வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–43

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 1

bl-e1513402911361தன் அணியறைக்குள் பானுமதி பீதர்நாட்டு மூங்கில் பீடத்தில் கைகளை தளர அமைத்து, கால் நீட்டி, தலையை பின்னால் சாய்த்து, விழிமூடி தளர்ந்து அமர்ந்திருக்க சேடியர் அவள் உடலிலிருந்து அணிகளை ஒவ்வொன்றாக அகற்றிக்கொண்டிருந்தனர். அவர்களின் கைகள் அவள் உடல்மேல் சிறு குருவிகள் என பறந்தெழுந்து அமைந்தன. சேடியர் கைகளின் தரிவளைகளின் குலுங்கலோசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. ஆடியில் அணுக்கச்சேடி லதை தோன்றியபோது அணிச்சேடி பானுமதியிடம் குனிந்து “அரசி, தங்கள் அணுக்கச்சேடி லதை” என்றாள். பானுமதி சில கணங்களுக்குப்பின் களைத்த இமைகளை மெல்ல தூக்கி சிவந்த விழிகளால் லதையை நோக்கி மெல்ல தலையசைத்தாள்.

லதை அருகே வந்து தலைவணங்கி “அரசரின் முதன்மைச் சேடி வல்லபை தங்களுக்கான செய்தியுடன் வந்திருக்கிறார், அரசி. முதன்மைச் செய்தி என்று அறிவிக்கும்படி என்னிடம் சொன்னார்” என்றாள். பானுமதியின் புருவங்கள் சுழித்தன. உதடுகள் ஏதோ சொல்ல என அசைந்து பின் நிற்க “வரச்சொல்க!” என்றாள். லதை “இங்கேயேவா?” என்றாள். பானுமதி “ஆம்” என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு அணிச்சேடியரை விலகிச் செல்லும்படி கைகாட்டினாள். அவர்கள் அதுவரைக்கும் கழற்றிய பூண்களை அவற்றுக்குரிய சிறு பேழைகளில் இட்டு அணிமேடையில் வைத்தபின் விழிகளால் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு ஓசையின்றி பின்னால் சென்று சிறுகதவுகளினூடாக வெளியேறினர்.

அக்கதவுகள் மூடப்பட்டதும் பானுமதி தனிமையை உணர்ந்தாள். அது அவளுக்கு உளவிடுதலையை அளித்தது. நிமிர்ந்தமர்ந்து இரு கைகளையும் மேலே தூக்கி சோம்பல் முறித்தாள். கலைந்து தோளில் கிடந்த குழலை அள்ளிமுடிந்து முதுகிலிட்டபின் ஆடையை சீர்திருத்தி அமர்ந்தாள். லதை உள்ளே வந்து “வருகிறார்” என்றாள். “அவரைத்தான் அன்னையிடமும் தூதனுப்பியிருக்கிறர் அரசர்” என்று தாழ்ந்த குரலில் மேலும் சொன்னாள். பானுமதி கைகாட்ட அவள் பணிந்து விலகி வெளியே சென்றாள். வல்லபை மெலிந்த கூன்கொண்ட முதுமகள்களுக்குரிய பறவைபோன்ற சிற்றடி வைப்புடன் உள்ளே வந்து முறைப்படி வணங்கினாள்.

“அஸ்தினபுரியின் முடிகொண்டு அமைந்த காசிநாட்டு அரசியை வணங்குகிறேன். இத்தருணம் எனது மூதன்னையர் பெருமை கொள்ளும்படி அமைவதாக” என்றாள் வல்லபை. அவள் குரல் காளையின் கழுத்துத் தசைபோல தொங்கி ஆடுவதாக ஓர் உளவுருவகம் அவளுக்குள் எழ அவள் மெல்லிய புன்னகையை அடைந்தாள். அப்புன்னகை வல்லபையை குழப்பியது. ஆனால் முகத்திலும் பழுத்த விழிகளிலும் ஏதும் வெளிப்படாமல் “அரசரிடமிருந்து அவைச்செய்தி ஒன்று கொண்டுவந்துள்ளேன்” என்றாள். அவளிடம் அமரும்படி பானுமதி கைகாட்டினாள். சிறுபீடத்தில் கால்மடித்து அமர்ந்த வல்லபை தன் வற்றிய கைகளை மடியில் சேர்த்து வைத்துக்கொண்டாள். அவற்றில் பற்றுகொடிகள் என பரவிச்சென்ற நரம்புகளை விழிதாழ்த்தி நோக்கியபடி பானுமதி அமர்ந்திருந்தாள்.

வல்லபை சொல் சுருக்கமும் கூர்மதியும் கொண்டவள் என்பதை பலரும் அவளுக்குச் சொல்லியிருந்தாலும் மிகக் குறைவாகவே அவள் வல்லபையிடம் உரையாடியிருந்தாள். அவளூடாக எச்செய்தியையும் துரியோதனன் அவளுக்கு அனுப்பியதில்லை. பிற அரசருக்கு அவர்களின் அகத்தளம் வரை சென்று சொல்லத்தக்க செய்திகளை கொண்டு செல்பவளாகவே வல்லபை அறியப்பட்டாள். அவளை விதுரர் வெறுத்தார். அரசவையில் வல்லபை எழுகிறாள் என்றால் விதுரர் பின்வாங்கிவிட்டார் என்பதே பொருள். “அரசர்கள் நன்றுக்கும் தீதுக்கும் அன்புக்கும் வஞ்சத்திற்கும் வெவ்வேறு தூதர்களை கொண்டிருக்கவேண்டும். ஒருகையில் நெருப்பும் மறுகையில் நீரும் இருப்பவனே ஆட்சியாளன்” என்ற வரியை அவள் நெஞ்சம் தொட்டு எடுத்தது.

