காந்தி மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

நலம்தானே.நீங்கள் சொல்வது உண்மை.பெரியாரை ஒரு மத தலைவரை போல நம்பும் எங்களுக்கு வெங்கடேஷ் சொல்வது போல் காந்தி மீது “விபரம்” தெரிந்த நாள் முதலாய் காரணமற்ற ஒரு வெறுப்பு இருந்து வந்திருக்கிறது.மாற்று தரப்பு என்பது இல்லாமல் திராவிட இயக்கம் எங்கள் மீது செலுத்திய ஆளுமை காரணமாக இருக்கலாம்.ஆயினும் பிடிவாதங்களுக்கு எதிரான உங்கள் வாதங்களால் என் போன்றோருக்கு பயன் இருக்கிறது-முழுக்க ஒப்புக்கொள்ள முடியாமல் போயினும்.
அன்புடன்,
குமார்.

 

அன்புள்ள குமார்

ஒப்புக் கொள்வதல்ல இங்கே சிக்கல். முன் முடிவுகளைத் தாண்டி தர்க்கப் பூர்வமாக சிந்திக்க முடியுமா மாற்றுத் தரப்புடன் செய்யும் விவாதம் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியுமா என்பதே.

நான் முன்வைப்பது ஒரு விரிவான வரலாற்று அணுகு முறையை. அது என்னுடையதல்ல. இன்று முக்கியமான சிந்தனையாளர்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்
முன் வைப்பதைத்தான். அந்தக் கோணம் சார்ந்து சிந்திப்பதே கூட ஒரு முன்னகர்வே

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
காந்திஜியைப் பற்றி மீண்டும் ஒரு அற்புதமான கட்டுரை. வெற்று வேட்டுக் கடிதங்களின் மட்டையடிகளுக்குக் கூட விவரமான, தர்க்கரீதியான பதில்களைத் தரும் உங்கள் பொறுமையும், தரிசனங்கள் மீது இருக்கும் நம்பிக்கையும், எல்லாவற்றையும் விட stamina வும் வியக்க வைக்கின்றன.
அன்புடன்
வ.ஸ்ரீ.
அன்புள்ள வ.ஸ்ரீனிவாசன்

காந்தியைப்பற்றி பேச நம் மொழியில் ஆளில்லை. ஏன் என்றால் இன்னும் அது இங்கே மோஸ்தர் ஆக வில்லை. ஆனால் மேலைநாடுகளில் சமீபகாலமாக பின் நவீனத்துவ நோக்கில் காந்தியைப்பற்றிய மிக விரிவான் ஆய்வுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

இங்கேயும் சிலவற்றை பேசி வைப்போம். காழ்ப்பே சிந்தனையாக கூச்சலிடும் சூழலில்கூட காந்திக்கு ஒரு மதிப்பு இருக்கத்தானே செய்யும். அவர் மனசாட்சியின் முகம் அல்லவா?
ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
நிச்சயம். பிடிவாதமான ஒழுக்க திட்டங்களும், சுதந்திரமான ஞானவாழ்வும் ஒரு சேரச் செல்ல முடியும் என்று காட்டியவர் காந்தி. இலட்சக் கணக்கான கண்களின் கூரிய பார்வையில் இருந்துகொண்டே வாழ்ந்த ஒருவர் அதன் தாக்கம் சிறிதும் இராமல் தன் ஆன்ம சுத்தியை தொடர்ந்து செய்து வந்த அதிசயம் அவர். தமிழ்ச் சிந்தனையின் ஆரோக்கியமான போக்கிற்கு தங்கள் எழுத்துகள் எவ்வளவோ செய்துள்ளன. காந்திஜி பற்றி நீங்கள் எழுதுபவையும் அத்தொண்டையே  செய்கின்றன.
வ.ஸ்ரீ.
ஜெயமோகன்,
நீங்கள் எழுதியுள்ளீர்
ஆகவே சாதி வெள்ளையர் சொன்னதுபோல இந்திய சமூகத்தில் ஒரு முற்றிலும் எதிர்மறையான ஒரு கூறு அல்ல.
மிக ஆக்கபூர்வமான பங்களிப்பை ஆற்றிய, ஆற்றி வருகிற ஓர் அமைப்பு. ஆகவேதான் சாமானிய இந்தியன் சாதியைக் கைவிடத் தயாராக இல்லை. இதுவே இன்றும் இந்தியாவின் யதார்த்தம் என்பதை வழக்கமான கோஷங்களை கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு  கொஞ்சம் திறந்தமனத்துடன் நோக்கினால் புரிந்துகொள்ள முடியும்.
சமீபத்தில் ஹிந்துவில் திரு. குருமுர்த்தி இதேபோல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். சில வருடங்களுக்கு முன், சென்னை USIS நூலகத்தில் Tribes என்ற நூலை வாசித்தேன்.  அதிலும் சற்று ஏறக்குறைய சாதி எல்லா மரபு வழி வந்த மக்களுக்கும் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளது. அதில் குறிப்பாக, யூதர், சீனர், ஜப்பானியர், இந்தியர் ( மார்வாரிகள், செட்டியார்கள்) எப்படி புலம்பெயர்ந்து, ஒரு நம்பிக்கை மற்றும் கூட்டு உழைப்பால் பெரும் செல்வம் ஈடடினர் என்று விவரமாக எழுதுயிருந்தார். தங்கள் தமிழகத்தில் உள்ள சில சாதியினர் எப்படி வணிகத்தில் சாதி தழுவிய கூட்டு முயற்சியால் வென்றார்கள் என உதாரணம் காட்டியுள்ளீர். இன்றைய நிர்வாகவியல் “டிரஸ்ட்” ( நம்பிக்கை) எப்படி ஒரு நிர்வாகத்தை வெற்றிபெற செய்யும் என்றும்,  ஒரு தலைவனின் தலையாய கடமைகளில் நம்பிக்கை வளர்ப்பதுதான் என்று கூறுகின்றன. நடைமுறையிலும் ஒரு கம்பெனியில் மேலாளராக பணியில் இதை கண்டு உணர்ந்திருகிறேன்.
ஆயினும், சாதி கொண்டு நாம் ஒரு மனிதரை பார்த்து பழுகுவதும், அதனால் திறமைக்கு சரியான வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதும் நெடுங்காலமாக இருக்கும் இந்த சமுதாய பிளவுகளை பெரிதாக்க மட்டுமே உதவுகிறது. நன்கு கவனித்தால் , சாதிய உணர்வு பெரும்பாலும் இளைஞர்களுக்கு இரு அடிப்படையில் வருகின்றது. ஒன்று, தன் சாதி கூட்டம் தனக்கு முன்னேற உதவும் என்றபோதும், இன்னொன்று தன் சாதி மற்ற சாதியினரின் கூட்டு முயற்சியால் முன்னேற முடியவில்லை என்று உணரும் போதும். நம் நாட்டில் பல் வேறு இனங்கள் ஒற்றுமையாய் வாழ ஒருபோதும் இந்த உணர்வு வழிகோளாது.    மற்ற நாட்டினர் Tribes – ல் உள்ளபடி இணைத்து செயல்பட்டாலும், அது சாதி போன்ற ஒரு குறுகிய வளையத்தில்  இல்லை. அது ஒரு சீனர் அல்லது ஓர் யூதர் என்ற எத்னிக் (ethnic) பிரிவின் கீழ்தான். இதையும் இன்று உலகம் சரி இல்லை கூறுகிறது. இப்படி இருந்தால் எப்படி ஒரு ஒபாமா தோன்ற முடியும். இந்த மாற்றங்கள் தேவையில்லை என்று நினைத்தால் – தங்கள் மற்றும் சாதி நல்ல பலன்களை தான் கொடுக்கின்றன என்ற வதம் சரிதான்.
ஜெ, பாலன்
சென்னை
அன்புள்ள பாலசுப்ரமணியன்,

