‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61

60. நிழலியல்கை

flower“சூதாடுவது வெறும் ஆடலல்ல, அது தெய்வங்களை அறைகூவுதல்” என்றார் ஆபர். “தற்செயல்களுடன் மானுடன் விளையாடலாகாது. தற்செயலென்னும் வடிவில் எழுந்தருள்வதே தெய்வம்.” குங்கன் தாடியைத் தடவியபடி பெருமூச்செறிந்தான். விராடர் “ஆனால் தொன்றுதொட்டே இது ஆடப்படுகிறது, ஷத்ரியர்களுக்குரிய கலைகளில் ஒன்றாகக் கற்பிக்கப்படுகிறது” என்றார்.

“ஆம், கையருகே பேருருவம் கொண்டு நின்றிருக்கும் ஒன்றைத் தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல” என்றார் ஆபர். “அத்துடன் ஊழ்வடிவமான தெய்வத்துடன் களமாடுவது ஷத்ரியனின் குலஅறமேயாகும். துணிவதும், துயர்களை எதிர்கொண்டு மீள்வதும் வேண்டியிருந்தால் தணியாமல் தன்னைக் கொடுப்பதும் அவன் கற்றுக்கொண்டாக வேண்டியவை. ஒவ்வொன்றும் ஒரு நூறாயிரத்துடன் பிணைந்துள்ளமையால் வைசியன் ஆடும் களமும் தெய்வங்களுக்குரியதே. ஆகவே ஷத்ரியனுக்கும் வைசியனுக்கும் மட்டும் சூது ஒப்பப்பட்டுள்ளது. அது மருந்து என, ஆசிரியர் அளித்த அளவுக்குள் மட்டும். துணிவைக் கற்றுக்கொள்ள துணியும் உளநிலையை நிலைநிறுத்த மட்டுமே சூது பயில்க என்கின்றன நூல்கள்.”

“தன்னைக் கடந்து சூதாடுபவனை நாற்களம் தன்னில் ஒரு காய் என அமர்த்திவிடுகிறது. அவன் ஆடுவதில்லை, ஆடப்படுகிறான் என அவன் அறிவதே இல்லை. புவியின் இருள்நிழல் ஊடாட்டங்களனைத்தையும் பரப்பிக் காட்டும் வல்லமை கொண்டிருப்பதனால் ஒருவன் வாழ்நாள் முழுமையையும் இக்களத்தை நோக்கிக் குனிந்தே கழித்துவிடமுடியும். அரசே, சூதில் மறந்து மீண்டெழுந்தவர் அரிதிலும் அரிது.”

“ஏனென்றால் சூது வெளியே நிகழ்வது மட்டும் அல்ல. விரிக்கப்பட்டிருக்கும் இக்களம் ஆடுபவனின் அகம். அகத்தை இப்படி ஏதேனும் புறப்பொருளில் ஏற்றிக்கொள்ளாமல் நம்மால் பார்க்க முடியாது. அந்தணரின் வேள்விச்சாலையும், நிமித்திகர்களின் பன்னிருகளமும் வணிகர்களின் துலாக்கோலும் உழவர்களின் வயலும் உள்ளமே என்றறிக! நாற்களமென இருண்டும் ஒளிர்ந்தும் முடிவிலியை மடித்துச் சுருட்டிவைத்து இதோ பரவியிருப்பது உங்கள் இருவரின் உள்ளம். இக்காய்களை நகர்த்தி நகர்த்தி நீங்கள் கண்டுபிடிப்பது உங்களையேதான்.”

“வாழ்க்கையின் நிகழ்வுகளை அறிய உள்ளத்தை நோக்குக! உள்ளே அறிந்ததைக்கொண்டு வெளியே வென்றடைக! உள்ளத்தை மட்டுமென உலகியலான் நோக்கலாகாது. அறியுந்தோறும் ஆழம் மிகும் அந்தக் கருஞ்சுனையில் இறங்க அறிதலையே வாழ்வெனக் கொண்டவர்களுக்கன்றி பிறருக்கு முன்னோர் ஒப்புதல் அளிக்கவில்லை” என்றார் ஆபர்.

