தாமஸ்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

கிறித்தவ மதமாற்ற இயந்திரம் இந்திய வரலாற்றில் நிகழ்த்தும் ஊடுருவலைப் பற்றிய உங்கள் கட்டுரை என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்கியது. ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் எண்பதுகோடி முழுமூடர்களின் நாடு என்று நம்மைப்பற்றி நமக்கே கற்பிக்கிறார்கள். யோசித்துப் பாருங்கள், இங்குள்ள சிந்தனைகள் எல்லாமே திராவிடர்களால் உருவாக்கப்பட்டது. அந்த திராவிடர்கள் ஆரியர்களான பிராமணர்களிடம் தங்கள் சிந்தனைகள் அனைத்தையுமே இழந்து பரிதாபமாக சீரழிந்து முட்டாள்களாக ஆயிரம் வருடங்களாக வாழ்கிறார்கள். தாமஸ் வந்து அவர்களுக்கு கொஞ்சம் ஞானத்தை அளிக்கிறார். அதைக்கூட இந்த மூடத்தமிழர்களால் பேணிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் மேலும் மேலும் சீரழிந்து அசட்டுக்கும்பலாகவே வாழ்கிறார்கள். ஆரியர்கள் அவர்களை அடிமைகளாக ஆக்கியதற்கு அடிபணிந்து அவர்கள் சொன்னதை எல்லாம் நம்பி அவர்கள் கற்பித்த வரலாற்றையே தங்கள் வரலாறாக ஏற்றுக் கொன்டு வாழ்கிறார்கள். அவர்களை மீட்க மிஷனரிகள் வந்தார்கள். எப்பேற்பட்ட கதை. இது ஆரியர்களை இழிவுபடுத்தவில்லை. உண்மையில் தமிழர்களைபுழுவிலும் கேவலமானவர்களாகக் காட்டுகிறது. சிந்தனைத்திறனும் போர்த்திறனும் இல்லாத அசடுகளாக, தாங்கள் கற்றவற்றைக்கூட பிறர் திரிக்க அனுமதிக்கும் அறிவிலிகளாக காட்டுகிறது. எத்தனை ஆணவமும் , தமிழ் மக்களைப்பற்றிய கேவலமான மதிப்பீடும் இருந்தால் இத்தனைய ஒரு கோட்பாட்டை சொல்லி தமிழ்நாட்டிலேயே மாநாடு கூட்டுவார்கள்! அந்த மாநாட்டுக்கு நம்முடைய தமிழ் அறிஞர்கள் எல்லாம் சென்று அமர்ந்து பேசுவார்கள். நினைக்கும்போது கண்ணீரே வருகிறது. நூற்றாண்டுகளாக நாம் உருவாக்கிய தத்துவம், ஆன்மீகம், கலைகள், இலக்கியங்கள் எல்லாமே பொய்யா? நமக்கு சுயசிந்தனையே இல்லையா? நாம் வெறும் அற்பப்பிறவிகள் தானா? இதைக்கேட்கவா திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் திருமுறைகளையும் உருவாக்கி நமக்களித்துச் சென்றார்கள் நம் மூதாதையர். நெஞ்சு கொதிக்கிறது. நன்றாக இருக்கட்டும். ஆதிக்க வெள்ளையர்கள் அளித்த சிறு தொகைகளை வாங்கி சொந்த மண்ணையும் மக்களையும் களங்கப்படுத்தும் அந்த மாமனிதர்கள் பிள்ளை குட்டிகளுடன் நீட்டுழி வாழட்டும்.

ஆடலரசு
சென்னை

***

ஜெயமோகன்,

“யூரோப்பியர்கள் முதலில் இங்கே வந்தபோது எங்களிடம் நிலமும், அவர்களிடம் பைபிளும் இருந்தது. கண்களை மூடி ஆண்டவனிடம் பிரார்த்திக்க எங்களுக்கு அவர்கள் கற்பித்தார்கள். நாங்கள் எங்கள் கண்களை திறந்தபோது எங்கள் நிலங்கள் அவர்களுடையதாக இருந்தன; எங்களிடம் எஞ்சியது பைபிள். – ஒரு ஆப்பிரிக்க பாதிரியார்”

பணம் என்பது தேவைகளை நிறைவேற்ற உருவாக்க பிறந்த ஒரு வஸ்து. தேவைகள் இல்லாவிட்டால் அந்த வஸ்துவின் தோற்றமும் பயன்பாடும் அர்த்தமற்றதாகிவிடும். பொருளாதாரத்தில் குறைந்த பரிச்சயம் உள்ளவர்களுக்குக்கூட தெரியும் உண்மை இது.

