‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 72

71. அறக்கூற்று

flowerதிரௌபதி சுதேஷ்ணையின் அரண்மனை முகப்புக்கு வந்தபோது அவளை அதுவரை அழைத்து வந்த உத்தரையின் சேடி சாந்தை அவள் கைகளை பற்றிக்கொண்டு “அஞ்சவேண்டாம். இவ்வரண்மனையில் இளவரசி மட்டும் வேறானவள். என்றோ ஒருநாள் பாரதவர்ஷத்தை தழுவியமையும் பேரரசொன்றுக்கு தலைவியாக மணிமுடி சூடி அவள் அமர்வாள் என்று நிமித்திகர்கள் சொன்னது வீணல்ல. அவள் அருள் உன்னுடன் உள்ளபோது இங்கு உனக்கு எதிரிகள் எவருமில்லை” என்றாள்.

திரௌபதி ஆம் என தலையசைத்தாள். “அவள் அரசாற்றல் அற்றவள் என்று நீ எண்ணலாம். ஆனால் தான் நம்பும் அறத்தின்பொருட்டு பிற அனைத்தையும் இழக்க சித்தமானவர்கள்தான் பேரரசர்களும் பேரரசிகளும் ஆகிறார்கள். இளவரசி உத்தரை அத்தகையவள். அதை இங்குள்ளோர் அனைவரும் அறிவர். ஆகவே அவள் சொல்லுக்கு அப்பால் இந்நகரத்தில் மறுசொல் ஏதுமில்லை. அதை இங்கு அரசுசூழ்வோர் உணர்ந்துள்ளனர். அதை மறைக்கவே அவளை எளிய விளையாட்டுப்பெண் என்று தங்களுக்கும் பிறருக்கும் காட்டிக்கொள்கிறார்கள்” என்றாள் சாந்தை.

“கீசகர் இன்று அரசர் முன்னிருந்து அடிபட்ட நாகம் என தலைகுனிந்து சென்றது ஏன் என்று எண்ணுகிறாய்? இளவரசியின் சொல் என்று அறிந்தபின் விராடநகரியின் எந்தக் குடிமகனும் எப்படைவீரனும் மாற்று ஒன்றை எண்ணமாட்டான்” என்றாள் சாந்தை. “உனக்கு இந்த நகரின் காவல் தெய்வமே அடைக்கலம் அளித்ததென்று எண்ணிக்கொள். அஞ்சாதே.”

திரௌபதி புன்னகையுடன் “ஆம், அரசரின் அவையில் கொற்றவை சிம்மம் மேல் எழுந்ததுபோல இளவரசி வந்து நின்றபோது அதை நான் நன்குணர்ந்தேன். அவர் அப்போது நடனம் கற்று மலர்க்காடுகளில் விளையாடித் திரியும் எளிய பெண்ணல்ல, ஒரு சொல்லால் பெரும்படைகளை கிளர்ந்தெழ வைக்கும் பேரரசி” என்றாள்.

சாந்தை முகம் மலர்ந்து “ஆம், அவள் அனல்பற்றி கொழுந்தாடி எழுவதை முன்னரும் நான் கண்டிருக்கிறேன். தேவி, இளம்மகளாக அவளை என் தோள் சுமந்து அலைந்திருக்கிறேன். என் நெஞ்சின்மேல் குப்புறப் படுக்கவைத்து முதுகில் மெல்ல தட்டி உறக்குவேன். மெல்லிய காதை மெல்ல பற்றி இழுத்துக்கொண்டிருந்தால் அப்போதே விழி சொக்கி துயிலத் தொடங்கிவிடுவாள். இப்பிறவியில் நான் அடைந்த பெரும் பேறென்பது அவளுக்கு செவிலித் தாயாக அமைந்தது” என்றாள்.

