‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 84

83. படைமுகம்

flowerவிராடர் தன் அருகே இருந்த பீடத்தை கையால் அறைந்து “சூக்தா, மூடா, உள்ளே வா” என்றார். கதவைத் திறந்து உள்ளே வந்த காவலனிடம் “சாளரக் கதவுகளை திறந்து வைக்கவேண்டுமென்று உன்னிடம் சொன்னேன் அல்லவா? யார் மூடியது கதவுகளை? என்னை இங்கே சிறையா வைத்திருக்கிறீர்கள்? மூடர்கள், அறிவிலிகள்” என்றார். வீரன் திகைப்புடன் திரும்பிப் பார்த்தபோது அறையின் நான்கு சாளரங்களின் இரு கதவுகளில் ஒன்று மூடியிருப்பதை கண்டான். காற்று வீசி அது மூடியிருக்கிறதென்று தெரிந்துகொண்டு பணிவுடன் “திறந்துவைக்கிறேன், அரசே” என்றபின் அதை திறந்து வைத்தான். கட்டையைச் சுழற்றி அது மீண்டும் மூடாமல் அமைத்தபின் வெளியே சென்றான்.

“மூடர்கள்… சொல்லறியா வீணர்கள்” என்றபின் விராடர் எழுந்து அறைக்குள் நடந்தார். மீண்டும் பீடத்தை கையால் தட்டி “உள்ளே வா… மூடா… இழிமகனே” என்றார். வீரன் உள்ளே வந்து தலைவணங்கினான். “உன்னை வரச்சொல்லவில்லை. சேடியர் எவருமில்லையா அங்கு?” என்றார். “சேடி சற்று அப்பால் இருக்கிறார். அழைக்கிறேன்” என்றான். “சேடி அங்கே என்ன செய்கிறாள்? அவள் தலையை வெட்டிவீச ஆணையிடுவேன்… ஆணவக்காரர்கள்… கீழ்மக்கள்” என்று விராடர் கூச்சலிட்டார். “முதலில் உன்னை அழைத்தேனா என்று தெரிந்துகொண்டு வா.” அவன் தலைவணங்க “போ!” என்றார். அவன் மீண்டும் தலைவணங்கி வெளியே சென்றான்.

சற்று பொறுத்து வந்த சேடி கதவருகே நின்று தலைவணங்கினாள். “அழைத்தால் வரமாட்டாயா? வேறென்ன வேலை பார்க்கிறாய் இங்கு? பிள்ளைபெற்றுப் பெருக்கவா இங்கே இருக்கிறாய்? நீ என்ன பன்றியா? கீழ்மகளே” என்றார். அவள் தலைகுனிந்து நிற்க “மது கொண்டு வா… போ” என்றார். அவர் அருகே அமர்ந்திருந்த ஆபர் மெல்ல அசைந்தார். அவர் இருப்பதை அப்போது உணர்ந்து “மது வேண்டியதில்லை. இன்நீர் கொண்டு வா. சூடாக இருக்கவேண்டும்” என்றார். அவள் தலைவணங்கி வெளியே சென்று கதவை மூடினாள்.

ஆபர் “பதற்றம் கொள்ள ஏதுமில்லை, அரசே. இதை நாம் உரிய முறையில் முடித்துக்கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்றார். “என்ன வாய்ப்புகள்? இதுவரை கங்கைக்கரை ஷத்ரியர்களிடம் எந்தப்  பூசலுமில்லாமல் சென்றுகொண்டிருந்தது நமது அரசியல், நாம் இருப்பதே அவர்களுக்குத் தெரியாததுபோல. அத்துடன் நமது படைகளை வழிநடத்த கீசகன் இருந்தான். அவனது ஆற்றல் இங்கு அனைவருக்கும் தெரியும்” என்றார் விராடர். “ஆம், கீசகர் திறன்மிகுந்த படைத்தலைவர்தான். ஒருமுறை சதகர்ணிகளை அவர் வென்றதை இன்னமும் சூதர்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் ஆபர்.

