பொதுவாகவே நுண்கலைகள் புரவலர்களை நம்பியே இருந்திருக்கிறது என்று நம்புகிறேன். பெருவாரியான மக்களை சென்று சேர இயலாத நிலையில், வாழ்தலின் சாத்தியம் புரவலர்கள் மட்டுமே அல்லவா? கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச்சென்று சேர்க்கவேண்டும் என்ற நிலை அந்த கலையின், கலைஞர்களை போஷிக்கும் திறனிலேயே இருக்கமுடியும். கலைஞர்களும் தங்களுக்கான வாழ்கையை வாழ்ந்தாகவேண்டியிருக்கிறதுதானே? தங்கள் வாழ்கையை வாழவைக்காத கலையை நிச்சயம் கலைஞனும் வாழவைப்பதற்கு முயல்வதில்லை.
நமது இசையும், இலக்கியமும் ஒரு காலகட்டத்தில் பெரும் பக்தி இயக்கத்தின் ஆணிவேராக இருந்து வந்திருக்கிறது. பக்தி இயக்கத்தினாலேயே பல கலைகள் ஓரளவேனும் காப்பாற்றப்பட்டன என்றும் சொல்லலாம். சமீபத்தில் எழுந்த கடவுள் மறுப்பு பேரியக்கமும் கலைகளின் அழிவுக்கு ஒரு பெருங்காரணமாக இருக்கலாம். ஏனெனில் பாரத நாட்டில் கலைகள் பெரும்பாலும் கடவுளை நோக்கியே இருக்கிறது. பக்தியல்லாத போதும் ஞானமார்கத்தின் சங்கீதம் பெருக்கெடுத்திருக்கிறது.
இப்போது பெருவாரியான இளைஞர்களும் யுவதிகளும், பாரத பாரம்பரிய கலைகளின்பால் (குறிப்பாக கர்னாடக இசை) சற்றும் அறிமுகமில்லாதவர்களாகவும், அல்லது பெரு வெறுப்பு உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஏனெனில், அது அவர்களை பத்தாம் பசலிகளாக காட்டுவதாக நினைக்கிறார்கள். இப்போது அவர்களின் கவனம் ட்ரம்ஸ், கிடார், பியானோ போன்ற கருவிகளின் மீதே இருக்கிறது. ஏனெனில் இது அவர்களை ஒரு மேற்கத்திய சமூகத்தோடு அடையாளப்படுத்திக்கொள்ள மிகவும் தேவையானதாக இருக்கிறது. இது நமது கல்வி முறையும், கலாசார பரவலாக்கமும் கொண்டுவந்து சேர்த்தவை என்று நம்புகிறேன்.
முற்காலத்தில் உலக கலாசாரங்களுடன் அதிக அறிமுகமில்லாத காரணத்தால் ஒருவரின் வாழ்கையை அவர் சார்ந்த இடத்தோடு மட்டுமே தொடர்புபடுத்திக்கொள்ளவேண்டிய நிலையில், அந்த மண்ணின் மரபோடு ஒத்திருக்கவேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் இப்போது அக்கவலை இல்லை. ஒருவர் எப்படி வாழ்ந்தாலும் உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு கலாசாரக்குழுவோடு அவரை தொடர்பு படுத்தி நியாயப்படுத்தமுடியும். எனவே எப்படி இருப்பினும் கவலையில்லை என்ற நிலை.
நிச்சயம் கர்நாடக இசை பிராமண சாதியினரால் மட்டும் தங்கள் குலத்தின் பண்பாட்டு அடையாளமாகக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பிராமண சாதியினராலும் என்று சொல்லலாம். ஏனென்றால் எனக்குத் தெரிந்தே பல பிராமணரல்லாத பெரும் இசை/நடன க்குடும்பங்களும் உண்டு.பெரும்பான்மை வாதத்தின்படி, ஆம். நீங்கள் சொல்வது சரிதான்.
ஜெ