“அரசர் தங்களுக்கு தன் வாழ்த்துகளை தெரிவிக்கும்படி ஆணையிட்டிருக்கிறார், அரசி” என்றாள் வல்லபை. அந்த வரி எந்நூலில் உள்ளது? தேவசேனரின் ராஜநீதிசம்கிரகமா? சுபாஷிதரின் உக்ரபிரகாசிகையா? “நாளை காலை உபப்பிலாவ்யத்திலிருந்து இந்திரப்பிரஸ்தத்தின் முன்னாள் அரசர் யுதிஷ்டிரரின் செய்தியுடன் துவாரகையின் முன்னாள் அரசர் யாதவர் அஸ்தினபுரிக்குள் நுழைவதாக செய்தி வந்துள்ளது. அவரை தாங்களே சென்று கோட்டை முகப்பில் அரசமுறைப்படி வரவேற்று அரண்மனையில் கொண்டுசென்று அமர்த்த வேண்டுமென்றும் அரசணிக்கோலத்தில் முறைப்படி தங்கள் செலவு அமையவேண்டுமென்றும் அரசர் விழைகிறார்” என்றாள் வல்லபை.

பானுமதி எழுந்து அமர்ந்தபோது அணிகள் ஓசையிட்டன. “அவ்வாறு அரசியர் செல்லும் வழக்கமில்லையல்லவா? அதிலும் அவர் முடிகொண்டு அமர்ந்த அரசர் அல்ல எனும்போது…” என்றாள். “ஆம், அவ்வாறு முன்முறைமை இல்லை. ஆனால் அவ்வாறு செய்வதற்கு தடையுமில்லை. வருபவர் நம் அரசரால் அரசகுடியினரென்றும் மதிக்கத்தக்கவரென்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டவரெனில் அது அவையாலும் ஆன்றோராலும் ஒப்பப்படுவதே ஆகும்” என்றாள் வல்லபை. அவ்வரி கிருபாகரரின் மௌலிவிலாசம் என்னும் குறுங்காவியத்தில் வருவது. பானுமதி பெருமூச்சுவிட்டாள். “அவர் வருவது நாளை மறுநாள் அஸ்தினபுரியில் கூடவிருக்கும் ஷத்ரியப்பேரவையில் பங்குகொள்வதற்காக. அவர் அரசரல்ல எனில் அங்கே அவர் அவையமரவியலாது. அதன்பொருட்டே இந்த முடிவை அரசர் எடுத்திருக்கக்கூடும்” என்றாள் வல்லபை.

பானுமதி தன் உள்ளத்துள் உழன்றபடி தலையை மெல்ல அசைத்தாள். இப்போது ஏன் என் உள்ளம் இரண்டாகப் பிரிகிறது? இத்தருணத்தை கூர்கொண்டு எதிரேற்கவேண்டியவள் நான். ஆனால் எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் உள்ளூர பிளந்துகொள்வதனூடாகவே நிகர்நிலையை அடைகிறேன். இங்கிருக்கையில் காசியிலும் இருக்கிறேன். அவையமர்கையில் சிறுமியாகவும் ஆகிறேன். நடைமுறைச் சிக்கல்களின்போது நூலாய்கிறேன். அவள் விழிமங்கி உணர்விலாதிருந்தமை வல்லபையை குழப்பியது. பற்றுக்கோடுக்காக அவள் உள்ளம் தவிப்பதை பானுமதியால் காணமுடிந்தது. அதையுணர்ந்ததும் அவள் மீண்டும் புன்னகைத்தாள்.

வல்லபை சற்றே முகம் அண்ணாந்து அவள் முகத்தை கூர்ந்து பார்த்தபடி “இது அரசாணை என்பதனால் இங்கு ஐயமோ மாற்றுச் சொல்லோ எழாதென்பது அனைவரும் அறிந்ததே” என்றாள். அவள் தன்னை முள்முனையால் குத்திச்சீண்டுகிறாள் என பானுமதி உணர்ந்தாள். ஆனால் அவள் முகம் புன்னகையுடன் மாறாதிருந்தது. அதைக் கண்டு வல்லபையின் குரல் மீண்டும் இயல்பாக ஆகியது. “இளைய யாதவர் இங்கு வரும் செய்தி நேற்று காலையே ஒற்றர்களினூடாக அவையடைந்துவிட்டது. அவருக்கு முறையான வரவேற்பு அளிக்கப்படவேண்டுமென்பது அரசரின் எண்ணம்” என்றாள்.