ஆனால், ட்ரில்லியன் டாலர்களில் மதம் பரப்புவதற்காக இந்த நாட்டில் பணம் கொட்டப்படுவது எந்த தேவைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு என்று கேள்வி எழுப்பப்படவேண்டும். எதற்காக இந்த முதலீடுகளும், மாநாடுகளும், படப்பிடிப்புகளும், பாடத்திட்டங்களும்? என்கிற கேள்விகளுக்கு உங்களது கட்டுரை பதிலளிக்கிறது.

ஆப்பிரிக்காபோல ஆசியாவையும் மாற்ற.

ஆப்பிரிக்காவை சுரண்டி வளர்ந்தவர்களாகவும், வளர்பவர்களாகவும் உள்ள செல்வ செழிப்பு நாடுகள் இந்தியாவின் வளங்களையும், இந்தியர்களான நம்மையும் சுரண்டவே இந்த முதலீடுகளும், மாநாடுகளும், படப்பிடிப்புகளும், பாடத்திட்டங்களும்.

ஆரியர் திராவிடர், கிருத்துவர்-பாகன்கள், இஸ்லாமியர் – காஃபிர்கள், ஹுடுக்கள் – டுட்ஸிக்கள், பார்ப்பனர் – சூத்திரர், உள்ளவர்-இல்லாதவர், தாழ்த்தப்பட்டவர் – உயர்த்தப்பட்டவர் என்று குழு குழுவாய் பிரிந்து அடித்துக்கொண்டு சாகும் மனிதர்கள் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களின் விளைவே.

உலகில் அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்த ஆப்பிரிக்கக் கண்டத்தில் குடிக்க நீர்கூட இல்லாமல் மூத்திரத்தையும், இலைதழைகளையும் உண்டு உயிர்வாழ்பவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள் (please check the attachment). அவர்களை ஆபிரகாமிய மதவாதங்கள், கற்பனையாக உருவாக்கப்பட்ட இனவாதத்தின் அடிப்படையில் ஒருவர்மேல் ஒருவர் வெறுப்புகொள்ள வைத்து சகிக்க முடியாத கொடூரங்களை நிறைவேற்றி வருகின்றன.

ஒவ்வொரு வளமான நாட்டிலும் கற்பனையான இனங்களை கண்டுபிடித்து, தங்களது கல்விதிட்டங்கள் மற்றும் கல்விநிலையங்கள் மூலமாக இனப் பிரிவினைவாதத்தைப் பரப்பி, வன்முறையை நிலைநிறுத்துபவதாக இருப்பது மதவாதம்.

இறைவனின் சாம்ராஜ்ஜியத்தையோ அல்லது உண்மையான ராமராஜ்ஜிய/கம்யூனிஸ/கேப்பிட்டலிஸ சுவனத்தையோ இந்த மண்ணில் கொண்டுவர உழைக்கும் இந்த மதவாதத்தின் நபிமார்கள். பூசாரிகள்.

அதனால் விளையும் மதவெறி. அதை கண்டுகொள்ளாமல் விடும் மனிதர்கள். பிணங்கள். அவலம்.

இதுகுறித்து எதுவும் அறிய, அறிவிக்க விரும்பாது தங்கள் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ளும் புத்திசாலிகள். இந்த அவலத்தை வெளியே சொல்லி ஏளனத்திற்கும், முத்திரை குத்துதலுக்கும் உள்ளாகும் முட்டாள்கள்.

பரவுவது ஆக்கிரமிப்பின் தாமஸும், அடங்கச் சொல்லும் தமஸும்.

உலகம் எப்போதும் இப்படித்தான் இருந்ததா? இப்படித்தான் இருக்குமா? இதில் நானும், என் மனைவியும், குழந்தைகளும், நண்பர்களும், அன்பர்களும் என்ன ஆவோம்?