“அக்களத்தின் முன் அமர்ந்த நளன் ஆடியது எதைக் கொண்டு? அரசே, ஒன்றறிக! சூதுக்களத்தில் எதுவும் திசைகளுக்கு அப்பாலிருந்து வருவதில்லை. கைவிரல்களென வந்தமைவது ஆடுபவனின் ஆழமே. அனைத்தும் அங்கிருந்தே எழுகின்றன. விழையப்படாத தோல்வியை எவரும் அடைவதில்லை” என்றார் ஆபர். “அவன் விழைந்தானா அரசை இழக்க? அரிய துணைவியுடன் இழிவுபட்டு கானேக?” என்றார் விராடர் சினத்துடன். “ஆம்” என்று ஆபர் சொன்னார். “ஏனென்று அறிய நளதமயந்தியின் கதையை மீண்டும் கேட்கவேண்டும்.”

விராடர் கொந்தளிப்புடன் “வீணுரை. நீங்கள் அந்தணர் என்பதனால் நான் இதை பணிந்து கேட்டாகவேண்டும். ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை” என்றார். இகழ்ச்சியுடன் “அந்தணருக்கு இருக்கும் உளச்சிக்கல் இது. அவர்கள் வாழ்வதில்லை. பெருக்கு நோக்கி கரையிலமர்ந்திருப்பவர்கள். நீந்துபவர்களின் கையசைவை கால்விசையைக் கண்டு கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்” என்று தொடர்ந்தார்.

ஆபர் புன்னகையுடன் “ஆம், அவர்களால்தான் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ள முடியும். ஏனென்றால் மூழ்கிச் சாவோம் என்னும் அச்சம் அவர்களுக்கில்லை. தன் நீச்சலை மட்டுமே கொண்டு அனைத்தையும் கணிக்கும் எல்லையும் கட்டுப்படுத்துவதில்லை” என்றார். விராடர் திரும்பி “குங்கரே, நீங்கள் சொல்லுங்கள். உங்கள் சொற்களை நான் நம்புகிறேன். சூதில் தான் தோற்கவேண்டுமென நளன் விரும்பினானா?” என்றார்.

குங்கன் தாடியைத் தடவியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “ஆம், அவரால் சொல்லமுடியும்” என்றார் ஆபர். குங்கன் நிமிர்ந்து ஆபரை நோக்கினான். இருவர் விழிகளும் சந்தித்தன. சில கணங்களுக்குப்பின் குங்கன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். “சொல்லுங்கள் குங்கரே, அவர் சொல்வது உண்மையா?” என்றார் விராடர். குங்கன் “ஆம்” என்றான்.

flowerஉச்சி உணவு உண்டு சுதேஷ்ணை துயில்கொண்டபின் திரௌபதி மெல்ல வெளியே வந்தாள். அரண்மனை அறைகளுக்குள் இருப்பது அவளுக்கு சலிப்பூட்டியது. வெளியே சென்றுவரவேண்டும் என்ற எண்ணம் எழுந்தபின்னர்தான் எப்போதும் அவள் அரசியல்ல, சேடி என்னும் தன்னுணர்வை அடைந்தாள். நீள்மூச்சுடன் இடைநாழியில் நடந்தாள். காவலர்கள் அவளைக் கண்டு நட்புடன் புன்னகைத்தனர். அரண்மனைத்தோட்டத்தில் நிழல் செறிந்து கிடந்தது. மரக்கூட்டங்களுக்குமேல் கதிர்வெளி பெருகியிருப்பதை கீழே நின்றிருக்கும் எவரும் உணரமுடியாது.

