் பாதங்கள். அவள் கால்மாற்றி நின்றபடி அசலையிடம் “எங்கு வந்திருக்கிறார்கள் என்பதை உசாவிச் சொல்” என்றாள். அசலை திரும்புவதற்குள் தாரை “அணுகிவிட்டார்கள். நான்காவது காவல்நிரையின் முரசொலி எழுகிறது” என்றாள். பானுமதி புன்னகைத்து “இவளுக்கு முயலின் செவிமடல்கள் ஏன் இன்னும் உருவாகவில்லை என்று ஐயுறாத நாளே இல்லை” என்றாள். அசலை புன்னகைத்தாள்.

மறுகணமே கோட்டையின் முகப்பில் பெருமுரசு முழங்கத்தொடங்கியது. அதைக் கேட்டு மேலும் இரு முரசுகள் அதிர்ந்தன. முகில்குவைகளுக்குக் கீழிருந்து அவ்வொலி மழுங்கிய இடியோசையென கேட்டது. மூன்று எரியம்புகள் மழைப் பிசிறுகளைக் கிழித்தபடி மேலெழுந்து சென்று வெடித்து அனல்சிதறி வளைந்து அப்பால் இறங்கின. மழையில் அவற்றின் ஒளி வண்ணத்தீற்றலாகப் பரவி அணைந்த பின்னரும் விழியெச்சமாக நீடித்தது. அவற்றின் ஒலி வேறெங்கிருந்தோ நீரில் கல்விழும் ஓசையென கேட்டது.

கோட்டையின் வாயில்முகப்பில் நின்றிருந்த தலைக்காவலன் தன் கைகளை விரித்து அசைக்க சேடியரும் சூதரும் படைவீரர்களும் நேர்நிலை கொண்டனர். கோட்டைக்குமேல் யாதவர் குலத்தின் பச்சைக்கொடி வளைந்து மேலேறுவதை பானுமதி கண்டாள். அது மேலேறிய பின்னரே காற்று அதை பறக்கச்செய்தது. அதிலிருந்த கன்றுமுத்திரை தெரிந்தது. பானுமதி திரும்பி “துவாரகையின் கருடக்கொடி அல்லவா மேலேறவேண்டும்?” என்றாள். அசலை “முறைப்படி அவர் இப்போது யாதவ குலத்தின் பேரரசரல்ல. அவருக்கென தனிக் கொடி இல்லையென்பதனால் குலக்கொடி ஏறவேண்டுமென்று அரசாணை” என்றாள்.

“இங்கு இப்போது ஓர் அரசமுறை வரவேற்பு அவருக்கு இருப்பதை அறிந்திருக்க மாட்டார். நம்மை அவர் புறக்கணித்து முன்செல்லவும் வாய்ப்புள்ளது” என்றாள் பானுமதி. அசலை “அது அவரது இயல்பல்ல. இவை அனைத்தையும் முன்னரே எதிர்நோக்கியிருப்பது போன்ற புன்னகையன்றி பிறிதெதையும் அவர் இதழ்களில் காணமுடியாது” என்றாள். பானுமதி “அன்று முதலே இப்படித்தான், அவர் செய்யவிருப்பதை சொல்பவள் இவள்” என்றாள். தாரை புன்னகைத்து “நாம் விழைவதை அவர் செய்கிறார். தன்னைச் சூழ்பவர் அனைவரும் விழைவதை ஒருவர் எப்படி ஆற்றமுடியுமென நானும் வியந்திருக்கிறேன்” என்றாள்.

மீண்டுமொரு எரியம்பு எழுந்து விண்ணில் வளைந்தது. அது முதற்காவல் நிலையிலிருந்து கிளம்பியதென்பதை பானுமதி உணர்ந்தாள். அவள் நெஞ்சு ஓசையிடத் தொடங்கியது. அசலை அவளைப் பார்த்து “அஞ்சுகிறீர்களா, அக்கை?” என்றாள். “எப்போதும் அவருக்கு அணுக்கமானவள் என்றே உணர்ந்திருக்கிறேன். என் குலத்தார் என்றன்றி அவரை எப்போதும் எண்ணியதில்லை. இன்று முதன்முறையாக மிகத் தொலைவில் இருக்கிறேன் என அறிகிறேன். அதுவே என்னை பதற்றமடைய செய்கிறது” என்றாள். அசலை “அவரிடமிருந்து எவரும் அகலவியலாது. அகன்று சுழன்று அருகணைவோம்” என்றாள்.