அதிலிருந்த உட்குறிப்பை உணர்ந்து விராடர் மேலும் சினம்கொண்டார். “ஆம், அவன் அடைந்தது ஒரேயொரு படைவெற்றியைத்தான். ஆனால் அது போதும் அவன் யாரென்று காட்ட. விராடநாடு தொல்புகழ் கொண்டதல்ல. ஒருங்கிணைந்த படைவல்லமை அதற்கில்லை சதகர்ணிகளைப்போல. அவ்வளவு பெரிய படைக்கூட்டுகளை வென்று வருவதென்றால் அது எளிய நிகழ்வு அல்ல” என்றார். தணிவாக “நான் மறுக்கவில்லை” என்றார் ஆபர். “ஆனால் அவரை எண்ணி எத்தனைபேர் அஞ்சினர் என்பதே ஐயமாக இருக்கிறது.” விராடர் “அஞ்சவில்லை. ஆனால் ஒரே படைவெற்றிதான் நம் கணக்கில் உள்ளது. அது அவனுடையது. அதற்குப்பின் இங்கே போர் நிகழவேயில்லை” என்றார். ஆபர் “அது உண்மை” என்றார்.

வீரன் கதவைத் திறந்து உள்ளே வந்து தலைவணங்கினான். “என்ன?” என்றார். “குங்கர்” என்றான். வரச்சொல்லும்படி கைகாட்டிவிட்டு திரும்பிச்சென்று சாளரத்தருகே நின்றுகொண்டார் விராடர். குங்கன் உள்ளே வந்து அமைச்சருக்கும் அரசருக்கும் தலைவணங்கியபின் அங்கிருந்த சிறுபீடத்தில் அமர்ந்தான். ஆபர் “செய்தியை அறிந்திருப்பீர்கள்” என்றார். “முழு வடிவில் அறிய விருப்பம்” என்றான் குங்கன். “அஸ்தினபுரியின் படைகள் விராடபுரி நோக்கி வந்துகொண்டிருக்கின்றன” என்றார். “ஆம்” என்று குங்கன் சொன்னான். “இன்னும் இரண்டு நாட்களில் நமது எல்லைகளை அவர்கள் கடப்பார்கள்” என்றார் ஆபர்.

குங்கன் “அதற்கு முன்னரேகூட வந்துவிடக்கூடும்” என்றான். “நாம் ஒரு போருக்கு சித்தமாக இருக்கிறோமா? நமது படைகளை யார் வழிநடத்துவது?” என்றபின் ஆபர் அரசரை விழிசுட்டி “நிலைகுலைந்திருக்கிறார்” என்றார். குங்கன் அவரைப் பார்த்தபின் “அஞ்சுவதற்கேதுமில்லை” என்றான். விராடர் திரும்பி “அஞ்சாமல் இருக்க இயலாது. நான் படைநடத்துவதா அல்லது என் மைந்தன் என்று சொல்லிக்கொள்ளும் அந்த மூடனை அனுப்புவதா? விராடபுரியின் படைகள் போரைக் கண்டு பதினான்கு ஆண்டுகளாகிவிட்டன. வேலை எப்படி பற்றுவது என்றுகூட பலர் மறந்துவிட்டிருப்பார்கள். இன்றிருக்கும் படைகளில் புதிய தலைமுறையினர் எவரும் களம் கண்டவர்கள் அல்ல” என்றார்.

குங்கன் “உண்மை. ஆனால் வருபவை அஸ்தினபுரியின் முறையான படைகள் அல்ல. கங்கைக்கரை மச்சர்நாட்டு பகுதிகளில் கர்ணனும் துரியோதனனும் முதலைகளை வேட்டையாடும்பொருட்டு வந்திருக்கிறார்கள். அங்குள்ள மச்சர்களையும் சில சிறு நட்புப் படைகளையும் திரட்டிக்கொண்டு இப்படையெடுப்பை நிகழ்த்துகிறார்கள். இது வெல்வதற்கான போர் அல்ல. நம்மை அச்சுறுத்துவதற்கானது மட்டுமே” என்றான். விராடர் “எதற்காக நம்மை அச்சுறுத்தவேண்டும்?” என்றார். “அச்சத்தில் இங்கிருந்து சில உண்மைகள் வெளிப்படக்கூடும் என எண்ணுகிறார்கள்” என்றான் குங்கன். விராடர் ஐயத்துடன் நோக்க “அதை பின்னர் விளக்குகிறேன். ஆனால் அவர்கள் நம்மை மிகக் குறைவாக மதிப்பிட்டிருக்கிறார்கள். வருவது மிகச் சிறிய படை. நம்மால் எளிதில் அதை வென்றுவிட முடியும்” என்றான்.