அவள் சோலைக்குள் சென்றாள். உதிர்ந்து கிடந்த மலர்களை மிதிக்காமல் நடப்பதற்காகப் போடப்பட்டிருந்த கற்களில் கால்வைத்து உள்ளே சென்றாள். மலர்கள் வெயிலில் வாடிய மணம் நிறைந்திருந்தது. காலையில் மலர்மணத்திலிருக்கும் புத்துணர்வுக்கு மாற்றாக இனிய சோர்வொன்றை அளித்தது அந்த மணம். பறவைகள் கிளைநிழல் செறிவுகளுக்குள் புகுந்து சிறகோய்ந்து அமர்ந்திருந்தன. அவற்றில் சில பறவைகள் எழுந்து அமர்ந்து கலைந்து ஓசையிட்டன. மிகத் தாழ்வாக வந்து வளைந்து மேலேறியது ஒரு சிறிய குருவி.

அவள் அங்கிருந்த ஒரு கற்பீடத்தில் அமர்ந்தாள். கைகளை மார்பில் கட்டியபடி மரக்கிளைகளை அண்ணாந்து நோக்கிக்கொண்டு வெறுமனே உள்ளத்தை ஓடவிட்டாள். தொலைவில் முதுவிறலியான சாலினி கூன்கொண்ட உடலுடன் முலைகள் தொங்க, இரு கைகளையும் நிலம் நோக்கி வீசி, நான்குகால் விலங்கென அங்கிருந்தே புன்னகைத்தபடி வருவது தெரிந்தது. அவள் தன்னை தேடித்தான் வருகிறாள் என்று தெரிந்ததும் அவள் சலிப்புடன் கால்களை நீட்டிக்கொண்டாள்.

சாலினி அருகே வந்து “நலமாக இருக்கிறீர்களா, தேவி?” என்றாள். திரௌபதி “ஆம், சேடியருக்குரிய நலம்” என்றாள். சாலினி அவளருகே நிலத்தில் அமர்ந்து அங்கிருந்த சிறிய பாறை ஒன்றில் சாய்ந்து முதுகை நிமிர்த்திக்கொண்டாள். “அன்னையே, தேவீ” என அலுப்பொலி எழுப்பியபின் “சேடியருக்கென்ன? மேலோர் அளி இருந்தால் அரண்மனை வானுலகு” என்றாள். அவள் ஏன் வந்திருக்கிறாள் என்று திரௌபதி புரிந்துகொண்டாள். சாலினி “நான் அகத்தளத்திற்குச் சென்றேன். அங்கே அந்தச் சிறுமிக்கு மீண்டும் ஒரு சிறு தேவாட்டு பூசை நிகழ்த்தினேன்” என்றாள்.

“எப்படி இருக்கிறாள்?” என்றாள் திரௌபதி. சாலினி “நான் அப்போதே சொன்னேன், ஒன்றுமில்லை என்று. கன்னியர் இவ்வாறு கந்தர்வர்களால் கொள்ளப்படுவது எப்போதும் நிகழ்வதுதான். நான் என் நீண்ட வாழ்நாளில் எவ்வளவோ பெண்களை பார்த்துவிட்டேன்” என்றாள். “அவள் உள்ளம் நிலையழிந்திருப்பதுபோலத் தோன்றியது” என்றாள் திரௌபதி. “நான் ஒருமுறை நோக்கும்போது அழுதுகொண்டிருந்தாள். ஒருமுறை இருளில் உடலை ஒடுக்கி சுருண்டுகிடந்தாள். ஒருநாள் மாலையில் அணியும் ஆடையும் புனைந்து விழிபொங்கி நகைகொண்டிருந்தாள். அவள் பேசுவன எதுவும் இங்குள்ள சூழலுடன் பொருந்தவில்லை. இங்கில்லாத எவரையோ நோக்குபவள்போல விழிகொண்டிருக்கிறாள்.”