வெளியே முழவோசைகளும் கொம்புப் பிளிறல்களும் எழுந்தன. பெருமுரசுகளின் ஓசையுடன் இணைந்து அணுகி பெருகி வந்தன. கோட்டைவாயிலைக் கடந்து சாத்யகியின் பெரிய கரும்புரவி வருவதை பானுமதி கண்டாள். அசலையிடம் “கொடிவீரன் கூட இன்றி வருகிறார்” என்றாள். “கொடிவீரனை முன்னனுப்புவது அரசர்களுக்குரிய முறைமை” என்றாள் அசலை. தொடர்ந்து இளைய யாதவர் வெண்புரவி ஒன்றில் நனைந்த கரியதோள்களும், ஈரத்தில் படிந்து முதுகில் ஒட்டிய நீள்குழல்சுருள்களும், காதோரம் சூடிய மயிற்பீலியும் இடையில் செந்நிறக் கச்சையுமாக வந்து கடிவாளத்தை இழுத்து புரவியை விரைவழியச் செய்தார்.

தலைக்காவலன் கைவீச மங்கலஇசை எழுந்தது. வைதிகர் கங்கை நீர் தெளித்து வேதமோதி எதிர்கொண்டனர். அணிச்சேடியர் மூன்று நிரைகளாக மங்கலத்தாலங்களுடன் சென்று அவர் முன் நின்று முறைப்படி இடவலமும் வலஇடமும் உழிந்து குரவையிட்டு வரவேற்றனர். இளைய யாதவர் புரவியை மெல்ல தட்டி சீர்நடையில் முன்னால் வர அணிப்படையினர் தங்கள் படைக்கலங்களை மேலே தூக்கிச் சுழற்றி நிலம் நோக்கி தாழ்த்தி அவருக்கு அரச வரவேற்பளித்தனர். வாளொளிகளின் அலை சிறு மின்னல் என நீர்த்தாரைகளுக்கு அப்பால் எழுந்தமைந்தது.

பானுமதி திரும்பி தன் அகம்படியரை பார்த்தபின் முன்னால் நடக்க அவளுக்கு மேல் ஓலைக்குடை ஏந்தியபடி சேடியர் தொடர்ந்தனர். அசலை குடை வட்டத்திலிருந்து விலகி மழைச்சாரல் தன்மேல் விழ நடந்தாள். இளைய யாதவரை எதிர்கொண்ட பானுமதி கைகூப்பியபடி நிற்க அவர் புரவியிலிருந்து கால்சுழற்றி இறங்கி கைகூப்பியபடி அணுகி வந்தார். அவருக்குப் பின்னால் சாத்யகி கைகூப்பியபடி வந்து சற்று அப்பால் நின்றான். பானுமதி “அஸ்தினபுரிக்கு யாதவகுலத் தலைவரை அரசமுறைப்படி வரவேற்கிறேன். இக்குடிகளும் அரசும் வளம்பெறவும், கொடிவழிகள் செழிக்கவும், மூதாதையர் மகிழவும் தங்கள் வருகை வழிகோல வேண்டுமென்று கோருகிறேன்” என்றாள்.

இளைய யாதவர் தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசியின் சொல் ஆணையென தலைக்கொள்ளப்படுகிறது. அடியேன் இன்று அரசனல்ல, எனினும் இந்த முறைமைகளும் நற்சொல்லும் என்னை அவ்வாறு ஆக்குகின்றன. மும்முடி சூடி பாரதவர்ஷத்தின் மேலமர்ந்த பேரரசனென்று இத்தருணம் உணர்கிறேன். இதன்பொருட்டு என் மூதாதையர் இந்நாளை வாழ்த்துக!” என்றார். அசலையும் தாரையும் வணங்கி முகமன் உரைத்தனர். அவர் அவர்களை நோக்கி சிரித்து “கலைமகளும் திருமகளும் மலைமகளும் வந்து வரவேற்க நற்பேறு கொண்டேன்” என்றார். புன்னகைக்கையில் சிறுமைந்தரென ஆகிவிடும் அவர் முகத்திலிருந்து பானுமதி உடனே விழிவிலக்கிக்கொண்டாள். அசலை “இந்நாள் எங்களுக்கு நல்லூழ் அமைத்தது” என்றாள்.