பானுமதி அகக்குழப்பம் விலகாமலேயே விழிதூக்கி வல்லபையின் கண்களை பார்த்தாள். நரைத்த தலைமுடி வெண்களிமண் தீற்றல்கள் என இரு பக்கங்களிலுமாக வழிந்து தலைக்குப்பின் கொண்டையிடப்பட்டிருந்தது. வாடிய கமுகுப்பாளைபோல நுண்சுருக்கங்கள் செறிந்த வெண்முகம். இருபுறமும் வற்றிய கன்னத்தசைகளால் இழுக்கப்பட்டு அமுங்கியது போன்ற மூக்கு. உள்மடிந்து சிறிய கோடென்றான வாய். கழுத்துக்கு கீழே இரு திரைத்தொங்கல்கள்போல மென்தசை தொங்கி நின்றிருந்தது. வடித்த காது குழைகளுடன் தோள்மேல் அமர்ந்திருந்தது.

எத்தனை உள்ளங்களை இவள் உள்ளம் தொட்டுச் சென்றிருக்கும் என்ற எண்ணம் பானுமதிக்கு ஏற்பட்டது. இத்தகைய ஆயிரம் உள்ளங்களுடன் விளையாடி ஒவ்வொரு பொழுதையும் கடந்து இரவு மஞ்சத்திற்கு மீளகிறோம். நச்சு நாகங்கள் நடுவே நெளிந்தும் வளைந்தும் வரும் எலி என. அரசி எனும் இந்த அடையாளமும், அதற்குரியவை என பயின்று சூடிக்கொண்ட பாவனைகளுமின்றேல் இதை இயற்றமுடியுமா என்ன? இந்தத் தோற்றமும் நிமிர்வும் என் கவசங்கள். உள்ளே அஞ்சியும் சலித்தும் விலகித் திகைத்து அமர்ந்திருக்கும் சிறுமியை இவள் அறிந்தால் நச்சுப்பல் கூர்மின்னி எழுமா என்ன?

பானுமதி “ஆனால் இங்கு இதுவரைக்கும் ஒரு முறைமையே கடைபிடிக்கப்பட்டது. பாரதவர்ஷத்தின் தொல்குடி ஷத்ரிய அரசர்கள் மட்டுமே அரசராலோ பட்டத்து அரசியாலோ கோட்டைமுகப்பில் எதிர்கொள்ளப்பட்டார்கள். இன்று முடிசூடாத இரண்டாம் குலத்தார் ஒருவரை அவ்வாறு கோட்டைமுகப்பிற்குச் சென்று வரவேற்பதை ஷத்ரிய அரசர்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்று எண்ணவேண்டியுள்ளது” என்றாள். “அவையனைத்தும் முன்னரே அரசரின் அவையில் இளையவர்களால் கூறப்பட்டு அரசரின் ஆணைக்கு சொல்லடங்கி ஏற்கப்பட்டது” என்றாள் வல்லபை. “இளைய யாதவர் முடிதுறந்தாலும் அத்துறப்பை அவர் மைந்தர் ஏற்கவில்லை என்று செய்தி உள்ளது. ஆகவே அவர் பேரரசர் என்றே கொள்ளப்படுவார்.”

“நன்று, அரசரின் ஆணை இது என்றால் தலைக்கொள்கிறேன்” என்றாள் பானுமதி. வல்லபை எழுந்து தலைவணங்கி “அரசி, நாளை மாலையில் ஷத்ரிய அரசர்களின் பேரவை நம் தெற்குக் கோட்டையருகே இந்திரமுற்றத்தில் அமைந்துள்ள புதிய அவைக்கூடத்தில் கூடுகிறது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மறுநாள் காலை கூடும் அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் அறிவிக்கவிருக்கிறார்கள். அதன் பின்னர் நம் அரசர் பாரதவர்ஷத்தில் திரண்டவற்றிலேயே மிகப் பெரிய படையின் முதன்மைத் தலைவர் என அரியணை அமர்வார். இவ்விரிநிலத்தில் விரைவிலேயே சத்ராஜித் என முடிசூடி அவர் அமர்வார் என்பதற்கான தொடக்கம் அது. அவ்வரியணையின் அருகே மும்முடி சூடி அமரவிருப்பவர் தாங்கள். இந்தத் தருணம் அதை தங்களுக்கு நினைவூட்டும் தன்மை கொண்டதாக அமைக!” என்றாள்.

“ஆம், அவ்வாறே ஆகுக!” என்று பானுமதி தலைவணங்கினாள். அதன் பின்னரே வல்லபை சொன்னவற்றின் முழுப்பொருளும் அவளுக்கு புரிந்தது. கைகூப்பி மும்முறை தாழ்ந்து வணங்கியபின் வல்லபை “விடை கொள்கிறேன், அரசி” என்று சொல்லி பின்காலடி எடுத்து வைத்து கதவை அடைந்து அதை மெல்ல தட்டினாள். வெளியிலிருந்து லதை கதவை திறக்க மீண்டுமொருமுறை தலைவணங்கி வெளியே சென்று மறைந்தாள். ஆணையை எதிர்பார்க்கும் விழிகளுடன் லதை நிற்க அவளை வெற்றுவிழிகளால் சற்றுநேரம் நோக்கியபின் “அசலையை வரச்சொல்” என்றாள் பானுமதி. லதை தலைவணங்கி வெளியே சென்றாள்.