விராடர் அவனைப் பார்த்தபின் “சிறிய படை என்று உம்மிடம் யார் சொன்னது?” என்றார். “சிறிய படை ஒன்றையே மச்சர்களிடமிருந்து திரட்ட முடியும். அத்துடன் வருபவர்களுக்கு இந்தப் பகுதியின் நிலமோ பாதைகளோ தெரியாது. கர்ணனும் துரியோதனனும் விந்தியப் பகுதிகளுக்கு படைகொண்டு வந்தவர்களல்லர்” என்றான். ஆபர் “ஆம், அப்படி சில வாய்ப்புகள் நமக்குள்ளன” என்றார். விராடர் உரக்க “என்ன வாய்ப்பு? வருபவை எலிகள் என்றாலும் சிம்மங்களால் தலைமை தாங்கப்படுகின்றன. கர்ணனைப்பற்றி தெரியாதவர் பாரதவர்ஷத்தில் எவர்?” என்றார்.

குங்கன் “அவன் இப்போது பழைய கர்ணன் அல்ல. நான் அறிந்தவரை பாண்டவர்கள் காடேகியபின் கர்ணன் பெரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உடல் நலிந்திருக்கிறான். பகலும் இரவும் தன் அரண்மனையில் மது மயக்கத்திலேயே அவன் இருக்கிறான் என்கிறார்கள். பதினான்காண்டுகளில் அவன் அஸ்தினபுரிக்குச் சென்றதோ அவையில் அமர்ந்ததோ இல்லை. அங்கநாட்டில் ஏரி வெட்டுவதையும் கால்வாய் திருத்துவதையும் மட்டும் செய்துகொண்டிருக்கிறான். அவன் படைக்கலம் தொட்டு பதினான்காண்டுகளாகின்றன என்கிறார்கள் ஒற்றர்கள்” என்றான்.

“ஒற்றர்களா? உமக்கா?” என்றார் விராடர். “சரி, சூதர்கள்” என குங்கன் புன்னகைத்தான். “பெருங்கொடையாளி என அவன் ஈட்டிய அத்தனை நற்பெயரும் அவைநடுவே நிகழ்ந்த பெண்ணிழிவாலும் பாண்டவர்களின் காடேகலாலும் அகன்றுவிட்டது. செல்லுமிடமெல்லாம் அவன் செவிகேட்க மக்கள் பழிச்சொல் உரைக்கிறார்கள். அவன் கையால் கொடை பெறமாட்டோம் என சூதர்கள் முடிவெடுத்துள்ளனர். அவன் தங்கள் குழந்தைகளை தொடக்கூடாது என அவன் நாட்டின் அன்னையரே எண்ணுகிறார்கள். குடியால் அவன் உடல் நலிந்துள்ளது, உள்ளம் மேலும் நலிந்துள்ளது. ஒரு பயிலாப் படைத்திரளை அழைத்துக்கொண்டு தெரியாத நிலத்தில் படைசூழ்கை அமைக்கும் அளவுக்கு இன்று அவனுக்கு ஆற்றல் இருக்காது.”

விராடர் “இப்படியெல்லாம் நாம் எதையும் குறைத்து பேசிவிட வேண்டியதில்லை. விராடபுரி அஸ்தினபுரியின் பெருவீரர்களை எதிர்க்க முடியுமா முடியாதா என்பதுதான் நமது வினா” என்றார். “முடியும், வாய்ப்புள்ளது” என்றான் குங்கன். விராடர் குங்கனை நோக்கி “உமது இந்த உறுதி வியப்பளிக்கிறது” என்றார். ஆபர் “நாம் செய்வதற்கொன்றுமில்லை. அவரிடம் இதை ஒப்படைப்போம். முழுப் பொறுப்பையும் அவரே ஏற்று செய்யட்டும்” என்றார். “நம் இக்கட்டு ஒன்றே, நமக்கு படைத்தலைமை ஏற்க எவருமில்லை” என்றார் விராடர். ஆபர் “அதையும் அவரிடமே விடுவோம். எவர் தலைமை தாங்கவேண்டுமென்பதை அவர் முடிவெடுக்கட்டும்” என்றார்.