“வருக அரசே, தங்களுக்கான வெள்ளித்தேர் ஒருங்கி நின்றுள்ளது” என்றாள் பானுமதி. இளைய யாதவர் புன்னகையுடன் அசலையை நோக்கி “நான் இதை எவ்வாறு எதிர்கொள்வேன் என்று இளைய அரசி அறிவார்” என்றார். அசலை “ஆம், எண்ணியவாறே எதிர்கொள்கிறீர்கள்” என்றாள். இளைய யாதவர் “வெள்ளித்தேர் நன்று. இவ்விருண்ட நகரில் அது துலங்கித் தெரியும்” என்றார். அசலை சிரித்தாள். தாரை சிறுமியருக்குரிய ஊக்கத்துடன் “ஆம், கரிய நீரில் பரல் என” என்றாள். இளைய யாதவர் புன்னகைத்து அவளை நோக்கி “பரலா?” என்றார். “பரல்மீனே ஆற்றல்கொண்டது…” என்றாள் தாரை.

அவர் சிரித்துக்கொண்டு தேர்நோக்கி சென்றார். பெரியவர்களின் சிரிப்பில் கண்கள் முழுமையாக இணைந்துகொள்வதேயில்லை, மைந்தரைப்போல் முற்றிலும் சிரிக்கும் விழிகள் கொண்டிருப்பதனால்தான் இவர் அப்படித் தோன்றுகிறார் என பானுமதி எண்ணிக்கொண்டாள். முதிர்ந்தோர் விழிகள் துயர்களும் ஐயங்களும் தயக்கங்களும் வஞ்சங்களும் தனிமையும் கொண்டவையாகவே நீடிக்கின்றன. இவருக்கு அவை இல்லையா என்ன? இளைய யாதவர் அவரை அணுகிய தேர்ப்பாகனிடம் நட்புடன் ஏதோ சொல்ல அவன் சிரித்தான். ஏவலனிடம் பிறிதொன்றைச் சொல்ல இருவரும் சிரிப்பது வெண்ணிறப் பல்லொளிகளாகத் தெரிந்தது.

ஏவலர் தேரிலேறுவதற்கான படிகளை அமைக்க அவர் ஏறி அதில் அமர்ந்தார். திரைகள் தாழ்ந்தன. சாத்யகி மீண்டும் தன் புரவியிலேறி தேருக்குப் பின்னால் சென்றான். பாகன் பானுமதியிடம் “நாம் உடன்செல்லவேண்டும், அரசி…” என்றான். “ஆம், செல்வோம்” என அவள் சொன்னாள். அசலை “குன்றா இளமை கொண்டவர் என்று அவரை சொல்கிறார்கள். தேரில் சிறு பறவையென ஏறி அமர்வதைக் கண்டபோது வேறெப்படி சொல்லமுடியும் என்று எண்ணிக்கொண்டேன்” என்றாள். பானுமதி “நம்மைப்பற்றி என்ன எண்ணிக்கொண்டு செல்கிறார்?” என்றாள். “அரசி, புரவிகளை பயிற்றுநர் முதலில் ஆள்கிறார்கள். உரிமைகொள்வோர் பிறகு ஆள்கிறார்கள். அணி ஊர்வலங்களில், பெருங்களங்களில், நெடுந்தொலைவுப்பாதைகளில் அது அவர்களை கொண்டு செல்கிறது. ஆனால் இருண்ட பசிய காடு எப்போதும் அதனுள்ளில் நிறைந்திருக்கிறது. ஒரு புல்லின் இலைகொண்டு அது தன் காட்டை உருவாக்கிக்கொள்கிறது என எண்ணுகிறார்” என்றாள்.