நான் என் கட்டுரையில் சாதி சாதகமான ஒன்று என்று சொல்லவில்லை. கட்டுரையைஒட்டுமொத்தமாக நோக்கினால் அது உங்களுக்கு புரியும். கட்டுரையைமேற்கோள்களாக உடைப்பதனால் வரும் புரிதல் சிக்கல் அது [நம் தமிழ்’அறிவுஜீவிகள்’ இனிமேல் அதைத்தான் செய்யப்போகிறார்கள், இணையத்தைகவனியுங்கள்]

வரிசையாக ஒரு வாதத்தை உருவாக்கிக் கொன்டு வருவதன் ஒரு படி அது. சாதியை வெறுமொரு மூடநம்பிக்கை அல்லது சமூகத்தீங்கு என்று பார்க்கும் வழக்கம்மேலைநாட்டு மதப்பரப்புநர்களால் உருவாக்கப்பட்டு ஆய்வாளார்கள்முன்னெடுத்தது. அது உண்மை அல்ல. சாதி ஒரு சமூகக் குழு அடையாளம். மக்கள்ஒன்றாகத் திரண்டு பணியாற்றவும் சவால்களைச் சந்திக்கவும் அது உதவுகிறது.ஆகவேதான் சமானியர் சாதியை விட தயாராக இல்லை. இது ஓர் இந்திய யதார்த்தம் .இதையும் கணக்கில் கொண்டே சாதியைப்பற்றி சிந்தனை செய்ய வேண்டும்.இல்லையேல் மேடையில் சாதி ஒழிக என்று கூவுதலோடு எல்லாம் நின்றுவிடும்.நான்சொன்னது இதையே

இன்றும் சாதி குழுத்தன்மையை இயல்பாக உருவாக்கி ஒரு பொருளாதார சக்தியாகநம் சமூகத்தில் செயல்பட்டுவந்தாலும் அது இந்தக் காலகட்டத்துக்கு உரியதல்லஎன்றே நான் நினைக்கிறேன். அதை சமூகத்தீமை, ஒழிக்கவேண்டிய நோய் என்றுசொல்ல மாட்டேன். ஆனல் அதைவிட மேலான கூட்டு அடையாளங்கள் மூலம் அதுஇடப்பெயர்ச்சி செய்யப்படவேண்டும் என்றே வாதிடுவேன்

காந்தியும் இதே கருத்து நிலையைத்தான் கடைசிக் காலத்தில் வந்துசேர்ந்திருந்தார்

ஜெ


முந்தைய கட்டுரைவேதசகாயகுமார் விழா
அடுத்த கட்டுரைகாந்தி இன்னும் கடிதங்கள்