குங்கன் “உத்தரர் படைத்தலைமை ஏற்கட்டும்” என்றான். திடுக்கிட்டு “அவனா?” என்றார் விராடர். “அவரால் முடியும்” என்றான் குங்கன். “விளையாடதீர், குங்கரே” என்றார் விராடர். “அவரது தேரை பிருகந்நளை ஓட்டிச்செல்லட்டும்” என்றான் குங்கன். “அந்த ஆணிலியா? நடனம் கற்பிக்க வந்தவள் அவள்” என்றார் விராடர். “அவள் தேர்த்தொழிலில் தேர்ந்தவள். விற்தொழிலும் தெரியுமென்று அவள் கைகள் காட்டுகின்றன” என்றான் குங்கன். விராடர் நம்பிக்கையில்லாமல் தலையசைத்து “அவள் என்ன செய்யமுடியும்?” என்றார். “அவர்கள் என்ன செய்யவேண்டுமென்பதை இங்கிருந்து நான் வகுத்தளிக்கிறேன். அவர்கள் வென்று வருவார்கள்” என்றான் குங்கன்.

ஆபர் “இதற்கு முன்னரும் குங்கனை நம்பியிருக்கிறோம். அது நிகழ்ந்துள்ளது, அரசே” என்றார். விராடர் சலிப்புடன் தலையசைத்து “என்ன நிகழ்கிறது என்றே புரியவில்லை. நமக்கும் அஸ்தினபுரிக்கும் என்ன பூசல்? ஒரு எச்சரிக்கை செய்திகூட அவர்கள் அனுப்பவில்லை” என்றார். “அது குங்கருக்குத் தெரிந்திருக்கலாம்” என்றார் ஆபர். குங்கன் “அவர்களுக்கு பொழுதில்லை. இன்னும் ஒன்பது நாட்களுக்குள் அவர்கள் விராடபுரிக்குள் ஊடுருவ வேண்டும். பத்தாவது நாள் வந்தால்கூட பயனில்லை” என்றான். விராடர் “என்ன சொல்கிறீர்?” என்றார். “இது பின்னர் உங்களுக்கு புரியும்” என்றான் குங்கன்.

விராடர் களைப்புடன் பீடத்தில் அமர்ந்து “முற்றிலும் புரியவில்லை. குடித்துக் குடித்து மதி மழுங்கிவிட்டது. சூதாடிப் பழகியதனால் நாற்களத்துக்கு அப்பால் எந்த ஆடலும் பிடி கிடைக்கவில்லை” என்றார். தலையை பிடித்துக்கொண்டு “ஆனால் எவரோ எங்கோ ஆடும் ஆட்டத்திற்கு நடுவே சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்று மட்டும் புரிகிறது” என்றார். ஆபர் “பொறுத்திருங்கள், அரசே. நாம் எவருக்கும் எப்பிழையும் ஆற்றவில்லை. ஆகவே நாம் பாதுகாக்கப்படுவோம்” என்றார்.

சீற்றத்துடன் தலைதூக்கி “இச்சொற்களுக்கு என்ன பொருள், அமைச்சரே?” என்றார் விராடர். “வரலாறெங்கும் இங்கே அழித்தொழிக்கப்பட்ட அசுரர்களும் நிஷாதர்களும் பிழை செய்தமைக்கான தண்டனையையா பெற்றார்கள்? அரசியலில் ஆற்றலின்மையே பெரும்பிழை. அதன்பொருட்டே நாடுகளும் குலங்களும் முற்றழிகின்றன. நாம் ஆற்றலற்றவர்கள். பேரரசர் நளனின் காலத்திலிருந்து நிஷாதர்கள் தொடர்வீழ்ச்சியை மட்டுமே அறிந்திருக்கிறார்கள். ஆம், நாம் அறிந்த ஒரே வெற்றி கீசகன் சதகர்ணிகளை வென்றதுதான். அது ஒரு தற்செயல் என்பதை நானும் அறிவேன். ஆனால் அதை சொல்லிச் சொல்லி நிலைநிறுத்திதான் இத்தனை காலம் இங்கு தனிநாடென வாழ்ந்தோம்.”