சாலினி கிளுகிளுப்புடன் நகைத்து “அனைத்தும் கந்தர்வர்களால் கொள்ளப்படுவதன் இலக்கணங்கள்” என்றாள். “தேவி, கந்தர்வர்களைக் கண்டதும் கூடியதும் அல்ல பெண்களை நிலையழியச் செய்வது. கந்தர்வர்கள் அப்பெண்ணின் உள்ளே விதைவடிவில் உறையும் கந்தர்வக் கன்னியை வெளியே எடுத்து அதனுடன்தான் கூடிக்களிக்கிறார்கள். தன்னை தானல்லாத ஒன்றென காணும் அதிர்ச்சியே பெண்களை உளம்சிதறச் செய்துவிடுகிறது. பெரும்பிழை இழைத்துவிட்டதாகவும், உடலும் உள்ளமும் கறை கொண்டுவிட்டதாகவும் உணர்கிறார்கள். இழிவுணர்வும் குற்றவுணர்வும் கொண்டு துவள்கிறார்கள். பின்னர் அக்கேளியை நினைவுகூர்ந்து மலர்ந்தெழுகிறார்கள்.”

குறுஞ்சிரிப்புடன் சாலினி தொடர்ந்தாள் “மெல்ல அவர்கள் உணர்வார்கள் அது பிறிதொருத்தி என. அப்பிறிதை ஒடுக்கி உள்ளே ஒளிக்கக் கற்றுக்கொள்வார்கள். தேவி, முற்றிலும் சீரானவர்கள் பிழையின்றி இரண்டாகப் பிரிந்தவர்கள்.” திரௌபதி அவளை நோக்கியபின் “நான் சுபாஷிணியை நன்கறிந்திருப்பதாக எண்ணியிருந்தேன்” என்றாள். “என்ன அறிந்திருந்தீர்கள்?” என்றாள் சாலினி. “எளிய பெண். இனியவள். கனவுகள் கொண்ட அகவையள். இன்னும் குழந்தைமை மாறாதவள்” என்றாள்.

“ஆம், ஆனால் அவள் விழிகளை நோக்கியிருந்தீர்கள் என்றால் அவை எப்போதும் பிறிதொன்றையும் நோக்கிக்கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். நம்முடன் உரையாடுகையில் அவள் தன்னுடனும் உரையாடிக்கொண்டிருந்தாள், நம்மை நோக்குகையில் நம்மைக் கடந்தும் பார்வைகொண்டிருந்தாள். தேவி, அவள் ஏன் எளிதில் புண்படுபவளாக இருந்தாள்?” திரௌபதி சொல் என்பதுபோல நோக்கினாள்.

“அவள் மிகுந்த தன்முனைப்பு கொண்டிருந்தாள். இப்புவியையே தன்னை மையமாக்கி அறிந்தாள். அவளுக்குள் புவியாளும் சக்ரவர்த்தினிகளை விடவும் மேலான பீடத்தில் அவளே அமர்ந்திருந்தாள்.” சாலினி கண்களைச் சுருக்கி “அத்தகையோரே கந்தர்வர்களுக்கு விருப்பமானவர்கள். தேவி, குரங்குகள் தேடித்தேர்ந்த இளநீரை அவற்றை துரத்திவிட்டு பறித்துக்கொண்டுவருவார்கள். அவை சுவை மிக்கவையாக இருக்கும். கந்தர்வர்களால் சுவைக்கப்பட்ட பெண்ணே மானுடருக்கு மிகமிக இனியவள்” என்றாள்.