திரௌபதி அவள் கைகளைப்பற்றி “என்றும் அவர் நினைவில் நீங்கள் வாழ்வீர்கள், செவிலியே” என்றாள். “ஆம், அவ்வப்போது நான் அதை எண்ணிக்கொள்கிறேன். பேரரசியரின் பெயர்கள் காலத்தில் அழியாமல் வாழும். எங்களைப்போன்ற எளிய சேடியரும் செவிலியரும் மறக்கப்படுவார்கள். ஆனால் தெய்வங்கள் அறியுமல்லவா, எங்கள் கனவுகளும் குருதியும்தான் அவர்களை உருவாக்கியதென்று” அவள் குரல் இடறியது. என்ன சொல்வதென்று அறியாமல் கைகளைப்பற்றி திரௌபதி அழுத்தினாள்.

“இனிமேல்தான் நீ உறுதி கொள்ளவேண்டும்” என்றாள் சாந்தை. “இந்த விராடபுரியைப்பற்றி நீ இன்னமும் நன்கு அறிந்திருக்க மாட்டாய். மகாகீசகரின் காலத்தில் நிஷாதர்கள் குடிமன்று கூடி அரசனைத் தேர்ந்தெடுத்து இக்கொடிவழியை அமைத்தனர். இத்தனை தலைமுறைகள் ஆகியும் கூட இவர்களின் குருதி இன்னமும் எளிய நிஷாதர்களுக்குரியதே. நிஷதகுடியின் குலநெறிகள் எவற்றையும் இவர்கள் எந்நிலையிலும் மீறமாட்டார்கள்.”

“நாளை பின்னுச்சிப் பொழுதில் குடியவை கூடும்போது கீசகர் அவை முன் வந்து நின்றாகவேண்டும். அரசமன்றில் பெண்ணை சிறுமை செய்ததும் காலால் எட்டி உதைத்ததும் குழல் பற்றி இழுத்ததும் பெரும்பிழை. ஒருபோதும் குடிக்கோல் கொண்டு மன்று நின்றிருக்கும் குலமூத்தார் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை கீசகர் நன்கறிவார். ஆகவே உன்னை அச்சுறுத்துவார். பொன்னும் பொருளும் அரசநிலையும் அளிப்பேன் என்று ஆசை காட்டலாம். சூழ்ந்திருப்போரின் விழிநீரை கொண்டுவந்து காட்டி உளம் உருகச் செய்யலாம். நீ இரங்கலாகாது.”

“விழைவையும் அச்சத்தையும் எதிர்நிற்பது மிகக் கடினம் என்றறிவேன். அனலை காத்துக்கொள்வது மேலும் கடினம். பெண்டிர் உள்ளியல்பிலேயே அன்னையர். அக்கணத்தில் எழுந்த பெரும் சினத்தால் எதைச்சொல்லியிருந்தாலும் மிக விரைவிலேயே நாம் பொறுத்தருளத் தொடங்குவோம். நேரில் வந்து நின்று மைந்தனைப்போல் நடித்தால் அக்கணமே கனிந்து அவனுக்கு நற்சொல் உரைப்போம். எப்பிழையையும் பொறுத்துக்கொள்ளும் பெண்களின் கனிவின் மேல்தான் ஆண்களின் ஆணவமும் அடங்காமையும் அறப்பிழையும் நின்று கொண்டிருக்கின்றன.”

“அறிக தேவி, இன்று நீ உனக்காக நெறி கோரவில்லை. இவ்வரண்மனையில் வாழும் அத்தனை சேடியர் பொருட்டும் உன் சொல் அங்கு எழுந்திருக்கிறது. எங்கள் அத்தனை பேரின் கண்ணீரையும் சினத்தையும் படைக்கலமென கைக்கொண்டு நீ நாளை அவையில் எழுந்து நிற்கவேண்டும். எத்தனை பெண்கள் இவ்வரண்மனையின் இருண்ட அகத்தளங்களில் ஒடுங்கி கண்ணீர் உகுத்தார்கள்! எத்தனை பெண்கள் மண்ணுக்குள் மடியும் புழுக்களைப்போல இருந்ததே அறியாமல் அழிந்தார்கள்!”