bl-e1513402911361பானுமதி திரும்பி அருகிருந்த வெண்கல மணியை மும்முறை அடிக்க பின்பக்கக் கதவுகள் திறந்து அணிச்சேடியர் உள்ளே வந்தனர். பானுமதி கைகாட்டியதும் அவள் உடலிலிருந்து நகைகளை கழற்றத் தொடங்கினர். கால் மெட்டிகளையும் தண்டைகளையும் முன்னரே கழற்றிவிட்டிருந்தனர். கைவிரலிலிருந்த ஆழிகளையும் மலர்ப்பூட்டுகளையும் திருகாணி இறுக்கப்பட்ட கங்கணங்களையும் காதுமடல்களில் பொருத்தப்பட்டிருந்த மணிமலர்களையும் அவர்கள் கழற்றினர். அவ்விரல்கள் ஈக்களின் முன்கால்கள்போல விரைவு கொண்டிருப்பதை அவள் கண்டாள். கூடுகட்ட நார் கொண்டுசெல்லும் சிறு செந்நிறக் குருவிகள் என அவர்களின் கைகள் பறந்து எழுந்து சிமிழ்களில் நகைகளை போட்டன.

நகைகள் முழுமையாக அகற்றப்பட்டதும் அவள் எழுந்து நிற்க இருவர் ஆடைகளை கழற்றத் தொடங்கினர். திறன்கொண்ட கைகளுடன் அவர்கள் முடிச்சுகளையும் மடிப்புகளையும் செருகல்களையும் பின்னல்களையும் அகற்றி ஆடைகளைக் கழற்றி மடித்து அப்பாலிருந்த மூங்கில் பேழைகளில் இட்டனர். முற்றிலும் ஆடை விலகியதும் உடல் காற்றை உணர்ந்து மெல்லிய மெய்ப்பு கொண்டது. அவள் எழுந்து முதுகை நிமிர்த்து நின்றாள். இளமையில் கனியும் மலரும் உதிர்ந்து விடுதலைகொண்டு மேலெழும் கிளை என ஒரு சேடி சொன்ன ஒப்புமை எப்போதும் அவள் உள்ளத்தில் எழுவதுண்டு. அருகே ஆடியில் பிறிதொரு இருப்பை உணர்ந்தாள். திரும்பியபோது நோக்கை சந்தித்தாள்.

ஒவ்வொரு முறையும் ஆடையின்றி நிற்கையில் ஆடிநோக்கி விழி எழுவதை அவளால் தவிர்க்க முடிந்ததில்லை. தெரியும் அவ்வுடல் எப்போதுமே பிறிதெவருடையதோ என துணுக்குறச் செய்யும். அவள் உள்ளம் தயங்கித் தயங்கி ஒவ்வொரு தருணத்திலும் மரக்கிளைகளை, வேர்களை, கற்களை பற்றிக்கொண்டு நின்று இழுபட்டு ஒழுகிச் செல்ல பெருகி விசைகொண்டு நெடுந்தொலைவில் முன்னால் சென்றுகொண்டிருந்தது உடல். அதன் இலக்கும் விழைவும் முதுமையே என்பதுபோல. உருக்கொண்டு எழுந்ததே சிதைவுற்று அழிவதற்காகத்தான் என. மடிந்தும் தளர்ந்தும் என் உடலென்றான இந்தத் தசைத்திரள்கள், இத்தொய்வுகள், இந்நிறமாற்றங்கள் நானா? கன்னங்கள் மேலும் மடிந்திருந்தன. கண்கீழ்த்தசை கருமைகொண்டு இழுபட்டு வளைந்திருந்தது. உதடுகள் தொங்கியிருக்கின்றனவா? முகவாயின் தொய்வும் கழுத்தின் மடிப்பும் மிகுந்துள்ளனவா? தோளிலும் மார்பிலும் அமைந்த தோல்வரிகள், தோள்களின், விலாக்களின் எலும்புப் புடைப்புகள். கழுத்தில் இந்த நரம்புவரி முன்பு இத்தனை மேலெழுந்திருந்ததில்லை.

முலைகளை அவள் ஒரு கணத்திற்குமேல் நோக்குவதேயில்லை. அவை ஒவ்வொருநாளுமென அவள் உடலில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டிருந்தன. காமம் முகிழ்ப்பதென முளைவிட்டவை. முழுத்துத் துடித்தவை, கனிந்து ஊறியவை. கனல்கொண்டவை. மறைக்கப்பட்ட கூர்நோக்கு கொண்டவை. மண்நோக்கி தழைந்தன அவற்றின் கருவிழிகள். இவ்வுடல் என்னுடையதல்ல என்றே அவளுக்குள் இருந்த சிறுமி திமிறி பின்னடி வைத்தாள். ஆடிக்குள்ளிருந்து திகைத்து தன்னை நோக்குபவள் பிறிதேதோ காலத்தில் வாழும் ஒரு மூதன்னை.

