தேர்தல்:கடிதம்

ஜெ..

2004 ஜூன் துவக்கத்தில் NDTV யில் பர்கா தத்தின் We,the people நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டேன் ஒரு பார்வையாளனாக. அந்நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த பெண் என்னுடன் பேசிகொண்டிருந்தார் மிக விஸ்தாரமாக சோனியா காந்தி பற்றி. நிகழ்ச்சி துவக்கத்தில் பேசிய ஒரு ஃப்ரெஞ்ச் பத்திரிகையாளர் இந்திய மக்களுக்கு ஒரு இந்தியர் கிடைக்கவில்லையா?? தற்கு ஒரு வெளி நாட்டவரைத் தலைவராக்க வேண்டும் என்று பேசினார்.  தற்கு நான் ஆட்சேபித்து எனது கருத்தை ஒரு பார்வையாளனாகத் தெரிவித்தேன்.  ஒரு வெளி நாட்டவராக இருந்தும், இந்தியாவின் பல்வேறு திசைகளின் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அனைவரையும் அணைத்துச் சென்று ஒரு தனி மனுஷியாக, சீதாராம் கேசரியின் தலைமையில் சுடுகாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு வயதான கட்சியைத் திரும்பவும் ஆட்சியில் அமர்த்தியது பெரும் சாதனை என்று துவங்கி எனது அடுத்த கருத்தை சொல்லாமல் திக்கி விட்டேன். நான் சொல்லாமல் விட்ட அடுத்த கருத்து இதுதான்.  இந்தியக் கலாச்சாரம்  ஒரு inclusive கலாச்சாரம். யாதும் ஊரே யாவரும் கேளிர்.. வசு தேவ குடும்பகம்.. இங்கே காந்தி ஒரு பெரும் தலைவராகும் முன்னர், மிக பாப்புலரான காங்கிரஸ் தலைவர் அன்னி பெசண்ட் என்னும் வெளி நாட்டவர். இந்திய மக்கள் தங்களுக்கு நல்லது செய்பவர்கள் என்று நம்புவர்களைத் தலைவரா ஏற்றுக் கொள்வதில் தயங்குவதில்லை.  So, this is a non-issue

அதன் பின்னர், இந்த மே மாதம் முதல் மாதத்தில், ராகுல் காந்தியின் டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்து உண்மையிலேயே மகிழ்வடைந்தேன் Rahul Gandhi has come off age என்று தோன்றியது.  உங்களிடம் இதைப் பேசியிருக்கிறேன்..

இதற்கு முன், அவரது ஆளுமை மிக சுமார் ரகம் என்றே தோன்றியது. ராகுல் காந்தியும் மன்மோகன் ரகம். அவருக்கு மேடையில் வாளையுருவி வீர வசனம் பேசும் திறனில்லை. இதற்கு முன், பலமுறை, மேடைப் பேச்சுக்களில் சொதப்பியிருக்கிறார். பாராளுமன்றத்தில் கலாவதி பற்றிய பேச்சை முடிக்க விடாமல் எல்லோரும் கேலி செய்தனர்.  மிலிந்த் தியோரா சிந்தியா போன்ற இளம் தலைவர்கள் பேசுவது போல் மிக ஸ்மார்ட் ஆக ராகுல் இல்லை என்பது உண்மை. பேசாமல் இவர், ப்ரியங்காவிடம் இவ்வேலையைக் கொடுத்து விட்டு தன் கொலம்பியன் நண்பியைக் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆவது பெட்டர் என்று கேலி பேசினோம். 

நடுவில் சிலமுறை தமிழகம் வந்து அரவிந்த் கண் மருத்துவ மனை மற்றும் சில மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்கும் முறைகளைப் படித்து விட்டு, அவற்றை உத்தரப்பிரதேசத்தில் replicate செய்ய முயல்வதாகச் செய்திகள் வந்தன.

மற்ற படி, அவர் மிக அதிகமாக மீடியாவின் மத்தியில் இல்லை. அனைவரும் அவரை லேசான ஒரு கிண்டல் தொனியில்தான் நோக்கி வந்தனர்.

ஆனால், இம்முறை, தில்லிப் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்பட்ட ராகுல் ஒரு பெரிய ஆச்சரியம். ஒரு தேர்ந்த தலைவரைப் போல் இடது/வலது சாரிகளிடமிருந்து காங்கிரஸின் செயல்பாடுகளை வேறுபடுத்தி மிகத் தெளிவாகப் பேசியது நான் வளர்ந்து விட்டேனே மம்மி என்று கூறியது.. அதே சமயம், எல்லாக் கட்சியினரையும், தலைவர்களையும் மிகக் கண்ணியமாக விமர்சித்த பாங்கு, எதிர்காலத்தில் ஒரு கண்ணியமான அரசியல்வாதியாக வரலாம், பிரதமர் ஆகாவிட்டாலும் என நினைக்க வைத்தது. ப்ரகாஷ் காரட் ராகுலை immature  என்று வர்ணித்தது நெருடியது இல்லையே, ராகுல் பேசியது சரிதானே என்று தோன்றியது.

உத்தரப் பிரதேசத்திலும், பிஹாரிலும் தனித்துப் போட்டியிடும் முடிவு சரியெனினும், suicidal என்று தோன்றியது.

ஆனால், இன்றைய தேர்தல் முடிவுகள் அவரை ஒரு வெற்றி பெற்ற நல்ல இளம் தலைவராக இனம் காட்டியுள்ளன. உணர்ச்சி வசப் பட்டு மந்திரியாகி, பதவி வலையில் வீழ்ந்து விடாமல் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை உறுதிப் படுத்தும் பணிகளிலும், நாடெங்கிலும் பயணம் செய்து சாதாரண மக்களுடனான தனது தொடர்பைத் தக்க வைத்து கொள்ளும் பட்சத்தில், 2014 பிரதமராகும் எல்லாத தகுதியும் அவருக்குத் தானே வந்து சேரும்.  தோற்ற பாரதிய ஜனதா, இன்னும் சற்றே வலம் நோக்கித் தான் செல்லும். அவர்களின் 2014 ஆண்டு பிரதமர் வேட்பாளர் மோதியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். மோதி போன்ற street smart  அரசியல் வாதிகளை எதிர் கொள்ள இதுவே வழி.

அன்புடன்

பாலா


முந்தைய கட்டுரைபழசிராஜா, கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தியின் வழி