மனித வெடிகுண்டுகளாகவோ, அல்லது அவர்களால் பலியிடப்படுபவர்களாகவோ ஆக்கப்பட்டு நடுத்தெருவில் உடல்சிதறி சாவதுதான் எங்கள் விதியா?

பள்ளி சென்றிருக்கும் என் குழந்தை நலமாய் வீடு வந்து சேருவாளா? இன்று பிழைத்தால் நாளை?

இந்துத்துவவாதமும், கிருத்துவ, இஸ்லாமிய பயங்கரவாதங்களும் மோதிக்கொள்ளும் இந்த சூழலில் இந்த கேள்விகள் எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களிடம் பயத்தை உண்டாக்குகின்றன. குஜராத், அமர்நாத் கலவரங்கள். கோயம்புத்தூர், பெங்களூர் குண்டு வெடிப்புகள். மதுரை தென்காசி கொலைகள். நீதியையும், சட்டத்தையும் மதிக்காத அரசியல்வாதிகள். விளைவு? இனப்படுகொலைகள்.

உலகில் மிகக்கொடூரமான இனப்படுகொலையாக வரலாற்றில் இடம்பெறுவது ஹுடு – டுட்ஸி இனக்கலவரம். இதே இனவாதம் இந்தியாவில் ஆரிய – திராவிட இனவாதமாகக் காட்டப்படுகிறது. வேறு பெயர்கள். அதே இனவெறி.

இந்தியாவிலும் சரி, ஆப்பிரிக்காவிலும் சரி – இல்லாத இன வெறுப்பை கண்டுபிடித்து, வன்முறையை வளர்த்து அதில் வளம் காண்பதாக கிருத்துவம் விளங்குகிறது. ஹுடு – டுட்ஸி இனக்கலவரம் இதையே மீண்டும் நிறுவுகிறது.

இருப்பினும் இந்தியர் ஆப்பிரிக்கர்களைப் போல தோல் போர்த்திய எலும்புகளாய் ஆகாமல் தப்பிப் பிழைத்திருப்பது எதனால்?

இந்திய ஞான மரபினால். இந்த ஞான மரபே சுதந்திர வேட்கையையும், தனிமனித விடுதலையையும், கலையுணர்வையும் தூண்டுகிறது. அதனால்தான் இதை அழிக்க மதவெறி முயலுகிறது. நேரடியாக அழிக்க முடியாதபோது மறைமுகமாக அரவணைத்து நெருக்கி அழிக்கப் பார்க்கிறது. உங்களிடம் இருக்கும் ஞான மரபு எங்களிடம் இருந்தே வந்தது என்று தங்களின் பெருமையையும், கேட்பவரிடம் கீழ்மையையும் ஏற்படுத்துகிறது.

இதையொத்த மதவாதமே சூடானில் இஸ்லாமியர்களால் வன்முறையை பரப்புகிறது. சூடான் நாடே, இரண்டு வேறு நிலப்பகுதிகளாக மதத்தின் அடிப்படையில் பிரிந்து அடித்துக்கொள்ளுகின்றது.

இந்த மதவெறியை அனுமதிப்பதால் அல்லது கண்டுகொள்ளாமல் போவதால் பஞ்சத்தாலும் வறுமையாலும் அழிந்துபோன மக்கள்கூட்டத்தைச் சேர்ந்தவனாக மாறுவதுதான் என் குடும்பத்திற்கு எஞ்சும். ஆப்பிரிக்க மக்களுக்கு நடப்பதுபோல.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும், நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் லட்சக்கணக்கான மனிதர்கள் மலத்திலும் கேவலமான உயிர்தரித்தலில் இருந்து தப்பிக்க மரணத்தை வரவேற்று காத்திருக்கிறார்கள். மரணத்தை அடுத்த வினாடி தழுவ இருக்கும் குழந்தையின் உடலை ருசித்துத் தின்ன கழுகுகள் காத்திருக்கின்றன.

இத்தகைய காட்சி ஒன்றை படம் பிடித்து அதற்காக புலிட்ஸர் ப்ரைஸும் பெற்ற கெவின் கார்ட்டர் இந்த வறுமையின் கொடூரத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார் (http://en.wikipedia.org/wiki/Kevin_Carter).