பானுமதி மெல்லிய சிரிப்புடன் “இதை எந்த நூலில் படித்தாய்?” என்றாள். “காவியம்!” என்றாள் அசலை. “சுஃப்ரரின் பிரதீகமஞ்சரி.” லதை “அரசி, தங்களுக்கான தேர்” என்றாள். தலையசைத்துவிட்டு பானுமதி சென்று தனது தேரில் ஏறிக்கொண்டாள். அவளைத் தொடர்ந்து அசலையும் தாரையும் அத்தேரில் ஏறினர். அகம்படியர் தொடர்ந்து வந்த தேரில் ஏற அவர்கள் கிளம்பி வெள்ளித்தேரின் தடம் மீது சென்றனர். அப்பால் வெள்ளித்தேர் நீரலைக்கு அடியில் கிடக்கும் நாணயம் என தெரிந்து தெரிந்து மறைந்தது.

தேர்நிரை அஸ்தினபுரியின் தெருவினூடாகச் சென்றது. பானுமதி சாளரத்தினூடாக வெளியே நோக்கியபடி “இந்த மழை எப்போது ஓயும்?” என்றாள். “நகரமே குளிர்ந்திருக்கிறது. உலோகப்பரப்புகள் இமயப்பனிக்கட்டியென குளிர்ந்திருக்கின்றன.” தாரை “இப்படியே சில நாட்கள் சென்றால் தழல்கூட குளிர்கொண்டுவிடும்” என்றாள். அசலை “அரிய வரிகள். அதைச் சொன்னவர் யார்?” என்றாள். பானுமதி அவளை திரும்பிப் பார்த்தபின் சலிப்புடன் தலையசைத்தாள்.

தாரை “ஆனால் இந்நகர் மக்கள் மழையில் மகிழ்கிறார்கள். அதற்கு எந்த அடிப்படையும் இப்போதில்லை. கால்நடைகள் நோய்கொண்டுவிட்டன. இளமைந்தர் அனைவருக்கும் உடல் காய்கிறது. பெண்டிர் பலர் நாள்தோறும் குருதிப்போக்கு கொண்டிருக்கிறார்கள். முதியோர் ஒவ்வொருநாளும் இறந்து தென்திசை ஏகுகிறார்கள். அரண்மனையின் தென்முகப்பில் நின்று நோக்கினால் நீத்தோருக்கான காட்டிலிருந்து எழுந்த புகை விண்முகில்களுடன் சென்று இணைந்துவிட்டிருப்பதை பார்க்கமுடிகிறது. ஆனால் இப்பொழுதைப்போல எப்பொழுதுமே இந்நகர் உவகையில் இருந்ததில்லை” என்றாள்.

நகர் முழுக்க மக்கள் ஒருவருக்கொருவர் களிவெறியுடன் பேசியபடி, உடல் தழுவியபடி, ஒருவரையொருவர் முட்டித்தள்ளியபடி ததும்பிக்கொண்டிருந்தனர். “அவர்கள் அனைவரின் விழிகளும் சிவந்து அனல் போன்றிருக்கின்றன” என்று தாரை சொன்னாள். பானுமதி கூரைவிளிம்புகளிலும் கிளைகளிலும் அமர்ந்திருந்த காகங்களை பார்த்துக்கொண்டு வந்தாள். “இத்தனை பறவைகள் நகருக்குள் இருக்கின்றன. ஆனால் ஓசையே இல்லை” என்றாள். “ஓசையே இல்லாமல் விழிசுழற்சியில் எண்ணியிராது இவற்றைப் பார்க்கையில் உள்ளம் திடுக்கிடுகிறது. எவரோ சொன்ன தீச்சொல் ஒன்று நினைவிலெழுவதுபோல.” அசலை “ஆம், இவை காகங்கள்தானா என்றே ஐயுறுகிறேன். கரிய நனைந்த கொடிகளென அசைவற்றமர்ந்திருக்கின்றன. சிறகடிப்பதே அரிது. எதை உண்கின்றன? இங்கு வந்து எதற்காக காத்திருக்கின்றன?” என்றாள்.