திரௌபதி புன்னகைத்தாள். “ஆம், தேவி. ஆணுக்கு ஒருபோதும் சலிக்காத பெண் எவள்? குன்றாத காமம் கொண்டவள். பெண்காமம் உடலில் மிக எளிதில் வற்றிக்கொண்டிருப்பது. குருதிவிலக்கின் சுழற்சிக்கு ஏற்ப. உடற்களைப்புக்கு ஏற்ப. சூழலின் உணர்வுநிலைகளுக்கு ஏற்ப. அத்துடன் அது தன்னைத்தானே பற்றவைத்துக்கொள்ள இயலாதது. கந்தர்வர்களுக்குரிய பெண்கள் தங்கள் குன்றாக் கற்பனையால் காமத்தை அணையாது காத்துக்கொள்பவர்கள். எரி என தான் தொட்ட ஆணை சூழ்ந்து அணைத்து உள்ளே அமைத்துக்கொள்ள அவர்களால் இயலும்.”

திரௌபதி “அத்தகைய பெண்களுக்கு ஏதேனும் உடற்கூறு சொல்லப்பட்டிருக்கிறதா உன் நூல்களில்?” என்றாள். “ஆம், அவர்களின் உதடுகள் எப்போதும் ஈரம் கொண்டிருக்கும். கண்களில் உலகை ஏளனம் செய்வதுபோன்ற நகைப்பிருக்கும்” என்றாள் சாலினி. “நகைக்கவும் நகையூட்டவும் தெரிந்தவர்கள் என்பதனால் தோழியர் சூழவே இருப்பார்கள். ஆனால் பிறர்குறித்த மன்றுபேசுதலில் ஆர்வம் கொள்ளமாட்டார்கள். காவியமும் இசையும் கற்றுத்தேரும் திறன்கொண்டிருப்பார்கள். ஆனால் மிக எளிதில் இவற்றிலிருந்து அகன்று வேறெங்கோ சென்று நின்றிருப்பதும் அவர்களின் இயல்பாக இருக்கும். சுவை நுண்மை கொண்டிருப்பர். அணிகொள்ள விழைவர். ஆனால் சுவையாலோ அணியாலோ ஆட்டுவிக்கப்படாதவர்களாக இருப்பர்.”

சாலினி தனக்கே என தலையசைத்து “சுருங்கச்சொல்லின் இங்குள்ள சிறந்ததை எய்த விழைவர். ஆனால் இங்குள்ள எதையும் இலக்கெனக் கொள்ளமாட்டார்கள்” என்றாள். திரௌபதி கைகளை மார்பில் கட்டியபடி விழிகள் தொலைவில் தெரிந்த கொடிமுல்லையில் நிலைக்க அசைவிலாது அமர்ந்திருந்தாள். “நான் சொல்வது அவளைப்பற்றி மட்டும் அல்ல என்று அறிந்திருப்பீர்கள், தேவி” என்றாள் சாலினி. திரௌபதி “ஆம்” என்றாள். “அவளை மூன்று கந்தர்வர்கள் ஆண்டனர். ஐந்து கந்தர்வர்களை ஆள்பவர் நீங்கள்” என்றாள் சாலினி. “உச்சிக்கிளையில் பழுத்த கனி, அது வீரர்களுக்கு மட்டுமே உரியது.”

திரௌபதி “நீ கருதி வந்ததைச் சொல்” என்றாள். “என்னை கீசகர் அழைத்தார். மலைபோல் மேனியுடன் நான் கண்டிருந்த மாவீரர். கண் களைத்து தோள் சடைத்து சோர்வுற்றிருந்தார். அவளிடம் சொல், நான் உருகி அழிந்துகொண்டிருக்கிறேன் என என்று என்னிடம் சொல்லும்போது குரல் உடைந்து அழுதார். என்னிடம் அவள் வேண்டுவதென்ன என்று கேள் என்றார்.”

“நான் வேண்டுவதொன்றும் இல்லை, நான் என் வாழ்க்கையை கந்தர்வர்களுக்கு அளித்துவிட்டவள்” என்றாள் திரௌபதி. “ஆம், அதை நான் அவரிடம் சொன்னேன். அது மறு உலகம். அங்கே அவர் வரமுடியாது. அவர் அவ்வாறு பிறிதொரு கந்தர்வக் கன்னியை கண்டிருக்கிறார். அந்த உலகம் வேறு என அவர் உணர்ந்துமிருக்கிறார்” என்றாள் சாலினி. ”தேவி, அவர் அங்கு கண்ட அக்கந்தர்வப் பெண்ணும் உங்களைப்போலவே பெருந்தோள் கொண்டவள்.”