கலைஞர்களால் வன்முறையை தாங்கிக்கொள்ள முடியாது. அவர்கள் இயற்கையின் மென்மையில் தங்களை இழந்தவர்கள். கலைஞர்கள் மௌனமான புரட்சியாளர்களாக மாறுவது வன்முறையை உலகிற்கு அறிவிக்கும் இந்த தருணத்தில்தான்.

அவர்களாலேயே மனிதம் பிழைக்கிறது. அதனால்தான் கலைஞர்களை மனிதம் மதிக்கிறது.  அவர்களே வன்முறையின் கொடூரத்தை குறித்து உலகிற்கு முதலில் அறிவிக்கிறார்கள். எச்சரிக்கிறார்கள். இந்த கட்டுரையின் மூலம் நீங்களும் அதையே செய்துள்ளீர்கள்.

உங்களது இந்த கட்டுரை என் மகள் பள்ளியிலிருந்து பத்திரமாய் திரும்ப ஒரு வாய்ப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கையை எனக்கு தருகிறது.

நம்பிக்கையுடன்,

ஆனந்த கணேஷ், வை.

***

 அன்புள்ள ஜெயமோகன்

சற்று
 வேலை பளுஅதிகம் எழுதவில்லைதங்கள் எழுத்துக்களை  இணையத்தில் தொடர்ந்து வாசித்து வருகிறேன்

மேலை
 நாட்டு மற்றும் கீழை நாட்டு சிந்தனைகளின் அடிப்படை கூறுகளின் மாறுபாட்டை (அன்றாட வாழ்வில்தனது ஆராய்ச்சியின் வெளிப்பாடாக மூன்று கட்டுரைகளில் ஆசிரியர் லியூ – யங் எழுதி ள்ளார்.

எளிமையுடனும்
 நகைச்சுவையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளது

நீங்களும்
 உங்கள் வாச்கர்களும் ரசிக்க

அன்புடன்
 
முரளி
.

http://www.myseveralworlds.com/2007/10/24/icons-for-understanding-eastern-and-western-cultures-part-one/

*********

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களுடைய  தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ கட்டுரையை படித்தேன்.

கருத்து சுதந்திரம் எவ்வளவு ஆபத்தானது என்பது இப்போது விளங்குகிறது

நன்றி உங்களின் பதிவுகளுக்கு

அன்புள்ள
சக்திவேல்
கனடா

8888888888888


 

Anand Sigamany 
to me

show details

 2:50 pm (4 hours ago) 

அன்புள்ள ஜெயமோகன்,

இன்று குமரிக்கண்ட ஆராய்ச்சிகள் மொழி மற்றும் மத தீவிர  அமைப்புகள் மூலம் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. நீரடி , கடலடி நிஜ ஆராய்சிகளைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. அவை திரித்து கூறப்படுகின்றன.

மத சக்திகள் , குறிப்பாக இந்துத்துவ, இஸ்லாமிய , கிறுத்துவ சக்க்திகளின் பண வீச்சு அளவிட முடியாத்தது.

 வறுமையால் வாடும் ஒரு மனித உயிரை விட தங்கள் கடவுளின் சேவை என இவர்கள் கருதும் மகா மூட காரியங்களுக்கு தொகையளிப்பதற்கு மனிதகுலமனைத்துமே தயாராக உள்ளது . ஓருமணிக்கூர் தொலைக்காட்சி சாட்டிலைட் ஒளிபரப்பிற்கு 70000 ஆகும் (சரியான தகவல் தெரிந்தால் தேவலாம்) என அறியும் போது இவர்கள் எப்படி இத்தனை கிறுத்துவ சேனல்களை  மிக சாதாரணமாக ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். எந்த மத குழுவும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. இந்து மதமும் இந்த போட்டியில் தன் அசுர பலத்தை காண்பித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இதில் மர்க்ஸ் வந்தால் என்ன, குமரி மைந்தன் வந்தால் என்ன. எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

அன்புடன்
ஆனந்த்.