“அவர்களும் குரலெழுப்பியிருப்பார்கள். இந்த இருண்ட அறைகளில் அவை காற்றலைகளாக எழுந்ததுமே மறைந்திருக்கும். அவையில் எழுந்து நெறி கோருவதற்கான சொல்லோ துணிவோ அவர்களுக்கு இருந்ததில்லை. தேவி, நாளை குல அவையில் பெண்ணை சிறுமை செய்ததன்பொருட்டு கீசகர் தண்டிக்கப்படுவார் என்றால் விராடபுரியில் அல்ல பாரதவர்ஷத்திலேயே பல்லாயிரம் சேடியர் உன்னை குலதெய்வமெனக் கருதுவார்கள். உனது தழல் தாழாதிருக்கட்டும். எங்களுக்காக.”

திரௌபதி மேலும் ஏதோ சொல்வதற்குள் அவள் கைகளை இறுகப்பற்றிய பின் சாந்தை சென்று மறைந்தாள். அவள் கண்ணீரை முகம்பொத்தி அழுத்தியபடி தோள்குறுக்கிக்கொண்டு சிற்றடி வைத்து ஓடுவதை திரௌபதி நோக்கி நின்றாள்.

flowerஅரண்மனைக்குள் திரௌபதி நுழைந்ததுமே சுதேஷ்ணையின் சேடி பூர்ணை அவளைத் தேடி வந்தாள். “அரசி உங்களை பார்க்க வேண்டுமென்றார். உடனே வரும்படி ஆணையிட்டார்” என்றாள். திரௌபதி “நான் சற்று ஓய்வெடுக்க விரும்புகிறேன். எனக்கு உடல் நலமில்லையென்று அவர்களிடம் சொல்” என்று உள்ளே சென்றாள். பூர்ணை திகைப்புடன் பின்னால் வந்து “ஆனால் அரசியின் ஆணை…” என தொடங்க “இப்போது வரவியலாதென்று சென்று சொல்” என்றாள் திரௌபதி.

அறை நோக்கி அவள் நடக்கையில் அவளுக்குப் பின்னால் ஓடிவந்த சுபாஷிணி “என்ன நிகழ்ந்தது, தேவி? இங்கே அகத்தளத்தில் ஆளுக்கொன்றாக பேசிக்கொள்கிறார்கள். உங்களை கீசகர் குழல் பற்றி தன் மஞ்சத்தறைக்கு கொண்டு சென்றார் என்றார்கள்” என்றாள். திரௌபதி “கொண்டு செல்லவில்லை” என்று சொன்னாள். சுபாஷிணி மூச்சிரைக்க முகம் சிறுக்க “உங்கள் கந்தர்வர்களை அழைக்கவேண்டியதுதானே? அவ்விழிமகனின் நெஞ்சைப் பிளந்து குருதி பருகி அவர்கள் கூத்தாட வேண்டாமா?” என்றாள்.

திரௌபதி புன்னகையுடன் “அதுவே நிகழவிருக்கிறது” என்றாள். சுபாஷிணி அவள் தோளைத் தொட்டு “மெய்யாகவா? மெய்யாகவா?” என்றாள். “எப்போது?” என்று குரல் தாழ கேட்டாள். “இன்றிரவு” என்றாள் திரௌபதி. “இன்றிரவா?” என்று அவள் மலைத்து நின்றுவிட்டாள். “ஆம், இன்றிரவு” என்று சொல்லி திரௌபதி தன் அறைக்குள் சென்றாள்.

சுபாஷிணி அவள் பின்னால் ஓடிவந்து “உங்கள் உடலில் காயங்கள் இருக்கின்றன, தேவி. மருத்துவச்சியை அழைத்து வரவா?” என்றாள். “ஆம், நான் நீராடி மாற்றுடை அணியவும் வேண்டும்” என்றாள் திரௌபதி. சுபாஷிணி “மெய்யாகவா சொன்னீர்கள், தேவி? இன்றிரவு அவன் கொல்லப்படுவானா?” என்றாள். அவள் விழிகளை நோக்கி “ஐயமே வேண்டியதில்லை, அவன் நெஞ்சு பிளக்கப்படும்” என்றாள் திரௌபதி.