“அவருக்கு என்ன வேண்டும்? மற்போருக்கான மறுதரப்பா?” என்று திரௌபதி எரிச்சலுடன் கேட்டாள். “தேவி, நேரடியாகச் சொல்வதில் எத்தயக்கமும் இல்லை. ஆணையும் பெண்ணையும் இணைப்பது முதன்மையாக உடலே. வேறெந்த இயல்புகளையும் உணர்வுகளையும்விட உடற்பொருத்தமே மெய்க்காதலை உருவாக்கி நிலைநிறுத்துகிறது. உங்களை தன் மறுபாதி என்று உணர்ந்து தவிப்பது கீசகர் அல்ல, அவரது உடல். உள்ளம் மொழிகொண்டது, கல்வியறிவது, நெறிகேட்பது. உடல் நாம் ஒருபோதும் அறியமுடியாத ஊர்தி. அது நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால்தான் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. நாம் அதை அறிவது அதை நாம் கட்டுப்படுத்த முயன்று தோற்கும்போது மட்டுமே.”

“நான் அவரை ஏற்கமுடியாது. எந்நிலையிலும்” என்றாள் திரௌபதி. “நீ பெண் என்பதனால் அது ஏன் என்று கேட்கமாட்டாய் என நினைக்கிறேன். ஆண் உடலைவிட நுண்மைகொண்டது பெண் உடல். ஒருவரைக் கண்டதுமே ஒவ்வாதென நம் உடல் சொல்லிவிடுகிறது. அதற்குமேல் அதனிடம் நாம் எதையும் உசாவ முடியாது.” சில கணங்கள் சாலினி அசைவிலாது அமர்ந்திருந்தாள். பின்னர் எழுந்துகொண்டு “ஆம், இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை” என்றாள். முதுகை நிமிர்த்தி “அன்னையே…” என முனகியபின் “ஆனால் தேவி, புறக்கணிக்கப்பட்ட காமமே புவியில் பெரும் நஞ்சு. எச்சரிக்கையுடன் இருங்கள்” என்றாள். திரௌபதி புன்னகைத்து “நான் கந்தர்வர்களால் காக்கப்படுகிறேன்” என்றாள்.

flowerஅடுமனைப் பணிகள் முடிந்து அனைத்தும் ஒழுங்கமைந்தபின் சம்பவன் ஈரக்கையுடன் சுற்றிலும் நோக்கினான். கலங்கள் அனைத்தும் ஈரம் வழிந்துலர சாய்ந்தும் சரிந்தும் வாய்திறந்து நின்றுகொண்டிருந்தன. அடுமனைத் தரையை நன்றாக கழுவித்துடைத்து பூச்சிகள் படியாமலிருக்க புல்தைலமிட்டிருந்தனர். அவன் புன்னகையுடன் நோக்கியபடி அடுமனையின் கூடத்தை சுற்றிவந்தான். அஸ்வகன் “நாம் படுத்துக்கொள்ளலாமா? இப்போதே பொழுது கடந்துவிட்டது. காலையில் எழுந்து தொடங்கிய பணி. தசைகள் உடைந்துவிடப்போகின்றவைபோல் வலிகொண்டிருக்கின்றன” என்றான்.