எதிரே சாலையின் வளைவு திரும்பி ஏழு புரவிகள் வருவதை தாரை கண்டாள். “எவர் அது?” என்றாள். அசலை எழுந்து சாளரத்தினூடாக நோக்கி “அது கணிகரல்லவா?” என்றாள். “கணிகரா? புரவியிலா?” என்றபடி பானுமதி சாளரத்தினூடாக நோக்கினாள். சகுனியும் கணிகரும் இரு கரிய புரவிகளில் வர அவர்களுக்குப் பின்னால் சகுனியின் அணுக்கவீரர்கள் வந்தனர். கணிகர் இடக்கையில் புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி தவளை எழுந்தமர்ந்ததுபோன்ற உடலுடன் அமர்ந்திருந்தார். “அவரது உடல்நோவு அகன்றுவிட்டதா?” என்றாள் பானுமதி.

“முன்பும் அவ்வாறே நிகழ்ந்தது. இந்நகர் நோயுறுகையில் கணிகர் நலம்பெறுகிறார்” என்றாள் அசலை. கணிகர் முன்னால் சென்ற வெள்ளித்தேரருகே புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினார். சகுனியும் ஓரிரு அடிகள் முன்னால் வந்து திரும்பிச் சென்று அவரருகே நின்றார். தேர் தயங்கியது. திரை விலக்கி வெளியே நோக்கிய இளைய யாதவர் கணிகரிடம் முகமனுரைப்பதை தொலைவிலேயே காண முடிந்தது. கணிகர் மலர்ந்த முகத்துடன் மும்முறை தலைவணங்கி முறைப்படி சொல்லுரைத்து கைகூப்பினார். தேர் முன்னால் நகர்ந்தபோது புன்னகை நிறைந்த முகத்துடன் சகுனியும் கணிகரும் முன்னால் வந்தனர்.

பானுமதி அவர்களின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். “எண்ணியதை எய்திய புன்னகை அது” என்று அசலை சொன்னாள். “எய்திவிட்டார்களா?” என்று பானுமதி கேட்டாள். “அணுகிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள் அசலை. “சில தருணங்களில் வருவன ஐயமின்றி நமக்கு துலங்கிவிடுகின்றன. மலைகளைப்போல மாறாப் பருவுருவென முன் நிற்கின்றன.” அவர்களின் தேர் அருகே வந்த கணிகர் கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தினார். தாரை திரையை விலக்கி தலைவணங்கி “வணங்குகிறேன், ஆசிரியரே. அரசாணைப்படி இளைய யாதவரை முறைப்படி வரவேற்று அரண்மனைக்கு கொண்டுசெல்கிறோம்” என்றாள்.

கணிகர் “நன்று. இன்று அவர் ஓய்வெடுக்கட்டும். நாளை அவையில் தன் முழுஆற்றலுடன் அவர் வந்து அமரவேண்டும். இங்கு அனைவரும் சிக்கிக்கொண்டிருக்கும் இடரிலிருந்து அவரால் மீட்பு அமையுமெனில் அவ்வாறே நிகழ்க!” என்றார். அசலை “அவர் அதற்கான சொல்லுடன் வந்திருப்பார் என எண்ணுவோம், ஆசிரியரே” என்றாள். கணிகர் புன்னகைத்து “ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு அன்னம். அன்னம் மானுடனுக்கு நலம்புரிவதற்கென்றே உருவானது” என்றார். “மிகையும் குறைவும் பழையதும் முதிராததும் என அதை நஞ்சென்றாக்குவது மானுடரின் விழைவும் காழ்ப்புமே.”

பானுமதி திரைக்குப் பின்னால் தன் முகத்தை மறைத்துக்கொண்டு கணிகரை நோக்கிக்கொண்டிருந்தாள். அவர் உடலில் எப்போதும் இருக்கும் நிகரழிவு முற்றிலும் சீரமைந்திருந்தது. உடல் வளைந்து முதுகில் கூன் எழுந்து நின்றிருந்தாலும் வலி மறைந்திருப்பதை அவர் அமர்ந்திருந்த விதமே காட்டியது. அவரது புன்னகை எத்தனை அழகியதென்று ஒருகணம் எண்ணியதுமே அவளே திடுக்கிட்டாள். அவ்வெண்ணத்தால் என அக்கணமே தேர் நகர்ந்து அவள் உடலையும் அதிரச்செய்தது.