மாற்றாடையை எடுத்துக்கொண்டு அவள் நீராட்டறைக்குச் சென்றபோது சுபாஷிணியும் பின்னால் ஓடிவந்தாள். “என்னால் நிற்க முடியவில்லை. கால்கள் பதறிக்கொண்டே இருக்கின்றன” என்றாள். திரௌபதி அவள் தோளை தட்டினாள். “இது நிகழ்ந்தாகவேண்டும், தேவி. நிகழவில்லையென்றால் என்னைப்போன்றவர்கள் உயிர் வாழவே வேண்டியதில்லை என்று தோன்றிவிடும். உங்களாலேயே வெல்லமுடியாத இக்களத்தில் வெறும் புழுக்கள்போல நெளிவதே எங்கள் ஊழ் என்று எண்ண ஆரம்பிப்போம்” என்றாள்.

அவள் கண்கள் நீர்கொள்ள முகம் சிவந்திருந்தது. “எங்களில் ஒருத்தியாக அங்கே அவையில் நீங்கள் நின்றிருந்தீர்கள். ஒருவேளை ஒரு களத்திலும் நாங்கள் எதிர்த்து நிற்கமுடியாமல் போகலாம். ஆனால் உங்களைப்போல மாறி எங்கள் கற்பனையில் ஒரு வாழ்க்கையை நடித்துக் கொண்டிருக்கிறோம். இங்கிருக்கும் இத்தனை இழிவுக்கும் சிறுமைக்கும் மாற்றென்று அது எங்களுக்குள் ஒளியுடனிருக்கிறது. நீங்கள் தோற்றால் அதையும் இழந்துவிட்டிருப்போம். பிறகு இப்புவியில் பற்றுக்கோடென்று எதுவுமில்லை. பெண்ணென்று உயிர் வாழ்வதற்கு பொருளேதுமில்லை. வெறும் விலங்கு வாழ்க்கை” என்றாள்.

திரௌபதி அவளை நோக்கி புன்னகைத்து “என்னில் ஒரு துளியை உனக்குத் தருகிறேன். போதுமா?” என்றாள். “போதும். அது விண்ணில் இருந்து ஆகாய கங்கை என் மேல் இறங்குவதுபோல. என்னை அது அடித்துக்கொண்டு சென்றுவிடலாம். என்னை நொறுக்கி வீசலாம். ஆனால் எனக்கு அது வேண்டும்” என்றாள் சுபாஷிணி. “இன்று அதை நூறுமுறை எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இங்கிருப்பவர்கள் எப்படிப்பட்ட புழுக்கள் என்று இன்று அறிந்தேன்.”

ஆடைகளைக் களைந்தபடி “என்ன?” என்றாள் திரௌபதி. “பாருங்கள் தேவி, அவ்விழிமகனின் மஞ்சத்திற்குச் சென்று உடல் சிதைந்து உளம் சிறுமைப்பட்டு வராத பெண்கள் இங்கு மிகக் குறைவு. அவனை அவை முன் இழுத்து நிறுத்திய உங்களை அவர்கள் கொண்டாடத்தானே வேண்டும்? ஆனால் நீங்கள் எதிர்த்து வென்று மீண்டதை எண்ணி இவர்கள் பொறாமை கொள்கிறார்கள். நீங்களும் அவனிடம் சென்று சிறுமைகொண்டு சிதைந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இன்று அவர்களின் பேச்சுக்களைக் கேட்டு குருதிக்கொந்தளிப்படைந்தேன். ஒருத்தியின் சங்கையாவது கடித்து குருதியுண்டு கூத்தாடவேண்டுமென்று எண்ணினேன்.”