“இனியும் தனி நாடென வாழ்வீர்கள். உங்கள் மைந்தர் இந்நாட்டை முடிசூடி முழுதாள்வார். அவரது கொடிவழிகள் இங்கு வாழும். இது என் சொல்” என்றான் குங்கன். ஆபர் புன்னகைத்து “அவரது சொல்லை நாம் நம்பலாம், அரசே” என்றார். “எப்படி? பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்திகள் சொல்லவேண்டிய சொற்கள் அவை” என்றார் விராடர். ஆபர் நகைத்து “இப்போது அவ்வண்ணமே கொள்வோம்” என்றார். “நகைக்கிறீர்களா? நான் மச்சர்கள் முன் கைச்சங்கிலியுடன் நிற்பதை எண்ணி நீறிக்கொண்டிருக்கிறேன்” என்றார் விராடர்.

ஆபர் “பிறிதொரு செய்தி சற்று முன்புதான் அவைக்கு வந்தது. சிற்றமைச்சர் அதை என்னிடம் கொண்டுவந்தார்” என்றபின் ஓலையை எடுத்து பீடத்தின்மேல் வைத்தார். விராடர் அதை ஐயத்துடன் பார்த்தபடி “கலிங்க நாட்டு ஓலை. என்ன சொல்கிறார்கள்? அவர்களும் நம்மைப்போல் எவர் கண்ணுக்கும் படாமல் வாழும் கூட்டம்” என்றார். “அவர்கள் தங்கள் இளவரசியை உத்தரருக்குக் கொடுப்பதற்கு ஒப்பவில்லை” என்றார் ஆபர். திகைப்புடன் “அதை அவர்கள் இங்கு சொல்லவில்லையே? இங்கு நம் வரிசைகளையும் பரிசுகளையும் பெற்றுக்கொண்டு அல்லவா சென்றார்கள்?” என்றார் விராடர்.

“தூதுக்குழுவென வந்து நம் நகர்புகுந்த பிறகு அவையெழுந்து அதை எப்படி அவர்களால் சொல்ல முடியும்? அன்று அவையிலேயே அவர்கள் நடத்தை அனைத்தையும் சொல்லிவிட்டது. மணஉறுதி அறிவிப்பை வெளியிடவோ மணநிகழ்வுகளின் அடுத்த கட்டத்தைப்பற்றி ஏதேனும் கூறவோ அவர்கள் முற்படவில்லை. கொண்டு வந்த பரிசுகளை நமக்கு அளித்தார்கள். பயின்று வந்த முறைமைச்சொற்களை உரைத்தார்கள். நம் விருந்தை உண்டு நாம் அளித்த பரிசுகளை பெற்று மீண்டார்கள். அனைத்தையும் அங்கு சென்றபின் முறைப்படி அறிவிப்போம் என்று மட்டுமே அவர்களால் சொல்ல முடிந்தது. அப்போதே இதை எதிர்பார்த்தேன்” என்றார் ஆபர்.

சலிப்புடன் மீண்டும் தலையசைத்து எழுந்து சென்று சாளரம் வழியாக காற்று அலையடித்த தோட்டத்தை பார்த்து நின்றார் விராடர். “அவர்களை சொல்வதிலும் பிழையில்லை” என்றான் குங்கன். அவனை நோக்கி திரும்பாமல் விராடர் “இந்த மூடன் அவர்களின் காலடியில் சென்று உருண்டு விழுந்திருக்கிறான். மூடர்கள் பலரை அறிந்திருக்கிறேன். ஒவ்வொரு செயலாலும் தான் மூடன் என்று அறிவித்துக்கொண்டிருக்கும் ஒருவனை பிறிது கண்டதில்லை” என்றார். “அவன் என் குருதியில் உள்ள ஒரு குமிழி மைந்தன் என எழுந்தது. அவனை காண்கையில் எல்லாம் என்னை வெறுக்கிறேன்.”