தேர் முன்னால் சென்றதும் அசலை “எத்தனை அழகிய புன்னகை!” என்றாள். அவள் என்ன சொல்கிறாள் என்பதை புரிந்துகொண்ட தாரை “அதையே நானும் எண்ணினேன். அப்புன்னகை இங்கு பிறிதொருவரிடம் மட்டுமே உள்ளது” என்றாள். அவள் தலையை ஓங்கித் தட்டி “என்ன சொல்கிறாய்? அறிவிலி!” என்றாள் பானுமதி. “என் உள்ளம் சொல்வதை” என்று தாரை வீம்புடன் தலையை அசைத்தாள். “இவ்வாறு எதை கீழிறக்க இயல்கிறாய்? இறக்கி நீ அடைவதென்ன?” என்றாள் பானுமதி. “நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். மானுடஉள்ளம் அள்ள முடியாத ஏதோ ஒன்றின் நுனி வந்தென்னை தொட்டுச் சென்றதுபோல் உணர்கிறேன்” என்றாள் தாரை. “உளறாதே” என்றபின் பானுமதி இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

தாரை அவள் தொடைமேல் கைவைத்து “அக்கையே, இளஅகவையில் களிறொன்றின் பெருந்தந்தம் என்மேல் பட்டது. மிக மெதுவாக அது திரும்பியபோது புறந்திரும்பி நான் அருகே நின்றிருந்தேன். அந்த மென்தொடுகையிலேயே நான் அப்பால் தெறித்து விழுந்தேன். நெடுநாட்கள் அதை எண்ணி வியந்திருக்கிறேன். மெல்ல தொடுகையிலேயே தூக்கி வீசும் பேராற்றல் அத்தந்தத்துக்குப் பின்னால் பெருகியிருக்கும் கரிய உடலில் இருந்தது. பிறிதொரு முறை நிலவைப் பார்க்கையில் கரிய பேருருவென திரண்டிருக்கும் பெருவெளியாகிய வேழத்தின் சிறு தந்தம் அது என்று தோன்றியது. இங்கு ஒளிகொண்டு நம்மை அணுகுபவை அனைத்தும் பேருருக்கொண்ட இருளால் ஏந்தப்பட்டுள்ளன” என்றாள்.

பானுமதி அசலையிடம் “நீ நூல்கற்று அடைந்த அனைத்து உளக்குழப்பங்களையும் சொற்சிடுக்குகளையும் தன் அறையில் பாவைகளை வைத்து விளையாடி இவள் அடைந்திருக்கிறாள்” என்றாள். அசலை தாரையின் தலையைப் பிடித்து செல்லமாக அசைத்து “ஆம், அவ்வப்போது நானே எண்ணுவதுண்டு. இவளை அழைத்துச்சென்று எங்காவது அமரவைத்து உள்ளிருக்கும் சொற்களை எல்லாம் உலுக்கி எடுத்தால் நானே ஒரு காவியத்தை எழுதிவிடக்கூடுமென்று” என்றாள். பானுமதி சிரித்து “அது காவியமா என்றறியேன். ஆனால் நம்மால் புரிந்துகொள்ள முடியாத சொற்கள் அவை என்பதில் ஐயமில்லை” என்றாள்.

அசலை “அக்கையே, நாம் அரண்மனை அகத்தளங்களில் பிறந்தோம். சாளரங்கள் அளந்து உள்ளே அனுப்பிய காற்றையே அறிந்திருக்கிறோம். இவள் சுழலிகளும் புயல்களும் பெருகிச்சூழ்ந்த நிலத்திலும் நீரிலும் வாழ்ந்தவள். அதை சொல்லாக்கும் கலையை இங்கு வந்து கற்றுக்கொண்டிருக்கிறாள். என்றேனும் தென்திசையில் சுகவனத்தில் தவம் செய்துகொண்டிருக்கும் இறப்பற்ற மூதாதையான கிருஷ்ண துவைபாயனர் இங்கு வருவாரென்றால் நம்மில் விழிதுழாவி அவர் நோக்கு வந்து நிற்கும் இடம் இவள் முகமாகவே இருக்கும். இவளை அருகணைத்து தன் காலடியில் அவர் அமரச்செய்வார்” என்றாள். “எதன்பொருட்டு இவளுக்குள் இச்சொற்களை நிரப்புகிறது ஊழென்று நாமறியோம். ஆனால் தெய்வங்கள் கணக்குகளின்றி எதையும் இயற்றுவதில்லை என்பார்கள்.”