“கொற்றவை ஆக விழைகிறாயா?” என்றாள் திரௌபதி. “ஆம், பெண்ணெனப் பிறந்தவள் ஒரு முறையாவது கொற்றவை என்றாக வேண்டும்… இல்லையேல் அவள் வெறும் உடலீனும் உடல்” என்றாள் சுபாஷிணி. “இந்தப் பெண்கள் ஒவ்வொருவரின் முகத்தையாக பார்க்கையில் ஒன்றை உணர்ந்தேன். சிறுமை நோக்கி செல்வது வரைதான் அது சிறுமையென்று நமக்கு தெரிந்திருக்கும். அதில் விழுந்து அதை உண்டு அதில் திளைக்கத் தொடங்கும்போது அது அமுதென்றாகிவிடுகிறது. அதுவன்றி பிறிதேதும் தெரியாமல் ஆகிவிடுகிறது. இங்கிருக்கும் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டவர்கள். அதனூடாக தாங்களும் இழிந்தவர்களாக ஆகிவிட்டவர்கள்.”

திரௌபதி நீராட்டறைத் தொட்டிகளில் நிறைந்த குளிர்ந்த நீரை அள்ளி தன் உடல்மேல் விட்டுக்கொண்டாள். சுபாஷிணி “நான் உங்களுக்கு நீராட்டி விடவா? என்றாள். “வேண்டியதில்லை. என்பொருட்டு நீ ஒரு தூது செல்ல வேண்டும்” என்றாள் திரௌபதி. அவள் “எவரிடம்?” என்றாள். “அடுமனைக்குச் செல்” என்றாள் திரௌபதி. அவள் பாய்ந்து திரௌபதியின் கைகளை பற்றிக்கொண்டு “வலவரிடம்தானே ?” என்றாள். “எப்படி தெரியும் உனக்கு?” என்றாள் திரௌபதி. “நான் உய்த்தறிந்துவிட்டிருந்தேன். அவரேதான். ஏனெனில் அவரால் மட்டும்தான் இயலும்.”

திரௌபதி “அவர்தான்” என்றாள். சுபாஷிணி புன்னகைத்து “அவர்தான் கந்தர்வர்களில் முதன்மையானவரா?” என்றாள். திரௌபதி சிரித்தாள். “இன்றிரவு பெரிய மலர்த்தோட்டத்தின் கொடிமண்டபத்தில் நான் கீசகனை சந்திக்கவிருக்கிறேன். அதை மட்டும் வலவரிடம் சொல்” என்றாள். சுபாஷிணி முகம் சிவந்து “ஆம்” என்றாள். அவள் கண்களை கூர்ந்து நோக்கி “அடுமனையில்தான் சம்பவனும் இருப்பார். அவர் வலவர் ததும்பிச் சொட்டிய ஒரு துளி” என்றாள்.

சுபாஷிணி முகம் சிவந்து உடல் குறுகி இரு கைகளைக் கூப்பி அதன்மேல் மூக்கை வைத்து குனிந்தபடி அசையாமல் நின்றாள். அவள் கழுத்தும் தோள்களும் மயிர்ப்பு கொண்டன. “செல்க!” என்றபடி திரௌபதி நீராடத் தொடங்கினாள்.

flowerதன் அறையில் சிறிய ஆடியை நோக்கி திரௌபதி அணிபுனைந்துகொண்டிருக்கையில் சுதேஷ்ணை வந்து அவள் அறை வாயிலில் நின்றாள். யாரோ சேடி என்று எண்ணி இயல்பாகத் திரும்பிய திரௌபதி அரசியைக் கண்டதும் எழுந்து நின்றாள். “நான் அங்கு வந்திருப்பேனே, அரசி?” என்றாள். “நீ வரமாட்டாய் என்று எனக்குத் தெரியும். உன்னிடம் நான் ஓரிரு சொற்கள் சொல்லவேண்டியிருக்கிறது. ஆகவேதான் வந்தேன்” என்றாள். “உள்ளே வாருங்கள்” என்று திரௌபதி அழைத்தாள். உள்ளே வந்து கதவை சாத்தியபின் சிறு பீடத்தில் சுதேஷ்ணை அமர்ந்துகொண்டாள்.