அவள் தன் அத்தை சியாமளையைப் போன்ற தோற்றம் கொண்டவள் என்பது இளமையிலேயே அனைவரும் சொல்லி நிறுவிவிட்ட ஒன்று. அனுபநாட்டு அரசன் கர்மஜித்துக்கு அரசியாகச் சென்ற அத்தை சியாமளை அவள் அன்னைக்கு உகந்தவளல்ல. பருத்த வெண்ணிற உடலும், நுரைச்சுருள் குழலும், வட்டமுகத்தில் சிரிக்கும் சிறிய கண்களும், சிற்றிதழ்வாய்க்குள் அரிநிரை என சிறிய பற்களும் கொண்டிருந்த அத்தையை அவள் எப்போதும் விழிவாங்காமல் நோக்கிக்கொண்டிருப்பாள். அத்தையின் ஆடைமுனையை பற்றிக்கொண்டு அருகிருப்பதையே அவள் விழைந்தாள். அத்தை நூலாய்கையில் இசைகேட்கையில் நாற்களமாடுகையில் அவளை நோக்கியபடி அப்பால் அமர்ந்திருப்பாள்.

“என் வெண்புறாவே” என்று அத்தை அவளை அழைப்பாள். இடைபற்றி தூக்கிச் சுழற்றி இடுப்பில் வைத்துக்கொள்வாள். அத்தையின் வெண்ணிற முகத்தில் எழுந்த சிவந்த முகமுத்துக்களை அவள் சுட்டுவிரலால் தொட்டு விளையாடுவாள். அத்தை அவையமர அணிகொள்கையில் அவள் உடலில் ஒவ்வொரு அணியும் அதற்கென்றான இடத்திலெனச் சென்றமரும் விந்தையை நோக்கிக்கொண்டிருப்பாள். கழுத்திலணியும் சரப்பொளி பளிங்கில் பொன்வழிவென பதிந்தமைந்திருக்கும். கைமணிகள் வளையல்களைப்போலவே உருண்டவை. பருத்த தோள்களிலிருந்து பாலோடை என வழிந்தமைந்த கைகள் காந்தள் இதழ்களென சிவந்த சிறிய விரல்குவையில் வந்து முடியும். அத்தை மலர்தொடுக்கும்போது அவள் விரல்களும் மலர்களுடன் இணைந்துகொள்வன போலிருக்கும்.

அவள் நோக்குவதைக் கண்டு அவள்மேல் ஒரு மலரை வீசி எறிந்து “என்னடி நோக்கு?” என்று அவள் சிரிப்பாள். “நான் உங்களைப்போலவா, அத்தை?” என்று அவள் கேட்பதுண்டு. “ஆம், நீ நானேதான்” என்பாள் அத்தை. “நான் எப்போது நீங்களாக ஆவேன்?” அத்தை சிரித்து அவளை கைபற்றி அருகணைத்து செவியில் “நீ காதல்கொள்கையில்” என்றாள். அவள் குழம்பி அத்தையின் உடலை உந்தி விலகி முகம் நோக்கி “காதலென்றால் என்ன?” என்றாள். “அதை தெய்வங்கள் உனக்கு கற்பிக்கும்” என்றாள் அத்தை. அவள் “எந்த தெய்வம்?” என்றாள். “மலர்களை விரியவைக்கும் தெய்வங்கள்” என்றாள் அத்தை.

அதன்பின் அவள் மலர்களை கூர்ந்து நோக்காமல் கடந்துசென்றதில்லை. அவற்றிலமர்ந்திருக்கின்றன தெய்வங்கள். வண்ண மாறுபாடுகளின், வடிவ முடிவின்மைகளின், நறுமணங்களின் தலைவர்கள். மலர்கள் கந்தர்வர்களின் பீடங்கள். கின்னரர்களின் இசைக்கலங்கள். கிம்புருடர்களின் மாளிகைகள். வித்யாதரர்களின் ஏடுகள். மலர்களை நோக்கி கனவிலாழ்ந்து உடல்மறந்து விழிமயங்கி அவள் அமர்ந்திருப்பதுண்டு. “இப்போதே தொடங்கிவிட்டாள் கனவுகாண” என்று சேடியர் நகைப்பார்கள். ஆடிமுன் நின்று அத்தை அணிசெய்துகொள்கையில் அவள் ஆடைக்குள் உடல்மறைத்து நின்று நோக்குவது அவளுக்கு உகந்த விளையாட்டு. ஆடியில் தெரியும் அத்தையின் உருவம் தானே என எண்ணி உடல்விம்முவாள். தன்னுள் மொட்டுகளை மலர்களென்றாக்கும் ஒன்று எழுந்துவந்து நிறைந்து அதைப்போல உடல்பெருகி எழச்செய்யும் என எண்ணிக்கொள்வாள்.

காசி நாட்டு அரசர் விஜயரின் மகளாக, அரசமைந்தர் விருஷதர்பரின் இளையவளாக சியாமளை பிறந்தபோது அரண்மனையின் முகப்பிலிருந்த சுநாதம் என்னும் பெரிய மணி மும்முறை தானாகவே ஒலித்தது என்று சூதர்பாடல்கள் கூறின. தொல்குடி ஷத்ரிய மன்னர் ஒருவருக்கு அவையமர்ந்து பெரும்புகழ்கொண்ட மைந்தர்களை அவள் பெற்றெடுப்பாள் என்று நிமித்திகர் கூற்று இருந்தது. பானுமதியின் அன்னை “மூன்று கழஞ்சு பொன்னுக்கு எந்தக் கதையையும் சொல்லும் சூதர்கள் இங்கிருக்கையில் அரண்மனை முகப்பு மணியென்ன இந்திரவில்லே வந்து வானில் வளைந்து நிற்காதா?” என்று உதட்டை சுழிப்பாள். ஆனால் அவள் அத்தை சிறுசொல் செவிகொள்ளா நிமிர்வு கொண்டிருந்தாள். ஆணையிடும் விழிகளும் எங்கும் வணங்காத தலையும் நேர்நடையும் கொண்டு அரண்மனையில் நிறைந்திருந்தாள்.