bl-e1513402911361இளைய யாதவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த தெற்கு அரண்மனையை அடைந்ததும் தேர் நின்றது. தாரை முதலில் இறங்கி கைகாட்ட பின்னால் வந்த தேரிலிருந்து அகம்படிச் சேடியர் இறங்கி அதன் முற்றத்தில் நிரைவகுத்தனர். அசலை இறங்கி தன் கைகளை நீட்டி பானுமதி இறங்க உதவினாள். அவள் இறங்கி பணிப்பெண் இட்ட மிதியடிமேல் கால்வைத்து நின்றபடி “இது முன்பு மாளவர் வந்தபோது தங்கிய அரண்மனை அல்லவா?” என்றாள். “ஆம், முதன்மை அரசர்களுக்குரியது. முற்றத்தில் கொடி நிறுத்தவும், சிறுபடை அணிநிரை கொள்ளவும் இடம் உள்ளது” என்றாள் அசலை. சேடியர் குடை பிடிக்க அதற்குள் சென்று நின்று பானுமதி தன் ஆடையை திருத்திக்கொண்டாள். இரு சேடியர் அவள் குழலை சீர்படுத்தினர். தேர்கள் பின்னால் விலகி மெல்ல திரும்பி மறைய அரண்மனைமுகப்பில் நின்ற தலைமைக் காவலன் அருகணைந்து தலைவணங்கி முகமன் உரைத்து “யாதவ அரசர் உள்கூடத்தில்  தங்களுக்காகக் காத்திருக்கிறார், அரசி” என்றான். பானுமதி கைகாட்ட மூன்று சேடியர் மங்கலத் தாலங்களுடன் முன்னால் சென்றனர். தொடர்ந்து அசலையும் தாரையும் பின்னால் வர அவள் குடையின் அடியில் நடந்து படிகளை அடைந்தாள்.

மேலேறி நின்று அசலையிடம் தாழ்ந்த குரலில் “அவரிடம் பேசுவதற்கென்ன உள்ளது நமக்கு?” என்றாள். “முறைமைச்சொற்கள். பிறிதொன்றையும் இத்தருணத்தில் நாம் உரைப்பதற்கில்லை” என்றாள் அசலை. பானுமதி புன்னகையுடன் “ஒரு கோணத்தில் நோக்கினால் இதுவரைக்கும் அவருடன் முறைமைச் சொற்களன்றி பிறிதெதையும் நாம் உரைத்ததில்லை என்று தோன்றுகிறது” என்றாள். அசலை “இப்பிறப்பில் இவ்வடிவில் நாம் இவற்றை மட்டுமே உரைக்கவிருக்கிறோம்” என்றாள். தாரை அருகே வந்து “அவர் ஏவலர் எவரையும் கொண்டுவரவில்லை அல்லவா?” என்றாள். “நான் அவருக்கு அடுமனையாட்டியாக இங்கேயே இருக்கலாமா என்று கேட்கவிருக்கிறேன்.” பானுமதி அவளை நோக்கியபின் அசலையிடம் புன்னகைத்தாள்.

தலைமைக்காவலன் “வருக, அரசி” என்று உள்ளே அழைத்துச்சென்றான். முதன்மைக்கூடத்தில் இளைய யாதவர் பீடத்தில் அமர்ந்திருக்க அவருக்குப் பின்னால் சாத்யகி நின்றிருந்தான். அறைக்குள் நுழைந்ததும் இளைய யாதவர் எழுந்து தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசிக்கு வணக்கம்” என்று அமர்வதற்கு பீடத்தை காட்டினார். பானுமதி பீடத்தில் அமர்ந்ததும் தாரை அவள் ஆடை மடிப்புகளை சீரமைத்து குழலை நன்கமைத்தபின் இடப்பக்கமாக நின்றாள். அசலை பின்னால் சென்று சாளரத்தோரமாக மார்பில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள்.