“உன்னை கீசகனிடம் அனுப்பியவள் நான் என்று இவ்வரண்மனைச் சேடியர் அனைவரும் அறிந்துவிட்டனர். என் அறையிலிருந்து இங்கு நடந்து வருவதற்குள்ளேயே இங்குள்ள அத்தனை கண்களிலும் வெறுப்பையும் ஏளனத்தையுமே கண்டேன். மூன்று முறை அரசரின் அணுக்கன் வந்து என்னை அவர் சந்திக்க விரும்புவதாக சொன்னான். சென்று பார்த்தால் என் முகத்தை நோக்கி அவர் என்ன கேட்கப்போகிறார் என்று நான் நன்கறிவேன். அச்சொற்களை அஞ்சித்தான் என் அறைக்குள் சுருண்டு கொண்டிருக்கிறேன்” என்றாள்.

கைகளைக் கட்டி சுவரில் சாய்ந்து நின்றபடி திரௌபதி அவள் பேச்சை கேட்டாள். “நான் பேச விழைவது உண்மையில் உன்னிடமல்ல, உத்தரையிடம். இனி இப்பிறவியில் அவள் முகம் நோக்கி என்னால் உரையாட முடியாதோ என்று ஐயுறுகிறேன். அது என் இறப்பு, மீளா நரகம். உன்னிடம் பேசிவிட முடிந்தால் ஒருவேளை அவளிடம் பேசும் துணிவு எனக்கு கிடைக்கலாம். நீயேகூட என்னைப் பற்றி ஓரிரு சொற்கள் சொல்லவும் கூடும். அதன்பொருட்டே உன்னை சந்திக்க வந்தேன்.”

திரௌபதி ஒன்றும் சொல்லாமல் சற்றே தலைசாய்ந்து கேட்டு நின்றாள். “ஆம், உன்னை நான் அங்கு அனுப்பினேன். ஆனால் அவனுடைய மஞ்சத்திற்கு அல்ல. அவன் காமத்திற்கு நீ ஆட்பட மாட்டாய் என்று நன்கறிந்திருந்தேன். அவனிடம் அவன் எல்லை என்னவென்று நீ சொல்வாய் என்றும் அவனை அடக்கி மீள்வாய் என்றும்தான் எண்ணினேன். நீயே அறிவாய், நீ செல்கையில் அதை சொல்லித்தான் உன்னை அனுப்பினேன்” என்றாள் அரசி. “எனக்கு வேறு வழி தெரியவில்லை. உத்தரையின்பொருட்டே நான் இதை செய்தேன். நீ அதை உத்தரையிடம் சொல்ல வேண்டும்.”

திரௌபதி “நீங்களே அவரிடம் சென்று உளமிச்சமில்லாமல் திறந்து நிற்பதொன்றே வழி. எண்ணிச் சூழ்ந்து சொல்லப்படும் எச்சொற்களும் அவர் உள்ளத்தை கரைக்காதென்று தோன்றுகிறது” என்றாள். “நான் எண்ணிச் சூழவில்லை. என் உளம் திறந்தே சொல்கிறேன். எந்த சூழ்ச்சியும் இன்றித்தான் நான் உன்னை அனுப்பினேன். மதுவருந்தி தளர்ந்திருக்கும் அவனுக்கு உன்னை வெல்ல முடியாதென்று அறிந்திருந்தேன்” என்றாள் சுதேஷ்ணை.

திரௌபதி அவள் விழிகளை நோக்கி “அல்ல” என்றாள். அவள் முகம் மாறி “என்ன சொல்கிறாய்? என்னை பொய்யள் என்கிறாயா?” என்றாள். “இப்போது நீங்கள் சொல்வது உண்மையென்றால் இந்த அகத்தளத்தின் அத்தனை சேடியரும் அவன் மஞ்சத்திற்குச் சென்று அவ்விழிமகனின் பெருங்கைகளுக்குச் சிக்கி உடல் சிதைந்து, ஆன்மாவில் சிறுமை நிறைத்து மீண்டு வருவதை அறிந்தும் அறியாதவர்போல் இருந்திருக்க மாட்டீர்கள்” என்றாள் திரௌபதி.