குங்கன் “அதை பிறகு பார்ப்போம். முதலில் நாம் எதிர்கொள்ளும் இந்தப் போரை வெல்வோம்” என்றான். “உத்தரர் இப்போரை வென்றாரென்றால் கலிங்கர்கள் உளம் மாறவும் கூடும்.” விராடர் சிரித்து “நன்று. பகற்கனவுகளுக்கு உள்ள இனிமை அரியது” என்றார். ஆபர் “இவையெதையும் இப்போது குடியவையில் பேசவேண்டியதில்லை. படைப்புறப்பாடுக்கான அறிவிப்பை மட்டும் தாங்கள் அவையில் வெளியிட்டால் போதும். படைசூழ்கையை குங்கர் அமைக்கட்டும். உத்தரர் படை நடத்தட்டும்” என்றார். விராடர் “எப்போதும் தாங்கள் சொல்பவற்றை ஆணையென பிறப்பிப்பது மட்டுமே என் பணியாக இருந்துள்ளது. அவ்வாறே ஆகட்டும்” என்றார்.

flowerகுங்கனுடன் வெளியே நடக்கையில் ஆபர் “நான் செய்யவேண்டியவை என்ன?” என்றார். “தெரிவுசெய்யப்பட்ட புரவிகள். அவை மிக நன்கு பழக்கப்பட்டவையாக இருக்கவேண்டும்.” ஆபர் “கிரந்திகன் புரவிகளை பழக்கியிருக்கிறார். அவரிடமே சொல்கிறேன்” என்றார். “ஆம், விராடர்களின் ஆற்றல் புரவிகளில்தான். அவர்கள் நாம் எங்கு சென்று சந்திக்கக்கூடும் என எண்ணுகிறார்களோ அதற்கு முன்னரே அவர்களை நம் புரவிகள் சந்திக்கவேண்டும்” என்றான் குங்கன். “மச்சர்களுக்கு புரவிகள் பழக்கமில்லை. அவர்களின் ஆற்றல் கைத்தோணிகளை செலுத்துவதில்தான். அவர்களை காடுகள் வழியாக நடத்திக்கொண்டு வருகிறார்கள்.”

ஆபர் “ஆம்” என்றார். “வேனில் எழுகிறது. இப்பகுதியின் காடுகளில் தைலப்புற்கள் காய்ந்து எரி காத்துள்ளன.” ஆபர் நின்றுவிட்டார். “எரியம்புகள் தொடுக்கும் கலையை பிருகந்நளை அறிவாள்.” ஆபர் “ஆம்” என்றார். “நிஷாதர்கள் பரசுராமரால் அனல் அளித்து அரசகுடியாக்கப்பட்டவர்கள். பிருகுவின் ஏவலன் அனலோன். அவன் உதவி விராடர்களுக்கும் இருக்கும் அல்லவா?” ஆபர் புன்னகைத்தார். “சொல்லுங்கள்” என்றான் குங்கன். “போரை மட்டும் அல்ல, போருக்குப் பிந்தைய சூதர்பாடலையும் எழுதிவிட்டீர்” என்றார் ஆபர். குங்கன் புன்னகைத்தான்.

“அரிஷ்டநேமியிடம் ஓர் அமைச்சர் சென்று கிளம்புவதற்குரிய பொழுதை கணித்துக்கொண்டு வரவேண்டும்” என்றான் குங்கன். “வலவரிடமும் செய்தியறிவிக்கிறேன்” என்றார் ஆபர். அவரை திரும்பி நோக்கிவிட்டு “ஆம், ஆனால் அவன் களமிறங்கும் அளவுக்கு இப்போர் பெரியது அல்ல” என்றான் குங்கன். இருவரும் சொல்லில்லாமல் நடந்தனர். ஆபர் மெல்ல கனைத்தார். குங்கன் திரும்பிப் பார்த்தான். “இது போருக்குப்பின் நிகழவேண்டியது” என்றார் ஆபர். “இளவரசியின் மணத்தன்னேற்பு.” குங்கன் “ஆம்” என்றான். “ஆனால்…” என்றபின் “அவர்களிடையே என்ன உறவு என்பது எவருக்கும் தெரியவில்லை” என்றார்.