ஒவ்வொரு செயலாலும் சொல்லாலும் எண்ணத்தாலும் அவள் அத்தையாகவே தன்னை ஆக்கிக்கொண்டாள். அவளுடலில் அத்தை எழுந்தோறும் அன்னை விலக்கம் கொண்டாள். “நீ அந்த ஆணவக்காரியை நடிக்கிறாய். ஆணவம் கொண்ட அனைவரையும் தெய்வங்கள் இறுதியாக ஒடித்து வீசும் என்றுணர்க! ஒருநாள் நீ சூடிக்கொண்ட இந்த நிமிர்வுக்காக துயர்படுவாய். நான் நானென தருக்கிய உனது உள்ளம் ஏன் ஏன் என விம்மி அழும்” என்று வெறுப்பில் சுளித்த முகத்துடன் அவளை நோக்கி அன்னை சொன்னாள். சீற்றத்துடன் அவளை நோக்கி நின்ற பானுமதி பின்னர் இதழ்வளைய சிரித்து “நான் அவ்வாறுதான் இருப்பேன். அதை விரும்பவும் சில தெய்வங்கள் இருக்கக்கூடும்” என்றபின் திரும்பி நடந்தாள்.

ஒருபோதும் அன்னைக்கும் அவளுக்கும் நல்லுறவு அமைந்ததில்லை. “காசி ஒன்றும் பெருநகரல்ல, உணர்ந்துகொள். இது கையளவே ஆன சிறுநாடு. இங்கு உலகாள்வோன் விரிவிழி அன்னையுடன் அமர்ந்திருப்பதனால் மட்டுமே இதை பிற ஷத்ரியர் வெல்லாமல் இருக்கிறார்கள். ஷத்ரியர்களுக்கு பெண்பெற்றுக் கொடுக்கும் சிறு ஈற்றறை இது என்று சூதர்கள் இளிவரல் உரைத்ததுண்டு. உன்னை கொள்ளவருபவன் தன் வாளால் வென்று அடைந்த பெருமை மட்டுமே உனக்குரியது. இங்கிருந்து கொண்டு சென்று நீ அங்கு நிறுத்தும் பெருமையென ஏதுமில்லை” என்று அன்னை அவளிடம் சொன்னாள்.

அப்போது அவள் கன்னியென்றாகி மணவிழைவு ஓலைகள் வரத்தொடங்கியிருந்தன. “வந்துகொண்டிருப்பவை அனைத்தும் வெவ்வேறு ஷத்ரிய அரசர்களுக்குரியவை. ஒருவருக்கு பெண் கொடுத்தால் பிறரை எதிரிகளாக்குவோம். எவரேனும் தன் தோள்வலியால் உன்னை கவர்ந்து சென்றால் அதுவே எனக்கு விடுதலை” என்று தந்தை கசப்பும் சினமும் தெரிந்த முகத்துடன் அவளை நோக்காமல் அருகிலிருந்த தூண்மேல் விழியூன்றி சொன்னார். “அவ்வாறெனில் அதுவே ஆகுக! அதற்கும் முன்மரபுகள் உண்டு” என்று அவள் சொன்னாள்.

இளையவள்களாகிய அசலையும் பலந்தரையும் தங்கள் தனியுலகில் வாழ்ந்தனர். அசலை காவியம் நவிலும் சுவைகொண்டிருந்தமையால் அவளை சம்பவரின் குருநிலைக்கு அனுப்பினார்கள். பலந்தரையே அன்னைக்கு அணுக்கமானவள். அன்னையின் மாற்றுருவாக அவள் தன்னை வடித்துக்கொண்டாள். அரசவைகளில் அன்னையுடன் சென்று அமர்ந்து முறைமையும் நெறியும் பயின்றாள். தேர்ந்து சொல்லடுக்கவும் பிறர் விழிகளுக்குள் சென்று உளம்நோக்கவும் தேர்ந்தாள். ஒவ்வொரு நிலையிலும் அவள் தன்னை வெல்ல முயன்றுகொண்டிருப்பதை பானுமதி உணர்ந்திருந்தாள். இயல்பாக பேச்சினூடாக அரசியல் சிக்கலொன்றைச் சொல்லி அவள் அதை எப்படி புரிந்துகொள்கிறாள் என்று நோக்குவாள். அவள் அதைக் குறித்து எதை சொன்னாலும் இரங்கும் புன்னகையுடன் “நன்று, நீங்கள் இன்னமும்கூட கூர்ந்து நோக்கலாம், மூத்தவளே” என்று தொடங்குவாள்.