“அடுதொழிலுக்கு இணையான உவகை அளிப்பது கழுவி நாள் களைந்து நாளைக்கென ஒருங்கியிருக்கும் அடுமனை” என்றான் சம்பவன். “கலங்களும் இரவுறங்கவேண்டும் என்று சொல்கிறது நூல். ஆகவே அடுமனை மிச்சிலுடன் எந்தக் கலத்தையும் இரவில் விட்டுவைக்கலாகாது. நாளின் எச்சம் இருக்கையில் அவை விழித்திருக்கும். துயில் நிறைந்து மறுநாள் விழித்தெழும் கலம் புன்னகைக்கும். அதில் சமைக்கையில்தான் அது உளம் நிறைந்து அமுது விளைவிக்கும்.”

அஸ்வகன் “நிசி கடந்தபின் தத்துவம் பேசுவது நல்லதல்ல. பேய்கள் வந்து அவற்றை கேட்கத்தொடங்கினால் அவை தத்துவத்திற்குள் புகுந்துவிடும்” என்றபின் “ஏற்கெனவே வேண்டிய பேய்கள் அங்கே உள்ளன” என்றான். அவர்கள் அடுமனைக் கதவை இழுத்துப் பூட்டியபின் வெளியே சென்றனர். விண்மீன்கள் செறிந்த வானத்தின் கீழே காற்றில் சருகுகள் அசைந்துகொண்டிருந்தன. குளிர்பட்டு பிடரி சிலிர்த்தது. “நல்ல குளிர்” என்றான் அஸ்வகன். “நான் இங்கேயே படுத்துக்கொள்கிறேன். அடுமனை வெப்பத்தை இக்குளிர் நிகர்செய்யும்” என்றான்.

“அதோ” என்றான் அஸ்வகன். அப்பால் ஒரு ஈச்சம்பாயை எடுத்து திண்ணையில் விரித்து வலவன் துயின்றுகொண்டிருந்தான். “மூச்சொலி இல்லை என்பதனால் அவர் துயிலுமிடமே தெரிவதில்லை” என்றான் சம்பவன். “அருகிலேயே நானும் படுத்துக்கொள்கிறேன். அவர் அருகே படுப்பதைப்போல நான் மகிழ்வுகொள்ளும் தருணம் பிறிதில்லை.” அஸ்வகன் “தந்தையருகே படுக்க மைந்தர் விழைவதுண்டு” என்றான். “தந்தை நம்மை ஒரு பொழுதில் இறக்கி விட்டுவிடுகிறார். நாம் தந்தையிடமிருந்து அகன்றும் விடுகிறோம்” என்றான் சம்பவன்.

ஈச்சம்பாய் ஒன்றை விரித்து அவன் படுத்துக்கொண்டான். “நான் உள்ளே சென்று படுக்கிறேன்” என்று அஸ்வகன் சென்றான். திண்ணையில் மென்முருக்கு மரத்தாலான தலையணை இருந்தது. அதை எடுத்து வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்து நிலவை நோக்கியபடி மெல்ல விழிசொக்கினான். நிலவெழுந்த காடு திறந்துகொண்டது. மரங்களுக்குள் தேங்கிய நிலவொளி ஒரு பெண்ணென உருக்கொண்டு எழுந்து வந்தது. பாம்பென சீறிய மூச்சு. விழி மின்னொளி. அவன் அவளிடம் “எங்கு சென்றிருந்தாய்?” என்றான். அவள் “நான் வேறு என்கிறார்கள்” என்றாள். “யார்?” என்றான். “முதுமகள், என்னைப் பிளந்து இரண்டாக ஆகிவிடும்படி ஆணையிடுகிறாள்.”

மெல்லிய முழவோசை கேட்டு அவன் எழுந்தபோது முன்னரே வலவன் எழுந்து நின்றிருந்தான். இருளில் அடுமனை முற்றத்திற்கு அப்பால் நிழலுருவென சூதர் ஒருவர் நின்றிருந்தார். சடைத்தலையின் மயிர் மூன்றாம்பிறை ஒளியில் மெல்லப்பிசிறி பரவியிருந்தது. மரவுரி அணிந்த நீண்ட மேனி. தாடி நிழல் மார்பில் விழுந்திருந்தது. “நெடுந்தொலைவிலிருந்து வருகிறேன். இப்பின்னிரவில் இல்லங்களின் கதவைத் தட்டத் தோன்றவில்லை. அன்னசாலை என உசாவியபோது ஒருவன் இதை சுட்டிக்காட்டினான்.”