முகம் இழுபட்டு, வாய் திறந்து, பற்கள் தெரிய “நான் என்ன செய்ய முடியும்? இந்த அரண்மனையே அவன் ஆட்சியில் இருக்கிறது” என்றாள் சுதேஷ்ணை. “அப்படியென்றால் இன்று ஏன் கீசகன் அவையிலிருந்து விலகிச் சென்றான்?” என்றாள் திரௌபதி. சுதேஷ்ணை “ஏனெனில் அங்கு உத்தரை வந்தாள். அவளை நம் குலதெய்வத்தின் உருவென்று நிஷதகுடிகள் எண்ணுகின்றன. அவள் அங்கு குருதி சிந்தியிருந்தால் நம் குடியினர் ஒருபோதும் கீசகனை விட்டுவைக்க மாட்டார்கள்” என்றாள்.

“அரசி, நான் கேட்பது இதைத்தான். ஏன் உத்தரைபோல் நீங்கள் எழுந்து நின்றிருக்கக்கூடாது?” அந்த வினாவை அத்தனை அருகே எதிர்கொள்ள முடியாமல் சுதேஷ்ணையின் வாய் மெல்ல திறந்தது. இருமுறை சொல்லெடுக்க முயன்று உதடுகள் வெறுமனே அசைந்தன. “அறமிலாதது என்று தான் உணர்ந்ததன் முன் அக்கணமே உயிர்கொடுக்கத் துணிந்து அவர் நின்றார். அத்துணிவு உங்களுக்கு இருந்திருந்தால் இத்தனை ஆண்டுகள் இவ்விழிவில் நீந்தியிருக்கமாட்டீர்கள்” என்றாள் திரௌபதி.

சுதேஷ்ணை வலிகொண்டவள்போல் பல்லை கடித்தாள். “சற்று முன் ஒரு சேடிச்சிறுமி சொன்னாள். இழிவில் திளைப்பவர்கள் அதில் மகிழத் தொடங்கிவிடுகிறார்கள் என்று” என்றாள் திரௌபதி. “நீ என்னை வேண்டுமென்றே சிறுமை செய்கிறாய். என்னை பழி வாங்க நினைக்கிறாய்” என்று மூச்சொலியுடன் சுதேஷ்ணை சொன்னாள்.

“இல்லை, உங்கள் முன் ஒரு சிறு ஆடியை காட்டுகிறேன்” என்றாள் திரௌபதி. “உங்கள் காவலுக்கென்று என்னை ஏற்றுக்கொண்டீர்கள். உங்கள் உயிரை என்னிடம் ஒப்படைத்தீர்கள். ஆனால் மெல்ல மெல்ல என்னைக் கண்டு பொறாமை கொள்ளத் தொடங்கினீர்கள்.” சுதேஷ்ணை மிகையான இளக்காரத்துடன் நகைத்து “உன்னைக் கண்டா? உன்னைக் கண்டு நான் ஏன் பொறாமை கொள்ளவேண்டும்? நான் கேகயனின் மகள். இத்தேசத்தின் பேரரசி” என்றாள்.

“இதை இப்படி உங்களுக்கே நீங்களே பல நூறுமுறை சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால்தான் இயல்பாக இவ்வரியணையில் அமர உங்களால் இயலவில்லை” என்று திரௌபதி சொன்னாள். “உங்கள் விழிகள் மாறிவருவதை நான் பார்த்தேன். அது இவ்வரண்மனையில் ஒவ்வொருவரும் என்மேல் தொடுக்கும் விழிகள் மாறுவதை நீங்கள் பார்த்தமையால் என அறிந்தேன். நாம் இருவரும் நடந்து செல்கையில் எதிர்வருபவர்கள் தலைவணங்கினால் அவர்கள் எனக்காகத்தான் வணங்குகிறார்களா என்ற கணநேர எண்ணம் உங்கள் உள்ளத்தில் ஓடிச்சென்றது.”

“மூடு வாயை” என்றபடி அரசி எழுந்தாள். “உங்கள் கனவுகளில் என்ன நடந்தது என்று நான் சொல்லவா?” என்றாள் திரௌபதி. “உன்னுடன் நான் பேச விரும்பவில்லை. என்னை இழிவுபடுத்துவது எப்படி என்று நன்கறிந்திருக்கிறாய். இத்தனை நாள் என்னுடன் இருந்து என் உப்பைத் தின்று நீ கற்றது இதுதான் போலும்” என்றபடி சுதேஷ்ணை எழுந்து வாயிலை நோக்கி சென்றாள்.