அப்போது அன்னை அருகிலெங்கேனும் இருப்பாள். சொல்பதியா செவிகொண்டவள்போல செயல்களில் ஈடுபட்டிருப்பாள். ஒரு தருணத்தில் இளிவரல் புன்னகையுடன் திரும்பி “மலர்த்தோட்டங்களில் வாழ்வதல்ல அரசியரின் பணி. அவையே அவர்களின் இடம். அவளை உன்னருகிலேயே வைத்துக்கொண்டாயென்றால் நீ இழிவடையாமலிருப்பாய்” என்பாள். பலந்தரை “அக்கை எளிதாக கற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர், அன்னையே. அவருக்கு உளம்நிலைக்கவில்லை” என்றாள்.

அன்னை சீற்றத்துடன் “உளம்நிலைக்காதவர்களையே நான்காம்குலத்தோர் என்கிறார்கள். சொல்லில் நிலைத்தோர் அந்தணர். படைக்கலத்தில் நிலைத்தோர் ஷத்ரியர். பொன்னில் நிலைத்தவர் வைசியர் என்கின்றன நூல்கள்” என்றாள். பானுமதி புன்னகை செய்தாள். அன்னை அப்புன்னகையால் சீண்டப்பட்டு “நூல் எனும்போதே என்ன நச்சுப்புன்னகை உன் உதடுகளில்? நூல்நவில எங்களுக்கும் தெரியும். நாங்களும் அரசகுடிப் பிறந்தவர்களே” என்றாள். பானுமதி “ஆம், அதை அறிவேன்” என்றபின் எழுந்துசென்றாள்.

அத்தை நகர்நீங்கி அனுபநாட்டுக்குச் சென்றபின்னர் அவள் அரண்மனையில் தனியளானாள். உளமறிந்து சொல்லாட எவருமில்லை. முற்றிலும் அகன்று அவ்வகல்வு காட்டும் விழிகளை வெல்ல நிமிர்வு கொண்டு அங்கிருந்தாள். அசலையுடன் மட்டுமே அவள் சற்றேனும் உளமளித்து உரையாட இயன்றது. ஆனால் அவள் சொற்சுவை மட்டுமே திகழும் பிறிதொரு உலகில் இருந்தாள். சொல்லை அருமணி என திருப்பித் திருப்பி அழகறிவதன்றி எதிலும் அவள் உள்ளம் செல்லவில்லை. அடித்தட்டில் கால்தொடாது மூச்சு பதறி மூழ்குகையில் மட்டும் எட்டிப் பற்றிக்கொள்ளும் கரையோரத்து வேர் போலிருந்தாள் அசலை.

நான்காவது பேற்றில் அத்தை மறைந்த செய்தி வந்தபோது அரண்மனை அமங்கலம் கொண்டது. பதினெட்டுநாள் துயர்காத்தலும் நீத்தார் கடனளித்தலும் முடிந்து அனைவரும் நிலையமைந்த பின்னரும் அவள் மீளவில்லை. வெறித்த விழிகளும் சொல்லற்ற உதடுகளுமாக முழுத் தனிமையில் இருந்தாள். மன்றமைந்த பொழுதில் அன்னை அவளிடம் “நன்று, இனியேனும் அவளிடமிருந்து நீ விடுதலை கொள். ஒருவர் மேல் கவியும் இன்னொருவரின் அடையாளம்போல் சிறை வேறில்லை” என்றாள். அவள் அருகே அமர்ந்திருந்த பலந்தரை “அத்தையின் மைந்தர்கள் அங்கே அரசேறுவார்கள். அவர்களின் மூதன்னை நிரையில் அவர் அமைவார். அவர் இங்கு மண்நிகழ்ந்த நோக்கம் நிறைவுகொண்டது. இனி உங்களில் இருந்தும் அவர் உதிர்வதே முறை, அக்கையே” என்றாள்.

பானுமதி வெற்று விழிகளுடன் தலையசைத்து அப்பால் சென்றாள். “அவர் மீள விழையவில்லை, அன்னையே. துயரத்தின் வல்லமைகளில் ஒன்று அதற்கிருக்கும் ஈர்ப்புவிசை. தன்னை மீட்டுக்கொள்ள துயருறுவோர் விழைவதில்லை என்கின்றன நூல்கள்” என்றாள் பலந்தரை. பானுமதி தன்னை ஆடியில் நோக்கும்போதெல்லாம் அத்தையையே கண்டாள். ஒவ்வொரு முறையும் முதற்கணம் உளம் திடுக்கிட்டு பின் அதுவே தான் என உணர்ந்து அணுகினாள். மெல்ல மெல்ல அதுவே என்றானாள். அத்தையென்றும் தான் என்றும் ஒவ்வொரு தருணத்திலும் இரண்டென்றிருந்தாள்.