குங்கன் நின்று ஆபரை நோக்கினான். தாடியை நீவியபடி விழிதாழ்த்தியபின் “ஆம்” என்றான். “கரவுக்காட்டில் அவர்களை கண்டிருக்கிறார்கள்” என்றார் ஆபர். குங்கன் ஒன்றும் சொல்லாமல் நடக்க உடன்நடந்தபடி “அறப்பிழை நிகழலாகாது. நீங்களே இருவரிடமும் பேசலாம்” என்றார். “இல்லை, நான் பேசவியலாது” என்ற குங்கன் “சைரந்திரி பேசட்டும்” என்றான். ஆபர் முகம் தெளிந்து “ஆம், அது நன்று” என்றார்.

ஆபர் தன் அமைச்சு அறையை அடைந்தபோது துணையமைச்சர்களும் படைத்லைவர்களும் காத்து நின்றிருந்தனர். அவர் உள்ளே நுழைந்ததும் அவர்கள் உடன்வந்தனர். “என்ன செய்தி?” என்றார் ஆபர். “மச்சர்படை மிக அணுகிவிட்டது. நினைத்ததைவிட விரைவு. எங்கும் ஓய்வில்லாமல் வருகிறார்கள். நாளையே நம்மை அவர்கள் அடைந்துவிடக்கூடும்.” ஆபர் “ஆம், விரைவார்கள்” என்றார். பின்னர் “அங்கர் எப்படி இருக்கிறார்? ஒற்றர்கள் சொல்வதென்ன?” என்றார்.

“அவர் படைசூழ்கையை அமைக்கவில்லை. சொல்லப்போனால் அவர் வெளியே வரவே இல்லை. படைசூழ்கையை அமைப்பவர் இளைய கௌரவரான துச்சாதனர்தான்.” ஆபர் “நோயுற்றிருக்கிறாரா?” என்றார். “இல்லை” என தயங்கிய அமைச்சர் “குடியில் மூழ்கியிருக்கிறார். வில்லெடுக்கவே கை நடுங்குகிறது என்கிறார்கள்” என்றார். “உளச்சான்றெனும் நோய்” என்றார் ஆபர். “பெண்பழி என்கிறார்கள். பாஞ்சாலியான திரௌபதி காட்டில் மானசாக்னி என்னும் சுனையில் இறங்கி உயிர் மாய்த்துக்கொள்வதற்கு முன் தீச்சொல்லிட்டதாகவும் அதன்பின் கர்ணனின் கைகள் முதுமைகொண்டு நடுங்கத் தொடங்கின என்றும் கதைகள் சொல்கின்றன.”

“நாம் நாளை காலை படைஎழுகிறோம்” என்றார் ஆபர். “நாளையா? நாளை…” என தயங்கிய படைத்தலைவன் “படைத்தலைமை எவர்?” என்றான். “உத்தரர்” என்றார் ஆபர். அனைவரும் அமைதியடைந்தனர். படைத்தலைவன் “நன்று… எவரானாலும் போர் நம் கடமை” என்றான். “அவருடைய தேரை பிருகந்நளை செலுத்தட்டும் என்கிறார் குங்கர்.” படைத்தலைவர்களின் முகங்கள் மலர்ந்தன. “அவர் வந்தால் வேறெவரும் வேண்டாம்” என்றான் முதன்மைப் படைத்தலைவன் சங்காரகன். “ஏன்?” என்றார். “அமைச்சரே, தேர்ந்த வில்லவனின் கைகள் வில்லென்றே ஆகிவிட்டவை” என்றான் சங்காரகன்.

முந்தைய கட்டுரைஹெச்.ஜி.ரசூல் இரங்கல்கூட்டம், தக்கலை
அடுத்த கட்டுரைநகலிசைக் கலைஞன்