“வருக, உத்தமரே!” என்றான் வலவன். “உரிய இடத்திற்குத்தான் வந்துள்ளீர்.” “நான் மாகத சூதன், திரயம்பகன். பாடியலைபவன். நேற்று முன்னாள் உண்டேன். இந்நகரை தெற்கு மயானவாயில் வழியாக வந்தடைந்தேன்” என்றார். “எனக்கு உணவில் நெறியென ஏதுமில்லை. எவ்வுணவும் ஏற்பேன். கலத்தைச் சுரண்டிய வண்டலோ மிச்சிலோகூட உகந்ததே.” வலவன் “ஆனால் வந்து அமர்ந்தவருக்கு அளிக்கும் உணவு அமுதென்றிருக்கவேண்டும் என்பது எங்கள் கொள்கை” என்றான்.

சம்பவன் “நான் கலம்கழுவி வைத்துவிட்டேன், ஆசிரியரே” என்றான். “நன்று. இவருக்கு மிகச் சிறிதளவு உணவே போதும். நான் சமைக்கிறேன்” என்றான் வலவன். சம்பவன் “இல்லை, நீங்கள் அமருங்கள். நான் விரைவிலேயே சமைத்துவிடுவேன்” என்றான். வலவன் அவன் தோளை அழுத்தி புன்னகைத்தபின் உள்ளே சென்றான். “நான் கைகால்களை கழுவிக்கொள்கிறேன்” என்றார் திரயம்பகர்.

அவர் அமர்ந்துகொண்டு கண்களை மூடி சீராக மூச்செறிந்து துயில்பவர்போல அமைந்தார். தாலத்தில் மூன்றுவகையான உணவுடன் வலவன் வெளியே வந்தான். “உத்தமரே, அருந்துக!” என்றான். “நான் சுவையறிந்து உண்ணலாகாதென்ற நெறிகொண்டவன். இது எதற்கு?” என்றார் திரயம்பகர். “நான் சுவையை உருவாக்கியாகவேண்டும் என்னும் நெறிகொண்டவன்” என்றான். அவர் உணவை சீரான அசைவுகளுடன் உண்டார்.

கைகழுவி அவர் அமர்ந்ததும் வலவன் “துயில்கொள்க, உத்தமரே!” என்றான். அவர் “அடுமனையாளனின் அறம் உன்னில் வாழ்கிறது, பேருடலனே” என்றார். “உன் தோள்களைக் கண்டால் நீ அஸ்தினபுரியின் பீமனுக்கும் விராடபுரியின் கீசகனுக்கும் நிகரானவன் என்று தோன்றுகிறது.” வலவன் “நான் விரும்பி உண்பவன், உத்தமரே” என்றான். அவர் அவனை நோக்கிக்கொண்டிருந்தார். வலவன் அவருக்கும் பாய் ஒன்றை விரித்துவிட்டு தான் படுத்துக்கொண்டான்.

அவர் தன் கையிலிருந்த முழவை மீட்டிக்கொண்டு கீற்றுநிலவை நோக்கிக்கொண்டிருந்தார். “எதை எண்ணிக்கொண்டிருக்கிறீர், சூதரே?” என்றான் வலவன். “பகை தேடிவரும் தோள்கள்” என்றார் சூதர். “இம்முறை அருகிலுள்ளது பகை. பெரும்பகை, ஆனால் மிக எளியது.” வலவன் “கீசகரை சொல்கிறீர்களா?” என்றான். “ஆம்” என்றார் சூதர்.

முந்தைய கட்டுரைகோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்…
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் ஒரு கடிதம்