அப்போதுதான் இளைய யாதவர் காசிக்கு வந்தார். அவள் அவரைப்பற்றி சூதர்கதைகளில் கேட்டிருந்தாள். சூதர்கதைகள் அனைத்துமே நேற்றோ இன்றோ நாளையோ இன்றி எங்கோ இருக்கும் ஓர் உலகில் நிகழ்வன என அவள் உள்ளம் மயங்குவதுண்டு. அங்கே தெய்வங்களே இயல்பானவர்கள். உடல் களைந்து ஒளியென்றான மானுடரே அங்கு செல்லமுடியும். அசலைதான் இளைய யாதவர் வருவதை அவளிடம் சொன்னாள். அவள் “அவர் மானுடர்தானா?” என்று கேட்டாள். அசலை உள்ளக்கிளர்ச்சியுடன் “ஆம் அக்கையே, மானுடர் செல்லத்தக்க உச்சத்தை அடைந்தவர். ஆகவே தெய்வமும் ஆனவர்” என்றாள். “எங்கள் நூல்நவிலலில் ஒருநாளேனும் அவர் வந்துசெல்லாதிருந்ததில்லை. பாரதவர்ஷத்தில் வேதமோ அதன் முடிபோ உசாவும் எவரும் அவருக்கு மாணவர்களென்றானவர்களே.”

பானுமதி அவள் முகத்தில் எழுந்த ஒளியை வியப்புடன் நோக்கி “நீ அவரை நன்கறிந்திருக்கிறாய் போலும்” என்றாள். “அவரை நன்கறிந்திருக்கிறோம் என்று உணர்பவர்களே இங்கு மிகுதி. அறிந்த முதற்கணமே அவ்வெண்ணம் உருவாகிவிடும். பின்னர் அறியுந்தோறும் அவர் அகன்றகன்று செல்வார். அறியவொண்ணாதவர் என அவரை அறிந்தவர்களே அவரை அணுகியவர்கள்” என்றாள். “சொல்லடுக்க கற்றுக்கொண்டிருக்கிறாய்” என்றாள் பானுமதி சிரித்தபடி. “நூல்நவில்தலின் கொடை அது, சொல்லுரைக்க கற்போம். சொல்லவிருப்பதை வாழ்விலிருந்து கற்கவேண்டும்” என்றாள் அசலை.

“இந்திரமாயம் செய்யும் பீதர்நாட்டவன் வெறுங்கையில் விரித்துக்காட்டும் வண்ணப்பட்டோவியம்போல அவர் தென்மேற்குக் கடலோரம் ஒரு நகரை உருவாக்கியிருக்கிறார் என்கிறார்கள். அதற்கு கங்கைநீர் கொண்டுசெல்லவே வருகிறார்” என்று அசலை சொன்னாள். “இப்புவியில் நான் பிறிதெவரையும் கற்று அணுக விழையவில்லை, அக்கையே. சாந்தீபனி குருநிலையின் முதன்மையாசிரியர் இன்று அவரே.” பானுமதி “தத்துவம் பயின்றவரா?” என்றாள்.

“அக்கையே, அவர் அடைந்தது பயிற்சியல்ல, யோகம். பயில்வது எதுவும் நம்மை ஒரு பகுதியில் வளர்ந்தோங்கச் செய்கிறது. ஆகவே நம் நிகரமைவை இழக்கிறோம். கலையோ இசையோ நூலோ படைக்கலமோ எதை கற்றவராயினும் நிலையழிந்தவராகவே இருப்பது அதனால்தான். ஒன்று பிறிதொன்றால் முற்றிலும் நிகர்செய்யப்படுவதே யோகம். ஒன்றில் விடுபடுவதை பிறிதொன்றால் முழுமையாக நிரப்பிக்கொள்ளும் தவம் அது. தத்துவம் அளிக்கும் சொற்பெருக்கை குழலிசையால் முழுமையாக்கிக் கொண்டவர். படையாழியின் கூரொளியை குழல்சூடிய நீலப்பீலியால் நிகர்செய்தவர். அரசமைந்தவர் எனினும் முதிராச் சிறுவனென்றானவர். ஆழத்துச் சங்கும் முளைத்து மேலெழும் தாமரையும் ஆனது அவர் அகம். முழுமைகொண்ட யோகத்தில் அமைந்தமையால் யோகேஸ்வரர் எனப்படுகிறார்.” ஏதோ ஒரு கணத்தில் நெஞ்சு விம்ம பானுமதி விழிநனைந்தாள்.

எழுந்து குழலைச் சுருட்டி கொண்டையாகக் கட்டியபடி சிறுவாயிலைத் திறந்து அப்பாலிருந்த மஞ்சத்தறைக்குச் சென்று தன் அரையிலிருந்த சிறுதாழ் எடுத்து மஞ்சத்தின் அடியிலிருந்து இழுத்தெடுத்த ஆமாடப்பெட்டியை திறந்தாள். அதனுள் அவளுக்கு தந்தை அளித்த காசிநாட்டுச் செம்பட்டும் உலகுபுரப்போன் அகல்விழியுடன் அமர்ந்த சிறுசெம்புச் சிலையும் சந்தனத்தில் செதுக்கப்பட்ட காசிநாட்டு குடிமுத்திரையும் இருந்தன. அவள் ஆடைகளை விலக்கி உள்ளிருந்து சிறிய தந்தப் பேழையை எடுத்தாள். சிறுதுளைகளாலான மூடிகொண்ட அப்பேழைக்குள் வெண்பட்டுப்பரப்பில் பதிந்ததுபோல் இருந்த பீலியை எடுத்து நோக்கினாள்.

முந்தைய கட்டுரைதமிழில் அரசியல்படங்கள்
அடுத்த கட்டுரைபுதுவை சந்திப்பு -கடிதங்கள்