.******

ஜெயமோகன் அவர்களே,

தமிழர்களுக்கு சிந்திக்கக் கற்று கொடுத்த புனித தாமஸ் பற்றி நீங்கள் போட்ட இடுகை மிகவும் கவலையளிக்கிறது. இம்மாதிரி புளுகு பிரசாரங்களை நாம் அனுமதிக்கலாகாது. என்னால் இயன்றவரை ஒரு இடுகை உங்கள் பதிவை அடிப்படையாக வைத்து போட்டுள்ளேன். பார்க்க:

http://dondu.blogspot.com/2008/08/blog-post_12.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

****

எழுத்தாளருக்கு –

புனித தாமஸ் அப்போஸ்தலரின் தூய வரலாற்றை புளுகு என்று நீங்கல் எழுதியிருப்பதைப் படித்தேன். பார்ப்பனியப்பிதற்றல்களை உண்மை என்று நினைக்கும் உங்களுக்கு உண்மையான தேவனின் செய்தியும் அதன் மெய்யான அப்போஸ்தலரின் வருகையும் பொய்யாகத்தான் தோன்றும். உங்களுடைய மனதில் பார்ப்பனிய நஞ்சும் பார்ப்பனிய மலமும் இறுகி கெட்டியாகி இருக்கிறது. நீங்கள் மனம்திரும்பி ஏசுவை பிரார்த்தனைசெய்தாலன்றி உங்களைப்போன்றவர்களுக்கு நித்யமான நரகமே காத்திருக்கிறது. சிலுவையின் முன் மண்டியிட்டு உங்கள் பாவங்களைச் சொல்லி அழுவதே உங்களுக்கு வழியாகும். மெய்யான தேவனின் நற்செய்தியால் உருவானது தமிழ் திராவிடச் சிந்தனைகள் என்பதை இனிமேல் உலகமே உணரத்தான் போகிறது. நீங்களும் உணரத்தான் போகிறீர்கள். அப்போது நீங்களும் உங்கள் சந்ததிகளும் துக்கப்படுவீர்கள்.  கிறிஸ்துவின் மெய்யான ஞானத்தை பழித்தவர்களுக்கு மரணமும் ரோகமும் சகல தீங்குகலும் வரும் என்பது கண்கூடு. அதை ஆறுமாசத்துக்குள் நீங்கள் உணர்வீர்கள். உலகமும் அறியப்போகிறது. எச்ச்சரிக்கை. தோமாகிறித்துவ மறைஞானத்தை அழித்து பார்ப்பன பிணந்தின்னிக் கும்பல் சவைத்துப் போட்ட எச்சிலைத்தான் நீங்கள் திருப்பி எடுத்து தின்றுகொண்டிருக்கிறீர்கல். இந்து மதம் என்பது தோமாகிறித்தவ மதத்தின் பிணம்தான். இதை நீங்கள் உணரவேண்டும். உங்கள் மனதில் உள்ள பார்ப்பனிய மலமும் பாவத்தின் நாற்றமும் அழிந்து உங்கள் மனதில் கிறிஸ்துவின் ஒளி பிறக்க வேண்டும் என்று ஏசப்பாவை பிரார்த்தனை செய்கிறேன்

[இதைப்போல 32 மின்னஞ்சல்கள் வந்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்துமே எனக்கு நோய், மரணம், குடும்பத்தினருக்கு கெடுதல்கள் ஆகியவை நிகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறன [ஜெ] ]

 

**

இப்போதுதான் தாமஸ் பற்றிய உங்கள் கட்டுரையை படித்து முடித்தேன். நீங்கள் போப்பாண்டவரே தாமஸ் தென் இந்தியாவுக்கு வந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற தகவலை குறிப்பிட மறந்துவிட்டீர்கள். 

http://www.rediff.com/news/2006/nov/22pope.htm 
//தியாகத்தின் சிலுவையுடன் கிறிஸ்து வரட்டும், கள்ளநோட்டு எந்திரத்துடன் வரவேண்டாம்.//
 
உண்மைதான். நான் கிறிச்துவை ‘ஊளியர்களை’ விட நன்றாக புரிந்துகொண்ட பல கிறித்தவர்கள் அல்லாதவர்களை கண்டிருக்கிறேன். மனித வரலாற்றிலேயே மிக அதிகமாக தெரியவந்த, அதேசமயம் மிக அதிகமாக தவறாகப்புரிந்துகொள்ளப்பட்ட மனிதர் கிறிஸ்துவாகத்தான் இருக்க வேண்டும். கீதையைப்போலவே பைபிளும் அதிகமான பலதரபப்ட்ட அர்த்தங்களை உருவாக்கக் கூடியது. மானுட இனத்தின் பிற மாபெரும் நூல்களைப்போலவே மதத்தை தாண்டி வாசிக்கமுடியுமென்றால் மேலும் உள்ளொளியை அளிக்கக்கூடியது. 