“என்னை வெறும் சேடியென்றாக்குவதற்கு எளிய வழி கீசகனின் மஞ்சத்திற்கு அனுப்புவதுதான் என்று முடிவெடுத்தீர்கள், அரசி. அது நீங்கள் என்மீது கொள்ளும் முழுமையான வெற்றியாக அமையும் என்று எண்ணினீர்கள். நாகசூதப் பெண் தமயந்தி சேதிநாட்டு அரண்மனையில் சேடியாக வாழ்வதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தபோது நீங்கள் எண்ணியது என்னைப் பற்றித்தான். என்னை எளிய சேடியென்றாக்குவது எப்படி என்று மட்டும்தான்.”

“நீ யார்? பிறர் உள்ளம் அறிந்த மாயாவியா? நீ எண்ணுவதை எல்லாம் பிறர் மேல் சுமத்துகிறாய். அதனூடாக நீ தூயவள் என்றும் ஆற்றல் மிக்கவள் என்றும் ஆக முடியுமென்று எண்ணுகிறாய். இது வெறும் ஆணவம்” என்று சுதேஷ்ணை கூவினாள். “ஆம், உன்னை நான் வெறுத்தேன். உன்மேல் கசப்பு திரண்டது என்னுள். அது உன்மேல் நான் கொண்ட பொறாமையால் அல்ல. உன்னிடம் இருக்கும் இந்தக் கீழ்மை நிறைந்த ஆணவத்தால்தான்.”

“ஆணவம் அற்றோர் அறத்தில் நிற்பதில்லை. நான் அறத்தோள் என்று உணரும் ஆணவமே தெய்வங்களுக்கு உகந்த உணர்வு” என்றாள் திரௌபதி. “அரசி, தலை எழுந்து நிற்பதற்குத் தேவையானது முதுகெலும்பு. இந்த ஆணவத்தில் ஒரு துளியேனும் உங்களிடம் இருந்திருந்தால் இந்நகர்மேல் கீசகனின் நிழல் இப்படி கவிந்திருக்காது.”

கதவைப் பற்றியிருந்த சுதேஷ்ணையின் கைகள் நடுங்கின. அனலருகே நின்றவள் என அவள் முகம் சிவந்து வியர்த்திருக்க கண்களிலிருந்து நீர் வழிந்தது. “பேரரசி, ஒன்று அறிக! கீசகன் வேறு யாருமல்ல, உங்கள் மறுவடிவம்தான். அச்சத்தாலோ தன்னலத்தாலோ நீங்கள் அவனை இங்கு கொண்டு நிறுத்தவில்லை. அவன் வடிவாக இந்நகரை ஆளும்பொருட்டே அதை செய்தீர்கள்” என்றாள் திரௌபதி. “அவன் மீது நீங்கள் கொண்ட அச்சம் உங்கள்மேல் நீங்கள் கொண்ட அச்சமேதான்.”

சுதேஷ்ணை கதவைத் திறந்து வெளியேறிச்சென்று துரத்தப்பட்டவள்போல் இடைநாழியில் விரைந்தாள். திரௌபதி பின்னால் வந்து கதவைப் பற்றியபடி நின்று அவள் விரைந்து செல்வதை பார்த்தாள். அப்பால் நின்றிருந்த காவல் சேடி பேரரசியைத் தொடர்ந்து ஓடுவதா வேண்டாமா என்று திகைத்தாள். திரௌபதி அவளிடம் அருகே வரும்படி தலையசைத்தாள். அவள் அருகே வந்ததும் “பிரீதையை வரச்சொல்” என்றாள்.

முந்தைய கட்டுரைநீலகண்டப் பறவையைத் தேடியின் மறுபகுதிகள்…
அடுத்த கட்டுரைபத்து நாட்கள்