இளைய யாதவர் “நான் தங்களை முன்னரே சந்திக்கவேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன். எண்ணியவாறே அது அமைந்தது மகிழ்வளிக்கிறது” என்றார். பானுமதி அரைக்கணம் அசலையை நோக்கிவிட்டு “இங்கு என் சொல்லுக்கு எந்த மதிப்பும் இல்லையென்று அறிந்திருப்பீர்கள், யாதவரே” என்றாள். “ஆம், இது அதன் பொருட்டல்ல. இம்முறை நான் வந்திருப்பது ஷத்ரிய அவையில் பேசுவதற்காக. குடியவைகளில் இனி நான் இயற்றுவதற்கு ஏதுமில்லை” என்றார். “அரசி, தாங்கள் அவையில் அளித்த ஆடைக்காக பாண்டவர்களும் அவர்களின் கொடிவழியினரும் கடன்பட்டிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தின் அரசி தன் நன்றியறிதல்களை தெரிவிக்கும்படி என்னிடம் உரைத்தார். இக்குடிமீதும் இதன் மைந்தரிடமும் அவருக்கு துளியளவும் வஞ்சமில்லை என்று கூறினார்.” பானுமதி “ஆம், அது முன்னரே அரசத்தூதர் வழியாகவும் சஞ்சயனூடாகவும் எனக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வாறன்றி அவள் எண்ண இயலாது” என்றாள்.

அந்த உரையாடல் அவர்களை எளிதாக்கியது. முகத்தசைகள் நெகிழ்வதை உணரமுடிந்தது. இளைய யாதவர் “இங்கு நகர்நுழைந்ததுமே இந்நகர் முற்றிலும் மாறிவிட்டிருப்பதை கண்டேன். இதன் மக்கள் தங்களை முற்றாக நஞ்சுக்கு அளித்துவிட்டிருக்கிறார்கள். பேரழிவுகளுக்கு முன்பு நிகழ்வது அது. அழிவின் தெய்வங்கள் பேருருக்கொண்டு எழுகின்றன. அவற்றின் ஆற்றலைக் கண்டு வியக்கும் எளிய மக்கள் மறுஎண்ணமின்றி அடிபணிகிறார்கள். வேண்டி விழிநீர் உகுத்து நோன்பிருந்து தங்கள் நகர்நடுவே அமர்த்தி வழிபடுகிறார்கள். குருதியளிக்கிறார்கள்” என்றார்.

பானுமதி ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். “கணிகரைக் கண்டேன். நோய் அகன்று வலு கொண்டிருக்கிறார். சகுனியும் புத்துடல்கொண்டு எழுந்தவர் போலிருக்கிறார்” என்றார். தாரை “அரசர் மேலும் ஒளிகொண்டிருக்கிறார், அரசே. இளங்கதிரோன் ஏழுபுரவித் தேரில் எழுந்தவர்போல் தோன்றுகிறார். அவரை நோக்கும் விழிகளும் ஒளிகொள்கின்றன” என்றாள். “ஆம், அவ்வாறே ஆகுமென அறிவேன்” என்றார் இளைய யாதவர். எவரும் எண்ணியிராவண்ணம் பானுமதி விம்மி அழத்தொடங்கினாள். தாரை திகைத்து அருகணைந்து அவள் தோளைத்தொட்டு “அரசி… அரசி” என்றாள். அவள் கைமேல் தன் கையை வைத்து விம்மலை அடக்க, அழுகையைக் கடக்க முயன்றாள் பானுமதி. அதை மீறி மீண்டும் அழுகை எழுந்து அவளை முழுமையாக ஆட்கொண்டது.

மழையில் சுழன்றாடும் தழைமரமென அவள் விம்மலும் சீறலுமாக அழுது மெல்ல ஓய்ந்தாள். சொட்டிச் சொட்டி அவள் ஓய்வது தெரிந்தது. இளைய யாதவர் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. அசலை அவரையே நோக்கிக்கொண்டிருந்தாள். பானுமதி எழுந்து வெளியே ஓடினாள். தாரை திகைத்தபின் அவளைத் தொடர்ந்து சென்றாள். அசலை மீண்டும் ஒருமுறை இளைய யாதவரை நோக்கிவிட்டு தானும் தொடர்ந்தாள்.

முந்தைய கட்டுரைஇயற்கையை அறிபவனின் அறம்
அடுத்த கட்டுரைகலைகளின் மறுமலர்ச்சி