சிறில் அலெக்ஸ்
 http://www.cyrilalex.com

>>>>

வாசகர்களுக்கு

எனக்குவந்த பலவகையான கடிதங்களுக்கு நான் எழுதிய பதிலில் உள்ள சாரத்தை மீண்டும் தொகுத்து எழுதி கீழே கொடுத்திருக்கிறேன் [ஜெ]

 இக்கடிதங்களில் உள்ள ஆதங்கம் கோபம் வருத்தம் ஆகியவற்றை கவனத்தில் கொள்கிறேன்.

நான் இந்திய கிறித்தவ மதப்பரப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை கவனத்துக்குக் கொண்டுவர எண்ணினேன். அதனால்தான் அக்கட்டுரை. வரலாற்றை திரிப்பதும் மோசடிசெய்வதுமல்ல ஆன்மீகச் செயல்பாடு. அது கிறிஸ்துவின் உண்மையான செய்தியை மக்களிடம் கொண்டுசெல்வதே. எத்தனை முறை திரித்தாலும் அழியாத ஒரு அக்கினி  கிறிஸ்துவின் சொற்களில் உள்ளது என்றே நான் எண்ணுகிறேன். அது எளிமையே மகத்தானது என்றும், மனிதன் சகிப்பதன்மூலம் தன்னை மேலெடுத்துக்கொள்ளலாம் என்றும் நம்மிடம் சொல்கிறது. தன் நெஞ்சோடு கைசேர்த்து கிறிஸ்துவை அறியும் ஒரு எளிய கிறிஸ்தவனை நேசிக்கவும் ,அவனுடன் சேர்ந்து கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்யவும் என்னாலும் முடியும் என்றே எண்ணுகிறேன்.

நான் வணங்கும் அந்த கிறிஸ்து தல்ஸ்தோயின், தஸ்தயேவ்ஸ்கியின் கிறிஸ்து. என் இணையதளத்தில் அந்த கிறிஸ்துவை நோக்கிச்செல்லும் ஆயிரம் வழிகளை ஒரு வாசகன் காணலாம். என் ஆசிரியர் நித்ய ¨சைதன்ய யதி எனக்கு அளித்த கிறிஸ்து.  அந்த கிறிஸ்து ஒரு மாபெரும் ஆன்ம ஞானி. எல்லா ஆன்ம ஞானிகளையும்போலவே தன்னை பலியாக்கி ஞானத்தை முன்வைத்தவர்.

அந்த கிறிஸ்து இந்தியாவுக்கு தேவை என்றே எண்ணுகிறேன். அந்த கிறிஸ்துவால் தொட்டெழுப்பப்பட்ட பற்பல மகத்தான ஆத்மாகளை நான் அறிவேன். அவர்களின் மாபெரும் தியாகங்களையும் அறிவேன். அவர்களுக்கு இந்த நாடு நன்றிக்கடன்பட்டிருக்கிறது.

இந்த ஆதிக்கவாதிகளின் அரைகுறை முயற்சிகளை வைத்து கிறிஸ்துவை மதிப்பிட்டு விடகூடாது என்று மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அப்படிச்செய்ய முயலும் மதவாத நோக்குகளை முழுமையாகவே இக்கணம் நிராகரிக்கிறேன். இந்த அமைப்புமனிதர்களுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையே உள்ள தூரம் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. மிக எளிமையான ஆதிக்க அரசியல் மட்டும்தான் இது. ஒவ்வொரு நாளும் மண்டியிட்டு கண்மூடி இவர்கள் பிரார்த்தனைசெய்வது கிறிச்துவிடமல்ல, கையில் சாட்டை ஏந்திய ஏகாதிபத்தியத்திடம்தான்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணன் கடிதம்
அடுத்த கட்டுரைதாமஸ்:மேலும் கடிதங்கள்